இடஒதுக்கீடு வரலாற்றில் புதிய மைல்கல்

மருத்துவப் படிப்பு - உயர்மட்டப் படிப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு அரசியல் சட்டப்படி செல்லத்தக்கதே என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட் மற்றும் ஏ.எஸ். போபண்ணா கடந்த ஜன.20, 2022இல் வழங்கி யுள்ளனர். இது வரை வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டுக்கான தீர்ப்புகளைவிட இது முக்கியத்துவம் பெறுவதோடு இடஒதுக்கீடுக்கு எதிராக முன் வைக்கப் பட்டு வந்த வாதங்களை தகர்த்தெறிந் திருக்கிறது. தீர்ப்பின் முக்கிய பகுதி:

பொதுத் தேர்வுகள் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் போட்டி யிடுவதற்கான சம வாய்ப்புகளை உருவாக்கு கிறது என்றாலும் இதில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதன் வழியாக வாய்ப்புகள் பகிர்ந்தளிக்கப்படுவது உறுதி செய்யப்படு கிறது. எப்படி என்றால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இந்த வாய்ப்புகளின் வழியாகவே பயனடைய முடிகிறது. இந்தப் பயன் பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத்து விடாமல் ஏமாற்றப்பட்டு வந்திருக்கின்றனர். அதற்கு அடிப்படையான காரணம், சமூகத் தடைகள்; அதாவது நமது சமூகக் கட்டமைப்பு இந்தப் பயன்களை கிடைக்க விடாமல் தடுத்து வருகிறது. (இந்த சமூகத் தடைக்கு நீதிமன்றம் பயன்படுத்தியுள்ள சொல் - Structural barriers) தகுதி என்பதை ஜனநாயக சக்தியாக மாற்றுவதற்கு இட ஒதுக்கீடு ஒன்று தான் வழியாகும். தகுதியை ஜனநாயக சக்தியாக்கும்போது காலம் காலமாக இழைக்கப்பட்ட அநீதிகளையும் மறுக்கப்பட்ட உரிமைகளையும் அந்த சக்தி சமன் செய்கிறது. தகுதியை இப்படி ஜனநாயக சக்தியாக்காமல், தனி நபர் தகுதிக்கு மட்டும் உரிமை கோருவது யாருக்குப் பயன்படும் என்றால், காலம்காலமாக மாற்றங்களைத் தடுத்து வளர்ச்சிகளை முடக்குவோருக்குத் தான்.

பொதுத் தேர்வில் அனைவரும் சமமாகப் பங்கேற்கச் செய்வதால் மட்டுமே பல்வேறு தளங்களில் பரவலாக ஆழமாகப் பதிந்துள்ள சமத்துவமின்மைய சரி செய்துவிட முடியாது. பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட சில குறிப்பிட்ட வகுப்பினருக்கு. கல்வி வாய்ப்புகளோ, வழங்கப்பட்ட வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றலோ கிடைக்கப் பெறாதவர்களாகவே உள்ளனர்.

அதே நேரத்தில் முன்னேறிய வகுப்பினருக்கு தரமானப் பள்ளிகளில் படிக்கும் வாய்ப்புகளுக்கோ, போட்டித் தேர்வுகளுக்கான தனிப் பயிற்சி பெறு வதற்கோ எந்தத் தடையும் இல்லாததோடு, அவர்களுக்கான சமூக உறவுகள் மற்றும் ‘கலாச்சார மூலதனம்’ வலிமையானதாகவே இருக்கின்றன. கலாச்சார மூலதனம் (Cultural Capital) என்று குறிப்பிடுவது அவர்களின் சரளமான பேச்சு நடை, கல்விக்கான ‘கருவிகள்’ கிடைக்கக் கூடிய வாய்ப்புகள், படிப்பதற்கான புத்தகங்கள் மற்றும் கற்றறிந்தவர்களின் சூழல் போன்றவையே ‘கலாச்சார மூலதனம்’ என்பதற்கான அர்த்தம். இந்த வாய்ப்புகள் முன்னேறிய சமூகத்தினருக்கு அவர்களின் குடும்பங்கள் வழியாகவே கிடைக்கிறது. கலாச்சார மூலதனம் முன்னேறிய சமூகத்தில் பிறந்த குழந்தைகளுக்கு நல்வாய்ப்புகளை உறுதி செய்கிறது. குடும்பச் சூழல் அவர்களை இயல்பாகவே பயிற்றுவிக்கிறது. அதன் காரணமாக உயர்கல்வியை எட்டி விடுகிறார்கள். தங்கள் குடும்பச் செல்வாக்கின் காரணமாக உயர் பதவிகளையும் அடைய முடிகிறது.

