புத்தர் வணக்கம்.

பவுத்தர்கள் தங்கள் வணக்கத்தில் கூறுகிற, கூறி வணங்குகிற விஷயங்கள் மூன்று. அவை

1. புத்தம் சரணம் கச்சாமி

2. தர்மம் சரணம் கச்சாமி

3. சங்கம் சரணம் கச்சாமி

என்பனவாகும். இவற்றை முதலிலும், கடைசியிலும் சொல்லித்தான் அவர்களது சமய காரியங்களைத் துவக்கவும் முடிக்கவும் செய்வார்கள். இவ்வாக்கியங்களின் தத்துவம் என்னவென்றால் புத்தம் (தலைவன்), தர்மம் (கொள்கை), சங்கம் (ஸ்தாபனம்) ஆகிய மூன்றுக்கும் வணக்கம் செலுத்துகிறேன் என்பதாகும்.

இது பவுத்தர்களுக்கு மாத்திரமல்லாமல் மற்றும் உலகிலுள்ள யோக்கியமான எந்த ஸ்தாபனத்திலுமிருக்கும் யாருக்குமே உண்மையான இன்றியமையாத கடமையாகும். எந்த ஒரு ஸ்தாபனத்திலும் ஈடுபட்டிருக்கிற ஒருவன் அதன் தலைவரைப் பின்பற்றி நல்லவண்ணம் சிந்தித்துத் தன்னை ஆட்படுத்திக் கொள்ள வேண்டும். பிறகு அந்தத் தலைவனை, அந்த ஸ்தாபனத்திலிருந்து விலகுகிறவரை தனக்குக் குருவாக, ஆசானாகக் கருதவேண்டும்.

தலைவனைப் பெருமைப்படுத்துவதன் மூலம் ஸ்தாபன இலட்சியத்திற்கும், ஸ்தாபனத்திற்கும் தான் உண்மையான தொண்டு செய்தவனாகிறான்.

தலைவனிடம் மரியாதை, அன்பு, கீழ்ப்படியும் தன்மை இல்லாமல் ஒரு ஸ்தாபனத்தில் ஈடுபட்டிருப்பதாகக் கூறுவது ஈடுபட்டவனின் வயிற்றுப் பிழைப்பிற்கும், வாழ்விற்கும், சுயநலத்திற்கும் தெரிந்தெடுக்கப்பட்ட வியாபார, தொழில்முறை என்பதாகத்தான் பொருள்படும், அதனால்தான், புத்த சரணம் என்று சொல்லிக் காரியம் துவக்குவதாகும்.

அதுபோன்றே அடுத்த வணக்கமாகிய தர்மம் (புத்த தர்மம்) சரணம் கச்சாமி என்பதுமாகும். அதாவது ஒருவன் தான் ஈடுபட்டுள்ள ஸ்தாபனத்தில் இலட்சியங்களுக்கு நிபந்தனையற்ற அடிமையாகப் பின்பற்றுபவனாக இருக்க வேண்டும். கொள்கைகளில் ஒரு சிறிது தனக்கு ஒத்துவரவில்லையானாலும், அவன் யோக்கியனாக இருந்தால் உடனே ஸ்தாபனத்தை விட்டு விலகிவிட வேண்டும். விலகிவிடச் சம்மதிக்கிறேன் என்று சொல்வது போன்ற பிராண மொழியேயாகும், இது.

மூன்றாவதான சங்கம் சரணம் கச்சாமி என்பது ஒரு ஸ்தாபனத்தின் தலைவருக்கும், இலட்சியங்களுக்கும் எவ்வளவு ஆட்படத்தக்கதோ அதேபோன்று சங்கத்திற்கும் (ஸ்தாபனத்திற்கும்) அடிமையாய் இருந்து, சங்கத்தைப் பாதுகாக்க வேண்டியதென்பதாகும். ஸ்தாபனத்திற்கு அடிமையாய் இல்லாமலும் பக்தி விஸ்வாசம் இல்லாமலும் ஸ்தாபனத்திற்கு அங்கத்தினனாக இருப்பது என்பது அந்த ஸ்தாபனத்திற்குச் செய்யும் மாபெரும் துரோகமேயாகும்.

