periyar 241தென்னாட்டில் மாத்திரமல்லாமல் இந்திய நாடு முழுவதிலுமே இது சமயம் சுயமரியாதை உணர்ச்சி பெருகி வருகின்றதைப் பார்க்க ஒரு சிறு கூட்டத்தாரான பார்ப்பனர்களைத் தவிர மற்ற எல்லோருக்கும் ஆனந்தத்தை விளைவிக்கும் என்றே எண்ணுகிறோம். கொஞ்ச நாளைக்கு முன்பு வடதேசத்தில் உள்ள படகு ஓட்டும் கூட்டத்தாரான செம்படவர்கள் ஒன்று சேர்ந்து, தங்களைத் தீண்டுவதில்லை என்கின்ற வகுப்பாருக்கு படகு ஓட்டுவதில்லை என்று கட்டுப்பாடு செய்து கொண்டது யாவருக்கும் ஞாபகமிருக்கலாம். மறுபடியும் திருவாங்கூர் ராஜ்ஜியத்தில் சத்தியாக்கிரஹம் ஆரம்பித்ததும், அதற்கு ஸ்ரீமான் காந்தி மத்தியஸ்தராயிருந்து அரசாங்கத்தார் சீக்கிரம் அனுகூலம் செய்வார்கள் என்று ஒப்புக் கொண்டு இருப்பதும், புராணம், சாஸ்திரம் முதலிய குப்பைகளை எரிப்பதுடன் மதாச்சாரியார்கள் என்பவர்களையும் பஹிஷ்கரிக்க வேண்டுமென்று பம்பாய் மாணவர்கள் ஒன்றுகூடி தீர்மானித்ததும், சென்னையிலும் அதுபோலவே பார்ப்பனரல்லாத வாலிப மகாநாட்டில், மனிதனின் சுயமரியாதைக்கு விரோதமான மனுதர்ம சாஸ்திரம், புராணம் இவைகளை சர்க்காரார் பறிமுதல் செய்ய வேண்டுமென்று தீர்மானம் செய்ததும், தாழ்ந்த ஜாதி, தீண்டாத ஜாதி, சூத்திரன் ஆகிய வார்த்தைகளை உபயோகித்தால் அவர்களை கிரிமினல் சட்டப்படி தண்டிக்க சட்டம் ஏற்படுத்த வேண்டுமென்று சொன்னதும், ஆதிதிராவிடர்கள் என்கிற கூட்டத்தார் மகாநாட்டிலும் வர்ணாசிரம தர்மத்தை போதிக்கும் ஆதாரங்களையெல்லாம் பறிமுதல் செய்ய வேண்டுமென்று பேசியதும் தீர்மானித்ததும் மற்றும் பார்ப்பனரல்லாத வாலிபர் மகாநாட்டிலும் கும்பகோணம் நாடார் சமூக மகாநாட்டிலும் சுயமரியாதை சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவளித்ததும், பம்பாயிலுள்ள பல மக்களும் கோயிலுக்குள் போக சத்தியாக்கிரகம் ஆரம்பித்திருப்பதும் மற்றும் அங்குள்ள தமிழ் மக்கள் பம்பாயிலுள்ள சென்னைப் பார்ப்பனர்கள் ஓட்டல்களில் உள்ள வித்தியாசத்தை ஒழிக்க, ஜாதி சம்ஹார சக்கிர சங்கத்தார் சத்தியாக்கிரகம் செய்ய முன்வந்திருப்பதும், மற்றும் பம்பாயிலுள்ள பனஸ்வதி என்கின்ற ஆலயத்தில் தரிசனம் செய்ய ஆவலுள்ள யாரையும் உள்ளே விடாததற்காக அக்கோவிலையே பகிஷ்கரிக்க வேண்டுமென்று முடிவு செய்ததும், மகத் என்கின்ற இடத்தில் உள்ள பொது குளத்தில் ஒரு கூட்டத்தாரை ஸ்நானம் செய்ய வொட்டாமல் தடுப்பதை ஒழிக்க டிசம்பர் மாதம் 25 முதல் சத்தியாக்கிரகம் செய்யப் போவதாய் ஏற்பாடு செய்து 500 ரூ. வசூலாயிருப்பதாயும், பல தொண்டர்களும் சேர்ந்திருப்பதாகவும் தினப்படி பத்திரிகைகளில் காணப்படுகின்றன. இது மாத்திரமல்லாமல் சமூகங்களிலுள்ள சில கொடுமைகளையும் விலக்குவதற்காக பெண்களைத் தயாரிப்பதான பொட்டுக்கட்டும் வழக்கத்தை ஒழிக்க செங்குந்த சங்கங்களும், சட்டசபை மசோதாக்களும் பறந்து கொண்டுமிருக்கின்றன. மது விலக்குக்கும் எங்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. ஆகவே, நாட்டின் சுயமரியாதைக்கும் ஒழுக்கத்திற்குமான வேலைகள் தீவிரமாய் நடைபெறுவதுடன் இன்னமும் ஒவ்வொருவருடைய கவனமும் உணர்ச்சியும் இதிலேயே செல்லும் குறிகளும் காணப்படுகின்றன.

