அசோகா பல்கலைக்கழகமும் (டெல்லி), அம்பேத்கர் பல்கலைக்கழகமும், திராவிடியனிஸம் என்ற தலைப்பில் சென்ற ஜனவரி மாதம் ஒரு கருத்தரங்கை ஒழுங்கு செய்திருந்தார்கள். இந்தக் கருத்தரங்கம் திராவிட இயக்கம் தோன்றி ஒரு நூற்றாண்டு ஆனதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக்கருத்தரங்கில் பேராசிரியர் ஜெயரஞ்சன் வாசித்த கட்டுரையின் சுருக்கம்.

தமிழகம் ஒரு முன்னேறிய மாநிலமாகச் சமீப காலங்களில் அங்கீகரிக்கப்பட்ட போதும், நிலச் சீர்திருத்தம் இம்மாநிலத்தில் சரிவரச் செயல்படுத்தப்படவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு ஒரு சாரரால் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. இக்குற்றச்சாட்டின் அடிப்படையில் நோக்கினால், நிலப்பிரபுத்துவம் தமிழகத்தில் தொடர்கிறது என்றுதான் எவரும் ஊகிப்பர். அதன் விளைவாகப் பெரும்பான்மையான சாகுபடி நிலங்கள் குத்தகைக்கு அடைக்கப்பட்டும் வேளாண் வருமானத்தில் பெரும் பகுதி குத்தகையாக வசூலிக்கப்படும் சூழலும் நிலவ வேண்டும். குறிப்பாகக் காவிரி டெல்டா போன்ற செழிப்பான பகுதிகளில் இத்தகைய நிலச் சுவான்தார் முறை உக்கிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், நடைமுறை என்ன? நிலப் பிரபுத்துவம் பெருமளவு காணாமல் போனது. குத்தகை முறையும் பெரும் மாற்றத்தைச் சந்தித்து குத்தகைதாரரின் நிலை மிக முன்னேற்றம் கண்டுள்ளது. நிலச் சுவான்தார்களுக்கும் குத்தகைதாரர்களுக்கும் இடையேயான அதிகார உறவு முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டுவிட்டது. குத்தகைதாரர் தனது உரிமைகளை நிலைநாட்ட முடியும் சூழல் நிலவுகிறது. அதன் வாயிலாகத் தனது சாகுபடி உரிமையை விட்டுவிடக் கணிசமான இழப்பீடு பெற முடியும்.

இது எப்படிச் சாத்தியமாயிற்று? இடதுசாரிகளும் திராவிட இயக்கத்தாரும் விவசாயிகளை அணி திரட்டிப் போராடியதால் கிடைத்த வெற்றி இது. இப்போராட்டங்களின் விளைவாக நிலப்பிரபுத்துவத்தின் அதிகாரம் தகர்க்கப்பட்டது. உழவர்களின் உரிமை நிலை நிறுத்தப்பட்டது. 1967இல் ஆட்சியைப் பிடித்த திமுக நடு, கீழ் சாதி குத்தகைதாரர்களின் அதிகாரத்தைக் கூடுதலாக்கியதன் வாயிலாக இதனைச் சாத்தியமாக்க முடிந்தது. இதுமட்டுமல்லாது இத்தகைய குத்தகைதாரர்கள் ஒருங்கிணைந்து போராடத் தோதான சட்டங்களையும் திமுக இயற்றியது. இதன் விளைவாக நிலப்பிரபுக்கள், குறிப்பாகப் பார்ப்பன நிலச்சுவான்தார்களுக்கு எதிராக உழவர்கள் ஒருங்கிணைந்தார்கள். இந்த வரலாறு நெடியது. அதனுடைய வரலாற்றை உற்று நோக்கினால் வர்க்கம் மற்றும் சாதியப் போராட்டங்கள் பின்னிப் பிணைந்து இந்த மாற்றத்தை ஏற்படுத்தியது புலப்படும்.

