ராமாயணம் - பார்ப்பனர்களின் சட்ட நெறி

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படக்கூடிய திட்டம், சேது சமுத்திரத் திட்டம். இத் திட்டம் அமுலானால் தூத்துக்குடியிலிருந்து கிழக்குக் கடற்கரையிலுள்ள துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்கள் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தைச் சுற்றிக் கொண்டு 424 கடல் மைல் தூரம் கூடுதலாக பயணிக்க வேண்டிய அவசியமில்லை. இத்திட்டத்தினால் தமிழக கடலோர வாணிபமும், பன்னாட்டு வாணிபமும் செழிக்கும். தமிழர்களின் நூற்றாண்டு கனவுத் திட்டம் இது.

இத்திட்டம் தொடங்கப்பட்டு 60 சதவீத பணிகள் முடிந்த பிறகு, பார்ப்பன சக்திகள் ‘ராமன்’ கட்டிய பாலம் என்று கூறி, புராணத்தைக் காட்டி, தமிழகத்தின் மிகப் பெரும் வளர்ச்சித் திட்டத்தை உச்சநீதிமன்றத்தின் வழியாக முடக்கி விட்டன.

1) சுப்பிரமணிய சாமி என்ற ஒற்றைப் பார்ப்பனர் வழக்கு தொடர்ந்தார்

2) ‘துக்ளக்’ சோ என்ற பார்ப்பனர் வழி மொழிகிறார்.

3) ஜெயலலிதா பார்ப்பனர், ‘ராமன்’ கட்டிய பாலத்தை இடிக்கக் கூடாது என்று கூப்பாடு போடுகிறார்.

4) இல.கணேசன், இராமகோபாலன் போன்ற பார்ப்பனர்கள் ராமன் பாலத்தை இடிப்பது ‘இந்து’ விரோதம் என்று கூப்பாடு போடுகிறார்கள்.

5) ராமாயணம் நடந்த கதையல்ல; அது ஆரியர்கள் திராவிடர்களை சூழ்ச்சிகரமாக வெற்றிக் கொள்வதை சித்தரிக்கும் கற்பனைக் கதை, என்ற உண்மையை நேரு, விவேகானந்தர் உட்படப் பல அறிஞர்கள் எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.

6 ) எத்தனையோ ராமாயணங்கள் இருந்தும் பார்ப்பனர்கள் வால்மீகி ராமாயணத்தை மட்டும்பிடித்துக் கொண்டு தொங்குவது ஏன்?

7) அதுதான் சமஸ்கிருதத்தில் பார்ப்பனர்கள் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தி எழுதப்பட்டது - என்பதால் தான்.

8 )பார்ப்பனர்கள் செய்வதற்கு மட்டுமே உரிமையுள்ள தவத்தை - சூத்திரன் செய்யக் கூடாது என்று கூறி சம்பூகன் என்ற சூத்திரன் தலையை வெட்டி எறிகிறான் ராமன்; பார்ப்பனர்களுக்காக ராமன் செய்த கொலையை, பார்ப்பனர்கள் மகிழ்ச்சிக் கூத்தாடி வரவேற்கிறார்கள், என்கிறது, வால்மீகி ராமாயணம்.

9) அனுமான் “பிராமண” வேடத்தில் இருந்தபோது அது அனுமான் என்று தெரிந்தும் அனுமான் காலில் விழுந்து வணங்குகிறான் ராமன். வேடம் தரித்த பார்ப்பனராக இருந்தாலும், காலில் விழுந்து வணங்குவதே தர்மம் என்கிறான் ராமன்.

10) இராவணனின் தங்கை சூர்ப்பனகை - லட்சுமணனிடம், தனது காதலை வெளிப்படுத்தியபோது, அந்தப் பெண்ணின் உறுப்புகளை சிதைத்து அவமதித்த லட்சுமணன், ‘நீ வேறு குலம்; நான்வேறு குலம்’ என்று குல தர்மம் பேசுகிறான்.

