பெண்ணெழுத்து - 7

சொல் செயல் எண்ணத்தை வயப்படுத்தினேன்
ஆழமாக முழுமையாக
அறியாமை வேரறுத்தேன்
தண்ணென்றானேன்; அமைதி அறிந்தேன்
   -உத்ரா
   (பௌத்த பிக்குணி)

 பௌத்த பிக்குணியான உத்ராவின் கூற்றுப்படி சொல், செயல், எண்ணம் என அனைத்தையும் வயப்படுத்துதல், அறியாமையை வேரறுத்தல் அமைதியும் குளிர்ச்சியும் பெறுதல் சாத்தியம் தானா? அது சாத்தியமாகும் இடம் எதுவாக இருந்திருக்கிறது? என்ற கேள்விகளோடு பார்க்கையில் குறிப்பாக பெண் தன்னை உணராதவளாக உணர்த்த முடியாதவளாக தோற்றுப்போகும் தருணங்களை பாட்டிமார் கதை கூறும்போது அறியலாம். இப்படியிருக்க பெண் அரசியல் புரிதலோடு சமூகப் பார்வையோடு இருப்பதே அருகியதாக இருக்கிறது.

 பெண்கள் காலையில் தினசரிகளைப் படித்துவிட முடிகிறதா? ஊரடங்கும் சாமத்தில் சமூகத்தைப் பார்க்க முயன்று களைத்த உடல் தூக்கத்திற்குத் தோற்றுப்போவதும் அடுத்தநாள் விடியலில் குடும்பம் குடும்பம் என உழல்வதுமான வாழ்க்கை பெண்களுக்குரியது. பெண்கள் சமூகத்தைப்பற்றி சிந்திக்க, அதுகுறித்து விமர்சிக்கப் பழகாதவர்களாக உற்பத்தி செய்துவருகிறோம். இந்நிலையில் சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த பார்வையோடு எழுதவும் விமர்சிக்கவும் இயன்ற பெண்கள் ஈழத்திலிருந்து வெடிக்கத்துவங்கினர். பெண்கள் ஓருங்குகூடி பெண்கள் குறித்த உரையாடலை நிகழ்த்திய வண்ணமிருந்தனர். வீச்சும் வீரியமும் மிக்க கவிதைகளை எழுதி சமகாலத்தைப் பதிவுசெய்யும் போக்கை ஏற்படுத்தினர். களத்திலிருந்தும் கவிதைகள் பிறந்தன.

இப்பாரம்பரியத்தில் போர்ச்சூழலில் அகமன உணர்வுகள் எத்தன்மையோடு இருக்கும்? காதல் ப+க்கும் கணம் உருவாகியிருக்குமா? உயிர்பயம் வாட்டி எடுக்க தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அவரவர்களுக்கு அவரவர் உயிரே சுமக்க முடியாத பாரமாக மாறிவிட்டிருக்கிறது. போர்க்காலத்தில் காதல், திருமணம், பிள்ளைப்பேறு, குழந்தை வளர்ப்பு, உணவு, பொருளாதாரம் என எதிர்கொள்ள வேண்டியவை எத்தனை எத்தனை? ஒவ்வொரு வேளை உணவுக்கான திட்டமிடல், ஊடகங்களிலும் புறவெளியிலும் ஒப்பனையற்றும் ஒப்பனையோடும் பொங்கிவழியும் காதல், ஒரு திருமணத்தை நடத்திக் காட்டுவதற்கான திட்டமிடல், பிள்ளைப்பேற்றுக்கான பரிசோதனை என அடுத்தடுத்து வாழ்க்கையைப்பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறோம். இவையேதும் யோசிக்கவே முடியாத பதுங்குகுழி வாழ்வில் பேறுகாலத்தில் குண்டுக்குத் தப்பியொலியும் அவலம், பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவவசதி, மின்விசிறியும் காற்றும் கிடைக்காத நாடோடி நிலை, வாங்கமுடியாத அளவில் பால்பவுடர் விலை வாழ்க்கையைத் துரத்திய போருடன் பொருளாதாரமும் துரத்திய அவலம் என அடுத்த நிமிடம் உயிரோடு இருப்போமா எனத்தெரியாத நிச்சயமற்ற அவலநிலை. கொத்து குண்டுகளும் கொத்துக் கொத்தாக உதிர்ந்த பிணங்களும் தாய்நாடு பிணக்காடான நிலை என விரட்டி விரட்டித் துரத்தி மீட்டெடுக்க முடியா அவலத்திலிருந்து விடுபட முயன்று தோற்கின்ற மனநிலையில் ஈழப்பெண்கவிஞர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இலக்கியம் வரலாறாக கல்வெட்டாக அச்சுப்பிரதியில் மாறும் நிலையை உருவாகியிருக்கிறது. அவரவர் அடையாளங்களைத் தக்கவைத்துக்கொள்ள வலிகளையும் ரணங்களையும் உள்ளவாறே பதிவுசெய்யத் தொடங்கியுள்ளனர்.
 