இம்மூன்று தத்துவங்களையும் முக்கியமானவையாகக் காட்டுவதற்காகவே பவுத்தக் கொள்கைகளை முதன்மையானவையாகவும், முக்கியமானவையாகவும் ஆக்கி, பக்தி விஸ்வாச வணக்கத்தோடு ஏற்பாடு செய்து வந்த எல்லாப் பவுத்தர்களாலும் பின்பற்றப்பட்டு வருகிறது. எனவே,

புத்தம் சரணம் கச்சாமி,

தர்மம் சரணம் கச்சாமி,

சங்கம் சரணம் கச்சாமி,

என்ற வணக்கங்களின் தத்துவம் இதுதான் என்பது எனது கருத்தாகும்.

யார் புத்தன்?

பெரியோர்களே! தோழர்களே! தாய்மார்களே! சுவாமிஜீ அவர்களே! மூன்று நாட்களாக இவ்விழாவைச் சிறப்போடு நடத்தி வருகிறீர்கள். மூன்றாவது நாளான இன்று நான் கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்துள்ளது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். பொதுவாகப் புத்தர் விழாவை ஏன் கொண்டாடுகிறோம் என்பதை ஆராய்ச்சி செய்யவே இங்குக் கூடியுள்ளோம். இங்கு 2, 3 அறிஞர்கள் பல விஷயங்களை எடுத்துச் சொன்னார்கள்.

புத்தர் விழா என்கிறபோது ஏதோ தேங்காய், பழம் வைத்து கும்பிடுவது என்பதல்ல; புத்தர் விழாக் கொண்டாடுகிறோம் என்றால், அதன் மூலம் ஏதாவது ஒரு படிப்பினைப் பெறவேண்டும்.

நான் முன்னுரையிலேயே சொன்னேன் நாஸ்திகன் என்பதாக, நாஸ்திகன் என்றால் வேத சாஸ்திர புராண இதிகாசங்களுக்கு மாறான கருத்துள்ளவன். இப்போது இருந்துவரும் மதத்திற்கு மாறான கருத்துடையவன். இப்படி இருந்தால்தான் புத்தரைப் பற்றிச் சரியாகப் பேசமுடியும். அப்படியில்லாமலே பேசலாம் என்றால் அதற்கு மிகவும் சாமர்த்தியம் வேண்டும். அதாவது மக்களை நன்கு ஏமாற்றப் பழகியிருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு சாரார் புத்தரை ஏதோ ரிஷிகள், மகான்களைப் போல ஒருவராகவே பேசுகிறார்கள்.

புத்தர் மகானோ, ரிஷியோ அல்லர்; இந்தத் தன்மையை எதிர்த்தவர். அந்தக் காரணத்தினால்தான் நாம் இன்று புத்தரைக் கொண்டாடும்படியான நிலை இருக்கிறது. புத்தர் எப்படி மகானோ, ரிஷியோ இல்லையோ அதேபோல் பவுத்தம் என்பதும் ஒரு மதமல்ல. பலபேர் பவுத்தம் என்பதைத் தவறாக ஒரு மதம் என்றே நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு மதம் என்றால் கண்டிப்பாக அதற்கு ஒரு கடவுள் வேண்டும்; மோட்சம், நரகம் வேண்டும்; ஆத்மா, பாவ புண்ணியம், அவற்றிற்கு ஏற்றாற்போல் தண்டனை இவையெல்லாம் வேண்டும். இன்னும் சிறந்த மதம் என்பதற்கு ஒரு கடவுள் போதாது. பல கடவுள்கள் வேண்டும். அவற்றிற்குப் பெண்டாட்டி, பிள்ளைகுட்டி, வைப்பாட்டி இவையெல்லாம் வேண்டும். இப்படியெல்லாம் இருந்தால்தான் அது மதமாகும்.

ஆனால் புத்தர் முதலில் கடவுளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்; மனிதனைப் பற்றிக் கவலைப்படு என்று சொல்லிவிட்டார். மோட்சம், நரகம் இல்லை; ஒழுக்கம்தான் வேண்டும் என்று சொல்லிவிட்டார். இன்னும் அறிவுதான் முக்கியம் என்றார் ரிஷி சொன்னார், மகான் சொன்னார் என்று நம்பாதே; யார் எதைச் சொன்னாலும் உன் அறிவைக் கொண்டு தர்க்கம் செய்து மிஞ்சுவதை எடுத்துக்கொள் என்று சொல்லிவிட்டார்.

