அர்ச்சகர் பயிற்சியின் போதும் அவமதிப்புகள் - குமுறும் பார்ப்பனரல்லாத இளைஞர்கள்  

அர்ச்சகர் பயிற்சி பெறச் சென்ற தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த இளைஞர்கள், பயற்சிக் காலத்தில் அவமதிக்கப்பட்ட பல தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்து அர்ச்சகர் பயிற்சி முடித்து விட்டு, கோயில் பணியில் அமர்த்தப்படாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் அர்ச்சக இளைஞர்கள் கூறிய தகவல்கள்:

 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து 2007 ஆம் ஆண்டு ஆகஸ்டு வரை நாங்கள் அர்ச்சகர்களாக பயிற்சி பெற்றோம். பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலிலும் அர்ச்சகர் பயிற்சி நடந்தது. இங்கே பயிற்சி பெற்றவர் களுக்கு கோயில் தலைமை அர்ச்சகப் பயிற்சியாளர் வேதம், தியான சுலோகம், காயத்ரி மந்திரங்களை கற்றுத் தர மறுத்து விட்டார். ஆகமம் கற்றுத் தரும் ஆசிரியரே வர வில்லை. ஒரு தமிழ்ப் புலவர் மட்டும் தேவாரம், திரு வாசகங்களை கற்பித்தார். பழனி கோயில் தலைமை அர்ச்சகராக இருப்பவர் பாலு குருக்கள் என்ற பார்ப்பனர். அவர்தான் பயிற்சி தர வேண்டும். ஆனால், உங்களுக்கு எல்லாம் வேதம், தியான சுலோகங்களையோ அர்ச்சகருக்கான பயிற்சியையோ கற்றுத் தர முடியாது என்று கண்டிப்பாக மறுத்துவிட்டார்.

 திருவண்ணாமலையில் நடந்த பயிற்சியிலும், நாங்கள் அவமானப்பட்டோம். அங்கும் எங்களுக்கு வேதம், ஆகமம் கற்றத்தர பார்ப்பன அர்ச்சகர்கள் மறுத்து விட்டார்கள். வெளியிலிருந்து தாமாக முன்வந்து ஒரு பார்ப்பனர், எங்களுக்கு கற்றுத்தர முயன்றபோது, பார்ப்பன அர்ச்சகர்கள், அவரை உடல் ரீதியாக தாக்கி, வெளியே தள்ளினர். நாங்கள் மொத்தம் 207 பேர் பயிற்சி பெற்றோம். 4 இடங்களில் சைவப் பயிற்சியும், 2 இடங்களில் வைணவ பயிற்சியும் நடந்தது.

 எழுத்துத் தேர்வு மட்டுமின்றி, நேர்முகத் தேர்வும், அதற்கு மதிப்பெண்ணும் உண்டு. அற நிலையத் துறை ஆணையர், உதவி ஆணையர் ஆகிய அதிகாரிகளோடு, பழனி தலைமை அர்ச்சகரான பாலு குருக்கள், நேர்முக தேர்வுக் குழுவில் இடம் பெற்றிருந்தார். அதிகாரிகள் கை கட்டி வாய் பொத்தி, பார்ப்பன குருக்கள் சொல்வதைத்தான் கேட்பார்கள். நேர்முகத் தேர்வுக்கு வரும்போது பார்ப் பனர்களைப் போன்ற தோற்றத்துடன் தான் வரவேண்டும் என்பது கட்டாயம். காதில் கடுக்கண், தலையில் குடுமி, முதுகில் பூணூல் அணிந்து, மீசையில்லாமல் வரவேண்டும். அதிலும்கூட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த 16 பேருக்கு பூணூல் அணியவும் தடை விதித்தார்கள்.