 சூர்pயன் தனித்தலையும் பகல் எனும் முதல் தொகுப்பின்மூலம் அடையாளம் காணப்பட்டவர் தமிழ்நதி. இவரது இயற்பெயர் கலைவாணி 1996 இலிருந்து கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், விமர்சனங்கள், குறுநாவல் என எழுதிவரும் இவரின் அண்மையில்வந்த இரண்டாவது கவிதைத் தொகுப்பு, ‘இரவுகளில் பொழியும் துயரப்பனி’, ஆழி-பனிக்குடம் கூட்டுப் பதிப்பாக வெளிவந்திருக்கிறது.

 கனடாவில் வாழ்ந்து வந்த தமிழ்நதி சென்னைக்கும் கனடாவிற்குமாக பயணித்துக் கொண்டிருக்கிறார். தாய்மண் மீதான ஈர்ப்பும், மண்ணில் வாழ இயலா அலைக்கழிப்பும் போரின் மீதான விமர்சனங்களும் காதலும் காதல்மீதான பொய்மைகளும் காமமும், தனிமையும் இவரது கருப்பொருள்களாகின்றன. ஈழப் பெண்கவிஞர்களின் பலம் அவர்கள் பயன்படுத்தும் மொழி. தமிழ்நதியும் முதல் தொகுப்பிலேயே மொழியால் வாசகர்களை ஈர்த்தவர். தான் வாழும் சமகாலத்தை விமர்சனத்தோடு எழுதி வருபவர். துரத்திக் கொண்டேயிருக்கும் வாழ்க்கையிலிருந்து நங்கூரமிட்டு இளைப்பாறும் இடமாக தமிழ்நதிக்கு கவிதை வாய்த்திருக்கிறது.

 நான்கு யன்னல்களிலும்
 மாற்றி மாற்றி
 விழிபதைத்த அவ்விரவுகளில்
 இனிய உயிர்
 விடமாகத் திரிந்தே போயிற்று

என உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடி ஓடி ஒளிவதே வாழ்க்கையென்றான நிலையில் பனித்துளிபட்டேனும் புல்துளிர்த்து விடுமெனும் நம்பிக்கை வறண்ட நிலையில் உயிர் விடமாகவே திரிந்துபோகிறது. பதைபதைக்க ஒவ்வொரு நொடியையும் நிர்ணயிக்க முடியாது திணரும் போர்க்காலங்களின் அவல வாழ்க்கையைப் பதிவு செய்யும் கவிஞரின் தேவரீர் சபைக்கொரு விண்ணப்பம் என்ற முதல் கவிதை போர்ச்சூழலைக் கண்முன் நிறுத்துகிறது. அங்கு தொடுக்கப்படும் வன்முறைகளை சட்டையைப் பிடித்து உலுக்குகிறது. ஜனநாயகத்தை, அரசின் அறிவிப்புகளை, பெண்கள்படும் வாதையை, கைவிட்டவர்களைக் கேள்விகேட்டவண்ணம் இருக்கிறது. சுறுசுறுப்பாக இயங்கும் வதைக்கூடங்களின் சித்திரவதையின் வன்மத்தைக் காட்டுகிறது.

 புகட்டுவதற்கென
 மலமும் மூத்திரமும்
 குடுவைகளில் சேகரிக்க
 நகக்கண்களுக்கென ஊசிகள்
 குதிக்கால்களுக்கென குண்டாந்தடி

……………
வதைபடும்போதில் எழும் கதறலை
நீங்கள் இசையமைத்து
பண்டிகைகளில் பாடவிரும்பலாம் 

என ஈழமக்கள் மனிதத் தன்மையற்ற முறையில் சித்திரவதைக்கு, வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதை மனிதஉரிமையைப் பொசுக்கிப் போட்டுவிட்டு துயரங்களை இரசித்து இரத்தம் குடிக்கும் ஆதிக்கவிடத்தின் செயல்களை விவரிக்கிறார். போர்முடிவுற்றதென அறிவிக்கப்பட்ட இத்தருணத்தில் தமிழர்களின் ப+ர்வீகநிலமெங்கும் மாற்று ஆட்களைக் குடியமர்த்த தயார்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
 
