பீமராவ் ஆர்.அம்பேத்கர் ( ஆதாரம்: அம்பேத்கர் தனிப்பட்ட வகையில் வெளியிட்ட துண்டுப் பிரசுரம் –ஆ-ர்.)

எம்.ஏ., பிஎச்.டி., டி.எஸ்சி., பார்-அட்-லா,

கவர்னர் ஜெனரலின்

நிர்வாக சபை உறுப்பினர்

22, பிருத்விராஜ் சாலை

புதுடில்லி,

மே14, 1946

அன்பார்ந்த திரு.அலெக்ஸாண்டர் அவர்களே,

காங்கிரசுக்கும் முஸ்லீம் லீகுக்கும் இடையில் ஓர் உடன்பாடு ஏற்படுத்துவதற்கு நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தது குறித்து வருந்துகிறேன். உங்களுக்குப் பரிவும் நன்றியும் செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.

அதே சமயத்தில் உடன்பாடு ஏற்படுத்துவதற்காக தூதுக்குழு மேற்கொண்ட முயற்சியானது ஒரு முதிய பனியா தனது சொத்துக்கு வாரிசு இல்லாத நிலையில், ஒரு வாரிசைப் பெறுவதற்காக ஓர் இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட சம்பவத்தை எனக்கு நினைவூட்டுகிறது என்று என்னால் கூறாமலிருக்க முடியவில்லை.

ambedkar 460மணமகள் கருவுற்றாள். ஆனால் மணமகன் கடும் நோய்வாய்ப்பட்டான். ஆயினும், குழந்தையைப் பார்க்காமல் தான் மரணமடையப் போவதில்லை என்று உறுதி பூண்ட அவன் பிரசவமாகும் வரையில் காத்திருக்க விரும்பவில்லை. பிரசவமாவதற்கு நிறையக் காலமிருந்தது. மிகவும் பொறுமை இழந்த அவன் மருத்துவரை அழைத்து, மனைவியின் வயிற்றை அறுத்து, பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்று தனக்குக் காட்டும்படி கூறினான்.

அறுவை சிகிச்சையின் விளைவாகக் குழந்தை, தாய் இருவருமே மரணமடைந்தனர். அந்த பனியா செய்ததைப் போலவே தூதுக்குழுவும் செய்ய விரும்பியது என்று கூறினேன். உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம். ஆனால், கர்ப்பம் முதிர்ச்சியடைவதற்கு இயற்கையாகத் தேவைப்படும் காலத்திற்கு முன்பாகவே வலுக்கட்டாயமாகப் பிரசவத்தை ஏற்படுத்தும் பணியில் தூதுக்குழு இறங்கியது என்று என்னைப் போலவே பலர் நினைக்கிறார்கள்.

2. இந்துக்களும் முஸ்லீம்களும் இந்த நாட்டின் வருங்காலத்தைப் பற்றி முடிவு செய்வதற்கு இன்று மனரீதியில் தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள் என்று கூறுவது சரியே என்று எனக்குத் தோன்றுகிறது. இந்துக்களும் முஸ்லீம்களும் வெறும் கும்பல்கள். ஒரு கும்பல் கூட்டு முறையில் பகிர்ந்து கொள்ளும் ஓர் ஆவேசத்தைக் காட்டிலும் பொருளாயத ஆதாயத்தினால் அவ்வளவாகக் கவரப்படுவதில்லை என்பதை உங்களுடைய அனுபவத்தில் கண்டிருப்பீர்கள், ஏற்படவிருக்கும் அனுகூலங்களைப் பற்றி நிதானமாக மதிப்பீடு செய்து அதனடிப்படையில் செயல்படச் செய்வதைக் காட்டிலும் ஒரு மக்கள் திரளைக் கூட்டாகத் தியாகம் செய்யும்படி இணங்க வைப்பது எளிதாகும்.

ஒரு கூட்டம் லாப, நட்டம் பற்றிய உணர்வை இலகுவாக இழந்து விடுகிறது. அது உயர்வான அல்லது தாழ்ந்த, அன்பான அல்லது காட்டுமிராண்டித்தனமான, கருணையான அல்லது கொடூரமான நோக்கங்களால், உந்துதல்களால் நெகிழ்ந்து விடுகிறது. ஆனால் எப்போதும் விவேகத்துக்கு அப்பாற்பட்டதாகவே கீழான தாகவோ இருக்கிறது. அனைவரின் ஆவேச உணர்ச்சியில் ஒவ்வொருவரின் பகுத்தறிவும் இழக்கப்பட்டு விடுகிறது.

