வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (21)

தமிழரசு கழகத்தைத் தொடங்கிய ம.பொ.சி., மீண்டும் காங்கிரசுக்குள் தன்னை இணைத்துக் கொள்ளவே தீவிர முயற்சிகளில் ஈடுபட்டார். இது குறித்து ம.பொ.சி.யே இப்படி எழுது கிறார். (சென்ற இதழ் தொடர்ச்சி)

காங்கிரஸ் கட்சித் தேர்தலில் போட்டியிட எனக்குத் தகுதியில்லை என்ற தேர்தல் அதிகாரியின் இந்த நடவடிக்கையானது என் மனத்திற்கு மிகுந்த அதிர்ச்சியைத் தந்தது. நேருஜி அப்போது அனைத்திந்திய காங்கிரசின் தலைவராக இருந்தார். என்னைப்பற்றி அவர் நன்கு அறிந்து வைத்திருந்த நேரம் அது. அதனால், தேர்தல் அதிகாரியின் முடிவை நேருஜிக்கு அறிவித்து, எனக்கு நீதி வழங்க வேண்டும் என்று அவருக்கு ‘மேல் மனு’ப் போட்டேன். 21 மணி நேரத்திற்குள் அவரிடமிருந்து கீழ்க்கண்ட தந்தி கிடைத்தது. புதுடெல்லி, 16.11.1952 தாங்கள் காங்கிரஸ் தலைவருக்குச் செய்து கொண்ட அப்பீல் மனு கிடைத்தது.

காங்கிரஸ்மேலிடம் தமிழரசுக் கழக அங்கத்தினர்கள் பற்றி விசாரணை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் வரையிலும் அந்தக் கழகத்தைச் சேர்ந்தவர்களும் காங்கிரஸ் தேர்தலில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள். அப்போது இராஜாஜி அவர்கள் முதலமைச்சர் பொறுப்பில் இருந்தார். ஆயினும், நேருஜியிடமிருந்து நீதி பெறுவதற்கு இராஜாஜியின் உதவியை நான் நாடவில்லை. எனது மேல் மனுவை நேருஜி ஏற்றுக் கொண்டது செய்தித் தாள்களில் வெளியானபோது தான் இராஜாஜி அறிந்து கொண்டார். நானும் அவரைச் சந்தித்து நிகழ்ந்ததை விவரமாகக் கூறினேன். மாநில சுயாட்சி பற்றி நான் எழுதிய கட்டுரைகளை எல்லாம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் காங்கிரஸ் தலைவர் நேருஜிக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வட்டாரம் அனுப்பி வைத்ததோடு, காரியக் கமிட்டி உறுப்பினர்களுக்கும் அதன் நகலை அனுப்பியது. இராஜாஜி அப்போது காங்கிரஸ் காரியக் கமிட்டியில் இருந்தார். காரியக் கமிட்டியின் ஒவ்வொரு கூட்டத்திலும் தமிழரசுக் கழகம் பற்றிய பிரச்சினை ஆராயப்பட்டு, இறுதி முடிவு எதுவும் எடுக்காமல் ஒத்திப்போடப்பட்டு வந்தது. இதற்கிடையிலே, ஸ்ரீமந் நாராயணன் அனைத்திந்தியக் காங்கிரசின் பொதுச் சொயலாளர் என்ற முறையிலே என்னுடன் கடிதப் போக்குவரத்து வைத்துக் கொண்டார். அவருக்குப் பின் பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்ற திரு. பல்வந்தராய் மேத்தா என்பவரும் என்னுடன் கடிதப் போக்குவரத்து நடத்தினார். இந்த இருவருமே சென்னை நகருக்கு வருகை தந்து, எனக்கு நேரிலும் பேட்டியளித்து, என்னிடமிருந்து விவரங்களறிந்து சென்றனர். இப்படி, தமிழரசுக் கழகம் பற்றிய பிரச்சினை சரியாக ஒன்றைரையாண்டுக் காலம் ‘இழுபறி’யில் இருந்து வந்தது.