 “நீங்கள் எந்த பூசையும் செய்ய வேண்டாம். சர்க்கரைப் பொங்கல் செய்யக் கற்றுக் கொள்ளுங்கள் அதுவே போதும்” என்று பழனி பார்ப்பன அர்ச்சகர் கூறினார். இவ்வளவு அவமானங்களைச் சுமந்து, நாங்களே, எங்கள் முயற்சியால், எங்களை தகுதியாக்கிக் கொண்டோம். ஆனாலும், பணி நியமனம் இல்லாமல் திண்டாடுகிறோம். தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத் தடையை நீக்கும் முயற்சி களில் மெத்தனம் காட்டுகிறது. உச்சநீதிமன்றத்தில் நாங்களே சங்கத்தின் வழியாக நிதி திரட்டி எதிர் வழக்காடி வருகிறோம்” - என்று கண்ணீர் மல்க கூறுகிறார்கள், இந்த இளைஞர்கள்.

 செப்டம்பர் 17, தந்தை பெரியார் பிறந்த நாள் அன்று தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் வா. அரங்கநாதன் தலைமையில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் திருவண்ணா மலையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணி வித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சில இந்து முன்னணியைச் சார்ந்தவர்கள் அரங்கநாதனை தாக்கி உள்ளனர். இது குறித்து வா. அரங்கநாதன் நடந்த சம்பவங்களை விளக்கி, கழக ஏட்டுக்கு விடுத்துள்ள செய்தி:

 “நான் தமிழக அரசு நடத்திய அனைத்து சாதியினர் அர்ச்சகர் பயிற்சித் திட்டத்தில் திருவண்ணாமலையில் படித்து முடித்துள்ளேன். அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் படித்த 207 மாணவர்களுக்கும் பணி நியமனம் செய்யப்பட வில்லை. எனவே, மாநில அளவில் அனைத்து மாணவர் களையும் திரட்டி, சங்கம் அமைத்து நடத்தி வருகிறோம். இந்த நிலையில் மதுரையைச் சார்ந்த பார்ப்பன பட்டர்கள் எங்களை பணி நியமனம் செய்யாதிருக்க உச்சநீதிம ன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், தமிழக அரசு எங்களை பணியமர்த்தவில்லை. எங்கள் சங்கத்தின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் நாங்கள் வழக்கை எதிர்கொண்டு வருகிறோம். சங்கத்தின் சார்பாக போராட்டங்களையும் நடத்தி வருகின்றோம். இதனால் ஆரம்பத்தில் இருந்தே இந்து முன்னணியினர் பார்ப்பனர்களுக்கு எதிராக பேசக் கூடாது என எச்சரித்து வந்தனர்.

 பெரியார் பிறந்த நாளான கடந்த செப்டம்பர் 17 அன்று திருவண்ணாமலையில் காலை 9 மணியளவில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோரும் அர்ச்சகர்களாக வேண்டும் என போராடிய தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு இரவு வரை நகரின் பல பகுதிகளில் மக்கள் மத்தியில் எங்கள் பணி நிய மனத்திற்கு தடையாக உள்ள உச்சநீதிமன்ற வழக்கை தமிழக அரசு விரைந்து நடத்த வலியுறுத்தி துண்டறிக்கைகளை வழங்கி வந்தோம். அன்று இரவு 8.30 மணியளவில் அண்ணாமலையார் கோவில் வாயிலின் அருகில் நானும் மனித உரிமை பாதுகாப்பு மய்ய வழக் கறிஞர்களும் துண்டறிக்கை கொடுத்துக் கொண்டிருக்கும் போது இந்து முன்னணியின் நகர செயலாளர் இளமாறன் உட்பட ஐந்து பேர், “ஏண்டா கிறித்துவ பசங்களை கூட்டி வந்து நோட்டீஸ் கொடுத்து பிரச்சினை செய்ய பார்க்கிறியா” என கேட்டார். இதனால் எங்களுக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்து முன்னணி யினர் என்னைப் பார்த்து தொடர்ந்து நீ பிராமணர்களுக்கு எதிராக பேசி வர; நீ என்ன கதி ஆவர பார்” என எச்சரித்தார். ஆபாசமான வார்த்தைகளாலும் திட்டினார்.

