(தந்தை பெரியார் அவர்கள் எழுதிய ‘இராமாயணா-எ ட்ரூ ரீடிங்’(RAMAYANA - A TRUE READING) (‘இராமாயணப் பாத்திரங்கள்’ என்ற நூலின் மொழி பெயர்ப்பு) என்ற ஆங்கில நூலையும் அதன் இந்தி மொழி பெயர்ப்பையும் உத்தரப்பிரதேச மாநில அரசு தடை செய்தது. இதை எதிர்த்து உத்தரப்பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு - தடை செல்லாது என்று அது தீர்ப்பு அளித்தது. தீர்ப்பை எதிர்த்து உ.பி. அரசு உச்சநீதி மன்றத்தில் அப்பீல் செய்தது. உச்சநீதிமன்றமும் உ.பி. அரசு இந்த நூலுக்கு தடை விதித்தது செல்லாது என்று தீர்ப்புக் கூறி அப்பீலை தள்ளுபடி செய்தது. நீதிபதி கிருஷ்ண அய்யர் அவர்கள் அளித்த அந்த தீர்ப்பின் விவரம் அவரது நினைவாக இங்கே தரப்படுகிறது. செப்டம்பர் மாதம் தந்தை பெரியார் பிறந்த நாளன்று (17.9.1976) இந்தத் தீர்ப்பு வந்தது. அவசர நிலைகாலம் அது; விடுதலை தணிக்கைக்கு உள்ளாகி வந்தது; பார்ப்பன அதிகாரிகள் ‘விடுதலை’யில் இதை வெளியிட அனுமதிக்கவில்லை. தீர்ப்பின் மய்யக் கருத்து:)
அரசு தரப்பில் வாதிட்ட வழக்குரைஞர், தெய்வீகத் தன்மை வாய்ந்த இராமன், சீதை, ஜனகன் முதலியவர்களை இழிவுப்படுத்தும் விதத்திலும் உத்தரப்பிரதேசத்தில் வாழும் இந்துக்களின் உணர்ச்சிகளைப் புண்படுத்தும் வகையிலும் இருப்பதால், கோர்ட்டார் அவர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
நாங்கள் அவருடைய வாதத்தை ஆராயுங்கால் அடிப்படை உரிமைகள் விலங்கிடப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதனையும், அந்த அடிப்படை உணர்வுகளால் உந்தப்பட்டு உத்தரப்பிரதேச அரசால் நூல் பறிமுதல் செய்யப்படுவதற்கு ஆணையிடப்பட்டுள்ளது என்பதனையும் தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது.
நமது இந்திய நாடானது மதச்சார்பற்ற நாடு. எந்த ஒரு மதத்தினையும் தழுவியது அல்ல. இந்த நாடானது எந்த ஒரு குறிப்பிட்ட மக்களின் நம்பிக்கையைப் பற்றிக் கவலைப்படுவதல்ல.
ஆனால், மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், சட்டம், ஒழுங்கு இவற்றை நிலைநாட்டுவதிலும் நாட்டங்கொண்டு அக்கறை கொண்டுள்ளது.
அதே நேரத்தில் எந்த ஒரு வகுப்பு மக்களின் உணர்ச்சிகளைப் புண்படுத்தும் படியான - தூண்டும்படியான வெளியீடுகள் அல்லது பேசப்படுகின்ற சொற்களைப்பற்றிக் கவலை கொண்டு, மூர்க்கத்தனமான செயல்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமைக்கும் ஆளாக்கப்பட்டிருக்கிறது.
எந்த ஒரு அரசும் அமைதியையும், பாதுகாப்பையும் கட்டிக் காப்பது அவசியம். அப்படி அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் எந்த ஒரு வடிவிலோ பங்கம் ஏற்பட்டு ஆபத்து விளையுமேயானால், அந்த அரசு நீதித் துறையை நாட வேண்டியுள்ளது.
எங்கள் முன்னால் உள்ள இந்த மேல்முறையீட்டு வழக்கை, சட்ட ரீதியாகவும் பார்க்கின்ற நேரத்தில் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு தவறானது அல்ல. பல்வேறு உயர்நீதிமன்றங்கள் இது சம்பந்தப்பட்ட பிரச்சினையைப் பல்வேறு விதங்களில் முடிவு செய்து தீர்ப்பளித்துள்ளன.
