தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் வறுமையில் வாடுகிறார்களாம், ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆங்கில நாளேடு முழு பக்கக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இது பற்றி ‘துக்ளக்’ சோவிடம் கருத்துக் கேட்டபோது, “தமிழ்நாட்டில் பிராமணர்கள் தேவை யற்றவர்கள் ஆகிவிட்டனர் என்பதைத் தவிர வேறு எதுவும் கூற விரும்பவில்லை” என்று கூறியிருக்கிறார்.
 
வறுமை என்பது சமூகப் பிரச்சினை; தமிழ் நாட்டின் வசதி படைத்த பணக்காரர்கள் பட்டியலில் எத்தனையோ பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். பெரும் முதலாளிகள் பட்டியலில் டி.வி.எஸ். குழும மும், ‘இன்போசிஸ்’ நாராயண மூர்த்திகளும்கூட இருக்கிறார்கள்.
 
தமிழ்நாட்டு சேரிகளிலும், சாலை ஓரங்களிலும் அடிப்படை வாழ்வுரிமை இழந்து கிடக்கும், ஒடுக்கப்பட்ட மக்கள் பல லட்சம் பேர். “எல்லா சாதியிலும் ஏழைகள் இருக்கலாம்; அது கடவுள் எழுதிய தலையெழுத்து. ஆனால், ‘பிராமணர்களில்’ ஏழைகள்  இருப்பது பாவம் அல்லவா?” என்பதுதான் “இவாளின்” கவலை போதும்!
 
ஒரு “பிராமணன்” மட்டுமல்ல, எந்த ஒரு மனிதனும் வறுமை யில் வாடக் கூடாது என்பதுதான், சமத்துவத்தை விரும்பும் அனைவரின் கவலையாக இருக்க முடியும். அரசின் ஏழ்மை ஒழிப்புத் திட்டங்கள் - அனைத்து மக்களுக்கும் தான் உருவாக்கப்படுகின்றனவே தவிர, அதில் சாதிக் கண்ணோட்டம் இல்லை; ஆனால், வறுமையில் வாடு வதாகக் கூறும் ‘பார்ப்பனர்கள்’ கூட தங்களின் பிறவி ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் ‘பூணூல்களை’ கழற்றத் தயாராக இல்லை.
 
‘ஜெயா’ தொலைக்காட்சியில் ‘துக்ளக்’ சோ எழுதிய “எங்கே பிராமணன்?” என்ற தொடர் ஒளிபரப்பாகிறது. அதில் ‘பிராமண தர்மங்கள்’ பற்றி சோ, இடையிடையே விளக்கமளித்து, அதை தனது ‘துக்ளக்’ ஏட்டிலும் வெளியிட்டு வருகிறார். இந்த வாரம் வெளிவந்த ‘துக்ளக்’கில் (1.9.2010) ‘ஆவணி அவிட்டம்’ பற்றி, சோ, ‘ஜெயா’ தொலைக்காட்சியில் தந்த விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
 
ஆவணி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில்தான் முதன்முதலாக பிரம்மாவுக்கு வேதம் கிடைத்ததாம். அதாவது பிரம்மாவுக்கே உபதேசம் செய்யப்பட்டதாம். அதுதான் வேதத்தின் தொடக்கம் என்றும், எனவே, வேதத்தின் தொடக்கத்துக்கு விழா எடுப்பதுதான், ஆவணி அவிட்டம் என்றும் விளக்கம் கூறியிருக்கிறார். ஆவணி அவிட்டத்தின் உண்மையான பெயர் ‘உபா கர்மா’ என்பதுதான் என்றும், அதற்கு தொடக்கம் என்று பொருள் என்றும் விளக்குகிறார். ‘பிரம்மா’ காலத்திலே தொடங்கப்பட்ட வேதத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் தொடக்க விழா எதற்கு என்ற கேள்வி எழுகிறது அல்லவா! அதற்கு, ‘தேசிய  ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற ஒவ்வொரு ஆண்டும் உறுதிமொழி ஏற்கவில்லையா என்று சோ, எதிர்கேள்வி கேட்கிறார். ஆக, பிராமணர்கள் வேதத்தைவிட்டு விடாமல் தொடர்ந்து கொண்டே இருப்பதற்கான உறுதி ஏற்பு நாள்தான் ஆவணி அவிட்டம் என்பது சோ தரும் விளக்கம்.
 