மரபுரிமைப் பண்பை ஏற்றுக் கொள்வதைக் காட்டிலும் தற்கொலை செய்து கொள்ளும்படி ஒரு கூட்டத்தை இணங்க வைப்பது எளிதானதாகும். நீங்கள் எவ்வாறு முன்செல்ல வேண்டும் என்று உங்களுக்கு ஆலோசனை கூற வேண்டியது என்னுடைய பொறுப்பல்ல. பங்கி பஸ்தியிலும் (பங்கி பஸ்தி – மகாத்மா காந்தி தங்கியிருந்த இடம்) 10, அவுரங்கஜிப் சாலையிலும் (10, அவுரங்கஜிப் சாலை – எம்.ஏ.ஜின்னா தங்கியிருந்த இடம் (மொ.ர்)) தூதுக்குழு கூடுதல் அறிவொளியையும், உயர்வான உத்வேகத்தையும் பெற்றுள்ளது.அத்தகைய அறிவொளியையும், உத்வேகத்தையும் மட்டுப்படுத்தும் வகையில் நான் எதையும் கூறமாட்டேன்.

ஆனால் அதேசமயத்தில், அவசரப்பட்டு செயல்பட்ட முதியவரைப் போன்ற ஒரு பரிதாபகரமான காட்சியை தூதுக்குழு வெளிப்படுத்தாமலிருக்க வேண்டுமெனில் (அயர்லாந்தின் சுயாட்சிக்கான தனது பிரச்சாரத்தில் கிளாட்ஸ்டன் ஈடுபட்ட முறையை வர்ணிப்பதற்கு சேம்பர்லேன் உபயோகப்படுத்திய சொற்றொடர்) ராஜதந்திரத்தில் ‘நிதானமடைவதற்கான காலகட்டம்’ என்று அழைக்கப்படுவதை அனுமதிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் நிலைமைக்குப் பரிகாரம் காண்பது அவர்களுக்கு இலகுவாக இருக்கும் என்று நிச்சயமாகக் கருதுகிறேன்.

3. தூதுக்குழு, பெரிய கட்சிகள், மற்றும் பெரிய கட்சிகளிடம் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் ஆகியோர் சம்பந்தப்பட்ட விஷயம் இது. தீண்டப்படாதவர்களின் பிரச்சினைக்கும் அரசியல் சட்டப்பூர்வமான பாதுகாப்புகள் வேண்டுமென்ற அவர்களது கோரிக்கைக்கும் நீங்கள் எவ்வாறு பரிகாரம் காணப்போகிறீர்கள் என்று தெரிந்து கொள்வதில் நான் அக்கறை உடையவனாக இருக்கிறேன்.

சிம்லா பேச்சுவார்த்தைகளின் கடைசி நாளன்று தூதுக்குழு வெளியிட்ட அறிக்கையில், தாங்கள் டில்லிக்குத் திரும்பியபின், ஒரு சில நாட்களுக்குள், தாங்கள் மேற்கொள்ள உத்தேசித்திருக்கும் அடுத்த நடவடிக்கை குறித்து அறிவிக்கப் போவதாகக் கூறப்பட்டிருந்தது. அனைத்து தாழ்த்தப்பட்ட சாதியினரும் இந்த அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்துப் கொண்டிருக்கின்றனர் என்பது தெளிவு தூதுக்குழு அடுத்து செய்யப்போவது இறுதியாக அவர்களது எதிர்காலத்தை முடிவு செய்யும்.

தூதுக்குழுவின் முடிவு, ஒன்று தீண்டப்படாதவர்களுக்கு வாழ்க்கை, விடுதலை, மகிழ்ச்சிக்கான பாதையைத்திறக்கும், அல்லது அது அவர்களது சவப்பெட்டியில் ஓர் ஆணியை அறையும். பிரச்சினை வாழ்வா சாவா என்றிருப்பதனால், தீண்டப்படாதவர்களின் பிரச்சினையை ஒரு சில நிமிடங்கள் உங்களுடைய கவனத்திற்குக் கொண்டு வருவது தவறாகாது என்று நினைக்கிறேன்.

4. தீண்டப்படாதவர்களின் பிரச்சினையானது அவர்களை எதிர்நோக்கும் மிகவும் கஷ்டமான பிரச்சினையாகும். ஆனால் அதிர்ஷ்டவசமாகக் கீழ்வரும் உண்மைகளை மனதில் பதியவைத்துக் கொண்டால், அதைப் புரிந்து கொள்வது எளிதாகும்: தீண்டப்படாதவர்கள் மிகப் பரந்த இந்து மக்கள் திரளினால் சூழப்பட்டுள்ளார்கள்.

