கற்பு என்கின்ற வார்த்தையானது மனித சமூகத்தில் சரிபகுதியான எண்ணிக்கையுள்ள பெண்களை அடிமைப்படுத்தி வைப்பதற்காக மாத்திரமே உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது என்கின்ற தத்துவத்தின் மேல் இதை எழுதுகின்றேன்.

periyar kovai ramakrishnanகற்பு என்கின்ற வார்த்தையை பகுபதமாக்கி பார்ப்போமானால் கல் என்பதிலிருந்து வந்ததாகவும் அதாவது படி - படிப்பு என்பது போல் கல் - கற்பு என்கின்ற இலக்கணம் சொல்லப்படுகிறது. அன்றியும் “கற்பெனப் படுவது சொற்றிறம்பாமை” என்கின்ற வாக்கியப்படி பார்த்தால் கற்பு என்பது சொல் தவறாமை. அதாவது நாணயம், சத்தியம் என்கின்ற கருத்து கொண்டதாக இருக்கின்றது.

அதை பகாப்பதமாக வைத்துப் பார்த்தால் ‘மகளிர் நிறை’ என்று காணப்படுகின்றது. இந்த இடத்தில் மகளிர் என்கின்ற பெண்களையே குறிக்கும் பதம் எப்படி சம்மந்தப்பட்டது என்பது விளங்கவில்லை. நிறை என்கின்ற சொல்லுக்கு பொருள் பார்த்தால் அழிவின்மை, உறுதிப்பாடு, கற்பு என்கின்ற வார்த்தைகள் காணப்படுகின்றது. ஆகவே கற்பு என்பது பெண்களுக்கு மாத்திரம் சம்மந்தப்பட்டது என்பதற்கு ஆதாரம் கிடைக்காவிட்டாலும் அழிவில்லாதது, உறுதி உடையது என்கின்ற பொருள் கிடைக்கின்றது.

அழிவில்லாதது என்கின்ற வார்த்தைக்கு கிரமமான கருத்துப் பார்க்கும்போது இந்த இடத்தில் சுத்தம் அதாவது கெடாதது என்பதாகத்தான் கொள்ளலாம். இந்த சுத்தம் என்கின்ற வார்த்தையும் கெடாதது என்கின்ற கருத்தில்தான் ஆங்கிலத்திலும் காணப்படுகிறபடி அதாவது சேஸ்டிடி (chastity) என்கின்ற வார்த்தைப்படி பார்த்தால் வர்ஜினிட்டி (Virginity) என்ற பொருள் என்பதும் அதை அந்த உணர்ச்சிப்படியும் பார்த்தால் இது ஆணுக்கென்றோ பெண்ணுக்கு என்றோ சொல்லாமல் பொதுவாக மனித சமூகத்திற்கே, எவ்வித ஆண் பெண் புணர்ச்சி சம்மந்தமே சிறிதும் இல்லாத தன்மைக்கே உபயோகப்படுத்தி இருக்கின்றது. ஆகவே கற்பு என்பது பெண்களுக்கு மாத்திரம் சம்மந்தப்பட்டதல்ல என்பதும் அதுவும் ஆணோ பெண்ணோ ஒரு தடவை கலந்த பிறகு எவ்வளவு சுத்தமாயிருந்தாலும் கற்பு அல்ல என்கின்ற கருத்து கொள்ளக் கூடியதாகின்றது. ஆனால் ஆரிய பாஷையில் பார்க்கும்போது மாத்திரம் கற்பு என்கின்ற பதத்திற்கு ‘பதிவிரதை’ என்கின்ற பொருள் கொள்ளப்படுகின்றது.

இந்த இடத்தில்தான் கற்பு என்கின்ற வார்த்தைக்கு அடிமைக் கருத்து நுழைக்கப்படுகின்றது என்பது எனதபிப்பிராயம். அதாவது பதியை கடவுளாகக் கொண்டவள், பதிக்கு அடிமையாய் இருப்பதையே விரதமாகக் கொண்டவள் எனப் பொருள் கொடுத்திருப்பதுடன் பதி என்கின்ற வார்த்தைக்கு அதிகாரி, எஜமான், தலைவன் என்கின்ற பொருள்கள் இருப்பதால் அடிமைத் தன்மையை இவ்வார்த்தைகள் பலப்படுத்துகின்றன. ஆனால் தலைவி என்ற பதத்திற்கும் நாயகி என்ற பதத்திற்கும் மனைவி என்ற பொருள் குறிக்கப்பட்டிருந்தாலும் அது காதல் கொண்ட நிலையில் மாத்திரம் ஆணையும் பெண்ணையும் குறிக்கின்றதேயொழிய வாழ்க்கையில் கட்டுப்பட்ட பெண்களுக்கு தலைவி என்கின்ற வார்த்தை அதன் உண்மைக் கருத்துடன் வழங்கப்படுவதில்லை. நாயகன் நாயகி என்கின்ற சமத்துவமுள்ள பதங்களும், கதைகளிலும் புராணங்களிலும் காதல்களை உணர்த்தும் நிலைகளுக்கே மிகுதியும் வழங்கப்படுகின்றது. ஆகவே காமத்தையும் காதலையும் குறிக்குங் காலங்களில் சமத்துவப் பொருள் கொண்ட நாயகர் நாயகி, தலைவர் தலைவி என்கின்ற வார்த்தைகளை உபயோகித்துவிட்டு, கற்பு என்கின்ற நிலைக்கு வரும்போது அதை பெண்களுக்கு மாத்திரம் சம்மந்தப்படுத்தி, பதி ஆகிய எஜமானனையே கடவுளாகக் கொள்ள வேண்டுமென்கின்ற கருத்து கொண்டிருக்கின்றது. இந்த இடத்தில் நமது திருவள்ளுவரின் நிலைமையும் எனக்கு சற்று மயக்கத்தைத் தருகின்றது.