ஆகவே பவுத்தம் என்பது மதமல்ல; அதுபோல உள்ள காரணத்தால்தான் இன்று நாம் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். அவர் இதையெல்லாம் சொன்னதால்தான் அவரை எதிர்த்து அழிக்க முனைந்தார்கள். அவர் வாழ்ந்த காலம் இன்றைக்கு 2500 ஆண்டுகட்கு முற்பட்ட காட்டுமிராண்டித் தனமான காலமாகும்.

அக்காலத்திலேயே பலத்த எதிர்ப்பு இருந்திருக்கிறது. இதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தவர்களின் பிரச்சாரமே இதற்குச் சாட்சியாகும். அவருக்குப் பின்னால் அவரையும் அவரது கொள்கைகளையும் ஒழிக்க எழுதப்பட்ட நூல்கள் ஆதாரமாகும். ராமாயணத்தில் புத்தரைக் கேவலமாக எழுதிக் கண்டித்துள்ளார்கள். புத்தருக்குப் பின்னால்தான் இராமாயணத்தை இவ்வளவு பெரியதாக எழுதியிருக்கிறார்கள். புத்தருக்கு முன்னால் இராமாயணம் உண்டு என்றால் அது சிறியதாகவே இருந்திருக்கும். நாலாயிரப் பிரபந்தம், தேவாரம் முதலிய நூல்களிலெல்லாம் ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்பவர்கள் புத்தரையும், பவுத்தத்தையும் கேவலமாகக் கண்டித்துள்ளார்கள்.

மக்கள் அசல் காட்டுமிராண்டிகளாகவே வாழ்ந்தார்கள். அந்தக் காட்டுமிராண்டி காலத்திலேயே அவர் அந்தக்கால நிலைக்கு ஏற்றவழிகாட்டினார் என்பதனாலேயே அவரை மகான் என்கிறோம். அதுபோலவேதான் ஏசுநாதர். இவர்களையெல்லாம் பெரிதாகப் பேசக் காரணம் மக்களிடம் மூடநம்பிக்கையும், அறியாமையும், காட்டுமிராண்டித்தன்மையும் நிறைந்திருந்த காலத்தில் சொன்னார்கள் என்பதனால்தான்.

மத சாஸ்திரக்காரர்கள் வண்டி வண்டியாக அளப்பார்கள். ஆனால் சரித்திரத்தைப் பற்றிப் பேசினால், எவனோ வெள்ளைக்காரன் சொன்னதை நம்புகிறாயா? என்பார்கள். இவர்களெல்லாம் உள்ளபடியே மனச்சாட்சியை மறைத்துப் பேசுபவர்கள். மக்களும் வாதாடத் தெரிந்த அளவு படித்து விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுவதில்லை. எதையெடுத்தாலும் சண்டப் பிரசண்டமாகப் பேச வேண்டும் என்பதைத் தவிர சரித்திரம், உண்மை, தத்துவம் படித்து விஷயங்களை உணர்ந்து பேச வேண்டும் என்று நினைப்பதேயில்லை. மதம் என்றால் மடமைதான். வெள்ளைக்காரன் சொன்ன சரித்திரத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.

வடநாட்டில் பாரத இதிகாச சமீதி என்று ஒரு ஸ்தாபனம் உள்ளது. பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் அதில் முக்கியஸ்தர்களாக உள்ளார்கள். கவர்னர் முன்ஷி ஒரு முக்கியஸ்தர். உபஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் ஒரு முக்கியஸ்தர். பிர்லாதான் செலவுக்குப் பணம் கொடுக்கிறவர். மாஜி வெங்கட் ராம சாஸ்திரி இன்னும் பல ஆராய்ச்சிக்காரர்கள் உள்ள அந்த ஸ்தாபனத்தில் வேதகாலம் என்ற ஒரு புத்தகம் எழுதியுள்ளார்கள். அதில் ஆராய்ச்சி செய்து முன்ஷி எழுதியிருக்கிறார், அதில் பல விஷயங்களை எழுதுகிறார்கள். அதற்கும் அர்த்தம் மாத்திரம் வேறு சொன்னாலும் பல உண்மைகள் எழுதப்பட்டுள்ளன.