அவர்கள் பகை உணர்ச்சி கொண்டவர்களாக இருக்கிறார்கள். தீண்டப்படாதவர்களுக்கு எதிராக எத்தகைய அநீதியையும் அட்டூழியத்தையும் இழைப்பதற்கு அவர்கள் வெட்கப்படுவதில்லை. அன்றாடம் நிகழ்ந்து வருகின்ற இந்தக் கொடுமைகளை நிவர்த்தி செய்வதற்குத் தீண்டப்படாதவர்கள் அரசாங்கத்தின் உதவியைக் கோர வேண்டியவர்களாக இருக்கின்றனர். இந்த நிர்வாகத்தின் (அரசின்) தன்மையும் இயைபும் என்ன? சுருங்கக் கூறின், இந்தியாவிலுள்ள அரசு நிர்வாகம் முற்றிலும் இந்துக்களின் கைகளில் உள்ளது. அது அவர்களின் ஏக போகமாகும்.

மேலிருந்து கீழ்வரை அது அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்கள் ஆதிக்கம் செலுத்தாத இலாகாவே இல்லை. காவல்துறை, நீதித்துறை மற்றும் வருவாய்த் துறை, உண்மையில் அரசு நிர்வாகத்தின் அனைத்துத் துறைகளிலும் அவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். நினைவில் கொள்ள வேண்டிய அடுத்த விஷயம் என்னவெனில், நிர்வாகத்தில் உள்ள இந்துக்கள் சமூக-நேசமற்றவர்களாக இருக்கிறார்கள் என்பது மட்டுமன்றி, அவர்கள் சமூக-விரோதிகளாகவும், தீண்டப்படாதவர்களின் பகைவர்களாகவும் இருக்கிறார்கள்.

அவர்களின் ஒரே நோக்கம் தீண்டப்படாதவர்களுக்கு எதிராகப் பாரபட்சம் காட்டுவதும், அவர்களுக்கு சட்டத்தின் அனுகூலங்கள் கிடைக்காமல் பறிப்பதும் மறுப்பதும் மட்டுமன்றி, கொடுங்கோன்மை மற்றும் ஒடுக்குமுறையிலிருந்து சட்டத்தின் பாதுகாப்பை அவர்களுக்கு மறுப்பதுமாகும். இதன் விளைவாக, தீண்டப்படாதவர்கள் இந்து மக்களுக்கும் இந்துக்கள் நிரம்பிய நிர்வாகத்திற்கும் இடையில் வைக்கப்படுகிறார்கள். இவற்றில் ஒருவர் அவர்களுக்கு எதிராக அநியாயங்கள் புரிகிறார், மற்றொருவர் பாதிக்கப்படுவோர்களைக் காப்பாற்றுவதற்கு பதிலாக அநீதி இழைப்பவரைப் பாதுகாக்கிறார்.

5. இந்தப் பின்னணியில், காங்கிரஸ் வகைப்பட்ட சுயராஜ்யம் தீண்டப்படாதவர்களுக்கு என்ன பொருள்பட முடியும்? அதன் பொருள் ஒன்றே ஒன்றுதான். அதாவது, இன்று, நிர்வாகம் மட்டும் தான் இந்துக்களின் கைகளில் உள்ளது, சுயராஜ்யத்தின் கீழ் சட்டப்பேரவையும் அரசும் கூட இந்துக்களால் நிரப்பப்பட்டுவிடும்.

சுயராஜ்யம் தீண்டப்படாதவர்களின் துன்ப துயரங்களை உக்கிரமாக்கவே செய்யும் என்பதைக் கூறத் தேவையில்லை. ஏனெனில், பகைமை உணர்வு கொண்ட நிர்வாகத்தை எதிர்க்கொள்வதோடு கூட, தீண்டப்படாதவர்கள் பகைமையான அல்லது அசட்டையான சட்டப் பேரவையையும், ஒரு சொரணையற்ற அரசையும், தீண்டப்படாதவர்கள்பால் கட்டுப்பாடற்ற மற்றும் கடிவாளமில்லாத நச்சுமனப்பாங்கையும், கொடுமையும், அநீதியான போக்கையும் கொண்ட ஒரு நிர்வாகத்தையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

வேறு விதமாக இதை கூறவேண்டுமெனில், காங்கிரஸ் வகைப்பட்ட சுயராஜ்யத்தின் கீழ் தீண்டப்படாதவர்களுக்கு இந்துக்களும் இந்து மதமும் அவர்களுக்கு நிர்ணயித்துள்ள இழிவார்ந்த எதிர்காலத்திலிருந்து தப்பிச் செல்வதற்கு அவர்களுக்கு வழியே இருக்காது.