2010 ஆம் ஆண்டிலும் ஆவணி அவிட்டத்தை வேதத்தின் தொடக்க விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று  துக்ளக் ‘சோ’ வெளிப்படையாக அறிவிக்கிறார் என்றால், அதற்கு காரணம் என்ன? அதையும் ‘சோ’வே தெளிவாக விளக்கியிருக்கிறார்: “உபநயனம் என்பது முதல் மூன்று வர்ணத்தாருக்கும் உண்டு. அதாவது பிராமண, க்ஷத்திரிய, வைசிய வர்ணங்களைச் சார்ந்தவர் களுக்கு உபநயனம் உண்டு. அவர்கள் மூவருமே வருடா வருடம், இந்த ஆவணி அவிட்டம் என்கிற உபகர்மாவைச் செய்ய வேண்டும்”  (‘துக்ளக்’ 1.9.2010) என்கிறார்.
 
மேற்குறிப்பிட்ட கருத்தில் மறைந்திருக்கும் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். வேதத்தைக் கொண்டாடி பூணூல் போடும் உரிமை, மூன்று வருணத்துக்கு மட்டுமே உண்டு. நான்காவது வர்ண மாகிய சூத்திரர்களுக்கு இல்லை என்பதை, சொல்லாமல் பதுங்கிக் கொள்கிறார் ‘சோ’; இதற்குப் பெயர் தான் பார்ப்பன சூழ்ச்சி!
 
இன்னமும், ‘பிராமண, வைசிய, சத்திரிய’ வர்ணாஸ்ரமப் பிரிவுகளை நியாயப்படுத்திக் கொண்டு - ‘சூத்திரர்’ என்பவர்கள் இழி பிறவிகள் அவர்களுக்கு ‘வேதத்தை’ நெருங்கும் உரிமை கிடையாது என்று ‘மனுஸ்மிருதியை’ பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். பார்ப்பனர்கள் எல்லாம் மாறி விட்டார்கள் என்று, கதை பேசக் கிளம்பியிருப்போர், சிந்திக்க வேண்டும்.
 
பார்ப்பனர்கள் மாறவில்லை; பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் வழி வந்ததாக அவ்வப்போது கூறிக்கொண்டு வரும் கட்சியினர்தான் மாறிக்கொண்டு வருகிறார்கள்.
 
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு துணை வேந்தராக திருச்சி - பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு ஒரு பார்ப்பனப் பெண், தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பதவி என்றால், பார்ப்பனர்களைத் தேடிப் பிடித்து நியமிப்பதுதான், ‘பார்ப்பனரல்லாத’ தி.மு.க. ஆட்சியின் வழமை!
 
அரசு தலைமை வழக்கறிஞர் பதவிக்கும் ‘வி.பி.ராமன்’ பார்ப்பனப் பரம்பரையைத்தான், தேடி ஓடுகிறார்கள்!
 
ஆக - பார்ப்பனர்கள் மாறாத நிலையில் பார்ப்பனரல்லாத இயக்கங்கள்தான் திசை மாறிய பறவை களாகிவிட்டனர். வர்ணாஸ்ரம பேதத்தை நியாயப்படுத்தும் ‘துக்ளக்’ சோக்கள் மீது சட்டம் பாயாது; தமிழர் உரிமைக்கு குரல் கொடுக்கும்  சீமான்கள் மீது தேசிய பாது காப்பு சட்டம் பாயும். அதனால்தான், ‘துக்ளக்’ சோக்கள் வர்ணாஸ்ரமத்தை இன்றைக்கும் நியாயப்படுத்தி எழுதிக் கொண்டிருக் கிறார்கள்.