இப்படி உலகம் முன்னேறிக் கொண்டிருக்கும் நாளையில் நம் நாட்டுப் பார்ப்பனர்களின் யோக்கியதை எப்படி இருக்கின்றதென்று பார்ப்போமானால், இவைகள் ஒவ்வொன்றுக்கும் முட்டுக்கட்டையாய் இருந்துகொண்டு மதம் போச்சு, கடவுள் போச்சு, கோவில் போச்சு, குளம் போச்சு, நாஸ்திகமாச்சுது என்பதாக ஓலமிட்டுக் கொண்டு மக்களை ஏமாற்றிப் பிழைக்கப் பார்க்கின்றார்கள். மக்களின் சுயமரியாதைக்கும் ஒழுக்கத்திற்கும் ஏற்படுத்துகிற இயக்கங்களை வைதுகொண்டு, அதை அழிப்பதற்கும் முயற்சி செய்து கொண்டு, முட்டாள்களையும், அயோக்கியர்களையும், வயிற்றுச் சோற்றுக் கூலிகளையும் பொறுக்கி எடுத்துத் தங்களுடன் சேர்த்துக்கொண்டு, அவர்களுக்குக் காசு, பணம், பட்டம், பதவி மற்றும் என்னென்னவோ முதலியவைகளை உதவி, இவற்றின் மீது ஏவிவிட்டு நாட்டில் கலகம் விளைவிப்பதும், மக்களுடைய கவனத்தை தப்பு வழியில் இழுத்து விடுவதுமான கொடுமைகள் ஒரு பக்கம் செய்து கொண்டு, மற்றொரு பக்கம் காங்கிரஸ் என்றும், சுயராஜ்யம் என்றும் பித்தலாட்டப் பெயர்களை வைத்துக் கொண்டு திருட்டுத்தனமாய் சர்க்காருக்கு உள் ஆளாய் இருந்து உத்தியோகங்கள் பெற்று, மாதம் 1000, 2000, 5000 சம்பளம் பெறுவதில் கவனம் செலுத்திக்கொண்டு ஈன வாழ்வு வாழ்வதையே பொதுநல சேவையாய் காட்டிக் கொண்டுமிருக்கிறார்கள். அத்தோடு அவர்கள் இழிதொழில் நிற்கின்றதா என்று பார்த்தால் இல்லவே இல்லை.

இவ்வளவு அக்கிரமங்களையும் செய்துகொண்டு இருப்பதல்லாமல் இதை யாராவது வெளியில் எடுத்துச் சொன்னால், அவர்களை வகுப்பு துவேஷக்காரர்கள் என்றும், அசுரனென்றும், ராக்கதனென்றும் சொல்லி விஷமப் பிரசாரம் செய்வதுமாயிருக்கின்றார்கள். இந்த விஷயங்களை உணருவதற்கு நமது நாட்டு மக்களுக்கு புத்தி இல்லாமல் இனியும் அப்பார்ப்பனர்களை நத்திக்கொண்டு பிழைக்கவே ஆசைப்படுகின்றார்கள். இந்த மக்களைப் பார்க்கும்போது ஒரு வேசி வீட்டில் உள்ள வாலிபன் ஒருவன் வேசியான தன் தாயாருக்கோ தமக்கைக்கோ ஆட்களைக் கூட்டிக் கொண்டு போவதையும், தூதுக் கடிதங்கள் கொண்டு போய்க் கொடுத்துப் பதில் வாங்கி வருவதையும் பார்ப்பது நமக்கு ஆச்சரியமாய்த் தோன்றவில்லை.

