தமிழகம் குப்பைத் தொட்டியா?

ஏற்கனவே உலகம் பூராவும் மேலை நாடுகளின் லாப வெறியால் தொழில் என்ற பெயரால் ஏராளமான கரியமிலவாயு வெளியேற்றப்பட்டதால், பூமி வெப்ப மடைந்து வருகிறது. அண்டார்டிகா பனிமலைகளே கரைந்து கொண்டிருக்கின்றன.

சுற்றுச் சூழல் கேடு, வெப்பம் காரணமாக மேலை நாட்டு மக்களின் விழிப்புணர்வு காரணமாக அங்கெல்லாம் புதிதாக தொழில்கள் தொடங்க கடும் எதிர்ப்புள்ள நிலையில் எங்கே சென்று குப்பைக் கொட்டலாம் என்று அலைகிறார்கள் தொழிலதிபர்கள். ஏற்கனவே மோசமான மேலை நாட்டுக் குப்பைகளெல்லாம் தூத்துக்குடி பகுதி கடலில் கொட்டப்படுகிறது.

கார் போன்ற பல பொருட்கள் இந்தியாவில் - குறிப்பாகத் தமிழகத்தில் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் பல உள்நாட்டு மக்களுக்கு கொடுக்கப்படுவதே இல்லை. 100 சதவீதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிறுவனங்களுக்கு நமது அரசுகள் அரசு நிலங்களையும், நமது மக்களின் நிலங்களையும் பிடுங்கி வழங்குகிறது. 24 மணி நேரமும் மின்சாரமும், தண்ணீரும் வழங்குவதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது அரசு. இதனாலேயே மக்களுக்கு மின்சாரம் கிடைக்கவில்லை. தண்ணீரும் கிடைக்கவில்லை.

காவிரிப் படுகையை சீரழிக்கும் ‘மீதேன்’ வாயு திட்டம்

காவிரிப்படுகையில் அமைந்துள்ள திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம், வலங்கைமான், நீடாமங்கலம், ஒரத்தநாடு, மன்னார்குடி, குடவாசல், திருவாரூர் ஆகிய வட்டங்களில் பூமிக்கு அடியில் அதிக அளவில் மீதேன் எரிவாயு உள்ளதாம். இதை எடுத்தே ஆக வேண்டும் என்று பன்னாட்டு நிறுவனங்களும் மத்திய அரசும் உறுதி கொண்டுள்ளன.

அதனால் ஏற்படப்போகும் ஆபத்தை உணர்ந்த மன்னார்குடி பகுதி மக்கள் ஏற்கனவே போராட்டங்கள் மூலம் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.

மக்கள் எதிர்ப்பு ஏற்படுகிறது என்பதை உணர்ந்த நிறுவனங்கள் தொழில் நுட்பத்தை மாற்ற முனைகின்றன. நெய்வேலி போல திறந்த வெளிச் சுரங்கம் தோண்டினால் ஆரம்ப நிலையிலேயே மக்கள் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால், 50 மீட்டர் முதல் 600 மீட்டர் இராட்சச ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து, அதன் மூலம் மீதேன் வாயுவை உறிஞ்சி இழுக்கத் திட்டமிட்டுள்ளார்கள்.

அப்படி ஆழ்குழாய்கள் மூலம் மீதேன் வாயு எடுக்கப்படும்போது நிலத்துக்கு அடியில் வெற்றிடம் தோன்றும். அந்த வெற்றிடம் வேறொரு பொருளால் நிரப்பப்பட வேண்டும். அப்படி நடக்கும்போது நிலத்தின் மேல் பகுதியிலுள்ள குடிநீர் உள்ளிட்ட அனைத்து நீரும் கீழே இறங்கும். மேலே வசிக்கின்ற மக்களுக்கு நீரே கிடைக்காமல் போகும். மேற்படி பகுதிகள் வறண்ட பிரதேசமாக மாறும். அடி ஆழத்திலுள்ள கடல் நீரைப்போல் 5 மடங்கு உப்பு நிறைந்த நீர் மேலே இழுக்கப்பட்டு வெளித் தள்ளப்படும். தள்ளப்படும் தண்ணீர் ஏற்கெனவே இப்பகுதிகளிலுள்ள வாய்க்கால் ஆகவும், வடிகால் ஆகவும் பயன்பட்டுவரும் ஆறுகளில் விடப்பட உள்ளது. இதன் மூலம் நமது நிலம் பூராவும் உப்பாக மாறும் அபாயம் உள்ளது. பிறகென்ன? நிலத்திலுள்ள அனைத்து சிற்றுயிர்களும் அழிந்து போகும். புல், பூண்டு கூட முளைக் காது. மேலும் அருகாமையிலுள்ள நாகப்பட்டினம், வேதாரண்யம், முத்துப்பேட்டை, பட்டுக் கோட்டை, பேராவூரணி போன்ற பகுதிகள் வழியாக கடல்நீர் உள்ளே புகும். உப்பு நீர் உள்ளே புகுவதால் மேலே உள்ள தாவரங்கள் அழியும்.