6. இந்தச் சுயராஜ்யம் தங்களுக்கு ஒரு பேரழிவாவதினின்றும் தடுப்பதற்குள்ள ஒரேவழி சட்டப்பேரவையில் தங்களுடைய பிரதிநிதிகள் இடம்பெறச் செய்வதுதான் என்று தீண்டப்படாதவர்கள் ஏன் வலியுறுத்தி வருகிறார்கள் என்பதற்கான காரணத்தை இது ஓரளவு உங்களுக்குப் புரியவைக்கும் என்று நம்புகிறேன், அப்பொழுது தான், இந்துக்களினால் அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் அநீதிகளையும் எதிர்த்து அவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்துக் கொண்டிருக்க முடியும். அரசில் தங்களுடைய பிரதிநிதிகள் இருப்பதன் வாயிலாக அவர்கள் தங்களுடைய மேம்பாட்டுக்கானத் திட்டங்களை உருவாக்க முடியும்.

அரசுப்பணிகளில் பிரதிநிதிகள் இருப்பதன் வாயிலாக, அரசு நிர்வாகம் முற்றிலும் தங்களுக்குப் பகைமையாக இல்லாமற் செய்ய முடியும். சட்டப்பூர்வமான பாதுகாப்புகள் வேண்டுமென்ற தீண்டப்படாதவர்களின் கோரிக்கையின் நியாயத்தை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களானால், தீண்டப்படாதவர்கள் ஏன் தனித் தொகுதிகளை விரும்புகிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்வதில் எவ்வித சிரமமுமிருக்காது. சட்டப்பேரவையில் தாழ்த்தப்பட்டவர்கள் சிறுபான்மையினராக இருப்பார்கள், அவர்கள் சிறுபான்மையாக இருக்குமாறு விதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களால் பெரும்பான்மையினரை சமாளிக்க முடியாது, இந்தப் பெரும்பான்மையினர் வகுப்புவாதிகளாக இருப்பது நிலையானது, முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டது என்றுதான் கூற வேண்டும்.

பெரும்பான்மையினருடன் எந்த அடிப்படையில் தங்களால் ஒத்துழைத்துப் பணியாற்ற முடியும் என்ற நிபந்தனைகளை நிர்ணயிக்கும் நிலையில் தங்களை வைத்துக் கொள்வது மட்டுமே அவர்களால் செய்ய முடியும். பெரும்பான்மையினர் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும்படி அவர்களை நிர்ப்பந்தப்படுத்தக்கூடாது.

இரண்டாவதாக, பெரும்பான்மையினர் அவர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதற்கு மறுத்து, தங்களுடைய அநீதிகளைப் போக்குவதற்கு இணங்காவிடில், சட்டப்பேரவையில் பெரும்பான்மையினருக்கு எதிராக குறைந்தபட்சம் தங்களுடைய கண்டனத்தைத் தெரிவிப்பதற்கான தங்களுடைய சுதந்திரத்தைத் தாழ்த்தப்பட்டவர்கள் எவ்வாறு நிலைநாட்டுவது? சட்டப்பேரவைகளில் உள்ள அவர்களது பிரதிநிதிகள், தாம் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பெரும்பான்மையினரின் வாக்கு காரணமாயில்லாமல் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். தனித் தொகுதிகள் வேண்டுமென்ற அவர்களுடைய கோரிக்கைக்கு இதுதான் அடிப்படை.

7. தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித்தொகுதி கிடைத்தாலன்றி, எந்தப் பாதுகாப்புகளும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எவ்வித மதிப்புடையவையாகவும் இருக்கப் போவதில்லை. தனித் தொகுதிதான் பிரச்சினையின் மையமான அம்சமாகும். 1946 ஏப்ரல் 9ம் தேதியன்று, தூதுக்குழுவினர் பேட்டி கண்ட மூன்று காங்கிரஸ் ஹரிஜனங்கள் அமைச்சரவைத் தூதுக்குழுவிடம் சமர்ப்பித்த மனுவின் ஒரு நகல் எனக்கு முன்னால் இருக்கிறது. அவர்கள், “இங்கிலாந்தின் மக்களாகிய நாங்கள்” என்று கூறி, நாடாளுமன்றத்திற்கு ஒரு மனுவை சமர்ப்பிப்பதற்குத் துணிவுகொண்ட டூலி தெருவின் மூன்று தையற்காரர்களைக் காட்டிலும் எவ்விதத்திலும் மேம்பட்டவர்கள் அல்ல.