அதில் அந்தக் காலம் காட்டுமிராண்டித்தனமான காலம்! புராண இதிகாசங்கள் என்பவை சரித்திரங்கள் அல்ல; நடந்த விஷயங்களைப் பற்றியவையுமல்ல. அவை ஒரு கற்பனைக் கதை. வியாசன் என்றாலே வியாசம், கதை, கற்பனை எழுதுகிறவன் என்று அர்த்தம். இவை ஒரு கருத்தைப் பிரச்சாரம் செய்யவே ஏற்பட்டவை என்று எழுதுகிறார். வேதிக் ஏஜ் என்ற புத்தகத்தில் முன்னுரையாக எழுதும்போது புராணம் புகுந்து மக்கள் மனதில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விட்டது. அதுதான் எங்களுக்குக் கஷ்டமாகி விட்டது என்று எழுதப்பட்டுள்ளது. 100க்கு 75 புராணங்கள் பின்னால் எழுதப்பட்டவை.

புத்தர் 2500 ஆண்டுகளுக்கு முன்னால் வந்தவர். புராண காலம் என்பது 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலமாகும். (அதாவது புத்தர் காலத்திற்குப் பிற்பட்ட காலமாகும்) என்று ஆராய்ச்சியாளர்கள் எழுதியுள்ளார்கள். புத்தர் ஏற்பட்டு அறிவும் ஒழுக்கமும் ஏற்பட்டதை ஒழிக்கவே அவதாரக் கதைகள் - அவற்றுள் முக்கியமாகக் கிருஷ்ண அவதாரம், அதிலும் சிறப்பாகக் கிருஷ்ணனின் திருவிளையாடல்கள் சிருஷ்டிக்கப்பட்டன. அதாவது, மூட நம்பிக்கைக்கு ஆக கிருஷ்ணனும் ஒழுக்கக் கேடு ஏற்பட அவனது திருவிளையாடல்கள், லீலைகள் ஆகியவையும் கற்பிக்கப்பட்டிருக்கின்றன. இவ்வளவும் செய்துவிட்டு அவை கடவுள் நடத்தை - வாக்கு என்பதற்கு ஆக கீதையும் வெகு நாளைக்குப்பின் எழுதிச் சேர்க்கப்பட்டது.

சாதாரண அறிவுடன் பார்த்தாலே தெரியும்; ஒரு கடவுளை இவ்வளவு கேவலமாகச் சிருஷ்டி செய்து பாட்டில், பஜனையில், நடனத்தில், கூத்தில் மற்றும் சகலவிதமான முறையிலும், அதையே பிரசாரம் செய்ய வேண்டிய அவசியமென்ன? சினிமாவில் கோபிகைகளிடம் மாற்றான் கைதட்டுபவன் தன் வீட்டில் கிருஷ்ணன் வந்து லீலை நடத்த ஒத்துக் கொள்வானா? தன் அறிவுக்கும், அனுபவத்திற்கும் ஒத்துவராத நிகழ்ச்சிகளைக்கூட வெறுத்து ஒதுக்கவில்லையென்றால் என்ன அர்த்தம்? அறிவைக் கொண்டு சிந்திக்க வேண்டும்! ஒரு சாதாரண கீழ்த்தர மனிதன் செய்ய மனம் இடம் தராத ஆபாசங்களையெல்லாம் கடவுள் பெயரால் நடத்தப்படுவதை வெறுத்து ஒதுக்காமல் அதற்கு ஆதரவளிப்பதும் அதைப் பண்டிகையாய்க் கொண்டாடுவதும் என்ன நியாயம்?

கீதை எழுதியதும், இராமாயணம் பாரதம் எழுதியதும் புத்தருக்குப் பின்னால் தான். புத்தர் அறிவும், ஒழுக்கமும் வளர வேண்டுமென்றார். அவை வளர்ந்து விட்டால், இவர்கள் கதி என்னாவது? அதற்காகத்தான் புத்தர் தோன்றியதால் எவை எவை மழுங்கிப் போய்விட்டனவோ அவற்றை மீண்டும் பலப்படுத்தவே இவற்றை எழுதினார்கள். முன்ஷி எழுதியிருக்கிறார். ராமனையும், கிருஷ்ணனையும் பற்றி; இவர்களால் ஆரியத்திற்கு அதிகமான பிரசாரம் ஏற்பட்டதாலேயே அவர்களை அவதாரமாக்கிவிட்டார்கள் என்று. இது பாரத இதிகாச சமிதிக்காரர்களே சொல்வது. இதையெல்லாம் யாரும் சிந்திப்பதில்லை. எடுத்துப் போட்டு உட்கார்ந்து பேச ஆரம்பித்தால் இந்தக் கற்பனைகள் வடிகட்டின மடமை என்பது தெரியும்.