இதேபோல் மேலே உள்ள நீர் கீழே இறங்கும்போது, மேலே சொல்லப்பட்ட பகுதிகள் மட்டு மல்ல, தஞ்சைக்கு மேலேயுள்ள மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதி களிலுள்ள நன்னீரும் கீழே இறங்கி விடும். பிறகென்ன? ஒன்றுபட்ட தஞ்சை மாவட்ட மக்கள் பஞ்சம் பிழைக்க இடம் தேடி வேண்டியது தான்.

தொழில் வளர்ச்சி என்பது மக்களின் வாழ்வு ஆதாரங்களை பாதிக்காத வகையில் அமைய வேண்டும்.

இப்படிப்பட்ட தொழில் வளர்ச்சி தேவைதானா? தொழில் வளர்ச்சிக்காக உடல் உழைப்பை செலுத்தும் மக்களுக்கு என்ன கிடைத்திருக்கிறது. ஒரு லட்சம் மக்களுக்கு எட்டு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அழகான கான்க்ரீட் வீடுகளைக் கட்டுவதற்கான தொகையைக் கொண்டு, அதாவது 8000 கோடி ரூபாயில் 4 பேர் வசிப்பதற்கு ஒரு வீடு அம்பானிக்கு மும்பையில் கட்டப்பட்டுள்ளது. இது மலைக்கும், மடுவுக்கும் உள்ள வேறுபாடு அல்லவா? ஒண்டுவதற்கு ஓலைக் குடிசைகூட இல்லாமல் சாலையோரம் குடும்பம் நடத்துவோர் எத்தனை பேர்?

தமிழ்நாடு, பாண்டிச்சேரி கடலோரப் பகுதியில் பாண்டிச்சேரியை அடுத்து பாகூரில் தொடங்கி நெய்வேலி, சிறிமுஷ்ணம், ஜயங்கொண்ட சோழபுரம் வழியாக மன்னார்குடிக்கு தெற்குப் பகுதி வரை காவிரிப்படுகையில் பழுப்பு நிலக்கரியும் அதோடு சேர்ந்து மீதேன் என்ற எரிவாயுவும் இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.

• பழுப்பு நிலக்கரியின் மதிப்பீடு: பாகூர் பகுதி - 766 மில்லியன் டன்.

• நெய்வேலி, ஜயங்கொண்டம், வீராணம் பகுதி : 6835 மில்லியன் டன்.

• மன்னார்குடி பகுதியோ : 19788 மில்லியன் டன்

• இப்பகுதியிலுள்ள மீதேன் வாயுவின் மதிப்பீடு: 98000 கோடி கன அடி முதலில் மீத்தேன் வாயுவை எடுக்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

வளரும் எரிவாயுத் தேவைகளுக்காக இந்த மீதேன் எரிவாயுவை எடுக்க இந்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் “கிரேட் ஈஸ்டெர்ன் எனர்ஜி கார்ப்பொரேசன் லிமிடெட்” என்ற நிறுவனத்துக்கு 29.07.2010 அன்று வழங்கியுள்ள உரிமத்தின் விவரங்கள் வருமாறு:

தஞ்சை மாவட்டத்தில் திருவிடைமருதூர், கும்பகோணம், ஒரத்தநாடு, பாபநாசம் வட்டங்கள்.

• திருவாரூர் மாவட்டத்தின் குடவாசல், வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி வட்டங்கள்.

• மொத்த நிலப்பரப்பு: 691 சதுர கிலோ மீட்டர்கள். இதில் 24 சதுர கி.மீ. பரப்பு பழுப்பு நிலக்கரி எடுப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 667 ச.கி.மீ. (1,66,210 ஏக்கர்கள்) மீதேன் எடுக்க தரப்பட்டுள்ளன.

•              04.01.2011இல் தமிழக அரசுடன் க்ரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கம்பெனி லிமிடெட் அன்றைய துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு தொழிற்துறை முதன்மை செயலாளருடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

• மீதேன் திட்டத்திற்கான சுற்றுச்சூழல், வனத்துறை அனுமதி, தமிழக அரசின் முன் அனுமதி ஆகியன பெறப்பட்டுள்ளதாக நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.