அதாவது, குறளில் வாழ்க்கைத் துணைநலத்தைப் பற்றி சொல்ல வந்த 6-ஆம் அத்தியாயத்திலும் பெண் வழிச் சேரல் என்பதைப்பற்றி சொல்ல வந்த 91-வது அத்தியாயத்திலும் மற்றும் சில தனி இடங்களிலும் பெண்கள் விஷயத்தில் மிக்க அடிமைத் தன்மையையும் தாழ்ந்த தன்மையையும் புகுத்தப்பட்டிருப்பதாகவே எண்ணக்கிடக்கின்றது. தெய்வத்தைத் தொழாமல் தன் கொழுநனாகிய தன் தலைவனைத் தொழுகின்றவள் மழையைப் பெய்யென்றால் பெய்யும் என்றும், தன்னைக் கொண்டவன் என்றும் இம் மாதிரியான பல தாழ்த்தத் தகுந்த கருத்து கொண்ட வாசகங்கள் காணப் படுகின்றன. இது விஷயத்தில் மாறுபட்ட அபிப்பிராயம் கொள்ளுவோர், மேல் கண்ட இரண்டு அத்தியாயங்களையும் 20 குறள்களையும் உரைகளைக் கவனியாமல் மூலத்தை மாத்திரம் கவனிக்கும்படி வேண்டுகிறேன். அப்படிப் பார்த்து பிறகு இந்த இரண்டு அதிகாரங்கள் அதாவது வாழ்க்கைத் துணை நல அதிகாரமும், பெண்வழிச் சேரல் அதிகாரமும் குற்றமற்றது என்பதாக யார் வந்து எவ்வளவு தூரம் வாதிப்பதானாலும் கடைசியாக, திருவள்ளுவர் ஒரு ஆணாயில்லாமல் பெண்ணாயிருந்து இக்குறள்களை எழுதியிருப் பாரானால் இம்மாதிரி கருத்துக்களை காட்டியிருப்பாரா? என்பதையாவது கவனிக்கும்படி வேண்டிக் கொள்ளுகிறேன். அது போலவே பெண்களைப் பற்றிய தர்ம சாஸ்திரங்கள் என்பதும் பெண்களைப் பற்றிய நீதி நூல்கள் என்பதும், பெண்களால் எழுதப்பட்டிருக்குமானாலும் அல்லது கற்பு என் கின்ற வார்த்தைக்குப் பெண்கள் வியாக்கியானம் எழுத ஏற்பட்டிருந்தாலும் கற்பு என்பதற்கு பதிவிரதம் என்கின்ற கருத்தை எழுதியிருப்பார்களா என்பதையும் யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்ளுகின்றேன்.

கற்பு என்பதற்கு பதிவிரதம் என்று எழுதிவிட்டதின் பலனாலும் பெண்களை விட ஆண்கள் உடல் வலி கொண்டவர்களானதினாலும் பெண்கள் அடிமையாவதற்கும் புருஷர்கள் மூர்க்கர்களாகி கற்பு என்பது தங்களுக்கு இல்லையென்று நினைப்பதற்கும் அனுகூலம் ஏற்பட்டதே தவிர வேறில்லை.

தவிர, புருஷர்கள் கற்புடையவர்கள் என்று குறிக்க நமது பாஷை களில் தனி வார்த்தைகளே காணாமல் மறைபட்டுக் கிடப்பதற்கும் காரணம் ஆண்களின் ஆதிக்கமே தவிர வேறில்லை.