காரியக் கமிட்டியின் ஒவ்வொரு கூட்டத்திலும் இராஜாஜி கலந்து கொண்டு, அதன் உறுப்பினர்களான சர்தார் படேல், மவுலானா ஆசாத் போன்ற பெருந் தலைவர்களுக்கு என்னைப் பற்றிச் சரியான தகவல்களைத் தந்து கொண்டிருந்தார். இதற்கிடையில் திருவிதாங்கூர் சமஸ்தான சட்டமன்றத்திற்குத் தேர்தல் வந்தது. அதிலே, கேரள மாகாண காங்கிரசானது தமிழர் மிகுதியாக வாழும் தென் திருவிதாங்கூர் தொகுதிகள் சில வற்றில் கேரளர்களை நிறுத்தி வைத்தது. அவர்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ய நான் தென் திருவிதாங்கூருக்குச் செல்ல வேண்டுமென்று த.நா.கா. கமிட்டியிடமிருந்து ஆணை வந்தது.

நான் ஆணையை ஏற்க மறுத்தேன். இராஜாஜி தமிழக முதலமைச்சர் என்ற முறையிலே கேரளத்திற்குச் செல்ல இசைவு தெரிவித்திருந்தார். என்னை நேரில் அழைத்து, நானும் அவருடன் வர வேண்டுமென்று எனக்கு ஆலோசனை கூறியதோடு, நேருஜி தமக்கு எழுதிய கடிதம் ஒன்றையும் காட்டினார். அதிலே, “தங்கள் நண்பர் கிராமணியார் பிரச்சினை எனக்கு மிகவும் கவலை தருவதாக இருக்கிறது என்பதை நீங்கள் உணர்வீர்கள் என்று நம்புகிறேன். திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்குத் தாங்கள் தேர்தல் பிரசாரத்திற்குச் செல்லும்போது ஸ்ரீ கிராமணியாரையும் அழைத்துச் செல்ல முயலுங்கள்’ என்று நேருஜி குறிப்பிட்டிருந்தார். இராஜாஜி, திருவிதாங்கூர் தமிழர்களுக்கு எதிராகத் தேர்தல் களத்தில் கேரள வேட்பாளர்களை நான் ஆதரிப்பதிலுள்ள சங்கடத்தை அறிந்து கொண்டார்.

ஆயினும், நேருஜியைத் திருப்தி செய்வதற்காக-என்பால் நேருவுக்குள்ள அன்பு கெடாமலிருப்பதற்காக நான் தம்முடன் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு வருவதை அவர் விரும்பினார். தமிழர்கள் மிகுதியாக வாழும் தொகுதிகளுக்குத் தாம் செல்லப் போவதில்லையென்றும், அதனால் நானும் தம்முடன் வரலாமென்றும் கூறினார்.

இந்த நிகழ்ச்சியானது நேருஜிக்கு என்பால் கொஞ்சம் மனக்கசப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அப்படியிருந்தும் இந்த நிகழ்ச்சிக்குப் பின்னும் ஆறுமாத காலம் நான் காங்கிரசிலிருப்பதற்கு நேருஜி வழிவகுத்துக் கொடுத்தார். இந்த நிலையில் முதலமைச்சர் பதவியிலிருந்து இராஜாஜி தாமாக விலகிக் கொள்ளவே (குலக்கல்வித் திட்டம் எதிர்ப்புக் காரணமாக சட்டமன்ற வாக்கெடுப்பில் தோல்வியுற்றதை ம.பொ.சி. மறைத்து விட்டார்) திரு. காமராசர் அந்தப் பதவியில் அமர்ந்தார். இதனையடுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் ஒரு புதுவழியைக் கண்டுபிடித்தது. தமிழக எல்லைப் பிரச்சினைக்கென்று நடை பெறும் கூட்டங்களிலோ, ஊர்வலங்களிலோ காங்கிரஸ்காரர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று த.நா.கா.க. செயலாளர் திரு. ஆர். வெங்கட்ராமன் எனக்கு ஆணை அனுப்பினார். தமிழ் மாகாண காங்கிரஸ் கமிட்டி தரங்கம்பாடி யில் நிறைவேற்றிய தீர்மானத்தையே திரு. ஆர்.வி. எனக்கு அனுப்பி வைத்தார். அதன் பின்னரும் நான் எல்லைகளை மீட்கும் கிளர்ச்சிகளிலே தொடர்ந்து ஈடுபட்டு வந்தேன்.

