1991-க்குப் பிறகு அறிமுகமான ‘தாராளமயம்’ என்ற கொள்கையால் பார்ப்பன - பன்னாட்டுச் சுரண்டலோடு ஊழலின் பாய்ச்சலும் பன்மடங்காகி விட்டது.

சர்வதேச நிதியத்தில் (ஐ.எம்.எப்.) பொருளாதார வல்லுநராகப் பணியாற்றிய தேவ்கர் என்பவர் தலைமையிலான குழு ஒன்று சர்வதேச அளவில் நிகழும் நிதித்துறை முறைகேடுகளை ஆய்வு செய்து அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி விடுதலை பெற்ற இந்தியா வில் 1948 முதல் 2008 வரையிலான காலத்தில் 21300 கோடி டாலர் அளவுக்கு பணம் (ரூபாய்க் கணக்கில் 9,58,500 கோடி ரூபாய்) இந்தியாவிலிருந்து வரி செலுத்தப்படாமல் கடத்தப்பட்டு வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ளது. இத்தொகையில் 68 சதவீதம் அதாவது சுமார் 6,20,000 கோடி 1991 ஆம் ஆண்டுக்குப் பின் வெளியேறியுள்ளது. அதாவது 1991 ஆம் ஆண்டில் நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங் உலகமயக் கொள்கைகளை அதிரடியாக இந்தியாவில் புகுத்திய பிறகே இது நிகழ்ந்துள்ளது. ஆக 60 ஆண்டுகளில் கடத்தப் பட்ட பணத்தில் 3 இல் 2 பங்கு 20 ஆண்டு களில் உலக மயக் கொள்கைகள் அமலாக்கப்பட்ட போது வெளியேற்றப்பட்டுள்ளது.

மற்றொரு புள்ளி விவரமும் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. அதாவது 1991க்கு முன்பு வெளிநாடுகளுக்கு சராசரியாக கடத்தப்பட்ட பணம் சதவீத அடிப்படையில் 9.1 என்றால் உலகமயக் கொள்கைகள் அமல்படுத்தப்படத் தொடங்கிய பிறகு அது 16.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2002 முதல் 2006 வரையிலான நான்கு ஆண்டுகளில் அதாவது பா.ஜ.க. மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சி நடைபெற்ற ஆண்டுகளில் ஆண்டொன் றுக்கு சராசரியாக 72000 கோடி ரூபாய் வெளி யேறியுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் சுருட்டப்பட்ட பணம் 14 வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ளதாக அண்மையில் வெளியாகியுள்ள செய்தியும் இதை உறுதி செய்கிறது.

முன்னாள் திட்டக்குழு உறுப்பினரும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியுமான எஸ்.பி. சுக்லா கூறுகிறார்:  நான் நேரடியாக கண்ணுற்ற நிகழ்வுகளின் அடிப்படையில் பார்த்தால் இதில் வியப்படைய எதுவுமில்லை. தாராளமயக் கொள்கைகள் அமல் படுத்துதல் துவங்கப்பட்ட பிறகு ஊழல் பாய்ச்சல் வேகத்தில் அதிகரித்ததற்குக் காரணம் - சந்தையே அரசாங்கத்துக்குள் நுழைந்ததனால்தான். அரசாங்கக் கொள்கைகளையும், அரசு நிர்ணயிக்க வேண்டிய விலைகளையும் தொழில் நிறுவனங்களே தீர்மானிக் கும் நிலைக்கு உயர்ந்துவிட்டன. அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் கலந்துரையாடுதல் மற்றும் அரசு நடவடிக்கைகளிலேயே தொழில் நிறுவனங்களே நேரடியாக ஈடுபடுகின்றன. அவை அரசியல் கட்சிகள் மற்றும் ஒட்டுமொத்த ஆட்சி அமைப்பு முறைக்குள்ளேயே நுழைந்து விடுகின்றன.