இன்று சாதியை ஒருவரும் ஆதரிப்பதில்லை. சாதி வேண்டும் என்று சொல்ல யாருக்கும் தைரியமில்லை. (ஆச்சாரியார் ஒருவர்தாம் சாதி காப்பாற்றப்பட வேண்டும் என்கிறார்) அவரையும் கிட்ட நெருங்கிக் கேட்டால், நான் வேறு அர்த்தத்தில் சொன்னேன் என்று சொன்னாலும் சொல்லிவிடுவார்.

எதற்குச் சாதி இருக்க வேண்டும்? எப்படிச் சாதி இருக்கிறது? வேத சாஸ்திர புராணங்களை உபயோகப்படுத்தாமல் சாதி எங்கிருந்து வந்தது? அதையடுத்துப் பித்தலாட்டம் என்று சொல்லாமல் சாதி ஒழிப்புக்கு வேறு வழி என்ன இருக்கிறது? நான்காவது அய்ந்தாவது சாதியாக்கிப் பார்ப்பனரல்லாத மக்களை மடமையில் அழுத்திவைக்கவே வேத புராண மதம் வழி செய்கிறது. இதைக் கொஞ்சம் எடுத்துச் சொல்ல, திருத்த முயற்சித்தாலும் நாஸ்திகன் மதத் துவேஷி, வகுப்பு துவேஷி என்று சொல்லித் தலையில் கல்லைத் தூக்கி வைத்து விட்டால் என்ன அர்த்தம்?

இங்கு புத்தரைப் பற்றிப் பேச வேண்டிய அவசியமென்ன? இதுவும் என்ன ஆழ்வார் நாயன்மார் திருநட்சத்திரமா? புத்தரை வைத்து அவருக்குத் தேங்காய், பழம் வைத்துப் பூசை செய்வதோடு சரி என்றால், அப்படிப்பட்ட புத்தர் என்ற வார்த்தை அகராதியிலேயே இல்லாமல் இருந்தால் நல்லது என்றுதான் சொல்வேன். புத்தர் நாள் வைதீகர்களுக்குப் பகை நாளாகும். அதைப் பத்திரிகைக்காரர்கள் சரியாய்ப் போடமாட்டார்கள்.

ஆனால், பிரபல பத்திரிகை ஒன்றில் இன்றைய நிகழ்ச்சிகள் என்று என்று 60 போட்டிருப்பான். அதில் 50, 58 அங்கு இராமாயணம், இங்கு விபீஷணன் சரணாகதி, அங்குப் பாரத உபன்யாசம், இங்கு அனுமார் விஸ்வரூபம் என்று போட்டிருப்பான்! அங்குப் போய்த்தான் இந்தப் பத்திரிகைக்காரனும் காத்திருந்து சொட்டுவிடாமல் எடுத்து வந்து 3, 4 காலம் போட்டுப் பிரச்சாரம் செய்வான். இவர்கள் மத்தியில் மனிதன் எப்படி உருப்படியாக முடியும்?

உலகத்தில் இந்த நாட்டை விட வேறு எங்கு நாட்டுக்குள் இத்தனை கடவுள்கள் உள்ளன? இங்கு உள்ளதைப் போன்ற கடவுள்களின் அயோக்கியத்தனம் வேறு எங்கு இருக்கிறது? அணுகுண்டு, ரேடியோ காலத்திலா நம் மக்கள் முழுக்காட்டுமிராண்டிகளாக வாழ்வது? கடவுள் இருக்கட்டும்; ஆனால் ஒழுக்கமில்லாத கடவுள் எதற்கு இருக்கவேண்டும்? புத்தரையும் கும்பிட்டுவிட்டு இதையெல்லாம் இப்படியே வைத்திருந்தால் என்ன நியாயம்? இதை ஒழித்துக்கொண்டே வந்தால், என்றாவது எல்லோரும் பவுத்தராகி விடுவார்கள்.