இதைத் தவிர, தாழ்த்தப்பட்ட சாதியினரின் சம்மேளனத்தின் சார்பில் என்னால் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளுக்கும் இந்தக் காங்கிரஸ் ஹரிஜனங்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கும் எத்தகைய வேறுபாடும் இல்லை என்பதை உணர்வது உசிதமாகும். இதிலுள்ள ஒரே வேறுபாடு, தேர்தல் தொகுதிகள் பிரச்சினை சம்பந்தமானதேயாகும். காங்கிரஸ் ஹரிஜனங்களின் கோரிக்கைகளை நீங்கள் எவ்வாறு வியாக்கியானம் செய்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது. அவை உண்மையில் கோரிக்கைகள் அல்ல. அரசியல் பாதுகாப்புகள் என்ற வகையில் தாழ்த்தப்பட்டவர்களுக்குக் காங்கிரஸ் என்ன கொடுப்பதற்குத் தயாராயிருக்கிறது என்பதையே அவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

இது நான் புரிந்து கொண்டிருக்கும் விஷயம் மட்டுமல்ல. இதுதான் நான் அறிந்து கொண்டதும் ஆகும். கூட்டுத் தொகுதிகளை ஏற்றுக் கொள்வதற்கு நான் தயாராயிருந்தால், காங்கிரஸ் அதனுடைய பங்குக்கு, என்னுடைய இதர கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்பதற்குத் தயாராயிருக்கும் என்று காங்கிரசின் மனநிலையை அறிந்த நபர்கள் என்னிடம் தெரிவித்திருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட சாதியினரின் இதர எல்லா கோரிக்கைகளையும் வழங்குவதற்குத் தயாராக இருக்கும் காங்கிரஸ் ஒரே ஒரு கோரிகையை, அதாவது தனித் தொகுதிகளை மட்டும் அது ஆட்சேபிப்பது ஏன் என்று நீங்கள் வியப்படைவீர்கள். காங்கிரஸ் என்ன சூழ்ச்சியைக் கையாள்கிறது என்பதை நீங்கள் அறிந்தால் வியப்படைய மாட்டீர்கள். அது ஒரு மிகவும் ஆழமான சூழ்ச்சியாகும்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு சில பாதுகாப்புகள் வழங்குவதினின்றும் தப்பித்துக் கொள்வதற்கு வழி இல்லை என்பதை உணர்ந்துள்ளதினால் காங்கிரஸ், அந்த பாதுகாப்புகளைப் பயனற்றவையாக ஆக்குவதற்கு ஏதாவது ஒரு வழியைக் கண்டுபிடிப்பதற்கு விரும்புகிறது. கூட்டுத் தொகுதிகள் ஏற்பாட்டில், பாதுகாப்புகளைப் பயனற்றதாகச் செய்யும் கருவி அடங்கியுள்ளதாகக் காங்கிரஸ் கருதுகிறது. அதனால்தான் காங்கிரஸ் கூட்டுத் தொகுதிகளை வலியுறுத்தி வருகிறது. ஏனெனில் கூட்டுத் தொகுதிகள் என்றால், தாழ்த்தப்பட்டவர்களுக்கு அதிகாரமில்லாத பதவியைக் கொடுப்பது என்று பொருள். அதிகாரத்துடன் கூடிய பதவியையே தாழ்த்தப்பட்டவர்கள் விரும்புகிறார்கள். தனித் தொகுதிகள் மூலமாகத்தான் அவர்கள் இதைப் பெற முடியும். அதனால்தான் அவர்கள் அதை வலியுறுத்தி வருகின்றனர்.

8.தாழ்த்தப்பட்ட சாதியினருக்குத் தனித்தொகுதிக்கு ஆதரவான வாதம் மிகவும் உறுதியான வாதமாகும். காங்கிரசைத் தவிர பிற கட்சிகள் அனைத்தும் அதை ஏற்றுக் கொள்கின்றன. தனித்தொகுதிகளுக்கு ஆதரவான வாதங்களை, 1946, மே 3ம் தேதியன்று வேவல் பிரபுவுக்கு நான் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

அதை அவர் உங்களுக்குக் காண்பித்திருப்பார், எனவே அவற்றை மீண்டும் இங்கே எடுத்துக் கூறுவது அவசியமில்லை. தாழ்த்தப்பட்ட சாதியினரின் இந்தக் கோரிக்கை சம்பந்தமாக தூதுக்குழு என்ன செய்யப்போகிறது என்பதே கேள்வி. தீண்டப்படாதவர்களை இந்துக்களின் அரசியல் நுகத்தடியின் கீழிருந்து அவர்கள் விடுவிக்கப் போகிறார்களா?

அல்லது காங்கிரசையும் அது பிரதிநிதித்துவப் படுத்துகின்ற இந்து பெரும்பான்மையோரையும் நண்பர்களாக்கிக் கொள்வதற்காகக் கூட்டுத் தொகுதிகள் முறைக்கு ஆதரவளிப்பதன் வாயிலாக அவர்களை ஓநாய்களுக்கு இரையாக்கப் போகிறார்களா?

