தமிழ்நாடு அரசின் அரசாணை ஒன்று 03.12.202 அன்று பிறப்பிக்கப்பட்டது. அந்த அரசாணையை அனைவரும் பாராட்டி வரவேற்கிறார்கள். இனி தமிழ்நாட்டில் அனைத்து போட்டித் தேர்வுகளிலும், அரசு நடத்துகிற தேர்வுகளிலும், தமிழ் மொழித் தாளில் ஒருவர் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதில் 40% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு அடிப்படையில் இந்தத் தேர்வுத் தாள் இருக்கும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. தமிழ் வழிக் கல்வி அல்லது தமிழ்நாட்டில் உள்ள அரசு வேலைகளில் தமிழ் தெரிந்தவர்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற உத்தரவின் வழியாக வேலை வாய்ப்புகள் 100% இனி தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே கிடைக்கும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

தமிழ்நாட்டில் பணி செய்வோர் தமிழில் பேச எழுத தெரிந்திருப்பது அவசியமாகிறது என்ற அடிப்படையில் இந்தத் தகுதித் தேர்வு வேலை வாய்ப்புக்கு முன் நிபந்தனையாக்கப் பட்டுள்ளது.

ஏற்கெனவே அரசு பள்ளிகளில் படிப்பவர்களுக்கு முன்னுரிமை, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு என்ற சட்டங்கள் உள்ள நிலையில், இந்தப் புதிய அரசாணைகளும் இணைகிற போது சமூகநீதியின் களம் விரிவடைகிறது. நகரங்களில் இருந்து கிராமங்களுக்கும் சமூகநீதித் தளம் விரிவடைந்து மிகுந்த பயனை உருவாக்குகிற சமூகநீதிச் சூழல் உருவாக்கப்பட் டுள்ளது. ஏற்கெனவே ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சராக இருந்தபோது ஒரு விபரீத ஆணையை பிறப்பித்தார். தமிழ்நாட்டில் தமிழ் தெரியாதவர்கள் கூட தமிழ்நாட்டு அரசு வேலைகளில் சேர முடியும் என்று தமிழ்நாட்டு அரசு தேர்வாணையத்தில் திருத்தம் ஒன்றை அவர் கொண்டு வந்தார். இதன் வழியாக தமிழ் தெரியாத பலர் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறித்து விட்டார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தாங்கள் தமிழில் தேர்ச்சிப் பெற்று விட்டதாகவும் பொய்யான சான்றிதழ்களை வழங்கி தங்களுடைய வேலைகளைப் பாதுகாத்துக் கொண்டனர். தற்போதைய அரசுத் தேர்வாணையம் அவைகளைக் கண்டறிந்து இந்த மோசடிகளை அகற்றி வருகிற வேலைகளையும் செய்து வருகிறது.

அரசினுடைய இந்த உத்தரவு தமிழ் நாட்டில் திராவிட இயக்கம் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஏதும் செய்யவில்லை என்று கூப்பாடு போட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு பதிலாகவும் அமைந்திருக்கிறது. தமிழ்த் தேசியம் என்று சொல்லிக் கொண்டு திராவிட எதிர்ப்பை பேசிக் கொண்டிருப்பவர்கள் தமிழ்நாட்டு அரசின் இந்த உத்தரவுகளை வரவேற்பார்களா? அல்லது மவுனம் சாதித்து கடந்து போவார்களா?

- விடுதலை இராசேந்திரன்

Pin It