ஆ.... கடவுள் என்கிறார்களே என்ன கடவுள்? இந்த ஆரியர்களுக்கு வேதத்தில் கடவுள் உண்டா? ஒரு கடவுள் இருந்ததாகச் சொல்லட்டும் ஒத்துக்கொள்ளுகிறேன். வேதத்தில் கடவுள் இல்லை; நான் ஒன்றும் புளுகுபவனல்லன். அதில் எங்கே இருக்கிறது என்று எடுத்துக்காட்டட்டும்; ஒத்துக்கொள்ளுகிறேன். வேதத்தில் கடவுள் இல்லை. அதுவும் தமிழனை (திராவிடனை)ப் பொறுத்த வரையில் கடவுளே கிடையாது. இன்று இருப்பது ஏதாவது கடவுள் ஆகுமா?

கடவுள் உண்டு, கடவுள் இல்லை என்று சொல்வதற்குத் தமிழில் என்ன வார்த்தையிருக்கிறது? கடவுள் உண்டு என்பதற்குத் தமிழில் என்ன சொல்? கடவுள் இல்லை என்பதற்கு என்ன வார்த்தை? வடமொழியில் பிச்சை கேட்காமல் தமிழில் வார்த்தை என்ன இருக்கிறது என்று சொல்ல முடியுமா? எல்லாவற்றிற்கும் வார்த்தைக்குப் பஞ்சமில்லாத தமிழில் இதற்கு வார்த்தை இல்லாமலா இருக்கும்? தமிழில் அந்தப் பேச்சுக்கே இடமில்லை. இன்று தமிழன் கும்பிடும் எந்தக் கடவுளுக்குத்தான் தமிழ்ப்பெயர் இருக் கிறது? அல்லது தமிழனைப்போல் இருக்கிறது? வேதத்தில்தான் ஏது கடவுள்? இன்னதைக் கடவுள் என்று சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியுமா?

இங்கு இருப்பதில் முக்கியமான கடவுள் மூவர். பிரம்மா, விஷ்ணு, சிவன். இவர்கள் கடவுளர்களா? விஷ்ணு கடவுளா? வேதத்தில் உள்ளவர்கள் தேவர்கள். தேவர்கள் என்றால் மேலே இருப்பவர்கள். அவர்கள் சூரியன், சந்திரன், வருணன் இப்படி 7-8 உருப்படிகள். தேவர்களில் சில பேர்கள் பூதேவர்கள்! சில பேர்கள் வானதேவர்கள்! இவர்களைத் தவிர கடவுள் என்று எதைச் சொல்ல முடியும்? இப்படிப் பெரிய புளுகுகளைத் தூக்கிப் போட்டுவிட்டு என்னடா புளுகுகிறாய் என்றால் நாஸ்திகன் என்று தூற்றினால் என்ன நியாயம்?

வேதத்தில் கடவுள் என்பதாக ஒன்றையும் கடவுள் தன்மையோடு கற்பிக்கவேயில்லை. கடவுளாகக் கற்பிக்கப்பட்டிருப்பதெல்லாம் மனிதர்கள்தாம். மனிதர்களுக்குள்ள குணங்கள்தாம் அவர்களுக்கும்! திருடுதல், பெண்டாட்டிக் கட்டிக்கொள்ளுதல், கொலை, விபச்சாரம் இன்னும் மற்றமற்ற காரியங்கள் செய்தல் எல்லாம்! இன்னும் சாதாரண மனிதத்தன்மையைவிட ஒழுக்கக்கேடாகத் தேவர்கள் என்பவர்களைக் கற்பித்திருக்கிறார்கள்! சிவன், பிரம்மா, விஷ்ணு இந்த மூவரும் முக்கியமான தேவர்கள்கூட அல்லர். இந்த மூன்று பேர்களும் எந்த இடத்தில் ஒழுக்கத்தோடு இருந்திருக்கிறார்கள்?