மாறாக இதே வாய்ப்புகள் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வரும் ஒவ்வொரு நபருக்கும் கேடுகளை உருவாக்கி வருகிறது. இவர்கள் முதல் தலைமுறையாகப் படிக்க வருகிறார்கள் பரம்பரைத் தொழில் களில் (உழன்று கொண்டிருக்கும்) குடும்பத்தி லிருந்து வருகிறவர்கள். இந்த சமூகப் பின்னணி திறந்தப் போட்டித் தேர்வுகளில் பங்கேற்று தேர்ச்சிகளை பெறுவதற்கான திறமைகளை இவர்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதில்லை. இப்படி ஒருவர் தன்னை ‘தகுதி’க்குரியவராக மாற்றிக் கொள்ள விடாமல் சமூகப் பின்னணி தடுத்து விடுகிறது. இந்த நிலையில் ‘தகுதி வேண்டும்’ என்ற வெற்று உணர்ச்சி முழக்கங் களால் என்ன பயன்? இந்த முழக்கங்களால் குடும்ப முன்னேற்றம், பள்ளிப் படிப்பு, சமூக மதிப்பு, இயல்பான திறமைகளை வெளிப் படுத்தும் வாய்ப்புக்கான வழிகள் அடைக்கப் படுகின்றன. மேற்குறிப்பிட்ட காரணிகளைக் கொண்டு தான் சமூகம் ஒருவருக்கான மதிப்பீட்டை நிர்ணயிக்கிறது. முன்னேற்றத் துக்கான அடிப்படை களாகவும் இந்த காரணிகளே பங்காற்றுகின்றன. ஆக, சமூகப் பின்னணியிலிருந்து ‘தகுதி’யை மட்டுமே தனித்துப் பிரிந்தெடுத்துப் பேசுவதால், தடைகளைத் தகர்த்து முன்னேறிச் செல்ல விரும்புவோர் தடுக்கப்படுவதோடு அவர் களின் கவுரவத்தையும் குலைத்து விடுகிறது.

ஒரு தேர்வில் பெறக் கூடிய மதிப்பெண் மட்டும்தான் தகுதிக்கான அளவுகோல் என்ற கருத்தை ஆழமான மறுபரிசீலனைக்கு உட்படுத்துதல் தேவையாகிறது. கல்வி வாய்ப்புகளைப் பகிர்ந்தளிக்க தேர்வுகள் தேவையானதாக எளிமையாக நடைமுறைப் படுத்தக்கூடிய ஒரு முறையாக இருக்கிறது என்பது உண்மைதான். அதே நேரத்தில் மதிப்பெண் மட்டுமே ஒரு தனிநபருக்கான மிகச் சிறந்த அளவுகோலாகி விடாது. மிக உயர்ந்த மதிப்பெண் பெற்ற ஒருவர், நல்ல செயலுக்கு தனது திறமையை பயன் படுத்தாதபோது, அவரை திறமையானவர் என்று எப்படி கருத முடியும்? அதிக மதிப்பெண் மட்டுமே திறமையானவர் என்பதற்கு அடையாளமாகி விடுமா? பாதிக்கப்பட்ட சமூகச் சூழலில் உள்ள ஒருவர் தான் முன்னேறிச் செல்வதற்கான துணிவை யும், நெகிழ்ச்சியையும் நோக்கிப் பயணிப் பதற்கேகூட தகுதியும் திறனும் தேவைப்படு கிறது. இதுவே அவரது திறமைக்கான வெளிப்பாடு என்றே மதிப்பிட வேண்டும். (மதிப்பெண் பெறுவது மட்டும் அல்ல).

போட்டித் தேர்வுகளை சிறப்பாக எழுதுவதுதான் தகுதிக்கான வரையறையாகப் பார்ப்பது குறுகிய பார்வை. இந்தத் தேர்வுகளில் பெறும் சிறப்பான வெற்றியால் கிடைப்பது முழுமையான சமத்துவம் அல்ல; அது வெறும் சம்பிரதாய சமத்துவமே. தேர்வுகளில் அதிக மதிப்பெண் குவிப்பது தகுதிக்கான அடையாளம் அல்ல; தகுதியை சமூகத்தோடு பொருத்திப் பார்த்து, அதற்கு புதிய அர்த்தங்களை சேர்க்க வேண்டும்; சமூகப் பயன் நோக்கிய முன்னேற்றத்துக்கு அழைத்துச் செல்வதற்கான கருவியாக தகுதி பயன்படுகிறதா என்பதைப் பார்க்க வேண்டும்; சமத்துவத்தை உருவாக்கிறதா என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அத்தகைய சமூகச் சூழலோடு தகுதியைப் பொருந்தினால், இடஒதுக்கீடு தகுதிக்குத் தடை அல்ல என்பது விளங்கும்.”

- என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

மற்றொரு முக்கிய அம்சமும் தீர்ப்பில் இடம் பெற்றுள்ளது. கல்வி - வேலை வாய்ப்புகளை உறுதி செய்யும் 15(4), 16(4) சட்டப் பிரிவுகள். ‘விரும்பினால் நிறைவேற்றலாம்’ என்ற வரையறைக்குள் (Enabling Act) வருவது இல்லை. அது 15(1) வலியுறுத்தும் அடிப்படை உரிமையாகக் கருதப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெளிவு படுத்தியிருப்பது தீர்ப்பின் மற்றொரு குறிப்பிடத்தக்க சிறப்பு.

இடஒதுக்கீடு குறித்து இதுவரை வெளிவந்த தீர்ப்புகளிலேயே அதன் அடுத்தக்கட்ட வளர்ச்சியை நோக்கிய வெளிச்சங்களைப் பாய்ச்சுகிறது, இத் தீர்ப்பு.

Pin It