கல்வி என்பது அனைவருக்கும் இலவசமாக கிடைக்கவேண்டும். அதுவும் தரமான கல்வியாக இருக்கவேண்டும் என்பது இன்றுள்ள அனைத்து பெற்றோர்களின் நியாயமான எதிர்பார்ப்பாகும். தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கென்று தனியான பாடத்திட்டமும் , மெட்ரிக் பள்ளிகளுக்கென்று தனியான பாடத்திட்டமும் இருக்கிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு கடும் போட்டி நிலவும் வேலைச்சந்தையில் போட்டியிடக்கூடிய எந்த வலுவும் தர இயலாததாக பாடத்திட்டம் இருக்கிறது என்பது தான் இன்றுள்ள நிலைமை.

இந்த அனைத்து பாடத்திட்டங்களையும் ஒன்றாக ஆக்க வேண்டும் என்று கல்வியாளர்களும், இடதுசாரி இயக்கங்களும் பல போராட்டங்களை நடத்தி வந்தன. இதனைத் தொடர்ந்து ஒரு வல்லுநர் குழு தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரைகளின்படி பாடத்திட்டங்கள் பதிப்பிக்கப்பட்டன. இந்த பாடத்திட்டத்திற்கு மெட்ரிக் பள்ளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதோடு அந்த பாடத்திட்டங்கள் அச்சுப்பிழை மற்றும் தவறான தகவல்கள் நிறைந்ததாக வெளிவந்தது. சமச்சீர் கல்வி என்பது தங்கள் சாதனையாக காட்டிக்கொள்ள பெயரளவிற்கே அப்போது இருந்த திமுக அரசால் கொண்டு வரப்பட்டது.

மெட்ரிக் பள்ளிகளில் இருந்த பாடத்திட்டத்தை அப்படியே கொண்டுவந்தால் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் நல்ல தரமான கல்வியைப் பெற இயலும் என்பது கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாகும். ஆனால் அதற்கு அரசு பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள், தங்கள் பணிசுமை கூடும் என்ற ஒரே காரணத்திற்காக கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எழுத படிக்க மாணவர்களை உருவாக்கும் அளவிற்கே அரசு பள்ளிகளின் தரத்தை ஆசிரியர்கள் வைத்துள்ளனர். அரசும், தனியார் பள்ளிகளும் அதையே மறைமுகமாக விரும்புகின்றன. தகுதியுள்ள மாணவர்கள் அதிக அளவில் உருவானால் நல்ல சம்பளத்தில் அனைவருக்கும் வேலை வாய்ப்பு உருவாக்கித் தரமுடியாது. அப்படி வேலையில்லாதவர்கள் அதிக அளவில் உருவானால் அது சமூக மாற்ற சிந்தனைக்கு வழிவகுக்கும் என்பது அரசின் பயம். அரசு பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் ஒரே பாடத்திட்டம் என்பது தனியார் பள்ளிகளுக்கு வியாபரத்தை பாதிக்கும் அம்சம் ஆகும். அதற்காக தனியார் பள்ளிகள் தரமான கல்வியைத் தருகின்றன‌ என்பது பொருள் அல்ல, பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறவே மாணவர்களை அது இயந்திர கதியில் தயார்படுத்துகிறது. அதையே ஏறக்குறைய அனைத்து பெற்றோர்களும் விரும்புகின்றனர்.

அரசு பள்ளிகளின் அவல நிலைமை

அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை விட பல மடங்கு அதிகமான ஊதியம், அதிகமான விடுமுறைகள் மற்றும் பல சலுகைகளை அனுபவிக்கின்றனர். ஆனால் மாணவர்களுக்கு கல்வி போதிப்பது என்பதை எப்படியெல்லாம் தவிர்க்க முடியுமோ அப்படி தவிர்க்கவே முயற்சி செய்கின்றனர். அரசு பள்ளிகளில் படித்து வெளிவரும் மாணவர்கள் எழுதப்படிக்க மட்டுமே தெரிந்தவர்களாக வெளிவருகின்றனர். அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வருமானம் அதிகமாக இருப்பதால் பல ஆசிரியர்கள் இன்று கந்துவட்டிக்கு பணம் கொடுப்பதை பிரதான தொழிலாக மாற்றி இருக்கின்றனர். இப்படி ஆசிரியர்களை சமூக அக்கறை அற்றவர்களாக, திறமையற்றவர்களாக நமது அரசுகள் மாற்றியுள்ளன என்பதே இந்த அவலக்காட்சிக்கு ஒரு சிறு உதாரணம் ஆகும்.

தற்போது ஆளும் தமிழக அரசுக்கு மாணவர்கள் மீதோ தனக்கு ஓட்டுபோட்டு ஆட்சியில் அமர்த்தியவர்கள் மீதோ எந்தவிதமான அக்கறையும் கிடையாது என்பதை ஆட்சிக்கு வந்த பத்தே நாளில் உணர்த்திவிட்டனர். இதற்கும் ஒரு படி மேலே சென்று ரவிராஜா பாண்டியன் குழுவின் பரிந்துரைகளில் தனியார் பள்ளிகள் கோரினால் அரசு தலையிடும் என்று, எவ்வளவு கட்டணம் வேண்டுமானால் வசூலித்துகொள் என தனியார் பள்ளி முதலாளிகளுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார் ஜெயலலிதா. அதிக கட்டணம் வசூல் செய்கிறார்கள் என்று பெற்றோர்கள் கோரினால் அவர்களுக்கு தடியடி நிச்சயம் என்பதைத்தான் இதன் மூலம் இவர் சொல்ல வருகிறார் என்பது நமக்குத் தெளிவாகப் புரிகிறது.

சமச்சீர் கல்வி கண்டிப்பாக கொண்டுவரப்படவேண்டும், அரசு பள்ளிகளின் தரம் அனைத்து வகையிலும் உயர்த்தப்பட்டு தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்க வேண்டும், மெட்ரிக் பள்ளிகளில் நியாயமான கல்விக் கட்டணம் வசூல் செய்யவேண்டும் என்ற கோரிக்கைகளோடு நாம் மக்களை அணிதிரட்டி மிகப்பெரிய போராட்டங்களை நடத்துவதன் மூலம் தான் தரமான கல்வியை அனைவருக்கும் சமமாகத் தர அரசை பணிய வைக்க முடியும்.

- கு.கதிரேசன் (9843464246, இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)