• உள்ளுறைக் கிணறுகளுக்கான துளையிடும் வேலைகள் 2012 இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என நிறுவனம் கூறியிருந்தது.

• முதற்கட்ட வேலையாக தஞ்சை மாவட்டத்தில் 12 உள்ளுறை கிணறுகளும், திருவாரூர் மாவட்டத்தில் 38 உள்ளுறை கிணறுகளுக்குமான வேலைகள் விரைவில் துவங்க உள்ளன.

• நிலப்படுகை மீதேன் வாயு ஒரு குறிப்பிட்ட பகுதியில் செறிவாக குவிந்திருப்பது அல்ல. நிலக்கரிப் படிமத்தில் அதன் நுண்துளைகள், வெடிப்புகளில் நிலக்கரிப் பாறைகளின் தளப் பரப்பில் ஒட்டியிருப்பது.

• மன்னார்குடிப் பகுதி நிலக்கரிப் படிமங்கள் தரைமட்டத்திற்கு கீழே 500 அடி முதல் 1650 அடி ஆழம் வரை காணப்படுகின்றது.

• தற்போதுள்ள நிலத்தடி நீர் இந்த படிமங்களை அழுத்திக் கொண்டுள்ளது.

• இந்த அழுத்தத்தினால் செறிவற்ற மீதேன் வாயு நிலக்கரிப் பாறைகளில் இருந்து வெளியேற முடிவதில்லை.

• நிலக்கரிப் பாறை மீதுள்ள நிலத்தடி நீரை இறைத்து வெளியேற்றிய பின்னரே மீத்தேன் வாயு வெளிவர முடியும்.

• அடுத்த கட்டமாக வெற்றிட மாக்கும் கருவிகளைக் கொண்டு காற்றை உறிஞ்சி வெளியேற்ற வேண்டும்.

• அவ்வாறு நிலத்தடி நீர் 500 அடி முதல் 1650 அடி வரை வெளி யேற்றப்படும் போது காவிரிப் படுகையின் நிலத்தடி நீர் மட்டம் 500 அடிகளுக்கு கீழே இறங்கி விடுவதோடு, இந்த மன்னார்குடி நிலக்கரிப் படுகையிலிருந்து சுற்றி யுள்ள மாவட்டங்களுக்கு தொடர் புள்ள நிலத்தடி நீர் தொகுப்புகள் அனைத்தும் வறண்டு போகும்.

• எல்லாவற்றிற்கும் மேலாக மிக அருகாமையிலுள்ள வங்கக் கடலின் உப்புநீர் காவிரிப் படுகையின் உள்ளே ஊடுருவும். காவிரிப் படுகை ஒரு உப்பளமாக மாறும், பேரழிவு நிகழும்.

• நிலநடுக்கங்கள், மண் உள்வாங்குதல் போன்ற பேராபத்துக்கள் நிகழும் அபாயங்களும் உண்டு.

வெளியேற்றப்படும் நிலத்தடி நீர்: ஒரு சுற்றுச் சூழல் பேரிடர்

• ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து வெளியேற்றப்படும் நிலத்தடி நீர் பலவகையான மாசுக்களைக் கொண்டது.

• கடல் நீரில் இருக்கும் உப்பைவிட சுமார் ஐந்து மடங்கு வரை அதிகமான உப்பு இதில் உள்ளது.

• குளோரைடு, சோடியம், சல்பேட், பை-கார்பனேட், புளோரைடு, இரும்பு, பேரியம், மக்னீசியம், அமோனியா, ஆர்செனிக், பலவித நீர் கரிமப் பொருட்கள், கதிரியக்கக் கழிவுகள் போன்ற மாசுகளும் இருக்கின்றன.

•              80 ஏக்கர் நிலத்திற்கு ஒரு கிணறு அமைப்பதாக எடுத்துக் கொணடால் சுமார் 2000 கிணறுகள் தோண்டப்படலாம்.

• நாளுக்கு சுமார் 20000 கேலன் (75000 லிட்டர்) நீர் ஒரு கிணற்றிலிருந்து வெளியேற்றப்படும்.

• மாசு நிறைந்த இந்த நீரை தற்போது பாசன / வடிகால் வாய்க்கால்களாக பயன்பட்டுக் கொண்டிருக்கும் வாய்க்கால், ஆறு வலைப் பின்னலில் விடத் திட்டமிடுகிறார்கள்.

• இது மிகவும் ஆபத்தானது. நாசத்தை விலை கொடுத்து வாங்கும் இந்த மூடத்தனத்தால் ஒரு பேரழிப்பு தமிழகத்தை சூழும் அபாயம் உள்ளது

Pin It