11) அரண்மனையிலிருந்து காட்டுக்குப் புறப்படும்போது, தனது உடைமைகளை எல்லாம் ராமன், பார்ப்பனர்களுக்கு மட்டுமே தானம் வழங்கினான், ஏழைகளுக்கு அல்ல.

12) காட்டில் தனது தம்பி பரதன் தன்னை சந்திக்க வந்தபோது, ‘பிராமணர்களுக்கு எந்த வருத்தமும் இல்லாமல் ஆட்சியை நடத்துகிறாயா’ என்று கவலையுடன் கேட்கிறான், ராமன்.

13) புத்தர்கள் திருடர்கள்; அவர்களிடம் எச்சரிக்கையாக இரு என்று, புத்த மார்க்கத்தை ஏற்ற திராவிடர்களைத் திருடர்கள் என்று தன்னை சந்திக்க வந்த தம்பி பரதனிடம் ராமன் கூறுகிறான். வேத மதம் என்ற பார்ப்பன கொடுங்கோன்மையை எதிர்த்து புத்த மார்க்கம் வந்தது. புத்த மார்க்கத்தின் செல்வாக்கை வீழ்த்த எந்த தத்துவமும் இல்லாத ‘வேதங்கள்’ பயன்படாது என்று கருதிய பார்ப்பனர்கள், புராணங்களை உருவாக்கினார்கள். அதுதான் வால்மீகி ராமாயணம்.

14) வால்மீகியின் பிறப்பையே பார்ப்பனர்கள் ‘அற்புதமாக்கி’ விட்டார்கள். கடும் தவம் செய்த கிருஷ்ண மகரிஷியின் கண்களிலிருந்து வழிந்த வீரியத்தை பாம்பு ஒன்று விழுங்கியபோது அந்தப் பாம்பே கர்ப்பம் தரித்து, வால்மீகியாக பிறந்து ராமாயணத்தை எழுதியதாக கதை விட்டார்கள்.

15) வால்மீகி ராமாயணத்தை சி.ஆர்.சீனிவாச அய்யங்கார் என்ற பார்ப்பனர் மொழி பெயர்த்தார். இந்த மொழி பெயர்ப்பைத்தான் பார்ப்பனர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார்கள். அவர் “ராமாயணம் நடந்திருக்குமா என்ற கேள்விகளைக் கேட்கக் கூடாது. ஆரியர் கொள்கைப்படி நிகழ்வுகள் முக்கியமல்ல; அவர்களின் எண்ணங்கள்தான் முக்கியம்; ஆரியர்களின் எண்ணங்கள்தான் சரித்திரம்” என்று தனது முன்னுரையில் கூறுகிறார்.

16) முதல்வர் பதவியிலிருந்து விரட்டப்பட்ட ராஜகோபாலாச்சாரி - பதவி விலகியவுடன் ராமாயணத்துக்கு விரிவுரை எழுதத் தொடங்கியது இந்த காரணத்தால்தான். பார்ப்பனர்களுக்கு சோதனை வரும்போதெல்லாம் ராமாயணத்தை எடுத்துப் படியுங்கள் என்று பார்ப்பனர்களுக்கு உபதேசம் செய்தவர் ராஜகோபாலாச்சாரி.

17) இப்படி ராமாயணம் - பார்ப்பனர்களின் சட்ட நெறிகளை ‘சூத்திரர்’கள் பின்பற்றி வாழ வேண்டும் என்று பறைசாற்றுகிறது. அதனால்தான் பார்ப்பனர்கள் ‘ராமன்’ பிறந்த இடம் என்றும், ‘ராமன்’ பாலம் என்றும் ‘ராமனை’ விடாமல் பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள். இதன் நோக்கம் தமிழினத்தை மீண்டும், அடிமைப் படுகுழியில் மனுதர்ம சாக்கடைக்குள் வர்ணாஸ்ரம இருட்டுக்குள் திணிப்பதுதான்.

தமிழர்களே, பார்ப்பனர் சூழ்ச்சிகளில் ஏமாறாதீர்!

Pin It