இந்த விஷயத்தில் உலகத்தில் இன்ன நாடோ, இன்ன மதமோ, இன்ன சமூகமோ யோக்கியமாய் நடந்து கொண்டிருப்பதாகச் சொல்லமுடியாது. உதாரணமாக ஐரோப்பிய தேசத்திலும் பெண்களுக்கு பலவித சுதந் திரங்கள் இருப்பதுபோல் காணப்பட்டாலும் புருஷன் பெண்சாதி என்பதற் காக ஏற்பட்ட பதங்களிலேயே உயர்வு தாழ்வு கருத்துகள் நுழைக்கப்பட்டி ருப்பதுடன் சட்டங்களும் புருஷனுக்கு அடங்கி நடக்க வேண்டியதாகவே ஏற்பட்டிருக்கிறது.

துருக்கி நாட்டிலும் மகமதிய சமூகத்திலும் படுதா என்றும், கோஷா என்றும் அதாவது பெண்கள் அறைக்குள் இருக்க வேண்டியவர்கள் என்றும், முகத்தை மூடிக் கொண்டு வெளியில் போக வேண்டியவர்கள் என்றும் ஏற்படுத்தப்பட்ட கொள்கையும், புருஷன் பல பெண்களை மணக்கலாம், பெண்கள் ஏக காலத்தில் ஒரு புருஷனுக்கு மேல் கட்டிக் கொண்டு வாழக் கூடாது என்ற கொள்கையும், நம்நாட்டில் ஒருதடவை புருஷன் பெண் சாதி என்கின்ற சொந்தம் ஏற்பட்டுவிட்டால் அந்தப் பெண்ணுக்கு சாகும் வரைக்கும் வேறு எவ்வித சுதந்திரமும் இல்லை என்றும், புருஷன் பல பெண்களை கட்டிக் கொண்டு அப்பெண்ணின் முன்பாகவே ஒவ்வொரு பெண்ணுடனும் கூடி வாழலாம் என்றும், புருடன் தான் கொண்ட பெண் ணைத் தன்னுடன் இருத்தி வாழவிடாமலும் கூட புருடனை சாப்பாட்டிற்கு மாத்திரம் கேட்கலாமே யொழிய இன்பத்திற்கோ, காதலுக்கோ கட்டுப்படுத்த உரிமை இல்லை என்றும் கட்டுப்பாடு வழங்கப்பட்டு வருகின்றது.

இன்னிலை சட்டத்தாலும், மதத்தாலும் மாத்திரம் ஏற்பட்டதென்று சொல்வதிற்கில்லாமல் சமூகமும் ஒப்புக் கொண்டு இந்நிலைக்கு உதவி ஸ்திரீ புரிந்து வருவதினாலும் இது உறம் பெற்று வருகின்றதென்றே சொல்ல வேண்டும். அநேக வருட பழக்க வழக்கங்களால் தாழ்ந்த ஜாதியார் எனப்படுவோர் எப்படி தாங்கள் தாழ்ந்த வகுப்பார் என்பதை ஒப்புக்கொண்டு தாமாகவே கீழ்ப்படியவும், ஒடுங்கவும், விலகவும் முந்துகின்றார்களோ அதுபோலவே பெண்மக்களும் தாங்கள் ஆண்மக்களின் சொத்துக்களென்றும், ஆண்களுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்றும், அவர்களது கோபத்திற்கு ஆளாகக் கூடாதவர்கள் என்றும் நினைத்துக்கொண்டு சுதந்திரத்தில் கவலையற்று இருக்கின்றார்கள். உண்மையான பெண்கள் விடுதலை வேண்டுமானால் ஒருபிறப்புக் கொரு நீதி வழங்கும் நிர்ப்பந்தக் கற்பு முறை ஒழிந்து இரு பிறப்புக்கும் சமமான சுயேச்சைக் கற்பு முறை ஏற்பட வேண்டும். கற்புக்காக காதலற்ற இடத்தைக் கட்டி அழுது கொண்டிருக்கச் செய்யும்படியான நிர்ப்பந்தக் கல்யாணங்கள் ஒழிய வேண்டும்.

கற்புக்காக புருடனின் மிருகச் செயலை பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்கின்ற கொடுமை ஒழிய வேண்டும்.

கற்புக்காக மனத்துள் தோன்றும் உண்மைக் காதலை மறைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்கின்ற கொடுமை ஒழிய வேண்டும்.

எனவே இக்கொடுமைகள் நீங்கின இடத்தில் மாத்திரமே மக்கள் பிறவியில் உண்மைக் கற்பை, இயற்கை கற்பைக் காணலாமே ஒழிய நிர்ப்பந்தங்களாலும் ஒருபிறப்புக் கொரு நீதியாலும், வலிமை கொண்டவன் வலிமை யற்றவனுக்கு எழுதி வைத்த தர்மத்தாலும் ஒருக்காலும் காணமுடியாததுடன் அடிமைக் கற்பைத்தான் காணலாம். அன்றியும் இம்மாதிரியான கொடுமையை விட வெறுக்கத்தக்க காரியம் உலகத்தில் மனித சமூகத்தில் வேறு ஒன்று இருப்பதாக நான் சொல்ல முடியாது.

(குடி அரசு - கட்டுரை - 08.01.1928)