அரசு அமைப்பு முறைக்குள்ளேயே அவைகள் தலையிடுவதற்கான உதாரணமாக, பா.ஜ.க. ஆட்சிக்கால அனுபவம் ஒன்றை எஸ்.பி. சுக்லா உதாரணமாகக் குறிப்பிட்டுள்ளார். பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில்  அலைபேசி சேவையை நடத்துவதற்கான அனுமதியை அளிப்பதற்கு ஏலமுறைதான் முதலில் பின்பற்றப்பட்டது. பல பெரும் தொழில் நிறுவனங்களும் ஏலத்தில் பங்கேற்று அனுமதியைப் பெற்றிருந்தன. ஆனால் அந்த ஏலத் தொகைக்கு லாபம் ஈட்ட முடியாது என்பதை அவை உணர்ந்த பிறகு, மீண்டும் அராசங்கத்துடன் பேசி லைசென்ஸ் முறைக்கு மாறுவதற்கு அரசாங்கத்தை அவை இணங்க வைத்துவிட்டன. அதனால் ஏலத் தொகையைவிட குறைந்த விலைக்கு அலைபேசி சேவையைத் தொடர அந்த நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அரசாங்கம் என்ன செய்திருக்க வேண்டும்? ஏலத் தொகையைக் கட்ட முடியாத நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துவிட்டு, அவைகளின் உரிமங்களை ரத்து செய்திருக்க வேண்டும். ஏலத்தில் பங்கேற்ற பிற திறமையான நிறுவனங்களுக்கு அனுமதி அளித்திருக்க வேண்டும் அல்லது மறு ஏலம் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் ஏல நிபந்தனைகளை நிறைவேற்றாத தொழில் நிறுவனங்களே குறைந்த கட்டணத்தில் அலைபேசி சேவையை நடத்த அனுமதிக்கப்பட்டன.

பொருளாதார தாராளமயமாக்கலுக்கு ஆதரவாக லாவணி பாடி வந்த தொழில் நிறுவனங்கள், உலகமய, தாராளமயம் கொள்கைகள்தான் லஞ்ச லாவண்ய லைசென்ஸ் பர்மிட் ஆட்சியிலிருந்து இந்தியாவை விடுவித்து விட்டதாக பேசி வந்தன. ஆனால் கூர்ந்து கவனித்தால் தாராளமய யுகத்தில் ஊழலுக்கான பாதைகள் தான் மாறியுள்ளன என்றும், அதன் அதி தீவிரமும் அது எட்டும் தொலைவும் அதிகரித் துள்ளன என்கிறார் சுக்லா. பர்மிட் லைசென்ஸ் ஆட்சியின்போது லஞ்ச ஊழல்கள் திரை மறைவில் நடைபெற்றன. அவை வெளியில் தெரிந்தால் அவமானம் என்று அஞ்சப்பட்டது. ஆனால் இப்போது இதெல்லாம் சகஜமப்பா என்ற பார்வை அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தின் மத்தியில் காணப்படுகிறது. அதனை சட்டப்பூர்வ மாக்குவதைத் தவிர மற்ற அனைத்தையும் அவர்கள் செய்து விட்டார்கள்.

இந்தியாவில் ஊழலை உச்சமட்ட அளவுக்கு கெண்டு சென்றது உலகமய, தாராளமயக் கொள்கைகளே என்று குறிப்பிடும் முன்னாள் மத்திய கண்காணிப்பு ஆணையர் என். விட்டல் பின்வருமாறு கூறுகிறார்:

தாராளமயக் கொள்கைகள் வியக்கத்தக்க அளவில் ஊழலுக்கு இட்டுச் சென்றுள்ளன. முந்தைய பர்மிட் - லைசென்ஸ் ஆட்சியமைப்பில் ஊழல் என்பது சில்லரை வணிகம் போல நடத்தப்பட்டது. ஏனெனில் அப்போது தனி நபர்கள் உரிமங்களைப் பெறும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர். தாராள மயமாக்கல் கொள்கையின் அமலாக்கத்துக்குப் பிறகு பிரம்மாண்டமான ஊழல்கள் மூலம் தான் அரசியல்வாதிகளால் பணம் சம்பாதிக்க முடிகிறது. அதற்கேற்ற வகையில் கொள்கைகளை வகுப்பதன் மூலமே அது சாத்தியமாயிற்று. தாராளமயமாக்க லுக்குப் பிறகு முதலாளித்துவ சந்தையே ஆதிக்கம் செலுத்தும் நிலை ஏற்பட்டது. எனவேதான் ஹர்ஷத் மேத்தா, கேதன் பரேக் போன்றவர்களின் ஊழலை நாடு எதிர்கொண்டது. நாடும் மக்களும் எதிர் கொண்டு வரும் பல்வேறு பிரச்சினைகளுக்குக் காரணமான உலகமயக் கொள்கைகளையும் முதலாளித்துவ அரசியல் பொருளாதாரக் கொள்கைகளையும் முறியடித்து மக்கள் நலன்களை உயர்த்திப் பிடிக்கும் கொள்கைகளுக்காகப் போராடுவதே நம் முன் உள்ள ஒரே வழியாகும்.

‘பிரன்ட்லைன்’ கட்டுரையிலிருந்து

Pin It