எனது ஆய்வுக்காக நான் காவிரி டெல்டா பகுதியைத் தேர்ந்தெடுத்தேன். அப்பகுதி மிகவும் பழைமை வாய்ந்தது. கால ஓட்டத்தின் விளைவாக அங்கு மிகவும் சிக்கலான உற்பத்தி உறவுகள் உருவாகியிருந்தன. குத்தகை முறையை எடுத்துக் கொண்டால் இரண்டு வகை இருந்தன. நிலையான அளவில் நில உடைமையாளர்களுக்கு நெல் அளப்பது என்பது குத்தகை முறை. எடுத்துக் காட்டாக, ஏக்கருக்கு 10 மூட்டை நெல் என்றால் அது குத்தகை. எவ்வளவு விளைந்தாலும் விளையாவிட்டாலும் குத்தகை சாகுபடி செய்பவர் இதனைக் கொடுக்க வேண்டும். மற்றொரு முறை பங்கு சார்ந்தது. விளைச்சலில் ஒரு குறிப்பிட்ட பங்கு நில உடைமையாளருக்குக் கொடுக்க வேண்டும். 10 மூட்டை விளைகிறது என்றால் அதில் சரி பாதி 5 மூட்டை பெறுவார். விளைச்சல் 8 மூட்டையாகக் குறைந்தால் அவரின் பங்கு 4 மூட்டைகளாகிவிடும். இந்த முறைக்கு ‘வாரம்’ என்று பெயர். காவிரி டெல்டா பகுதியில் குத்தகை, வாரம் என்ற இரண்டு முறைகளுமே புழக்கத்தில் இருந்து வந்தன. 1952ஆம் ஆண்டு டெல்டாவில் ஆய்வு மேற்கொண்ட காதலீன் காஃப் என்ற ஆய்வுப் பேராசிரியர் சாகுபடிச் செலவுகள் போக, குத்தகைதாரர் பெற்ற பங்கு 7 - 10 விழுக்காடு அளவே எனக் கண்டார். இந்நிலை மேலத்தஞ்சைப் பகுதியில் நிலவியது.

இத்தகைய சுரண்டல் நிலைக்கு எதிர் வினையாக 1943ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விவசாயச் சங்கத்தைத் தஞ்சை மாவட்டத்தில் நிறுவியது. அதற்கு முன்பு அக்கட்சி தீவிரவாதப் போராட்டங்களை முன்னெடுத்து வந்தது. அதன் பின்னர் ஜனநாயக முறையில் தொழிற்சங்கங்களைக் கட்டமைத்து உழைப்போர் உரிமைக்காகப் போராட்டங்களை முன்னெடுத்தது. இதே காலகட்டத்தில் இப்பகுதியில் திராவிடர் கழகம் முன்னெடுத்த அணிதிரள்கள் ஆய்வு அறிஞர்களின் கவனத்தைப் பெறாமல் போனது. (தியாகி சீனிவாச ராவ் - கீழ்த்தஞ்சை விவசாயத் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து முன்னெடுத்துச் சென்றவர்)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி காவிரி டெல்டா பகுதியில் வேர் விட்டு வளரத் தொடங்கும் முன்னரே பட்டியல் சாதியினர் மீது பார்ப்பனர் அமைப்பு கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறைக்கு எதிராகப் பெரியார் குரல் எழுப்பிவந்தார். திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம் ஒன்றை பெரியாரின் திராவிடர் கழகம் தொடங்கி நடத்தி வந்தது. இந்தச் சங்கம் கீழ்த்தஞ்சைப் பகுதியில் வலிமையுடன் வளர்ந்து வந்தது.

எடுத்துக்காட்டாக, கீழ்வேளூர் பகுதியில் இச்சங்கத்தில் 50,000 உறுப்பினர்கள் இருந்தனர். இச்சங்கம் தலித் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடியதால் நிலச்சுவான்தார்களுடன் மோதல் ஏற்பட்டது. சிறிது காலத்திற்குப் பின் நாகைப் பகுதி திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம் கம்யூனிஸ்ட் கட்சியோடு இணைந்தது. திமுக 1967இல் ஆட்சியைப் பிடித்த பின் இத்தகைய போராட்டங்களில் குத்தகைதாரர்களின் கை ஓங்கியது. ஒடுக்கப்பட்ட சாதியினர் அரசியல் வலு கூடியது ஒரு பக்கமென்றால் திமுக அரசும் சாதகமான சட்டங்களை இயற்றியது.

அதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சியும் பல சட்டங்களை நிறைவேற்றிய போதும், குத்தகைதாரர்களின் உரிமை வலுவாக நிலைநாட்டப்பட்டது திமுக அரசு கொண்டுவந்த சட்டங்களினால்தான். Tamil Nadu Cultivating Tenants (Special Provision) Act, 1968 என்ற சட்டம் குத்தகைதாரர் தவணை முறையில் குத்தகையைச் செலுத்த அனுமதித்தது. அதற்கு முன்பு இருந்த குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டங்கள் வலுவற்றவையாக இருந்தமைக்கு முக்கியக் காரணம் குத்தகைதாரர்கள் கண்டறியப்பட்டுப் பதிவு செய்யப்படவில்லை என்பதே. The Tamil Nadu Agricultural Lands (Record of Tenancy Rights) Act, 1969, இக் குறையை நீக்கியது. குத்தகைதாரர்கள் பதிந்து கொள்வதை மிகவும் சுலபமாக்கியது. ஏறத்தாழ ஐந்து லட்சம் குத்தகைதாரர்கள் பதிவு பெற்றனர். தஞ்சையில் மட்டும் ஏழு லட்சம் ஏக்கர் நிலம் குத்தகை நிலங்களாகப் பதியப்பட்டன. 1979ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஒரு சட்டத் திருத்தம் குத்தகையின் வரம்பை 25% ஆகக் குறைந்தது. மேலும் இடர்காலங்களில் குத்தகை செலுத்தப்படா விட்டாலும்கூட குத்தகைதாரரை நீக்க முடியாத பாதுகாப்பையும் இச்சட்டம் வழங்கியது.

1971ஆம் ஆண்டு மற்றுமொரு சிறப்பான சட்டம் நிறைவேற்றப்பட்டது. Conferment of ownership of Homestead Act என்ற சட்டமே அது. இச்சட்டம் நிலச் சுவான்தார்களின் பிடியிலிருந்து நிலமற்றோரை மீட்டது. 1972ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மற்றொரு சட்டம் அதுவரை வராமலிருந்த குத்தகை பாக்கியைத் தள்ளுபடி செய்தது. இவ்வாறு திமுக ஆட்சிக்கு வந்தபின் விவசாய தொழிலாளர்களையும், குத்தகைதாரரையும் காக்கும் பல சட்டங்கள் இயற்றப்பட்டுச் செயல்படுத்தப்பட்டன. குத்தகைதாரர் பதிவு சட்டம், குத்தகை பாக்கி தள்ளுபடி, வருவாய் நீதிமன்றங்களின் எண்ணிக்கை உயர்வு, குத்தகைக்குப் பெற்ற நிலத்தை வாங்கும் உரிமை, குடியிருக்கும் அடிமனை சொந்தமாக்குதல் ஆகியவற்றால் நில உடைமையாளர்களிடம் பேரம் பேசும் அதிகாரத்தை குத்தகைதாரர்கள் வலுவாகப் பெற்றனர்.

இரண்டு திராவிட கட்சிகளும் காலப்போக்கில் வலுப்பெற்றபோது பிற்படுத்தப்பட்ட சாதியினரின் வலுவும் கூடியது. மேலத் தஞ்சையில் கள்ளர்கள் (பிற்படுத்தப்பட்ட சாதியினர்) வலுப்பெற்றனர். இச்சாதியினரைச் சேர்ந்தவர்களே இரண்டு திராவிட கட்சிகளிலும் பொறுப்பில் பெரும்பாலும் இருந்தனர். இந்நிலை கடந்த 50 வருடங்களாகத் தொடர்கிறது. அச்சாதியினரைச் சேர்ந்தவர்களே மாநில, ஒன்றிய அமைச்சர்களாகவும் இருந்து வருகின்றனர் (ஓரிரு சந்தர்ப்பங்கள் தவிர்த்து). அரசின் நிர்வாகம் அச்சாதியினரின் கட்டுப்பாட்டில்தான் இம்மாவட்டத்தில் இயங்கி வருகிறது. இதன் விளைவாகத் தகராறுகளின்போது பஞ்சாயத்து செய்வதில் இச்சாதியினர் கூடுதல் அதிகாரம் செலுத்துகின்றனர். பார்ப்பன நில உடைமையாளர்கள் முன்பு இருந்ததுபோல் தங்களது உயர்ந்த சாதி பலத்தால் தங்கள் குத்தகைதாரர்களையும் விவசாய தொழிலாளர்களையும் கட்டுப்படுத்த முடியாமல் போனது.