ஏனெனில் ஒரு பெரும் சமுகத்திற்கே இவ்வளவு பெரிய இழிவு செய்து கொண்டிருக்கும் பார்ப்பனனிடம் கூடிக்கொண்டு அவ்விழிவுகள் தொலைய ஏற்படுத்தப்படும் இயக்கங்களுக்கு விரோதமாய் இருக்க மனம் சம்மதித்த ஒருவனுக்கு மேற்சொன்ன தூதுக் கடிதம் பெற்று போய்வருவது கஷ்டமான காரியமாயிருக்குமென்று நமக்குத் தோன்றவில்லை.

நிற்க, நமது ஒழுக்க முன்னேற்றத்திற்கு பார்ப்பன முட்டுக்கட்டை எவ்வளவு தூரம் துணிவு பெற்று இருக்கின்றது என்பதைக் காட்ட ஒரு சிறு உதாரணத்தைச் சொல்லுகிறோம். அதாவது ஸ்ரீமதி முத்துலக்ஷிமி அம்மாள் விபசாரத்திற்கு பெண்களை விடும் - கோவில் பேரால் பொட்டுக்கட்டும் - வழக்கத்தை ஒழிக்கக் கொண்டுவந்த மசோதாவுக்கு எதிர்ப் பிரசாரம் செய்யப் புறப்பட்ட சுயராஜ்யக் கட்சியும், அதன் உயிர் நாடியுமான ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள் இதைப் பற்றி பேசும்போது என்ன சொல்லுகிறார் என்றால் “பொட்டுக்கட்டுதல் என்பது மத ஆட்சாரமும் குல தருமமுமாயிருக்கின்றது என்று சொல்லப்படுகிறது. கோவிலில் நாட்டியம் முதலிய பணிகள் செய்வதற்கு தேவதாசிகள் ஏற்பட்டிருக்கிறார்கள், எனவே இது மத சம்மந்தமான விஷமாய் இருக்கின்றது. இம்மாதிரி மத சம்பந்தமான விஷயங்களில் பிரவேசித்து இன்று பொட்டுக்கட்டுவதை ஒழிக்க வேண்டுமென்று சொல்ல முன் வருவோமானால், மற்றொரு புறம் ஈ.வெ.ராமசாமி நாயக்கரும் வரதராஜுலு நாயுடுவும் கோவிலுக்குள் குருக்கள் ஒழிக்கப்பட வேண்டுமென்று சொல்லுகின்றார்கள். ஆதலால் இம்மாதிரி விஷயங்களில் நாம் தலையிட்டுக் கொள்ளக்கூடாது” என்று பேசினாராம். இதிலிருந்து பார்ப்பனர்கள் நமது நாட்டு ஒழுக்கத்திற்கும் சுயமரியாதைக்கும் எவ்வளவு தூரம் எதிரிகளாயிருக்கின்றார்கள் என்பது விளங்காமல் போகாது. விபசாரம் கூடாது என்றால் அதை ஒழிப்பது மதத்துக்கு விரோதம் என்று சொல்லுவார்களானால், அம்மாதிரி மதத்திற்கு நமது நாட்டில் என்ன வேலை என்று கேட்கின்றோம். அவ்விபசார ஸ்திரீகளை வேண்டி இருக்கின்ற கோவிலும் சாமிகளும் நமது நாட்டில் எப்படி வைத்துக் கொண்டிருக்கத் தக்கனவாகும்?