கடவுளென்று கற்பித்தவனையே கேட்கிறேன். ஒழுக்கங்கெட்ட தன்மைக்கும் ஓர் அளவு வேண்டாமா? தாயைக் கட்டிக் கொண்டவன், தங்கையைக் கட்டிக் கொண்டவன், ஆணும் ஆணும் கூடிப் பிறந்தவன், நினைத்தபோது அவர்களே ஆண் பெண்ணாக மாறிக் கூடிப் பிறந்தவன். இப்படியா ஒவ்வொன்றும்? இன்னும் (இயற்கைக்கு விரோதமாக) மீனுக்குப் பிறந்தவன்; மிருகத்திற்குப் பிறந்தவன்; இப்படி ஏதேதோ சொல்லுகிறான். யாருக்கு இந்த இழிகுணங்களைக் கற்பிக்கிறோம் என்றுகூடச் சிந்திக்க வேண்டாமா? இதைச் சொல்லிப் பிழைக்கிறவனைப் பற்றிக்கூடச் சொல்லவில்லை. அரசாங்கத்திலும் பொதுநல வேஷம் போட்டுச் செல்வாக்குப் பெற்றவர்களே இதைப் பிரச்சாரம் செய்துகொண்டு புத்தர் விழாவிலும் வந்து பேசினால் என்ன அர்த்தம்?

நம்மில் பெரிய அறிவாளி என்பவர்களிடம்தாம் பெரிய அழுக்கு, பெரிய நாற்றம் இருக்கிறது. புத்தர் எதற்கு வேண்டும்? எந்தக் காரியத்தையும் அறிவைக்கொண்டு ஆராய்ந்து அனுபவத்திற்கு ஒத்துக்கொண்டு வந்தால்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொன்னார். அதற்குத்தான் புத்தர் வேண்டும். சிலபேர் அணுகுண்டு செய்து உலகத்தை அழிக்கிறார்கள் என்று விஞ்ஞானிகள் மீது கோபப்படுகிறார்கள். அவர்கள் இந்த நாட்டுக்கு வரக்கூடாதா? மனிதனைக் கொல்கிறான்; மனிதன் சாகட்டுமே என்ன நஷ்டம்! என்றைக்கு இருந்தாலும் சாகிறவன் 4 நாளைக்கு முன் சாகட்டும்; நட்டமில்லை. இங்கு உயிரோடு இருப்பவனை நடைபிணமாக இருக்க விடுகிறார்களே! அறிவையே கொல்கிறார்களே!

ஒரு மனிதன் தர்மவான் ஆக வேண்டுமானால் கோயில் கட்டினால்தான் அவன் தர்மவான்! ஒருவன் பக்தனாக இருக்கவேண்டுமென்றால் கல்லில் முட்டிக்கொண்டால்தான் பக்தன்! இதுபோன்ற அறியாமையைப் புகுத்தி மக்களைக் காட்டுமிராண்டித் தன்மையில் வைத்துவிட்டார்கள். இதை வெறுத்துக் கண்டித்து எழுத வேண்டாமா?

வியாசர் விருந்து என்ற புத்தகம் போட்டு இப்போது எதற்கு பரப்பவேண்டும்? அதில் என்ன உப்பா சப்பா? ஒரு லட்சம் காப்பி விற்றிருப்பார்கள்! நம் நாட்டில் இத்தனை மடையர்கள் இருக்கிறார்கள் என்று கணக்கெடுக்க, கேஜ் (அளவு கருவி) ஆகத்தானே அந்த விற்பனை பயன்பட்டது? மக்களுக்கு உண்மையான அறிவு வந்துவிட்டால் இராமாயணத்தையும் பாரதத்தையும் விட்டு வைப்பார்களா? என்ன இருக்கிறது, அவற்றில்? எடுத்ததுமே விபசாரம்! அடடா, அந்தப் பாரதத்தில் (வியாசர் விருந்தில்) ஒருவனாவது தகப்பனுக்குப் பிறந்தவன் இல்லையே! இன்னும் சொல்லப்போனால் மனிதனுக்குப் பிறந்தவனே கொஞ்சம்தான்! மீனுக்குப் பிறந்தவன் ஒருவன்! பாம்புக்குப் பிறந்தவன் ஒருவன்! குதிரைக்குப் பிறந்தவன் ஒருவன்! இப்படித்தான் பாரதப் புத்திரர்கள் அய்ந்து பேர்களும். அந்த அய்ந்து பேர்களுமே சொந்த அப்பனுக்குப் பிறக்கவில்லை. இராமாயணத்தில்தான் என்ன? ஒரு இடத்திலாவது ஒழுக்கம் என்பதில்லை. துரோகம், சூது, மடமைக்களஞ்சியம் அது!