தனிப்பட்ட ஒரு மனிதன்மீது கடுமையான நடவடிக்கையோ அல்லது தடை சட்டத்தின்மூலமோ கொண்டுவரப்படுமேயானால், அதனால் ஏற்படும் குற்ற விளைவுகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
எனவே, குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 99-ஏ-வை ஏற்படுத்திய அறிஞர்கள், அரசிற்கு முன்னேற்பாடான அதிகாரங்களை வழங்கியுள்ளார்கள். சட்ட ரீதியாகச் சொல்லப்பட்ட வழிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் அதை பயன்படுத்த வேண்டும்.
இந்தியக் குடிமக்களின் இரு சாராரிடையே பகைமையை வளர்க்கும். அல்லது ஒரு மதத்தினரின் உணர்ச்சியைப் புண்படுத்தும் வெளியீடுகள் இருக்குமேயானால், சட்ட ரீதியாக அரசு இதனை உன்னிப்பாகக் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்திற்கு உட்பட்டு செயல்படவே இந்தப் பிரிவு நிர்ப்பந்திக்கிறது.
99-ஏ பிரிவு எந்தக் காரணத்திற்காகப் பறிமுதல் செய்யப் படுகிறது என்பதனையும் விளக்க வேண்டுமென உரைக்கிறது. எந்தக் காரணத்திற்காக அரசு செயல்பட் டிருக்கிறது என்பதனை கண்டிப்பாக விளக்கப்பட வேண்டுமென சட்டம் நிர்ப்பந்திப்பதால், காரணத்தை விளக்காமல், அரசு அறிவிப்பாணையில் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்வது கூடாது.
சட்ட ரீதியாக ஒரு பிரச்சினை கட்டாயமாக்கப் படுமேயானால், நிர்ப்பந்திக்கப்படுமேயானால், அதன் படி அரசு செயல்பட்டே தீர வேண்டும். சட்ட ரீதியாக ஒரு வெளியீட்டை ஒரு மாநில அரசு பறிமுதல் செய்ய உத்தரவை பிறப்பிக்குமேயானால், அது ஒரு சாதாரண பிரச்சினை அல்ல. மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டுமென்பதனை மாநில அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
சட்ட நடைமுறை ஏதாவது ஒன்று விடுபடுமே யானால், சட்டம் அங்கு செயலிழந்து விடுகிறது.
மன்னர் ஆட்சியிலிருந்து மக்களாட்சிக்கு நாம் திரும்பி வருகின்றபோது, மக்களின் உரிமைகளை உன்னிப்பாகக் கவனிப்பதோடு, பாதுகாக்கப்படு வதும் முறையானதாகும். சட்ட ரீதியாக இப்படித் தான் செயல்படவேண்டும் என்று நிர்ப்பந்திக்கப் படும்போது, அப்படிச் செய்யாமல் செயல்பட்டு விட்டு விளக்கங்கள் கூறுவது தகுதியானதும் முறையானதும் அல்ல. குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 99-சி-படி பாதிக்கப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்து தடை உத்தரவைத் தகர்க்க மனு கொடுக்கும் நேரத்தில், அரசு எந்தக் காரணத்திற்காக நூல்களை பறிமுதல் செய்தது?
நீதிமன்றம் அரசு அறிவிப்பாணையில் உள்ள கருத்துகளை எல்லாம் கவனித்து, தனது எல்லைக்கு அப்பாற்பட்டு விளக்கமான விசாரணை செய்ய இயலாது. சட்ட ரீதியாகச் சில சலுகைகள் தனிப்பட்ட ஒருவருக்குக் கொடுப்பதற்குச் சட்டம் குறிப்பிட்ட அளவு இடமளிக்குமேயானால் அதனைத் தடை செய்ய, வெளியீட்டை தடை செய்ய அதிகாரம் யாருக்குமில்லை.
நாங்கள், தடை செய்யப்படும் நூலின் கருத்தை விரிவாக எடுத்துரைத்துப் பேச வரவில்லை. அரசு செயலையே விமர்சிக்கிறோம்.
தனி மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள உரிமை பறிக்கப்படுவதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 99-ஏ-யைப் பயன்படுத்துவது சரியானது அல்ல. தேச நலனைப் பாதுகாப்பதற்குத் தனி மனித உரிமையைக் கட்டுப்படுத்த வேண்டுமென்பதில் அய்யமில்லை.
