தமிழகத்தில் வாழும் ஈழத் தமிழ் அகதிகள் உரிமைகளுக்காக “தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் தலைவராக கழகத் தலைவர் கொளத்தூர் மணி தேர்வு செய்யப் பட்டார். தலைமைக் குழு உறுப்பினர் களாக பெ. மணியரசன், கோவை கு. இராமகிருட்டிணன் தேர்வு செய்யப் பட்டனர். கூட்டமைப்பு சார்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பெ. மணியரசன் உள்ளிட்ட பொறுப் பாளர்கள் ஆகஸ்ட் 21ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். பேட்டியில் கூறியதாவது:

இலங்கையில் சிங்களப் பேரினவாத அரசின் இன ஒடுக்கு முறை, இன அடக்குமுறை, இனக் கொலைக் கொடுமைகளால் அங்கிருந்து உயிர்தப்பித் தஞ்சம் நாடித் தமிழகம் வரும் ஈழத் தமிழ் மக்களை ஏற்று வாழ வைக்கும் உரிமையும் கடமையும் தமிழ்நாட்டுத் தமிழ் மக்களாகிய நமக்குண்டு என்ற அடிப்படையில், இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் வாழ்ந்து வரும் இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழீழ ஏதிலியர் (அகதிகள்) நலவுரிமைகளுக்காகப் பின்வரும் கோரிக்கைகளை இந்திய அரசிடமும் தமிழக அரசிடமும் வலியுறுத்து கிறோம்:

•             இலங்கைத் தமிழ் அகதிகள் எனப்படும் தமிழீழ ஏதிலியர் அனைவருக்கும் இந்நாட்டில் இடைக்காலக் குடியுரிமை வழங்க வேண்டும்.

•             தமிழீழ ஏதிலியரின் அரசியல், குடியியல் உரிமைகளும், பொருளியல் உரிமைகளும், சட்டத்திலும் நடைமுறையிலும் உறுதி செய்யப்பட வேண்டும்.

•             திபேத்து போன்ற பிறநாட்டு ஏதிலியோடு ஒப்பிட்டால் தமிழீழ ஏதிலியர்க்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதை இந்திய அரசு கைவிட வேண்டும்.

•             சிறப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் ஏதிலியர் அனைவரையும் உடனடி யாக விடுதலை செய்வதோடு, தமிழக அரசு அம்முகாம்களைக் கலைத்துவிட வேண்டும்.

•             ஏதிலியர் முகாம்களை சிறை முகாம்கள் போல கருதி நடத்துவதைக் கைவிட வேண்டும். அவற்றில் காவல்துறை உளவுப் பிரிவின் ஆதிக்கமும் தலையீடும் இல்லாமற் செய்ய வேண்டும்; ஏதிலியர்க்கு எதிராக மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் அரசின் காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். முகாம் களுக்கு வெளியேயும் ஏதிலியர் வாழ்வில் காவல்துறைத் தலையீடும் கெடுபிடியும் இல்லாமற் செய்ய வேண்டும்.

•             தமிழீழ ஏதிலியரின் கல்வியுரிமை யும் வேலைவாய்ப்பும் உறுதி  செய்யப்பட வேண்டும்; ஏதிலிக் குழந்தைகள் அனைவருக்கும் கட்டாய இலவயக் கல்வி கிடைக்க வகை செய்ய வேண்டும். ஏதிலி மாணவர்கள் இந்நாட்டில் மருத்துவம், பொறியியல் போன்ற உயர் கல்வி பெற இப்போதுள்ள தடையை நீக்க வேண்டும். தனியார் துறையிலும் அரசுத் துறையிலும் அவர்களின் வேலை வாய்ப்புக்கு இப்போதுள்ள வழித் தடைகள் அனைத்தையும் களைந்திட வகை செய்ய வேண்டும்.

•             சட்டம் பயின்று தகுதி பெற்ற தமிழீழ ஏதிலியர் நீதிமன்றங்களில் வழக்குரைஞராகப் பணியாற்ற இப்போதுள்ள தடையை நீக்க வேண்டும்.

•             ஏதிலியரின் கண்ணிய மிக்க மாந்த வாழ்வுக்கு ஏற்ற வகையில் ஏதிலியர் முகாம்களில் வீட்டு வசதியும், பிற குடிமை வசதிகளும் செய்து தரவேண்டும். ஏதிலியர்க்கான அரசின் உதவித் தொகையை உயர்த்திக் கொடுக்க வேண்டும்.

•             இலங்கை திரும்ப விரும்பும் ஏதிலி யரிடம் இந்நாட்டில் மிகைத் தங்கலுக்காகத் தண்டம் விதிப்பதைக் கைவிட வேண்டும். உடனடியாகத் தண்டத் தொகையைப் பெரிதும் குறைக்க வேண்டும்.

தமிழகத்தில் ஈழத் தமிழர்கள் அயலாராகவும் குற்ற மரபினராகவும் நடத்தப்படுவது தமிழ் மக்களாகிய நாம் வெட்கித் தலைகுனிய வேண்டிய செய்தி. இந்த அவல நிலையை மாற்ற இந்திய அரசிடமும் தமிழக அரசிட மும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடுவதும், தமிழீழ ஏதிலியர்க்கு ஆக்க உதவிகள் செய்வதும் தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பின் நோக்கங்களாகும்.

தமிழீழ ஏதிலியரின் துயர் துடைப் பதற்கான முதன்மைக் கோரிக்கை களை வலியுறுத்தித் தமிழகத்தில் முதல்கட்டமாக “பத்து இலக்கம் கையொப்ப இயக்கம்” நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

27.8.2016 சனிக்கிழமை மாலை 3 மணிக்கு மெரினா கடற்கரையில் முதற் கட்டக் கையொப்ப இயக்கம் தொடங்கும். கூட்டமைப்பின் தலைவர், தலைமைக் குழு, அமைப்பு களின் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரைத் துறையினர் அனைவரும் தொடக்க நிகழ்வில் பங்கேற்பர். இதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டின் மாவட்டத் தலை நகரங்களில் கையொப்ப இயக்கம் தொடங்கி நடத்தப்படும். பத்து இலக்கம் கையொப்பம் பெறும் வகையில் கூட்டமைப்பு சார்பில் தொடர்ச்சியான மக்கள் இயக்கங்கள் நடத்தப்படும்.

அம்பேத்கர் சிறுத்தைகள், அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கம், இளந்தமிழகம் இயக்கம், கலகம், காஞ்சி மக்கள் மன்றம், குமுக விடுதலைத் தொழிலாளர்கள், சிபி (எம்எல்) மக்கள் விடுதலை, தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேச மக்கள் கட்சி, தமிழ்த் தேசியப் பேரியக்கம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழக மக்கள் முன்னணி, தமிழர் நலம் பேரியக்கம், தமிழர் விடுதலைக் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், மே 17 இயக்கம் - ஆகிய அமைப்புகள் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ளன. கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக வே. பாரதியும், பொருளாளராக கரு. அண்ணாமலை யும் செயல்படுவார்கள். 

Pin It