ஜனநாயகம்…… ஜனநாயகம் என்றெழுதி
 துண்டாடப்படவிருக்கும் நாக்குகளால்
 அச்சொல்லின்மீது காறியுமிழட்டும்
என ஜனநாயகத்தின் கொடுக்குகள் அந்நில மக்களையே துவம்சம் செய்து சின்னாபின்னமாக்கிக் கருவறுக்கும் வேலையைச் செய்துவருவதைப் பொறுக்காது குமைகிறார்.

 வேரறுதலின் வலிகுறித்த
 வார்த்தைகள் தேய்ந்தன
 பிறகு தீர்;ந்தன

 ஈரமற்ற காலம்
 ஆண்டுகளை விழுங்கி
 ஏப்பமிட்டபடி கடுகி விரைகிறது
 திருவெம்பாவாய் எங்குற்றாய்?
 இரத்தம் கோலமிடும்
 தெருக்களில் இன்னும் மாற்றமில்லை
அஞ்ஞாத வாசத்தில் உயிரைச் சலவை செய்யும் துயரத்திற்கு மத்தியில் புலராத பொழுதின் துயரப்பனியை வார்த்தைகளால் ஊட்டுகிறார்.

என்றேனும் ஓர்நாள் சுதந்திரத்தின் காற்றை சுவாசித்து விடுவோம் என்ற நம்பிக்கையில் பேயடி விழுந்து, வற்றிய கண்களோடும் கண்ணீரோடும், உறைந்த இரத்தத்தோடும் எதிர்காலம் எலும்புக் கூடாய்நிற்பதையும் அச்சுறுத்தலின் எச்சமாய் இருக்கும் நிகழ்காலம் எந்த ஒரு கனவின் விதையையாவது மிச்சம் வைத்திருக்கிறதா? இருண்ட வனாந்திரங்களில் இலக்கற்றப் பயணமாக, உலகம் முழுதும் இறைந்து கிடக்கின்ற அவலமும் புலம்பெயர்தலி;ன் தனிமையும் உந்தித் தள்ளும் உளவியல் நெருக்கடிக்குள் புதைந்திருக்கின்றனர் ஈழத் தமிழர்கள்.
 பாடைகளில் பயணம் தொடங்கட்டும் என்றா
 நாற்காலிகள் காத்திருக்கின்றன?
 தொப்ப+ள் கொடியே ஈற்றில்
 தூக்குக் கயிறாகிவிடுமோ

நம்பிக்கையைத் தொலைத்துவிட்டு நிராயுதபாணிகளாக நிற்குமிவர்கள் உலக அரசுகள் கற்றுத்தந்த வேசத்தை கொத்திக்கிழிக்கின்ற ஆவேசத்தை எங்கும் காட்டமுடியாமல் வார்த்தைகளால் இயலாமையை, நயவஞ்சகத்தை, போலிமையை எழுதுவதன்றி வேறெதுவும் செய்யமுடியாமல் இருண்டபக்கங்களை எழுத்தில் வடித்து ஆறுதல் தேடும் மனநிலையைப் பிரதிபலிக்கின்றன சில கவிதைகள்

நேற்று
நமது குழந்தைகளுக்கு உணவுகிடைத்ததா?
நேற்றைக்கும் சமைக்க எடுத்த அரிசியில்
குருதி ஒட்டியிருந்ததா?
பொங்கிச் சரிந்த ஏதோவொரு நாளின் ஞாபகத்தோடு
வேறொரு மரத்தடிக்கோ வயல்வெளிக்கோ
இடம் பெயர்ந்து போனாயா?
விழாக்காலத் துயரம் எனும் இக்கவிதையில் போர்க்காலங்களில் மக்களின் ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் ஒரு வேளை உணவும் தூக்கமும் இன்றி உதிரம் பெருக்கோடும் மாதவிடாய்க் காலங்களைச் சுமந்த பெண்ணின் இருப்பு கனவிலும் நினைக்க ஒண்ணா நிஜங்களோடு மனங்களுக்கிடையே அலைகின்றன.