பார்ப்பனப் புரட்டுப்படி நமது மதத்திற்கும் சாமிகளுக்கும் வேண்டாத இழிவான காரியங்கள் எது நமது நாட்டில் இருக்கின்றது? தினம் ஆயிரக்கணக்கான ஆடுகளும், மாடுகளும், எருமைக் கிடாக்களும், கோழிகளும் பன்றிகளும் வெட்டப்படுவது இந்து மதக் கடவுள்களின் பேரினாலல்லவா என்று கேட்கின்றோம். தினம் ஆயிரக்கணக்கான கல்லுக்குடங்களும் சாராயப் புட்டிகளும் கஞ்சா அபின் உருண்டைகளும் படைப்பது இந்துமதக் கடவுள்கள் பேராலா அல்லவா என்று கேட்கின்றோம்.

சிவநேயச் செல்வர்கள் ஒரு புறம் ஜீவகாருண்ணியப் பிரசாரம் செய்து வருவதும் சக்தி (காளி) நேயச் செல்வர்கள் ஒரு புறம் கள்ளும், மாம்சமும் வைத்துப் படைப்பதும் இந்து மதக் கடவுள்கள் பேராலல்லவா என்று கேட்கின்றோம்.

கோவில்களுக்குள் சாமிக்கு நாட்டியமாட என்பதாக அலங்கரித்துக் கொண்டு வந்து, சாமி கும்பிட வந்த பக்தனுக்கு பாதி கொங்கையைக் காட்டி கண்சிமிட்டி ஜாடை செய்து வீட்டிற்கு கூட்டிப்போய் அவனுக்கு மேக நோயைக் கொடுத்து மடியிலிருக்கும் பணத்தைப் பிடிங்கிக் கொண்டு வெளியில் தள்ளுவது இந்து மத சாமியின் பேராலா அல்லவா என்று கேட்கின்றோம்.

மக்களுடைய வீடு வாசல்களில் நடக்கும் கல்யாணங்களிலேயே நாட்டியம் கூடாது, அது ஒழுக்கயீனம் ஆவதுடன் மக்களை தப்பு வழியில் நடக்கச் செய்கின்றது என்று நாட்டில் பிரசாரம் நடந்து கொண்டிருக்கும் போது, கோவிலில் சாமிக்கு நாட்டியம் வேண்டும். அது மத சம்பிரதாயம் என்று சொல்லுவதானால் அதில் எவ்வளவு போக்கிரித்தனம் நிறைந்திருக்க வேண்டும் என்பதை யோசித்தால் விளங்காமல் போகாது. மதத்திற்கும் சாமிக்கும் பெண்கள் நாட்டியமும், பெண்கள் பணிவிடையும் வேண்டியது அவசியமானால், அந்தச் சாமியைக் கும்பிடும் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டிலுள்ள பரிசுத்தமான பெண்களை விட்டு ஆடவும், பாடவும், பணிவிடைகள் செய்யவும் ஏன் ஏற்பாடு செய்யக்கூடாது என்று கேட்கிறோம்.

கடவுள், பல புருஷர்களைக் கணவனாய்க் கொண்டே பிழைக்க வேண்டிய ஸ்திரீகளைவிட, ஒரு புருஷனையே கணவனாய்க் கொண்டு பிழைக்க வேண்டிய ஸ்திரீயின் ஆட்ட பாட்ட பணிவிடைகளை ஏற்க மாட்டாரா என்று கேட்கின்றோம்.

எந்த வழியில் பார்த்தாலும் நமது நாட்டுக்கு ஒழுக்கமும், சுயமரியாதையும் ஏதாவது ஒரு காலத்திலாவது ஏற்பட வேண்டுமானால் பார்ப்பனர்கள் வயிற்றுப் பிழைப்புக்காகவே அவர்களால் சிருஷ்டித்துக் கொண்ட கூட்டுக் கொள்ளைத் தந்திரமாகிய இந்து மதம் என்னும் மாயத்தை
ஒழித்தேதான் தீர வேண்டும் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் காட்ட முடியாது.

(குடி அரசு - கட்டுரை - 06.11.1927)