கருஞ்சட்டைப் பதிப்பகம் சார்பில், மூன்று நூல்கள் வெளியீட்டு நிகழ்வு 19.11.2022 அன்று மாலை 6 மணியளவில், தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய ‘ஆர்.எஸ்.எஸ் ஓர் அபாயம்' நூல் மறு பதிப்பு செய்து வெளியிடப்பட்டது. வழக்கறிஞர் அஜிதா, நூலை திறனாய்வு செய்து உரையாற்றினார். (சென்ற இதழ்த் தொடர்ச்சி)

கோல்வாக்கர் என்று சொல்லக்கூடிய, ஆர்.எஸ்.எஸ்.சுக்கு 33 ஆண்டுகள் தலைவராக இருந்த அவர் எழுதிய புத்தகம், ‘Bunch of thoughts’ இது ஆர்.எஸ்.எஸ்.இன் வேத நூலாக கருதப்படுகின்றது. இதை வேத நூல் என்று ஏன் சொல்கிறோம் என்றால், அதற்கு வெளியிலும், முன்னாலும், பின்னாலும் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் ஏன் என்று கேள்வி கேட்க மாட்டார்கள். அதில் உள்ளவற்றை மட்டுமே அதற்காக மட்டுமே அவர்கள் பயிற்றுவிக்கப் பட்டவர்கள்.

ajitha 345நான் 35 ஆண்டுகளுக்கு முன்னால் சட்டக் கல்லூரியில் பயின்ற போது புரட்சிகர மாணவர் இயக்கம், அங்கே இருக்கக்கூடிய பெரியார், அம்பேத்கர் சிந்தனைகள் கொண்ட இயக்கங்கள், மார்க்ஸிய, லெனினிய இயக்கங்கள் மாணவர் அமைப்புகளாய் இருப்பார்கள். முதன்முதலாக அங்கு ஏபிவிபி என்ற அமைப்பு சட்டக்கல்லூரிக்கு வருகிறது. எங்களுக்கு போராட்டங்கள் மற்றும் மற்ற நேரங்களைத் தவிர இவர்களோடு வாக்குவாதமும், பேச்சும், கருத்து வேறுபாடுகளும் வந்து கொண்டே இருக்கும். அப்போது, ஆர்எஸ்எஸ் என்றால் எந்த தேசிய இனம், நீங்கள் இந்தியாவை எந்த தேசிய இனமாக கருதுவீர்கள் ? என்று நான் கேட்கிறேன். அவர்கள் சொல்கிறார்கள், ‘இல்லை இல்லை இந்தியா முழுவதும் ஒரே தேசிய இனம்’ என்றார்கள். அப்பொழுது நான் மீண்டும் கேட்டேன், நீங்கள் சமூகவியல் படித்தீர்கள் என்றால் ஒரு தேசிய இனம் என்றால் அவர்களுக்கென்று ஒரு மொழி, அவர்களுக்கான வரையறுக்கப்பட்ட எல்லை, அவர்களுக்கான பொது கலாச்சாரம் என்பதாக இருக்க வேண்டும்.

இப்படி இருக்கும் போது இந்தியாவில் இத்தனை விதமான மக்கள் இருக்கும் போது எப்படி ஒரே தேசிய இனமாக இருக்க முடியும்? என்று கேட்டேன், அதற்கு, ‘இல்லை இல்லை அது கலாச்சார தேசிய இனம், இந்து கலாச்சாரம். கலாச்சாரம் ஒன்றாக இருந்தால் அதுதான் தேசிய இனம்’ என்றார்கள். இப்படி எங்குமே சொல்ல வில்லையே? அய்.நா சபையில் கூட ஒப்புக் கொள்ளவில்லையே நீங்கள் எங்கிருந்து சொல்கிறீர்கள்? இப்படியே வாக்குவாதம் செல்லும், நான் நாளைக்கு வந்து பேசுகிறேன் என்று சொல்வார்கள். அடுத்த நாள் நாம் கேட்டால், அதற்கு அடுத்த நாள் என்று கூறுவார்கள். இப்படி தொடர்ச்சியாக சரியான பதிலைக் கொடுக்காமல் செல்வார்கள். அப்படி நான் விவாதித்தவர்களில் ஒருவர் தான் வானதி சீனிவாசன். அன்றைக்கு அவரும் நானும் இருப்போம். ஏன் இதை இப்போது கூறுகிறேன் என்றால் இந்த புத்தகத்தை படிக்கும் போது தான் தெரிகிறது. ஆதியும் அந்தமும் இல்லாமல் அதற்கான எந்தவித அடிப்படையும் இல்லாமல் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டு இருப்பார்கள்.

