சென்னை ‘அய்.அய்.டி.’ பார்ப்பனர் கோட்டையாகவே இருந்து வருகிறது என்பதற்கு மேலும் சான்றுகள் குவிந்து வருகின்றன. 577 பேராசிரியர்களில் பட்டியல் பிரிவு மற்றும் பழங்குடியைச் சார்ந்தவர்கள் 19 பேர் மட்டுமே (மூன்று சதவீதம்) என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் கூறுகிறது.

2021 மார்ச் 31 நிலவரப் படி திறந்த போட்டிக்கான இடங் களில் 515 பேராசிரியர், இணைப் பேராசிரியர்கள் இருந்தனர். இதில் பிற்படுத்தப் பட்டோர் 62 பேர் மட்டுமே. பட்டியல் மற்றும் பழங்குடிப் பிரிவினர் 16 பேர் தான்.

ஆய்வுப் பட்டப் படிப்பைப் பொறுத்த வரை 2018-2019, 2019-2020இல் 196பேர் மட்டுமே பெண்கள்; பிற்படுத்தப்பட்டோர் 74; பொருளாதாரப் பின்தங்கிய பிரிவினர் 74; எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினர் முறையே 27 மற்றும் 5 பேர் மட்டுமே. பெண்களும் முற்றாக புறக்கணிக்கப் படுகின்றனர்.

2021-2022ஆம் ஆண்டு துறைரீதியாக விவரங்களைத் தர, தகவல் துறை ஆணையர் மறுத்து விட்டார். இட ஒதுக்கீடுகள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாதது குறித்து யாரிடம் விளக்கம் கேட்பது என்று வினோத் குமார் என்பவர் கேட்ட தகவலுக்கு இதற்கு பதில் தர வேண்டும் என்று தகவல் உரிமை கேட்பு சட்டத்தின் (2எப்) பிரிவில் விளக்கம் ஏதும் தரப்படவில்லை என்று ஆணையர் பதிலளித்துள்ளார்.

மத்திய கல்வி அமைச்சகம் இப்போது இடஒதுக்கீட்டில் பின்பற்ற வேண்டிய வழிமுறை குறித்து புதிய விளக்கம் தந்து பட்டியல் இனப் பிரிவினருக்கு பெரிய துரோகம் செய்துள்ளது.

அய்.அய்.டி. இட ஒதுக்கீட்டுக்கான இடங்களை முழுமையாகப் பூர்த்தி செய்யாமைக்குக் காரணம் அய்.அய்.டி.யின் புதிய பணி நியமனக் கொள்கை. எஸ்.சி. - எஸ்.டி. இடங்களைப் பூர்த்தி செய்யும் போது நிர்வாகத் திறமையுள்ளவர்களா என்பதை கவனத்தில் கொண்டு தான் நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

ஒடுக்கப்பட்டோர் இடங்கள் பூர்த்தி செய்யப் படாத நிலையில் திறந்த போட்டியில் ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. இடங்களும் மிகக் குறைவாக உள்ள நிலையில் 10 சதவீத உயர்ஜாதி ஒதுக்கீட்டுக்கு என்ன அவசியம் இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.

- விடுதலை இராசேந்திரன்