கேள்வி: சமீபத்தில் படித்ததில் பிடித்த புத்தகம்?

பதில்: ‘சுவரெழுத்து சுப்பையா - சிந்தனைப் பொறிகள்’ என்ற நூலைப் படிக்கப் படிக்க பிரமிப்பு. பத்திரிகைகளிலோ ஊடகங்களிலோ ஈ.வெ.ரா. பெரியாருக்கு ஆதரவு இல்லாத காலகட்டத்தில், சுவர்களில் எழுதி எழுதியே பெரியாரின் கொள்கைகளைப் பரப்பியவர் இந்த சுப்பையா தான். மக்கள் காசு கொடுக்காமல் பெரியாரின் புரட்சி வரிகளைப் படிக்கச் செய்தவர். ஆரம்பக் கல்விகூட முழுமையாக கற்காதவர் இந்த சுவரெழுத்துப் புரட்சியாளர். அவரது கையெழுத்திலேயே நூல் முழுதும் வந்திருப்பது படிக்க கொஞ்சம் சிரமம். தவிர்த்துப் பார்த்தால் பொக்கிஷம்தான். நன்றி அதை வெளி யிட்ட பெரியார் திராவிடர் கழகத்திற்குத்தான்.
நன்றி : ‘குமுதம்’ அரசு பதில்கள், 25.5.2011


சுயமரியாதைச் சுடர் மொழிகள்


வானில் உயர்ந்து நிற்கும் கோபுரம்;
தமிழர் மானத்தைத் தாழ்த்திநிற்கும் விகாரம்!
பித்தன் உண்மையோடு பேசுவான்
பக்தன் பொம்மையோடு பேசுகிறான்!
பலே திருடன் ஊருக்கு ஒரு பெயர் சொல்லுவான்
படே எத்தன் இடத்திற் கொரு சாமிப் பெயர் சொல்லுகிறான்!
ஒழுக்கச் சிதைவே இழுக்குடைய இந்துமதம்!
அழுக்காற்று மடையே பாழ்பட்ட சநாதனம்!
ஒத்துவரா வேதத்தை ஒதிவரும் வேதியன்கள்
ஓயும் நாளே தமிழர்களுக்குத் திருநாள்!
சீதாபிராட்டி பத்தினிப் பாட்டி தானாம்!
இராமபிரான் தான் சந்தேகப் பிராணியாம்!
விதிவிதி என்பார் மதியில்லார்;
விதி வகுத்துக் கொள்வர் மதி வல்லார்!

- ‘சுவரெழுத்து சுப்பையா’ தீட்டிய சுவரெழுத்துகள் (நூல்: சிந்தனைப் பொறிகள்)

Pin It