எப்பொழுது அந்த விவாதம் முடிவுக்கு வரும் போதும் இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் நான் படித்து விட்டு வருகிறேன், புத்தகத்தை சொல்கிறேன், எப்படி கம்யூனிஸ்ட் தலைவர்களெல்லாம் இதைப் பற்றி எழுதியிருக்கிறார்கள் என்றெல் லாம்கூட பேசுவார்கள். அப்படி இவர்கள் பொய் சொல்வதிலே வல்லவர்கள். இன்றைக்கு இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது தான் தெரிகிறது. கோல்வாக்கரின் சிந்தனை கொத்து என்கிற ரெnஉh டிக கூhடிரபாவள என்கிற புத்தகம் தவிர வேறெதையுமே அவர்கள் பேசுவதில்லை. “இந்து தேசிய இனத்துக்கு தொடக்கமும் இல்லை; முடிவும் இல்லை. நாம் அனாதிகள்; நாம் மண்ணின் மைந்தர்கள்; ஆனால் நமக்கு அடை யாளமே வேண்டாம்; பெயரே இல்லாதவர்கள்” என்கிறார் ஹெட்கேவர். இதை உளறல்கள் என்று ஏன் சொல்கிறோமென்றால், இந்த புத்தகத்தில் சமூக விஞ்ஞான அடிப்படை இல்லை, கோபத்திலோ, ஆத்திரத்திலோ இப்படி நாம் பேசவில்லை.

இன்னும் ஒன்றை நாம் பார்த்தோமென்றால் ஹிட்லரின் நாஜி கருத்துக்களும் இவர்களுடைய கருத்தும் ஒத்துப் போகிறது. இஸ்ரேலில் அவர்கள் ஆட்சியை அமைத்து நாட்டைப் பிடித்தப் பின்னால் இங்கே இருக்கக் கூடியவர்கள் மிகத் தெளிவாக எழுதுகிறார்கள், ‘இப்பொழுது நமக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஏனென்றால் ஆரிய இனத்தின், ஆரிய மதத்தின் மேன்மையைக் கொண்டு போராடி அவர்கள் நாட்டை அமைத்துக் கொள்வார்கள் என்றால் இந்துக்களுக்கும் ஒரு நாடு உருவாகும் என்பதில் நமக்கு எந்தவித அய்யமுமில்லை’ என்று இஸ்ரேல் உருவான பின்பு இவர்கள் சொன்னார்கள். பாலஸ்தீனத்தில் இருந்து அவர்களுடன் போராடி அந்த நாட்டின் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டதை நியாயப் படுத்தினார்கள்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னால் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு குரு கோல்வாக்கர் ஒரு கடிதம் எழுதுகிறார், ‘நீங்கள் நேபாளத்தின் மீது மிக அதிகமான இணக்கமாக இருக்க வேண்டும், அது இந்து நாடு அதற்காக நீங்கள் எல்லாவற்றையும் செய்ய வேண்டும்’ இதிலிருந்து, இந்து என்பதற்கு சமூகவியல் அடிப்படையில் எந்தவித ஆதாரமும் இல்லை என்பது நமக்கு தெரிகிறது.

மருத்துவர் தாயப்பன் அவர்கள் சொன்னார் தங்களுடைய நிர்வாகத்திற்காக பிரிட்டிஷ் அரசு எல்லோரையும் இந்து என்ற வார்த்தையில் குறிப்பிட்டனர், அதைப் பயன்படுத்திக் கொண்டு இவர்களும் அதைத் தொடர்ச்சியாக பேசிக் கொண்டு வருகிறார்கள். அதற்குப் பின்னால் காந்தியாரை கொலை செய்தது மட்டுமல்லாமல் பல்வேறு தலைவர்களை இவர்கள் கொலை செய்ய பல முயற்சி செய்தார்கள். அந்த ஒரு முயற்சியில் தான் காமராஜர் டெல்லியில் இருந்த போது அவரது வீட்டைக் கொளுத்த முயற்சித்தார்கள். அதைப் பற்றி அங்கிருந்த காவல்துறை தலைமை அதிகாரியே சொல்லி யிருக்கிறார். “இந்தக் கூட்டம் பல இடங்களை அடித்து உதைத்து விட்டு கொளுத்துவதற்காக போனது, அதையும் தாண்டி காமராஜர் தங்கியிருந்த வீட்டிற்கும் போய் அவரை வீட்டுடன் கொளுத்துவதற்கும் முயற்சி செய்தனர், அங்கிருந்த அதிகாரி அதைத் தடுத்த போது அவரைக் கீழே தள்ளி அடித்து உதைத்து விட்டு உள்ளே சென்று ஒவ்வொரு அறையாக தட்டி திறந்து பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விட்டார்கள். அதன் பின்பு ஜந்தர் மந்தருக்கு சென்றார்கள்” என்கிறார் அந்த அதிகாரி.

