பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனரல்லாதார்களில் பெரும்பான்மையோருக்கும் வித்தியாசமிருப்பதாக பார்ப்பனர்களால் சொல்லப்படும் காரணம் ஒன்றே ஒன்றுதான். அதாவது பார்ப்பனர்கள் மாமிசம் சாப்பிடுவதில்லை என்பதும், பார்ப்பனரல்லாதார் மாமிசம் சாப்பிடுகிறார்கள் என்பதுமேயாகும். மாம்சம் சாப்பிடுவதிலும், பதார்த்தத்தில் உள்ள குண தோஷங்களைப் பற்றி - அதாவது காய்கறிகளுக்கும் மாமிசத்திற்கும் உள்ள உருசி குணம் முதலியவைகளைப் பற்றிக் கூட அல்லாமல் - ஒரு ஜீவனை வதைக்கின்றது கூடாது என்பதான ஜீவ ஹிம்சையையே பிரதானமாகக் கருதி சொல்லப்படுகின்றது.

இதை உத்தேசித்தே ஆங்காங்கு ஜீவகாருண்ய பிரசாரமும், கொலை மறுத்தல் பிரசாரமும், புலால் உண்ணாமை பிரசாரமும் எவ்வளவோ செய்யப்பட்டு வருகின்றன.

mr radha and periyarஇப்படியிருக்க, இந்த நாளில் பார்ப்பனர்கள் ஒன்று கூடி தெய்வத்தின் பேராலும், மதத்தின் பேராலும், மோக்ஷத்தின் பேராலும் ஜீவன்களை வதைத்து கொன்று தின்பதானது மோக்ஷத்திற்காக செய்யப்படும் காரியமாய் பாவிக்கப்படுகின்றது. என்னே நமது அறிவீனம்! மாமிசம் சாப்பிடுவது நல்லதா கெட்டதா? பாவமா புண்ணியமா? அவசியமா இல்லையா? என்பதைப் பற்றிய விவகாரத்தை நாம் இந்த வியாசத்தில் வைத்துக் கொள்ளவில்லை.

“படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக, மனுவைப் படைத்தான் தன்னை வணங்க” என்கின்ற கொள்கையை மதமாக உடையவர்களும், ராமன் நன்றாக வெந்த நல்ல நல்ல மாமிசமாகப் பார்த்து பொறுக்கி எடுத்து சீதைக்குக் கொடுத்தான் என்கின்ற புராணத்தை கும்பிடுவதை மதமாகக் கொண்டவர்களும், எச்சில் மாமிசத்தை, அதாவது தான் கடித்துத் தின்று ருசி பார்த்து பின்பு சிவனுக்கு படைத்து அதனால் மோக்ஷமடைந்த பக்தர்களைப் பாடி மோக்ஷமடைவதை மதமாகக் கொண்டவர்களும், ஆடும், கோழியும், பன்றியும், எருமைக்கிடாவும் அடுக்கடுக்காக கொன்று பூசை செய்ய வேண்டிய கடவுளை கும்பிடுவதை மதமாகக் கொண்டவர்களும், வீணாகப் போவது மனிதனின் பசிக்குதவுவதால் யாருக்கு என்ன நஷ்டம் என்பவர்களும், தண்ணீரைக் காய்ச்சி சாப்பிட்டால் அதிலுள்ள பல ஜீவன்கள் சாகின்றனவாதலால் காய்ச்சாமல் சாப்பிட வேண்டுமென்றும், விளக்கு வைத்தால் அதில் பல பூச்சிகள் வந்து விழுந்து சாகுமாதலால் இருட்டில் இருக்க வேண்டுமென்றும், மூச்சு விட்டு சுவாசம் உள்ளே இழுத்தால் பல பூச்சிகள் உள்ளே போய் இறந்து போகுமாதலால் வாயையும் மூக்கையும் துணியில் மூடிக் கொள்ள வேண்டுமென்றும் சொல்லுகின்றவர்களும் இருக்கும்போது மாமிசம் சாப்பிடுவது சரியா தப்பா என்பதை சுலபத்தில் முடித்துவிட முடியாது. ஆனால் வேதத்தின் பேரால் கும்பகோணத்தில் பார்ப்பனர்கள் ஆடுகளை வதைத்துக் கொன்றது சரியா என்பதுதான் இவ்வியாசத்தின் கருத்தாகும்.

கசாப்புக் கடைக்காரனோ அல்லது வேறு கீழ்த்தரக் கடவுள்களோ ஜீவன்களை ஒரே வெட்டாக ஒரு வினாடியில் வெட்டிவிடச் செய்கின்றார்கள். ஹிம்சை என்பதை அச்சீவண்கள் ஒரு சிறிதும் அனுபவிப்பதற்கில்லாமல் திடீரென்று வெட்டி விடுகின்றார்கள். ஆனால் யாகத்தின் பேரால் ‘உயர்ந்த வகுப்பு’ பார்ப்பனர்கள் ‘உயர்ந்த வகுப்பு கடவுளுக்கு’ மோக்ஷத்திற்காக உண்ணுவதற்கு பலி கொடுப்பதற்காக செய்யும் கொலையில் மேல் கண்டபடியாவது வெட்டாமல் உயிருடன் விரையை நசுக்கியும் தோலை உரித்தும் வேண்டிய அவயவங்களை உயிருடனிருக்கும் போதே அறுத்தெடுப்பதும் என்றால் எவ்வளவு கொலை பாதகம் - சித்ரவதை - கடுஞ்சித்தம் என்பதை கவனித்து பார்க்கவேண்டும் என்றே வேண்டிக் கொள்ளுகின்றோம்.

ஒரு ஜீவகாருண்ய சங்கமாவது, கொலை மறுத்தல் கூட்டமாவது, சிவனடியார் திருக்கூட்டத்தாராவது இதைப் பற்றி ஒரு வார்த்தையாவது இதுவரை பேசினவர்கள் அல்லர். மதமும் கடவுளும் சுயராஜ்மும் எப்படி புரட்டின் மீதே கட்டப்பட்டிருக்கின்றதோ அது போலவே ஜீவகாருண்யமும் கட்டப்பட்டிருக்கின்றதேயொழிய உண்மையான தத்துவத்தின் பேரில் இல்லை. இதுதான் இப்படி புரட்டு இயக்கம் என்றால், ஜீவஹிம்சை நிவாரண சங்கத்தார் அதாவது SPCA சங்கத்தார் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை. அவர்கள் இந்த யாகத்தின் பேரால் கொலை பாதகம் செய்த பார்ப்பனர்களை SPCA சட்டப்படி நடவடிக்கை நடத்தி ஏன் தண்டித்திருக்கக் கூடாது என்று கேட்கின்றோம்.

மதத்தின் பேராலும் சுவாமியின் பேராலும் செய்யும் காரியங்கள் குற்றமல்ல என்று சொல்வார்களானால், நமது சுவாமிகள் எல்லாவித பாபத்திற்கும் காரண பூதமாகவும் உடந்தையாகவும் இருக்கின்றது என்பதில் என்ன சந்தேகம்? பார்ப்பனர்கள் எது செய்தாலும் அது மோக்ஷத்திற்கும் சுயராஜ்யத்திற்குமாக ஆய்விடுகின்றது. அதே காரியங்களை நம்மவர்கள் செய்வது தேசத் துரோகமும், தெய்வத் துரோகமும் ஆய்விடுகின்றது.

(குடி அரசு - தலையங்கம் - 13.05.1928)