அதே நேரத்தில், தனி மனித சுதந்திரம் பற்றி அரசியல் சட்டம் தந்துள்ள விளக்கத்தில் அதற்கான கட்டுப்பாடுகள் உரிய காரணங்களோடு கூறப்பட்டுள்ளன.
குற்றமுறை பிரிவு 99-ஏ-வை உருவாக்கியபோது அரசியலமைப்பை கருத்தில் கொண்டுதான் உருவாக்கப்பட்டிருக்கிறது.
கண்மூடித்தனமான, மூடத்தனமான கொள்கைகள் கண்டிக்கப்படும்போதும் வெளியிடும் போதும் எந்த ஒரு முற்போக்கான மாநில அரசும் அதை தடை செய்யக் கூடாது என்பதே குற்றமுறை 99-ஏ பிரிவில் வலியுறுத்தப்பட்டிருக்கும் செய்தி யாகும்.
தடை செய்வதானால் காரண காரியத்தோடு விளக்கம் வேண்டும்
நம்முடைய அரசியல் அமைப்பு இந்த மாதிரியான பாராட்டத்தக்க கொள்கையை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள காரணத்தினால் நாங்கள் கடமை தவறாமல் சட்டரீதியாக பரிசீலிக்க வேண்டும்.
சமுதாயத்திற்குத் தீங்கு விளைவிக்கும்போதுதான் எந்த வெளியீட்டையும் தடை செய்து அதன் மூலம் பொது மக்களின் அமைதியைக் காக்க அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.
அரசின் அறிவிப்பாணை இம் முறையில் இருந்து தவறியிருக்கிறது. மூடத்தனத்தில் ஊறிப் போன சிலருக்கு வளர்ந்துவரும் முற்போக்கான சில கொள்கைகள் நகைப்பிற்குள்ளாக்குவதாக இருக்கலாம்.
அம்மாதிரியான சிலருக்கு சுவாமி விவே கானந்தரின் - “எங்களுடைய மதம் அடுப்பங்கரை யிலும், எங்களுடைய தெய்வம் அடுப்பங்கரை பானைகளாகவும் இருப்பதால் எந்த மதமும் என்னைத் தொடுவதற்கு அருகதையற்றதாக இருக்கிறது” என்று சொல்வதும், “மதங்களை நம்பாவிட்டாலும் நான் புனிதத் தன்மையுடையவனாக இருக்கிறேன்” என்று பண்டித ஜவகர்லால் நேரு தன்னுடைய ((Discovery of India) என்ற புத்தகத்தில் மேற்கோளாகக் காட்டப்பட்ட செய்திகளும்கூட புண்படுத்துவதாக இருக்கிறது என்று சொல்லலாம்.
முறைகேடான வழிகளில் அதிகாரத்தைப் பயன்படுத்தக் கூடாது
தற்போது, மாநில அரசு தடை விதிக்கவேண்டிய காரண காரியங்களை குற்றமுறை பிரிவு 99-ஏ படி கூறியிருக்க வேண்டும். இந்தப் பிரிவை ஒவ்வொரு மாநில அரசும் பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தி வருகின்றன. எனவே, அதனைப்பற்றி தெளிவான விளக்கத்தைத் தர கடமைப்பட்டிருக்கிறோம். இந்தியாவானது, பல்வேறு சமுதாயத்தையும், பலதரப்பட்ட மதத் தன்மையையும், பகுத்தறிவுவாதிகளையும், கண்மூடித் தனமான மூடநம்பிக்கைக் கொண்டவர்களையும் கொண்டுள்ள நாடு.
எந்த ஒரு மாநில அரசும் இதனைக் கருத்தில்கொண்டு எந்த ஒரு வெளியீட்டையும் தடை செய்யும்போது முறைகேடான வழிகளில் அதிகாரத்தைப் பயன்படுத்தாது என நம்புகிறோம்.
இந்த ஒரு நடைமுறை தடையானது நெருக்கடி பிரகடனத்திற்கு முற்பட்டாக இருப்பதால், இந்த அரசின் மேல் முறையீட்டை தள்ளுபடி செய்கிறோம் என்று நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் தீர்ப்பில் கூறினார்.
நன்றி : திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள “இராமாயண போராட்ட வரலாறு” நூலிலிருந்து
Periyar sonnathaya DK follow pannran - pichaikarargal.
DMK, ADMK - kollaikarargal.
AAyram illa illa Pathrayram Periyar sonnalum Namma makkal thirunthamattar gal.
RSS feed for comments to this post