கடந்த 2 ஆண்டுகளில் அய்அய்டி கல்வி நிறுவனங்களிலிருந்து 2461 மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப கல்விக்கு நாட்டிலேயே முன்னோடி கல்வி நிறுவனமாக இருந்து வருவது அய்அய்டி நிறுவனங்களாகும். இந்தக் கல்வி நிறுவனங்களில் எப்படியாவது பயில வேண்டும் என பல மாணவர்கள் தங்களின் பள்ளி பருவம் முதல் தீவிர முயற்சியில் ஈடுபடுகின்றனர். எனினும் இந்தக் கல்வி நிறுவனங்களிலிருந்து அதிக மாணவர்கள் தங்களின் படிப்பை பாதியில் விடுவது தெரிய வந்துள்ளது. இந்தத் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலங்களவையில் ஆந்திர மாநில நாடாளுமன்ற உறுப்பினரான விஜயசாய் ரெட்டி அய்அய்டியில் மாணவர்கள் இடைநிற்றல் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பதிலளித்திருந்தது. அதில் அய்அய்டியிலிருந்து கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 2,461 மாணவர்கள் தங்களின் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 57% மாணவர்கள் அய்அய்டி-டில்லி மற்றும் அய்அய்டி-கராக்பூர் ஆகிய நிறுவனங்களிலிருந்து பாதியில் படிப்பை நிறுத்தியுள்ளனர்.

அய்அய்டியில் இடை நிற்றல் மாணவர்கள் : டில்லி- 782; கராக்பூர்-622; கான்பூர்-190; சென்னை-128; பாட்னா-92; அய்தராபாத்-85; ரூர்கி-57; இந்தோர்-50; புவனேஸ்வர்-39

கடந்த இரண்டு ஆண்டுகளில் அய்அய்டி டில்லியி லிருந்து 782 பேரும், அய்அய்டி கராக்பூரிலிருந்து 622 பேரும் படிப்பை பாதியில் விட்டுள்ளனர். அதேபோல அய்..அய்டி. மெட்ராஸ் (சென்னை) கல்வி நிறுவனத்தில் 128 பேர் பட்டபடிப்பை முடிக்காமல் வெளியேறியுள்ளனர். மேலும் இந்த இரண்டு ஆண்டுகளில் அய்.அய்.டி. நிறுவனங்களிலிருந்து இடை நிற்றல் செய்த மாணவர்களில் 47.5% பேர் பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அதாவது இந்தப் பிரிவை சேர்ந்த 1,171 மாணவர்கள் அய்அய்டி நிறுவனங்களிலிருந்து படிப்பை முடிக்காமல் வெளியேறியுள்ளனர்.

அய்அய்டி நிறுவனங்களிலிருந்து அதிகளவில் மாணவர்கள் வெளியேறுவதற்கு மருத்துவ காரணங்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் வாய்ப்புகள், தவறான படிப்பை தேர்ந்தெடுத்தல் போன்றவற்றை காரணமாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.