1. புதிதாக கோயில்களும், சத்திரங்களும், வேதபாடசாலைகளும், பசு மடங்களும் அமைக்கக் கூடாது. இதுவரை ஏற்பட்டுள்ளவைகளை பொதுப் பள்ளிக்கூடங்களாகவும், மாணவர்களின் விடுதிகளாகவும், குழந்தைகளுக்கு பாலுதவும் ஸ்தாபனங்களாகவும், எல்லா மக்களுக்கும் சமமாய் பயன்படும்படி மாற்றிவிட வேண்டும்.

periyar 3802. கலப்பு மணம் செய்யப்பட வேண்டும்.

3. விதவைகள் மறுமணம் செய்து கொள்ள வேண்டும்.

4. சாரதா சட்டம் அமுலுக்கு வர வேண்டும்.

5. பெண்களுக்கு சொத்துரிமை ஏற்படுத்த ஒரு கமிட்டியை ஏற்படுத்த வேண்டும். அதற்காக சட்டசபையில் ஒரு மசோதா சீக்கிரத்தில் கொண்டு வரப்பட வேண்டும்.

6. பெண்களுக்கு விலை கொடுக்கும் பழக்கம் ஒழிக்கப்பட வேண்டும்.

7. கலியாணம் ஒரே நாளில் புரோகிதரின்றி சுருக்கமாக நடைபெற வேண்டும்.

8. பல்லாவரத்து தீர்மானங்கள் பண்டிதர்களின் மனமாறுதலை காண்பிப்பதால் அவைகளைப் போற்றுகின்றது.

9. ஜாதி வித்தியாசம், தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும். அதற்காக, ஆர்.கே.ஷண்முகம் அவர்களால் இந்திய சட்டசபையில் கொண்டு வந்திருக் கும் மசோதாவை பாராட்டுவதுடன், கராச்சியில் எல்லா பொதுஸ்தலங்களிலும் எல்லா வகுப்பாருக்கும் சம உரிமை உண்டு என்கின்ற தீர்மானத்தில் கோயில்களும் சேர்க்கப்பட்டிருக்குமென நம்பி, அதைப் பாராட்டுகின்றது.

10. இப்பகுதியில் ஆதிராவிடர்கள் முதலியவர்களுக்கு இடையூறுகள் பல செய்யாமல் சாதகமாயிருக்கும் வல்லம்பர், கள்ளர், மறவர், அகமடியர், செட்டிமார்கள் முதலிய வகுப்பினரைப் போற்றுகின்றது. தாழ்த்தப்பட்ட வகுப்பினரிடம் பகைமை கொண்டு, கொடுமை விளைவிப்பவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களை இம்மகாநாடு கண்டிக்கின்றது. இந்த ஜில்லா போலீஸ் உத்தியோகத்துக்கு, வைதீக உணர்ச்சியாவது ஜாதிப்பற்றாவது இல்லாத ஓர் பார்ப்பனரல்லாதாரை நியமனம் செய்யும்படியாக அரசாங்கத்தாரை வற்புறுத்துகின்றது.

இப்பகுதியில் ஆதிதிராவிடர்களை கொடுமைப்படுத்தியதாகச் சொல்லப்படும் குறைபாடுகளை விசாரித்து, அரசாங்கத்தாருக்கு அறிவிக்க அடியில் கண்ட கனவான்களடங்கிய கமிட்டி யொன்று நியமிக்கப்பட்டது. கமிட்டி கனவான்கள் :- உயர்திருவாளர்கள் ராமநாதபுரம் ராஜா, செட்டி நாட்டு குமாரராஜா, எஸ். முருகப்பா, எஸ்.ஆர்.எம். வெங்கடாசலம்,. எஸ்.ராமச்சந்திரன்.

11. ஜில்லாபோர்டு, தாலூகா போர்டு, முனிசிபாலிட்டி ஆகிய பொது ஸ்தாபனங்களில், கள்ளர், வல்லம்பர், முகமதியர், ஆசாரிமார், பெண் மக்கள், தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியவர்களுக்கு ஸ்தானங்கள் ஒதுக்கி வைக்கப்பட வேண்டுமெனவும், அரசாங்கத்தார் இதில் தலையிட வேண்டுமெனவும் இம்மகாநாடு தீர்மானிக்கின்றது.

12. ஐந்து கோயில் தேவஸ்தான வரும்படியை படிப்புக்கும் வைத்திய சாலைக்கும் பயன்படுத்தவேண்டுமென டிரஸ்டிகளை கேட்டுக் கொள்ளுகின்றது.

13. ஆதிதிராவிட ஹோம் கட்டுவதற்காக 10,000 ரூபாயும் 13 ஏக்கரா நிலமும் ஒரு கனவானால் அளிக்கப்பட்டும் அஸ்திவாரம் போடப்பட்டும் முனிசிபாலிட்டியார் அதைப் பற்றி கவனியாதிருப்பதற்காக வருந்துவதோடு, உடனே அதைப்பற்றி கவனிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளுகிறது.

14. குடி அரசையாவது, குமரனையாவது தினசரியாக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளுவது.

15. சிவகெங்கை ஜமீனில் வெள்ளாமை யில்லாத நிலங்களுக்கும், அதிக வரியுள்ள நிலங்களுக்கும் வரியைக் குறைப்பதற்கு அரசாங்கத்தார் ஒரு கமிட்டியை நியமிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகின்றது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இத்தீர்மானங்களை பிரேரேபித்தும், ஆதரித்தும் பேசிய கனவான்கள் : - திருவாளர்கள் :- பள்ளத்தூர் மு. அ. அருணாசலம், டிலி. அருணாசலம், சொ. முருகப்பா , ஆர்.வி. சாமினாதன், பெ.ரி.சி. மெய்யப்பா, சி.மு.ரு. நாராயணன், சாமி சிதம்பரனார், கி.அ.பி. விஸ்வ நாதன், நீலாவதி, ராமாமிர்தம்மாள், சு.ப. முத்தையா, அ.கா. சொர்னனாதன், ராம. சுப்பிரமணியம், நா. வீரப்பன், அ. பொன்னம்பலனார், ஜீவானந்தம், கஞ்சமலைமூர்த்தி, ராமச்சந்திரன், அ.ரு.சு.ப. வேடப்பா, எஸ்.வி. லிங்கம், கே. அழகிரிசாமி முதலியவர்கள் ஆவார்கள்.
(குடி அரசு - 19.04.1931)