போர்வெடித்த பகுதிகள் இப்படியான வாழ்க்கையைத்தான் மக்களுக்கு மிச்சம் வைக்கிறது. இலக்கு நிறைவேறும் தருணத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இலக்கு இடையிலேயே நொடித்துப் போகையில் வரலாற்றின் பக்கங்களில் பதிவாகாமல் போவதும். வரலாற்றினை மறைக்கவும் திரிக்கவும் கற்ற அரசுகளும் அதற்குத் துணைபோகும் ஊடகங்களும் மக்களை அவர்களது இயல்பில் வாழவிடாமல் செய்கின்றன. அதற்கு எதிர்வினையாற்ற வரலாறு நெடுகிலும் போராட்டங்கள் நடந்திருப்பதையும் கவனிக்கிறோம். 

போர்ச்சூழலில் வாழும் மனிதர்களின் ஆளுமைச்சிதைவும், வளரும் குழந்தைகளைக் கொன்று தின்னும் அச்சமும் அவர்களை அந்த நரவேதனையிலிருந்து மீட்கவியலா அடர்ந்த இருண்மைக்குள் ஆழ்த்திவிடத்தக்கவை. குழந்தைகள் தேவதைகளாய்ப் ப+க்கவேண்டிய ப+மியில் வறண்டநிலத்தில் கரிந்துபோன தாவரங்களாய் மாறிப்போகுமிந்த கொடுமையைக் காண்கையில் எதிர்காலத்திற்கு எதை மிச்சம் வைத்திருக்கிறோம் என்ற கேள்வி விடையற்றதாய் எஞ்சியிருக்கிறது.

பரவாயில்லை எனும் தலைப்பிடப்பட்ட கவிதையில் பசியில் மருண்ட மனிதனின் உயிர்த்துளி சொட்டும் ஓசைக்காக காத்திருக்கும் வல்லூறுகள், பெண் பேராளிகளின் பிணங்களை வன்புணர்ந்த இராணுவத்தான்கள், பன்னிரண்டு வயதுப் பாலகனை பேரினவாதப் பேய்கள் தின்ற செய்தி இத்தனைக்கிடையிலும் நீயும் பிரிவு சொல்கிறாய் பரவாயில்லை எனமுடிகிறது.

ஒரு துயர்மிகு காலத்தில் கயமைக்கு மௌன சாட்சியாய் இருப்பதன் அசூயை நாளுக்குநாள் வளர்கிறது. கொலைக்களத்தில் குறிகளால் குதறப்பட்ட சிறுமிகள், புதைக்க ஆளில்லாமல் வீழ்ந்து கிடக்கிறார்கள். நேற்று இணையத்தில் தலைமட்டும் கூழான ஆண்குழந்தையின் உடலைப் பார்த்தேன் என விவரிப்பவர் மனச்சிதைவின் பாதாளத்தில் சரிகிறது நீலமலர்என்கிறார். கண்ணீரின் ஈரமும் குருதியின் சிவப்பும் படியாமல் ஒரு சொல்தானும் எழுதிவிடமுடியாத குரல்கள் ஒடுங்கும் காலத்தை குருதியோடு கரைக்கிறார்.

தடுப்பு முகாம்கள் கவிதையில் இராணுவ வாகனங்கள் உயிருள்ள பிணங்களை வீதியோரத்தில் கொட்டுதல், முகாம் வாசிகளை மகிழ்ச்சியானவர்களாகக் காட்டி புகைப்படம் எடுக்க முயலும் உத்திகள், உறவுகளைப்பற்றியும் மகனைப் பற்றியும் தகவலற்று அடைக்கப்பட்டிருக்கிற தருணங்கள் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் தேவதைகளிடம் முதலில் நீட்டப்படும் துப்பாக்கிகள் பிறகு உளியாய் தொடை பிளந்திறங்கும் குறிகள் குறித்துப் பேசி அகதிகளை முன்னிறுத்திப் பிச்சையெடுக்கும் அரசுநிருபத்தை கவனமாய் மிகக் கவனமாய் பரிசீலித்துக் கொண்டிருக்கிறது சர்வதேசம் என குழந்தையொன்றை கையிலேந்தி பிச்சையெடுக்கும் பிச்சைக்காரியைப்போல சர்வதேச அரசியலின்முன் கையேந்திக் கிடக்கும் அரசியல் காட்சியைக் கண்முன் நிறுத்துகிறது. 