 இதற்கிடையில் 14.10.2010 இரவு 9 மணியளவில் கோயிலுக்குள் நாங்கள் இருந்தபோது இந்து முன்னணியைச் சார்ந்த காமராஜ் மற்றும் சுரேஷ் இருவரும் என்னைப் பார்த்து, தெவிடியா பையா நீ தானே பெரியார் சிலைக்கு மாலை போட்டவன். நீ ஏன்டா பார்ப்பானாக பாக்குற, பெரியாரு நாட்டைக் கெடுத்தார். நீ திருவண்ணா மலையை கெடுக்க பார்க்கியா. உன்னால எங்க கட்சியில எங்களுக்கு நெருக்கடி. இனிமேல் சங்கம் சார்பில் ஏதாவது பண்ணிப் பாரு. கோவில் வாசலிலேயே வெட்டுப்பட்டு சாவ என்று திட்டி, கழுத்தை நெரித்து, முதுகில் தாக்கினார்.

 நான் தனி ஆளாக இருந்ததால் எதையும் பேசாமல் அங்கிருந்து வந்து விட்டேன். இந்து அமைப்புகள் எங்க சங்க செயல்பாடுகளால் காழ்ப்புணர்ச்சி கொண்டு என்னையும், சங்க மாணவர்களையும் எப்படியாவது ஒழித்துக் கட்ட வேண்டும் என பல்வேறு வகையில் மிரட்டி வருகின்றனர். எதிரிகளால் என் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்று அச்சமாக உள்ளது. இவர்களுக்கு பின்னணியில் பார்ப்பனர்கள் உள்ளனர் என உறுதியாக கூற முடியும் என்று கூறியுள்ளார்.

 ஆண்டவனைமறுத்து ஆள்கிறவரை நம்பும் அர்ச்சகர்கள் 

 தமிழ்நாட்டில் பழனி, திருச்செந்தூர், மதுரை உள்ளிட்ட 38000 கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், கோயில் ஊழியர்கள், 6 வது ஊதியக் குழு பரிந்துரைப்படி ஊதியம் வழங்கக் கோரி, வேலை நிறுத்தம் செய்துள்ளனர். கோயில்களில் அன்றாட “தெய்வத் திருப்பணிகளான” அர்ச்சனைகள், பூசைகள் நிறுத்தப்பட்டுவிட்டன. பிறகு, தமிழக அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி, சுமூக உடன்பாடு ஏற்பட்டு, வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாம்.

 கோரிக்கைகளை பகவான்களிடம் முறையிடுவதில் எந்தப் பயனும் கிடைத்து விடாது என்பது அர்ச்சகப் பார்ப்பனர்களுக்கு  நன்றாகவே தெரியும். அதனால்தான் ஆண்டவன் “திருப்பணி”களையே நிறுத்திக் கொண்டு வேலை நிறுத்தம் செய்கிறார்கள். ஏமாந்து போன பக்தர்கள்தான் அர்ச்சனைத் தட்டில் காசைப் போட்டு, ‘பெயருக்கும்’, ‘ராசி’க்கும் அர்ச்சகரிடம் அர்ச்சனை செய்யுமாறு கேட்கிறார்கள்.

 அர்ச்சகர்களோ, தங்களது கோரிக்கையை அரசிடம் வைக்கிறார்கள். “அர்ச்சகர்களே; உங்களுக்கே கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்றால், மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? இது தெய்வ நிந்தனை ஆகாதா?” என்று எந்த வைதீகப் பார்ப்பனரும் கேட்கவில்லை. ஆயுதபூசையை நிறுத்தச் சொல்வது கடவுள் உணர்வைப் புண்படுத்து வதாகும் என்று கூப்பாடு போடும், இந்த முன்னணியினரும் கண்டிக்கவில்லை.

 கருப்புச் சட்டையுடன் மோதுவதற்கு முன்பு, கருவறைக்குள்ளேயிருந்தே கடவுளுக்கு எதிராகக் கலகக் குரல் கேட்கிறதே; அதை செவிமடுப்பார்களா, இந்த கடவுள் ‘போலீஸ்காரர்கள்’?