தற்போதைய நிலையை நோக்கினால் தெளிவாகப் புலப்படும் செய்திகளில் ஒன்று முன்பு இருந்தது போன்று பார்ப்பன ஆதிக்கம் அறவே இல்லை. இதுதான் அநேகமாக எல்லாக் கிராமங்களின் நிலையும். பார்ப்பனர்கள் தங்கள் நிலங்களைக் கிடைத்த விலைக்கு விற்றுவிட்டோ அல்லது சொற்ப விலைக்கு தங்கள் குத்தகைதாரரிடமே வேறு வழியின்றி விற்றுவிட்டு வெளியேறியுள்ளனர். கம்யூனிஸ்டு மற்றும் திராவிட கட்சிகளின் செயல்பாடுகளால் நிலப்பிரபுத்துவ அமைப்பு பழங்கதையாய் போனது. சட்டங்கள், அரசியல், சமூக மாற்றங்களால் நிலச்சுவான்தார்கள் தங்கள் மேலாதிக்கத்தையும், நிலத்தையும் இழந்தனர். ஆதீனங்களும், மடங்களும் நிலத்தை இழக்காத போதும் மேலாதிக்கத்தை முற்றிலும் இழந்தனர்.

ஆதீன, மட நிலங்கள் குத்தகைதாரர் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதால் குத்தகைதாரர்களை வெளியேற்றுவது சுலபமான ஒன்றல்ல. அதுமட்டுமல்லாது, இப்பதிவினால் குத்தகைதாரர்கள் சொற்ப குத்தகை மட்டுமே அளிக்க வேண்டும். குத்தகைதாரர்களை நிலத்தை விட்டு வெளியேற்றுவது என்பது கிட்டத்தட்ட இயலாத ஒன்று. அவர்களுக்கு அவ்வளவு சட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. கோயில், மட நிர்வாகங்கள் அப்படியே பெரு முயற்சி எடுத்து நீதிமன்ற உத்தரவைப் பெற்றால்கூட ஒரு குத்தகைதாரரை வெளியேற்றுவதும், வேறு ஒருவரைக் குத்தகைதாரராக அமர்த்துவதும் இயலாத ஒன்று. சமுதாயத்தில் குத்தகைதாரர்களுக்கு உரிமை உண்டு என்பது நிறுவனமயப்படுத்தப்பட்டுவிட்டது. இதற்கு உழவடை பாத்தியம் என்று பெயர். சட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும் இந்த உழவடை பாத்தியம் நன்கு வேர்விட்டு வலுப்பெற்றுவிட்டது. இதன் விளைவாக குத்தகைதாரர்கள் வலுவான நிலையில் உள்ளனர்.

குத்தகைதாரர்கள் நிலங்களிலிருந்து வெளியேற்றப்படாமல் இருக்கச் சட்டம் பல வாய்ப்புகளை வழங்குகிறது. அதைவிடப் பெரிய பாதுகாப்பை வழங்குவது இந்த உழவடை பாத்தியம் தான். உழவடை பாத்தியம் குத்தகைதாரர்களுக்குச் சாகுபடி உரிமையை வழங்குகிறது. இந்தச் சாகுபடி உரிமையை அவர் விட்டுத்தர வேண்டுமென்றால் அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். குறைந்தபட்ச இழப்பீடு என்பது அவர் எவ்வளவு பரப்பில் குத்தகை விவசாயம் செய்கிறாரோ அதில் மூன்றில் ஒரு பகுதி. அவர் மூன்று ஏக்கரில் குத்தகை பயிர் செய்தால் ஓர் ஏக்கர் நிலத்தைப் பெற்றுக்கொண்டு மீதமுள்ள இரண்டு ஏக்கர் நிலத்தை உரிமையாளருக்குக் கொடுத்துவிடுவார். இதுதான் உழவடை பாத்தியம்.

(தொடரும்)

Pin It