‘வடக்கெல்லை தினம்’ என்னும் பெயரில் ஒரு நாள் கொண்டாடியது தமிழரசுக் கழகம். அது, 1954 ஜுலை 4ஆம் தேதியாகும். அன்று திருவல்லிக்கேணிக் கடற்கரையில் தமிழரசுக் கழகத்தின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தி, அதிலே நான் பேசினேன். அந்தப் பேச்சினை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துத் தமிழ்நாடு காங்கிரஸ் வட்டாரம் நேருஜிக்கு அனுப்பிவைத்தது. எல்லைக் கமிஷன் நியமிப்பதில் நேரு ஆட்சி காட்டி வரும் நியாயமற்ற தாமதத்தை எனது பேச்சில் நான் வன்மையாகக் கண்டித் திருந்தேன். அது, “நேருஜிக்கு ம.பொ.சி. மிரட்டல்” “நேருஜியே தமிழர்களை ஏமாற்றாதே” என்றெல்லாம் காரசாரமான தலைப்புக்களைத் தந்து, ‘தினத்தந்தியில்’ பிரசுரிக்கப் பட்டிருந்தது. அதை அப்படியே மொழி பெயர்த்து த.நா.கா. கமிட்டி நேருஜிக்கு அனுப்பியது.

தினத்தந்தியில் வெளியான செய்திக்குப் பின்னர் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடியபோது, “ஸ்ரீ சிவஞான கிராமணியார் பிரச்சினையை இந்தக் கமிட்டியில் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது. தாங்கள் அவசியம் கலந்து கொண்டு உதவி செய்யுங்கள்” என்று நேருஜி இராஜாஜிக்குக் கடிதம் எழுதியிருந்தார். ஆனால், என்ன காரணத்தாலோ, காரியக் கமிட்டிக் கூட்டத்திற்கு இராஜாஜி செல்லவில்லை. தனது அபிப்பிராயத்தைக்கூட நேருஜிக்கு எழுதவில்லை. ஆம்; என்னைக் கைவிட்டு விட்டார். அதனால், தமிழரசுக் கழகப் பிரச்சினையைத் தமிழ்நாடு காங்கிரசிடமே விட்டு விடலாம் என்று காரியக்கமிட்டி முடிவெடுத்தது. ஆம்; ஆடு கசாப்புக்காரனிடமே ஒப்புவிக்கப்பட்டது. அதன் பின்னர் 20.7.1954 தேதியிட்டுத் தமிழ்நாடு காங்கிரஸ் செயலாளர் திரு.ஆர்.வெங்கட்ராமன் அவர்களிடமிருந்து எனக்கு வந்த கடிதத்திலே “15 நாட்களுக்குள் தமிழரசுக் கழகத்திலிருந்து தாங்கள் ராஜினாமா செய்ய வேண்டும். தவறினால் காங்கிரஸ் ஸ்தாபனத்திலிருந்து விலக்கப்படுவீர்கள்” என்று குறிப்பிட்டிருந்தது. காங்கிரஸ் மேலிடத்தின் அனுமதியைப் பெற்றே தமிழ்நாடு காங்கிரஸ் இந்த முடிவை மேற்கொண்டது என்றும் திரு.ஆர். வி. தம் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். பின்னர், நானும் தமிழரசுக் கழகத் தோழர்களும் காங்கிரசிலிருந்து தமிழரசுக் கழகத்தின் தீர்மானப்படி வெளியேறியது நாடறிந்த நிகழ்ச்சியாகும்.

 (அடுத்த இதழில் முடியும்)