பிரிட்டிஷ்காரர்கள் வெளியேறிச் செல்வதற்கு முன்னதாக சுயராஜ்யம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒரு கழுத்துச் சுருக்காக மாறாமல் இருப்பதை மன்னர்பிரான் அரசாங்கம் நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மன்னர்பிரான் அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்வதற்கு தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு உரிமை இருக்கிறது.

9. தாழ்த்தப்பட்ட சாதியினரின்பால் பிரிட்டிஷாருக்கு ஒரு தார்மிகப் பொறுப்பு இருக்கிறது என்று கூறுவதற்கு என்னை அனுமதியுங்கள். எல்லா சிறுபான்மையோர்பாலும் அவர்களுக்கு தார்மிகப் பொறுப்பு இருக்கக்கூடும். ஆனால் அது ஒருபோதும் தாழ்த்தப்பட்டவர்கள்பால் அவர்கள் மீது சார்ந்துள்ள பொறுப்பைக் கடந்து அப்பால் செல்ல முடியாது.

மிகச் சொற்பமான பிரிட்டிஷ்காரர்களே இதை உணர்ந்துள்ளனர் என்பதும் மிகக் குறைவான பிரிட்டிஷ்காரர்களே இதை நிறைவேற்றத் தயாராயிருக்கிறார்கள் என்பதும் பரிதாபத்துக்குரிய விஷயமாகும். பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் இருப்பதற்கு தீண்டப்படாதவர்கள் நல்கிய உதவிதான் காரணமாகும். கிளைவ்கள், ஹேஸ்டிங்கள், கூட்ஸ்கள் முதலியோரால் இந்தியா வெல்லப்பட்டது என்று பல பிரிட்டிஷ்காரர்கள் நினைக்கிறார்கள். இதைக் காட்டிலும் பெரிய தவறு வேறொன்றும் இருக்க முடியாது. இந்தியா, இந்தியர்களைக் கொண்ட ஒரு ராணுவத்தினால் வெல்லப்பட்டது.

அந்த ராணுவத்தில் இருந்த இந்தியர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்டவர்கள். இந்தியாவை வெல்வதற்கு பிரிட்டிஷ்காரர்களுக்கு தாழ்த்தப்பட்டவர்கள் உதவி செய்யாமலிருந்திருந்தால், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி சாத்தியமாயிருக்காது. பிரிட்டிஷ் ஆட்சியின் துவக்கத்திற்கு அஸ்திவாரம் அமைத்த பிளாசி சண்டையை, இந்தியாவை வெல்வதைப் பூர்த்தி செய்த கிர்கி போரை எடுத்துக் கொண்டு பாருங்கள். விதியை நிர்ணயித்த இந்த இரண்டு போர்களிலும் பிரிட்டிஷ்காரர்களுக்காக போரிட்ட படைவீரர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்டவர்களே.

10. தங்களுக்காகப் போரிட்ட இந்த தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் பிரிட்டிஷ்காரர்கள் என்ன செய்தார்கள்? அது ஓர் அவமானகரமான வரலாறு ஆகும். அவர்கள் செய்த முதல் காரியம் அவர்களை ராணுவத்தில் சேர்ப்பதை நிறுத்தியதுதான். இதைக் காட்டிலும் ஈவு இரக்கமற்ற, கருணையற்ற, நன்றியற்ற, கொடூரத்திலும் கொடூரமான செயலை வரலாற்றில் எங்கும் காணமுடியாது.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு ராணுவத்தின் கதவை மூடியதில் அவர்களின் ஆட்சியை இங்கு நிறுவுவதற்கு தாழ்த்தப்பட்டவர்கள் அவர்களுக்கு உதவி செய்ததையும், 1857ம் வருடக் கலகத்தின்போது சுதேசிப் படைகளின் ஒரு சக்தி வாய்ந்த கூட்டணியினால் பேராபத்துக்குள்ளானபோது அவர்களைப் பாதுகாத்து நின்றதையும் பிரிட்டிஷ்காரர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.

இதனால் தாழ்த்தப்பட்டவர்கள் எவ்வளவு பாதிப்புக்குள்ளானார்கள் என்பது குறித்து பிரிட்டிஷ்காரர்கள் எவ்விதக் கவலையும் படவில்லை. அதற்கு மாறாக ஒரே ஒரு வரி எழுதி அவர்களின் வாழ்க்கை ஆதாரத்தைப் பறித்துவிட்டு, அவர்களுடைய முந்திய இழிவான நிலைக்குள் அவர்களை மீண்டும் விழும்படிச் செய்தார்கள். அவர்களைச் சமூக இழிவுகளிலிருந்து மீட்பதற்கு எவ்வகையிலாவது பிரிட்டிஷ்காரர்கள் அவர்களுக்கு உதவி செய்தார்களா? மீண்டும் இதற்கு பதில் “இல்லை” என்பதுதான். பள்ளிக்கூடங்கள், கிணறுகள், பொது இடங்கள் முதலியவை தாழ்த்தப்பட்டவர்களுக்கு மூடப்பட்டன.

