beef bakodaவட சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகச் சார்பில் 10.2.2018 சனி மாலை 6 மணியளவில் சென்னை திருவொற்றியூர் பெரியார் நகரில், ‘வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு’ எனும் தலைப்பில் பொதுக் கூட்டம் நடந்தது. காவை இளவரசன், ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சிகளை நடத்தினார். தொடர்ந்து பெ. முத்துக்குமார்  தலைமையில் பொதுக் கூட்டம் தொடங்கியது. ‘கடலோர மக்கள் களம்’ அமைப்பின் தலைவர் தோம.ஜான்சன், தமிழ் தேசியக் கட்சித் தலைவர் ஆ.கி. ஜோசப் கென்னடி, வழக்கறிஞர் துரை. அருண் ஆகியோர் உரையைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரை யாற்றினர். விடுதலை இராசேந்திரன் தனது உரையில், தமிழர்களையும் தமிழ்நாட்டையும் தமிழ் மொழியையும் வஞ்சிப்பது நடுவண் அரசும், பார்ப்பனர்கள் உயிர்ப்புடன் இப்போதும் பாதுகாத்துவரும் பாசிசத் தத்துவமான பார்ப்பனியமும் தான் என்று எடுத்துரைத்து வைரமுத்துவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஆண்டாள் சர்ச்சை, தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்த சங்கராச்சாரி, திராவிட ஆட்சிகளை வீழ்த்த பா.ஜ.க. நடத்திய பார்ப்பன யாகம், உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை அனுமதிக்க மறுக்கும் மோடி ஆட்சி, தமிழர் நாகரிக சிறப்புகளை விளக்கும் கீழடி அகழ்வாராய்ச்சியை முடக்கும் நடுவண் ஆட்சி ஆகிய பிரச்சினைகளை விளக்கிப் பேசினார்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் கொல்லைப்புற வழியாகக் குவியும் வடநாட்டுக்காரர்கள், தமிழ்நாட்டின் கிராமப்புறங்களிலிருந்து மருத்துவம் படிக்க வரும் ஒடுக்கப்பட்ட சமுதாய மாணவர்களின் மருத்துவக் கனவுகளைச் சிதைக்கும் ‘நீட்’ தேர்வு. மற்றும் நீட் தேர்வுக்கு எதிராக தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் காலம் வரை காத்திருந்து, ‘நீட்’டுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த பார்ப்பன நீதிபதியின் முன் அவசரமாக விசாரணைக்குக் கொண்டு வந்து, நீதிமன்ற நடைமுறைகளைப் பின்பற்றாமலே நயவஞ்சகமாக திணிக்கப்பட்ட ‘நீட்’ தேர்வு சதிகளை ஆதாரங்களோடு அம்பலப்படுத்தினார். ‘தனியார் மயம்’ என்ற கொள்கை பார்ப்பனமயமாக்கியது என்றால் அகில இந்திய தேர்வு முறைகளால் தமிழ்நாடு வடவர் மயமாகிறது என்று விளக்கினார். தோழர் குகன் நன்றி கூறினார். கூட்டத்தினர் கலை யாது இறுதி வரை கருத்துகளை செவிமடுத்தனர். தென்சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா. உமாபதி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். வடசென்னை மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் யேசுகுமார், செந்தில் எப்.டி.எல்., ராஜீ, சங்கீதா, தெட்சிணா மூர்த்தி, பாஸ்கரன், முனுசாமி உள்ளிட்ட தோழர்கள் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்தனர்.

கூட்ட மேடையில் தமிழர் 
‘பீப்’ பகோடா

திருவொற்றியூர் பொதுக் கூட்ட மேடையில் ஒரு மேஜை மீது ஸ்டவ் அடுப்பும், அதற்கு மேல் எண்ணெய் சட்டியும் வைக்கப்பட்டு, கீழே அறிவிப்புப் பலகை தொங்கவிடப்பட்டிருந்தது.

மோடியின் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் “தமிழர் பீப் பகோடா  இங்கு விற்பனைக்குக் கிடைக்கும். உரிமையாளர் ஜெயா, எம்.ஏ., எம்.பி.எல்., பி.எச்டி.” என்று எழுதப்பட்டிருந்தது. பகோடா விற்று நாளொன்றுக்கு ரூ.200 சம்பாதிக்கும் இளைஞர்கள்கூட எங்கள் ஆட்சியின் வேலை வாய்ப்புத் திட்டத்தில் பயன் பெற்றவர்கள்தான் என்று பிரதமர் மோடி, தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியை கிண்டல் செய்து, இந்தக் காட்சியை மேடையில் தோழர்கள் அரங் கேற்றியிருந்தனர். கூட்டத்தினர் இதை மிகவும் பாராட்டி இரசித்தார்கள்.

ஜீயர் மீது வழக்கு பதியக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

கொளத்தூரில் 'ஆண்டாள் ஆய்வுக்குரியவளே' என்ற தலைப்பில் ஆய்வரங்கம் நடத்த திராவிடர் விடுதலைக் கழகம் திட்டமிட்டிருந்த நிகழ்ச்சியில் 'சோடா பாட்டில் வீசுவோம்' என்று வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசிய சடகோப ராமனுஜன் மீது வழக்குப் பதியக் கோரி நாமக்கல் மாவட்ட திவிக சார்பில் திருச்செங்கோடு நகர காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவின் மீது திருச்செங்கோடு துணை கண்காணிப்பாளர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன் பிறகும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் மா.வைரவேல் சார்பில் சடகோப ராமனுஜன் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் பிப்ரவரி 13ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

Pin It