அன்று காமராஜர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். அன்றைக்கு உத்தரபிரதேச முதல்வராக இருந்தவர் ராம் நரேஷ் யாதவ், அவரையும் கொலை செய்யத் திட்டம் தீட்டியிருந்தார்கள். அதற்கு முன்னால் பீகாரில், எளிமையான பின்னணியில் முடிதிருத்தும் சமுதாயத்தில் இருந்து வந்த கர்ப்பூரி தாகூர் முதல்வரான போது அவரை கொலை செய்ய முயற்சி செய்து கொலை வழக்கெல்லாம் பதிவு செய்யப்பட்டது. இவர்களுக்கு யார் பிடிக்க வில்லையோ அல்லது தங்களது கருத்துக்கு ஆணித்தரமாக எதிர் கருத்து வைக்கிறார்களோ அவர்களை கொலை செய்தே வருகின்றனர். இவை அனைத்துமே இந்த நூல் பதிவு செய்திருக்கிறது. குறிப்பாக காந்தியைத் தீர்த்துக் கட்ட 1948 ஜனவரி 19 ஒரு முயற்சி செய்கிறார்கள். ஜனவரி 30 அன்று அதை முடித்தும் விட்டார்கள். ஏன் அவ்வாறு செய்தார் களென்றால், ஒரே காரணம் தான். காந்தியார், இந்து, முஸ்லிம் ஒற்றுமையைப் பேசுகிறார். அதன் காரணமாகத்தான் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்து விட்டது என்ற காரணத்தைக் கூறினார்கள்.

ஆர்.எஸ்.எஸ்.அய் சேர்ந்த நாதுராம் கோட்சே காந்தியை கொலை செய்யவில்லை என்று இவர்கள் கூறும் பொய்யை நாம் எப்படி முறியடிக்க வேண்டுமென்றால், நாதுராம் கோட்சேவின் சகோதரர் கோபால் கோட்சே, நாதுராம் கோட்சேவின் அஸ்தியின் ஒரு பகுதியை கரைக்காமல் வீட்டிலேயே வைத்துக் கொண்டார். அது கரைக்கும் நாள் என்பது, ‘இந்து இராஷ்டிரம் உருவான பின் தான் வரும்’ என்று ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 15ஆம் தேதியன்று கோட்சே தூக்கிலிடப்பட்ட நாளை அவர்கள் வணங்கும் ஒரு நாளாக வைத்துக் கொண்டிருந்தார்கள். இந்த அஸ்தியை, காவிக் கொடியை வைத்து வணங்கக் கூடிய அந்த நாளில் ஒரு வரைபடமும் வைத்திருக்கிறார்கள், அது இந்தியா சுதந்திரம் அடைந்த பல ஆண்டுகளுக்குப் பிறகும் பாகிஸ்தான் சேர்த்து ஒரு வரைபடம். எனவே இவர்களின் அகண்ட பாரதம் என்ற கனவிற்கு யாரெல்லாம் எதிராக இருக்கிறார்களோ அவர்களைக் கொலை செய்யவே நினைத்தார்கள். நேருவாகட்டும் மற்ற காங்கிரசார்களையும், ராஜ்நாராயணன் இன்னும் ஜனநாயகத்தைப் பேசக்கூடியவர்களை இவர்கள் எப்படி கையாண்டிருப்பார்கள் என்று நாம் கூறத் தேவையில்லை.

குரு பூர்ணிமா அன்று ஆர்.எஸ்.எஸ் காரர்கள் ஒரு பெட்டியை வைத்து விடுவார்கள் அதில் பணத்தை போட்டுவிட வேண்டும். இது 1925ஆம் ஆண்டு முதலே நடைபெற்று வருகிறது.

பிரிட்டிஷாரிடம் ஏன் இவர்கள் இணக்கமாக இருந்தார்கள் என்றால், பிரிட்டிஷார் செல்லும் போது இந்த ஆரிய பார்ப்பனர்களிடம் ஆட்சியைக் கொடுத்து விடுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. இரண்டாம் உலகப் போர் வந்த போது பார்ப்பனர்கள் அனைவரும் ஜெர்மன் படித்தார்கள். ஏனென்றால் ஜெர்மன் கை தான் ஓங்கியிருந்தது. அதிகாரத் திற்காகவும், பார்ப்பனர்களின் மேன்மைக்காகவும் எத்தனை கோடி மக்களையும் பலி கொடுக்க இவர்கள் தயங்க மாட்டார்கள். இப்படி ஏராளமான வரலாற்றுத் தகவல்களைக் கொண்ட இந்த நூலை 1982ஆம் ஆண்டிலேயே எழுதியிருக்கிறார் விடுதலை இராசேந்திரன்.

இதை நாம் மக்களுக்கு பரப்ப வேண்டும். இந்த புத்தகத்தை வாசிப்பதும், இந்த புத்தகத்தை இன்னும் சிறு சிறு புத்தகமாகக் கொண்டு வருவதும் காலத்தின் தேவை என்றார் வழக்கறிஞர் அஜிதா.

Pin It