பொது நிதிகளிலிருந்து நிர்வகிக்கப்படும் எல்லா நிலையங்களிலும் அனுமதிக்கப்படுவதற்கு, குடிமக்கள் என்ற வகையில் தீண்டப்படாதவர்கள் தகுதி பெறும்படிச் செய்வதற்கு உதவுவது பிரிட்டிஷ்காரர்களின் கடமையாகும். ஆனால் பிரிட்டிஷ்காரர்கள் அது எதையும் செய்யவில்லை. இன்னும் மோசமானது என்னவென்றால் தீண்டாமையைத் தாங்கள் தோற்றுவிக்கவில்லை என்று கூறுவதன் மூலம் தங்களுடைய செயலற்ற தன்மையை அவர்கள் நியாயப்படுத்தினர். தீண்டாமை பிரிட்டிஷ்காரர்களால் தோற்றுவிக்கப்படாமலிருந்திருக்கலாம்.

ஆனால் அன்று ஆட்சிபுரிந்த அரசு என்ற முறையில், தீண்டாமையை அகற்றுவது நிச்சயமாக அவர்களின் பொறுப்புத்தான். ஓர் அரசின் செயல்பாடுகள் மற்றும் கடமைகளைப் பற்றி உணர்வுள்ள எந்த அரசும் அதைத் தவிர்த்திருக்க முடியாது. பிரிட்டிஷ் அரசு என்ன செய்தது? இந்த சமுதாயத்தை எந்த வகையிலும் சீர்திருத்தம் செய்வது சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்சினையையும் தொடுவதற்கு அவர்கள் மறுத்தனர். இது விரைவில் சமூக சீர்திருத்தம் சம்பந்தப்பட்ட மட்டிலும் தீண்டப்படாதவர்கள் வாழ்ந்து வரும் இக்காலத்திய அரசு, அவர்கள் நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து, துன்புற்று, வாழ்ந்து, மரணமடைந்து வந்த, மறக்கப்பட்ட வரலாற்றுக் காலத்திய சுதேச மன்னராட்சிகளினின்றும் எந்த ஜீவாதார அம்சத்திலும் வேறுபட்டிருக்கவில்லை.

அரசியல் நிலைப்பாட்டிலிருந்து பார்க்கும்போது, மாற்றம் பெயரளவானதேயாகும். இந்துக்களின் கொடுங்கோன்மை எப்போதும் போலவே தொடர்ந்து நீடித்தது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் அது தடை செய்யப்படுவதற்கு மாறாக, அது தட்டிக் கொடுத்து வளர்க்கப்பட்டது. சமூகக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது பிரிட்டிஷ்காரர்கள், ஏற்கெனவே இருந்து வந்த ஏற்பாட்டை அப்படியே ஏற்றுக்கொண்டு அவற்றைப் பேணிக் காத்தனர். இதற்கு உதாரணமாக ஒரு சீனத் தையற்காரர் செய்ததைத் தான் கூற முடியும். பழைய கோட்டு ஒன்று அவரிடம் மாதிரிக்காகக் கொடுக்கப்பட்டது.

அவர் அதிலிருந்ததைப் போன்றே கிழிசல்களையும், ஒட்டுத் தையல் துண்டுகளையும் கொண்ட அதே போன்று ஒரு புதிய கோட்டைத் தைத்துப் பெருமிதத்துடன் கொடுத்தாராம்!  இதன் விளைவு என்ன? இந்தியாவின் பிரிட்டிஷ் ஆட்சி ஏற்பட்டு 200 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாகவே இருந்து வருகின்றனர். அவர்களுக்கு இழைக்கப்படும கொடுமைகளுக்குப் பரிகாரம் காணப்படாமலேயே இருந்து வருகிறது. அவர்களது முன்னேற்றம் ஒவ்வொரு கட்டத்திலும் தடுக்கப்பட்டு வருகிறது.

உண்மையில், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி எதையாவது சாதித்திருக்கிறதென்றால், அது, தீண்டப்படாதவர்களின் நிலையான விரோதியாக இருந்து வருவதும், தொன்றுதொட்டு தீண்டப்படாதவர்கள் அனுபவித்து வரும் அனைத்துக் கொடுமைகளுக்கும் பிதாமகராக இருந்து வருவதுமான பிராமணீயத்தை வலுப்படுத்தி, அதற்குப் புத்துயிர் ஊட்டியதேயாகும்.

