பொதிகைமலை விட்டெழுந்து சந்த னத்தின்
புதுமணத்தில் தோய்ந்து, பூந்தாது வாரி,
நதிதழுவி அருவியின்தோள் உந்தித், தெற்கு
நன்முத்துக் கடல்அலையின் உச்சி தோறும்
சதிராடி, மூங்கிலிலே பண்எ ழுப்பித்
தாழையெலாம் மடற்கத்தி சுழற்ற வைத்து,
முதிர்தெங்கின் இளம்பாளை முகம்சு வைத்து,
முத்துதிர்த்துத் தமிழகத்தின் வீதி நோக்கி.

அந்தியிலே இளமுல்லை சிலிர்க்கச் செந்நெல்
அடிதொடரும் மடைப்புனலும் சிலிர்க்க, என்றன்
சிந்தைஉடல் அணுஒவ்வொன் றும்சி லிர்க்கச்,
செல்வம்ஒன்று வரும்;அதன்பேர் தென்றற் காற்று!
வெந்தயத்துக் கலயத்தைப் பூனை தள்ளி
விட்டதென என்மனைவி அறைக்குப் போனாள்.
அந்தியிலே கொல்லையில்நான் தனித்தி ருந்தேன்;
அங்கிருந்த விசுப்பலகை தனிற்ப டுத்தேன்.

பக்கத்தில் அமர்ந்திருந்து சிரித்துப் பேசிப்
பழந்தமிழின் சாற்றாலே காதல் சேர்த்து
மிக்கஅவ சரமாகச் சென்ற பெண்ணாள்
விரைவாக என்னிடத்தில் வருதல் வேண்டும்.
அக்காலம் அறைக்குவந்த பூனையின்மேல்
அடங்காத கோபமுற்றேன் பிறநே ரத்தில்
பக்காப்பூ னைநூறு, பொருளை யெல்லாம்
பாழாக்கினாலும்அதில் கவலை கொள்ளேன்.

வாழ்க்கைமலர் சொரிகின்ற இன்பத் தேனை
மனிதனது தனிமையினால் அடைதல் இல்லை; 
சூழ்ந்ததுணை பிரிவதெனில் இரண்டு நெஞ்சும்
தொல்லையுறு வகைஇருத்தல் வேண்டும் அங்கே
வீழ்ந்துகிடந் திட்டஎனைத் "தனிமை", "அந்தி"
இவைஇரண்டும் நச்சுலகில் தூக்கித் தள்ளப்
பாழான அவளுடலின் குளிர்ச்சி, மென்மை, 
மணம்இவற்றைப் பருகுவதே நினைவா யிற்று.

தெரியாமல் பின்புறமாய் வந்த பெண்ணாள்.
சிலிர்த்திடவே எனைநெருங்கிப் படுத்தாள் போலும்.
சரியாத குழல்சரியலானாள் போலும்,
தடவினாள் போலும், எனைத் தன்க ரத்தால்! 
புரியாத இன்பத்தைப் புரிந்தாள் போலும்!
புரியட்டும் எனஇருந்தேன் எதிரில் ஓர்பெண்
பிரிவுக்கு வருந்தினேன் என்றாள் ஓகோ!
பேசுமிவள் மனைவி; மற்றொருத்தி தென்றல்!