Kuthoosi Guruswami

“சீனா முழுதும் சிவப்பாகி விட்டதாமே! உண்மை தானா ஸார்? திபேத் எல்லைக் கோட்டைச் சேர்ந்த மலைப் பிரதேசத்திலிருந்த 10,000 தேசிய சீனப் படைகளை விரட்டி விட்டு கம்யூனிஸ்ட் சீனப் படை அந்த இடத்தையும் பிடித்துக் கொண்டு விட்டதாமே? இத்துடன் சீனாவில் ஒரு கை அகலங்க கூடப் பாக்கியில்லையாமே?”

“ஆமா, ஸார்! நான் கூடப் படித்தேன்! தென் மேற்கு சீனா பூராவும் அந்தப் படுபாவிகள் வசமாகி விட்டதாமே? அதுமட்டுமே? ஹெய்னான் தீவையும் பிடித்து விட்டார்களாம்! தலைநகர் போய்விட்டதாம்! தேசீய சீனர்கள் குதிகால் பிடரியில் படும்படியாக ஓடிவிட்டார்களாமே!”.

“அடேயப்பா! இதென்ன இவ்வளவு வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறார்கள்? இந்தோ சீனாவிலும் அவர்கள் தொல்லையாம்! தாய்லாண்டிலும் தொல்லையாம்! பர்மாவிலும் தொல்லையாம்! மலேயாவிலும் தொல்லையாம்! இந்தியாவை (பாரத பூமியை)ச் சுற்றி இப்படி ஒரே களேபாரமாயிருக்கே! இந்தியாவுக்கும் ஒரு வேளை பரவிவிடுமோ?”

“சே! சே! இந்தியாவுக்கா? அதெல்லாம் முடியாது, ஸார்! ‘ஹிந்து மதம் உள்ள வரையில் இங்கே கம்யூனிசம் பரவாது’ என்று மேல் நாட்டுப் பத்தரிகை எழுதிற்றே! அது ரொம்ப சரி, ஸார்!”

“அதுதான் மதச் சார்பற்ற சர்க்கார் என்று நம் சர்க்கார் சொல்லி விட்டார்களே! இவர்களா ஹிந்து மதத்தைக் காப்பாற்றப் போகிறார்கள்?”

“மதச் சார்பற்ற சர்க்காரா? யார் சொன்னது, அதெல்லாம் விளையாட்டுக்கு ஸார்! பாகிஸ்தானை ஏமாற்றுவதற்கு ஸார்! நம் போஸ்டல் ஸ்டாம்புகளைப் பாருங்கள்! எது மதச் சார்பற்ற சர்க்கார்? அசல் ஹிந்து மத சர்க்காரே தான்! சந்தேகம் வேண்டாம்!”

“சீன கம்யூனிஸ்ட் சர்க்காரை ஒப்புக்கொண்டு இந்தியத் தூதுவரைக் கூட அங்கு அனுப்பிவிட்டார்களே! அது என்னமோ எனக்குப் பிடிக்கவேயில்லை! எதற்காக அந்தச் சர்க்காரை நாம் ஒப்புக் கொள்ளவேண்டும்? கம்யூனிசத்தை ஒப்புக் கொண்டதாகத் தானே அர்த்தம்?”

“அப்படியல்ல! கம்யூனிட் சர்க்காரை ஒப்புக் கொண்டதால், ‘தயவு செய்து எங்கள் நாட்டிற்குத் தொல்லை கொடுக்காமலிருங்கள்,’ என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்வதாக அர்த்தம். அவ்வளவு தான்!”

“அப்படியா, சங்கதி? இப்போதுதான் விஷயம் விளங்கிற்று! எங்கே கம்யூனிஸம் நம் நாட்டுக்கும் வந்துவிடுமோ என்று எனக்கு எப்போதும் ஒரே நடுக்கமாகவே இருக்கிறது!”

“இங்கேயாவது, கம்யூனிஸமாவது, வருவதாவது? கண்ட கண்ட இடத்தில் சுட்டுத் தள்ளினால் எப்படித் தலை நீட்ட முடியும்? வெலிங்டன் காங்கிரஸ்காரரைச் செய்ததை விடக் கொடுமையாக நடத்துராளே, நம்ப சர்க்காரிலே! கம்யூனிசம் இங்கே தலை தூக்குமா?”

“அய்யய்யோ! அப்படிச் சொல்லாதிங்கோ ஸார்! வெலிங்டனுக்குப் பிறகு காங்கிரஸ் வளர்ந்தது மாதிரியே இங்கேயும் கம்யூனிசம் வளர்ந்துடப் போகுது!

“நீங்க என்ன ஸார், இப்படிப் பயந்த சாகுறிங்க? சதா கடவுள், மதம், வேதம், சாஸ்திரம், புராணம் தலைவிதி, அதிர்ஷ்டம், ஜோசியம், நல்ல நாள், பண்டிகை - இந்த மாதிரியெல்லாம் பேசிக்கொண்டும், நடத்திக் கொண்டுமிருந்தால், கம்யூனிஸமாவது கத்தரிக்காயாவது?”

“என்னமோ ஸார், சீனாப் படத்தைப் பார்க்கவே எனக்குப் பிடிக்க வில்லை! அவ்வளவு பெரிய தேசமே இரண்டு வருஷத்துக்குள் இப்படி ஒரே சிவப்பு வர்ணமாகி விட்டதென்றால் நம் நாடு எம்மாத்திரம், ஸார்?”

“ஏன் ஸார், இப்படி நடுங்குறீங்க? அப்படியே மீறி கம்யூனிஸம் வந்தால்தான் என்ன குடி முழுகிப்போகும்? நீர் லட்சாதிபதியா, என்ன? என்னைப்போல நீங்களும் ஓர் அன்றாடம் காய்ச்சிதானே! கம்யூனிசம் வந்தால் உங்களுக்கும் நல்லதுதானே, ஸார்?”

“அய்யய்யோ! இதோ கம்யூனிஸ்ட்! இதோ கம்யூனிஸ்ட்! போலீஸ்! போலீஸ்!! அண்ணாமலைப் பிள்ளை! அண்ணாமலைப் பிள்ளை!! காமராஜ் நாடார்! காமராஜ் நாடார்!! இதோ ஒரு கம்யூனிஸ்ட்! பிடியுங்கள்! அடியுங்கள்! சுடுங்கள்! கொல்லுங்கள்!”

குத்தூசி குருசாமி (27-4-50)

நன்றி: வாலாசா வல்லவன்