மிகு தொலைவில் இருக்குமென் வீடு
ஒரு மரணப்பொறி
அன்றேல்
தீராத காதலொடு
அழைத்திருக்கும் மாயக்குழல்
என விவரிக்கும் கவிஞரின் காதல் கசிந்துருகிய வீடு மரணப் பொறியாக மாறிவிடுகிறது. சொந்த மண்ணும் சொந்த வீடும் அச்சுறுத்த நாடோடியாகிப் போய் பழைய நினைவுகளை மட்டுமே எச்சமாய் சுமந்து திரிகின்றது. பழைய நினைவுகளிலிருந்து மீளமுடியாமல் புதிய சூழலுக்கும் அடங்க முடியாமல் நிலை கொள்ளா மனதோடு வாழ்க்கை நகர்கிறது.

 கேள்விகளாலான அவள்
 ஊரடங்குச் சட்டமியற்றப்பட்ட
 பாழ்நகரை ஒத்திருந்தாள்
போர் குறித்தும் அகதியான வாழ்க்கை குறித்தும் தீராத கேள்விகளை நிரப்பிக் கொண்டு விடையற்று பாழ்நகரை ஒத்திருக்கிறாள். அவையள் ஏன் என்னை அகதிப் பொண்ணு எண்டு கூப்பிட்டவை? என சுயம் தொலைத்த அகதிவாழ்க்கையை அது ஏற்படுத்தும் அகமன உளைச்சலைப் பதிகிறார்.
 
சாம்பல் நிறமான வயல்வெளிகளில்
 குறிகளால் குதறப்பட்ட சிறுமிகள்
 புதைக்க ஆளில்லாமல்
 வீழ்ந்து கிடக்கிறார்கள்
மீண்டும் பெண்ணின் இருப்பு நிர்கதியான நிலையைக் காட்டுகிறார்.

ஆண்களைக் காட்டிலும் பெண்களும் குழந்தைகளுமே போர் நடைபெறும் பகுதியில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். காலங் காலமாக போர்முனைகளில் பெண்களும் சிறுமிகளும் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்ணை சொத்தென பாவிக்கும் உலகில் அவளது உடல் குரூரங்களைச் செலுத்தும் இடமாக மாறிப்போகிறது.

ஊரைவிட்டு ஓடிவந்தால் அகதிவாழ்வு அச்சுறுத்துகிறது. அங்கேயே தொடர்ந்து வாழ்தல் நிலையில்லை என்றானபின் போர்வெளிக்கு வெளியேயிருந்து அம்மண்ணின் அரசியலைப் பேசுபவர்களின் செயலைப் பொறுக்கஒண்ணாதவராய் வேலை சப்பித்துப்பிய விடுமுறை நாட்களில் சலித்த இசங்களையும் அழகிய நாட்களையும் பேசித் தீர்ந்த பொழுதில் மதுவின் புளித்த வாசனையில் மிதக்கவாரம்பிக்கிறது தாய் தேசம் என்பவர்

“கோழிக்காலிலும் தொட்டுக்கொள்ள உகந்தது
 எதிர் அரசியல்”

என தன்தாய்மண்ணின் அரசியல் நிகழ்வுகள் இப்படியாக கையாளப்படுகிறதே என ஆதங்கப்படுகிறார். போர்ச்சூழலில் அகதியாக வேறொரு நாட்டில் வாழ நேர்ந்தவர்களுக்கு இருக்கும் குற்றஉணர்வுக்கும் அவர்களது கையாலாகாத நிலைக்கும் ஆறுதலான வார்த்தைகள் இல்லாத சூழல் மேலும் மேலும் தன்னைக் குற்றவாளியாக மாற்றிக் கொள்வதிலிருந்து மிட்டெடுக்க முடியாததாயும் இருக்கிறது.

ஊர்திரும்பும் கனவை
 இடிபாடுகளுள்ளிருந்து
 இனி மீட்டெடுக்கவே முடியாது
 ஒருவழியாய் நண்பர்களே!
 உங்கள் கவனத்தை
 சவப்பெட்டிகளிலிருந்து
 வாக்குப்பெட்டிகளுக்குக் கடத்திவிட்டார்கள் !
  
உயிர்கள் வாக்குப்பெட்டிக்களுக்காக களிமண் பொம்மைகளைப்போல உருட்டிவிளையாடுவதாக இருக்கிறது. வாக்குச் சாவடியொன்றே நிந்தனையாகவும் நிபந்தனையாகவும் மாறிப்போய்விட்டிருக்கிற நிலையில் அனைத்து நிகழ்வுகளும் இதை முன்னிறுத்த முயலும் யுக்திகளாகவே வடிவமைகிற நிலையை ஆற்றாமையோடு பதிகிறார்.
 