உத்தமபுத்திரன் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஓர் ஆள் வேண்டும். அவன்தான் ராமன் என்கிறார்கள். ஓர் இடத்திலாவது ராமன் ஒழுக்கமாக இருக்கிறான் என்று காட்ட முடியுமா? என்ன உத்தமபுத்திரனுக்கு உதாரணம்! மக்களை வளர்ச்சிக்கு ஏற்றவகையில் அறிவைக்காட்டி மேலே தள்ளிவிட வேண்டிய சந்தர்ப்பத்தில் காட்டுமிராண்டித்தனத்திற்குக் காலைப் பிடித்து கீழே இழுத்துத் தள்ளினால் என்ன அர்த்தம்?

எதுவானாலும் அறிவைக்கொண்டு ஆராய்ந்து பயமில்லாமல் தர்க்கரீதியாக விவாதிக்க வேண்டும். அவன்தான் புத்தன். அதுதான் பவுத்தம்.

ஏதோ காட்டுமிராண்டிக்காலத்தில் அவர்கள் தகுதிக்கு, அறிவுக்கு ஏற்ற வகையில் ஏற்பாடு செய்தனவாக இருக்கலாம். அவை இப்போது நடப்புக்கு, காலத்திற்கு ஒவ்வாதவை, அறிவுத் துறையில் இன்று மக்களுக்குள்ள நிலை வேறு பக்கம் திரும்பிப் பார்க்கும்படி செய்துவிட்டது. சமுதாயத்தில் இப்போது உயர்ந்த சாதி என்றால் ஒரேயடியாக உயர்ந்தசாதி, கீழச்சாதி என்றால் ஒரேயடியாக கீழ்ச்சாதி உள்ளதேன்? சாதியில் மக்கள் கொடுமையும் துன்பமும் அடைகிறார்கள். காட்டில் பலவற்றை அடித்துத் தின்னும் சிங்கம் இருந்தால் அதை ஜீவ காருண்யத்தை முன்னிட்டுக் கொல்வதில்லையா?

சமுதாயத்தில் நலம் ஏற்பட வேண்டுமானால் சாதி ஒழிக்கப்பட வேண்டும். சாதியை ஒழிக்கக்கூடிய ஆட்சி வரவேண்டும். இன்றைய ஆட்சி சாதிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று சொல்லத் தைரியமுள்ள ஆட்சியே தவிர, சாதியை ஒழிக்கத் தைரியமுள்ள ஆட்சி அல்ல.

டாக்டர் ராதாகிருஷ்ணன் கூடப் பேசியிருக்கிறார்,

ராஜாக்களை ஒழித்துவிட்டோம், ஜமீன்தார்களை ஒழித்துவிட்டோம். இருப்பினும் சாதி ஒழிந்தால்தான் பயன் உண்டு. ஆதலால் சாதியை ஒழிக்க இரும்பு உள்ளம் படைத்த தைரியமான தலைவர் வேண்டும் என்று. எல்லாப் பத்திரிகைகளிலும் இந்தச் செய்தி வந்துள்ளது. அரசாங்கத்திற்குச் சாதியை ஒழிக்க வேண்டும் என்ற உணர்ச்சி இருக்கிறது. அது காரியத்திற்கு வரவேண்டும். சாதி ஒழியவேண்டுமென்றால் ராமனுக்கும் கிருஷ்ணனுக்கும் வேலையில்லை. புராணங்களும் இதிகாசங்களும் ஒழியவேண்டும். அப்போதுதான் சாதி இல்லாத சமுதாயம் ஆகமுடியும்.

கடவுள் இல்லாத சமுதாயம் உண்டாக வேண்டும் என்று இங்கு சொல்ல வரவில்லை; ஆனால் அறிவுள்ள சமுதாயம் உண்டாக வேண்டும் என்பதையே வற்புறுத்துகிறேன்.

(15.5.57ஆம் தேதி மாலை சென்னை, எழும்பூர் மகாபோதி சங்கத்தில் நடந்த 2501ஆம் ஆண்டுப் புத்தர் விழாவின்போது தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய தலைமைப் பேருரை. - நூல்:- "புத்தநெறி")

அனுப்பி உதவியவர்: தமிழ் ஓவியா