மூடநம்பிக்கைகளுக்கு எதிரான மசோதா, மராட்டிய சட்டமன்றத்தில் டிசம்பர் 13 ஆம் தேதி நிறைவேறியது. நரபலி தருவது, பில்லி சூன்யம் மந்திரிப்பது, நோய் தீர்க்க மூடநம்பிக்கைகளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட மூடநம்பிக்கைகள் தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா, மகாராஷ்டிர மேலவையில் அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படும். பகுத்தறிவாளர் நரேந்திர தபோக்கர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவரது நினைவாக அவசர சட்டமாக - இதை மகாராஷ்டிர அரசு பிறப்பித் திருந்தது. இப்போது சட்டசபையில் சட்டமாக்கப்பட்டுள்ளது. சட்டத்தில் குறிப்பிட்ட மூடநம்பிக்கைகளில் ஈடுபடுவோருக்கு 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க சட்டம் வகை செய்கிறது.

மசோதா குரல் ஓட்டின் மூலம் நிறைவேற்றப்பட்டது. பாரதிய ஜனதா, சிவசேனா போன்ற இந்து மத அமைப்புகள் இந்த மசோதாவில் ஏராளமான திருத்தங்களைக் கொண்டுவந்தன. அதில் பெரும்பாலான திருத்தங்களை மாநில அரசு ஏற்றுக் கொண்டது. இதன்படி, சோதிடம், வாஸ்து சாஸ்திரம் போன்ற மூடநம்பிக்கைகள், மசோதாவிலிருந்து விலக்கப்பட்டுவிட்டன. மசோதாவை அறிமுகம் செய்து பேசிய சமூக நலத் துறை அமைச்சர் சிவாஜிராவ் முகே, “இது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம்; அப்பாவி மக்களை பில்லி சூன்ய நம்பிக்கைகளிலிருந்து விடுவித்து, காப்பாற்றும் தீர்மானம். இந்த மசோதா சமூக மாற்றத்துக்கான இயக்கத்துக்கு வழி வகுக்கும்” என்று குறிப்பிட்டார்.

சிவசேனா உறுப்பினர் சுபாஷ் தேசாய் இந்தச் சட்டத்தை எதிர்த்ததோடு, இந்தச் சட்டம் இந்துக்களின் மதச் சுதந்திரத்தில் குறுக்கிட்டால் வீதிக்கு வந்து பேராடுவோம்” என்று எச்சரித்து, மூடநம்பிக்கையும் இந்து மதமும் பிரிக்க முடியாதவை என்பதை உணர்த்தினார். சுட்டுக் கொல்லப்பட்ட மருத்துவர் நரேந்திர தபோல்கரின் மகள் முக்தா தபோல்கர், சட்டம் நிறைவேறியதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மராட்டிய முதலமைச்சரும் சமூக நலத்துறை அமைச்சரும் தந்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளனர். மேலவையிலும் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

Pin It