காலந்தோறுமான இசங்களுக்கும் வாழ்க்கைக்கும் இடையேயான முரணைக் காகித நகரம் கவிதையில் நையாண்டி செய்கிறார். தனித்தவிலும் மத்தளமும் கவிதை, காதல், காமம், பிரிவு என காதல் சார்ந்த உணர்வுகளைக் கூறுகிறது.

உடலொரு பாடினியாய்
இனியும்
இசைத்துத் திரியாதே
நான் என்ற பித்துப் பெண்ணே

என உடலின் மலர்ச்சியை பித்தேறிய நிலையை பரவசத்தோடு வார்த்தைகளுக்குள் கொண்டுவருகிறார். இவரை விரட்டிக் கொண்டிருக்கும் தீராத தனிமையின் துயரை பிரிவை ஏக்கத்தை கவிதைகள் பேசுகின்றன. வாழ்க்கையின் மீதான சலிப்பு, சம்பவத்தின் மீதான கோபம், ஆற்றாமை, கையறுநிலை என எல்லாவற்றையும் கவிதையின் மீது கவிதை எழுதுவதன் மீது ஏற்றிச் சாடுகிறார்.

முன்னொன்று பேசி புறமொன்றும் பேசும் மிகச் சாதாரண மனநிலை ஏற்படுத்தும் உளவியல் சொல்லி மாளாதது. கலப்படமும் ஊழலும் பருண்மையாய் நுழைந்த சமூகத்தில் மனதளவிலும் சுயநலமும் சந்தர்ப்பவாதமும் நட்பையே கொச்சைப்படுத்தும் எல்லைக்குக் கொண்டு சேர்க்கிறது. நட்பு விளையாட்டுப் பொருளாகவும் நகைத்தலுக்குரியதாகவும் கையாளப்படுகிறது. தோழி எனவிளித்துப் பேசிக்கொண்டிருக்கும் பெண்களையே மாற்றிப் பேசும் மனநிலையை ‘பிரம்மாக்கள்’ கவிதையில் கட்டுகிறார்.

 மதுவீச்சமடிக்கும் விடுதியறை யொன்றில்
 தோழியை வேசியாக்கி
 நண்பர்களின் குவளைகளை நிரப்புகிறீர்கள்
 நானும் அவளும்
 அருந்திய தேநீர் உப்புக்கரித்தது
பெண்படைப்பாளி இயங்குவதற்குரிய ஆரோக்கியமான சூழல் இங்கு இருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்பிச் செய்கின்றன மேற்கண்ட வரிகள்

ஒவ்வொரு சூழலுக்கு ஏற்ப ஒவ்வொரு கவிதைக் கருவைத் தேர்ந்தெடுக்க முடிகிற நிலையின் புலிவேஷம் கட்டிய நரியொன்று அகத்தே ஏறி அமர்ந்திருப்பதை எழுத முடியவில்லை என்கிறார். நாளொன்றுக்கு ஏறியமரும் பலநரிகளை விரட்டுவதும் ஒவ்வொருவரையும் விரட்டிக் கொண்டுவரும் புலிகளிடமிருந்து தப்பிப்பதுயான வாழ்க்கையில் படைப்பாளி ஓரேதன்மைத்தான சிந்தனையைக் கோரவியலாது

தாய்மண்ணும், அதுசார்ந்த அரசியல் பின்னணியால் நேர்ந்த வாழ்வாதாரம் மறுக்கப்பட்டு நிர்கதியான நிலையும், போரும், கந்தகக் காற்றும், யாதொரு தீர்வுமற்ற வாழ்க்கையின் மீதான சலிப்பும், தனிமை ஏற்படுத்தும் வெறுமையும், பிரிவின் ஆற்றாமையும் காதலும் கவிதை எழுதுவதுமட்டுமே முடிகிறதே என கவிதை மீது காட்டும் கோபமும் மகளிர்தினம் கொண்டாடுகிற நிலையில் நடைமுறை வாழ்க்கையில் பெண்களின் மேம்பாடு சாத்தியப்படாத இடங்களைக் கேள்வி கேட்பதுமாக இருக்கும் தமிழ்நதியின் கவிதைகளின் துயரப்பனி உருகி பாயும் இடமெங்கும் துயரத்தின் சுவடுகளை செதுக்கிவிட்டுச் செல்கிறது.

- ச.விசயலட்சுமி

Pin It