11. பிரிட்டிஷ்காரர் தங்கள் அதிகாரத்தைக் கைவிட்டுப் போகப் போகிறார்கள் என்று அறிவிப்பதற்காக நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள். “ஆட்சியையும் அதிகாரத்தையும் நீங்கள் யார் கையில் கொடுத்துவிட்டுப் போகப் போகிறீர்கள்?” என்று ஒரு தீண்டப்படாதவர் கேட்டால், அது தவறல்ல. பிராமணீயத்தின் ஆதரவாளர்கள் கையிலா? அவ்வாறாயின் இதன் பொருள் என்ன? வன்னெஞ்சகக் கொடுங்கோலர்களின், தீண்டப்படாதவர்களை கொடூரமாக ஒடுக்கின்றவர்களின் கைகளில் அதிகாரம் தரப்படுகிறது என்றுதான் இதற்குப் பொருள்.

இந்தியாவின் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை ஒழீத்துக் கட்டுவதானது பிற கட்சிகளின் உறுப்பினர்களிடையில் எத்தகைய மனசாட்சி உறுத்தல்களையும் ஏற்படுத்த தேவையில்லை. ஆனால் பிரிட்டிஷ் தொழிற்கட்சியின் நிலைபாடு என்ன? உரிமைகளற்றவர்களுக்காகவும் சமூகத்தின் அடித்தட்டிலுள்ளவர்களுக்ககாகவும் நிற்பதாகத் தொழிற்கட்சி உரிமை கொண்டாடுகிறது.

அது தன் மனசாட்சிக்கு உண்மையாக நடந்து கொள்வதென்றால், அது இந்தியாவின் ஆறு கோடி தீண்டப்படாதவர்களுக்கு ஆதரவாக நிற்கும் என்பதிலும், அவர்களின் நிலைமைப் பாதுகாப்பதற்குத் தேவையான யாவற்றையும் செய்யுமென்பதிலும், தமது மதத்தினாலும் தமது வாழ்க்கைத் தத்துவத்தினாலும் நிர்வாகம் செய்வதற்குக் தகுதியற்றவர்களாக உள்ள, உண்மையில் தீண்டப்படாதவர்களின் பகைவர்களாக உள்ளவர்களின் கைகளில் அதிகாரம் போய்ச் சேர்வதற்கு தாழ்த்தப்பட்ட சாதியினரின் தர்மகர்த்தாக்கள் என்று எப்போதும் தங்களைக் கூறிக்கொண்டு வந்திருக்கும் பிரிட்டிஷ்காரர்கள், அந்த தாழ்த்தப்பட்ட சாதியினரைப் புறக்கணித்ததற்குப் பிராயச்சித்தமான ஒரு நடவடிக்கையாக இது இருக்கும் என்பதைத் தவிர வேறல்ல.

12. இவ்வளவு விரிவாக இதைப் பற்றி நான் கூறுவதற்கு, தீண்டப்படாதவர்கள் எழுப்பிய சட்டபூர்வமான பாதுகாப்புகள் என்ற பிரச்சினை சம்பந்தமாக தூதுக் குழுவினர் சாதித்துவரும் மௌனத்தினால் எழுந்துள்ள கவலையே காரணமாகும். தீண்டப்படாதவர்களுக்கும் சிறுபான்மையோருக்கும் மன்னர் பிரான் அரசினால் கொடுக்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் சம்பந்தமாக தூதுக் குழு கடைப்பிடித்துவரும் கண்ணோட்டத்தினால் இந்த கவலை ஆழமாகியுள்ளது. இந்த உறுதிமொழிகள் குறித்த தூதுக்குழுவின் கண்ணோட்டம் பால்மர்ஸ்டன் பிரபுவை எனக்கு நினைவுபடுத்துகிறது. “எங்களுக்கு நிரந்தரமான விரோதிகள் இல்லை; நிரந்தரமான நண்பர்களும் இல்லை.

நிரந்தரமான நலன்கள் மட்டுமே எங்களுக்கு உண்டு” என்று அவர் கூறியிருந்தார். இந்தப் பால்மர்ஸ்டனின் கோட்பாட்டைத் தனது வழிகாட்டியாக தூதுக்குழு ஏற்றிருக்கிறது என்ற எண்ணம் உருவாகுமேயானால், தீண்டப்படாதவர்களுக்கு இது எவ்வளவு பயங்கரமான எதிர்காலத்தை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் ஊகித்துக் கொள்ளலாம். பிரிட்டனின் உரிமைகளற்ற வர்க்கங்களிலிருந்து நீங்கள் வந்துள்ளீர்கள்.

எனவே, இந்தியாவின் உரிமைகளற்ற 6 கோடி மக்களுக்கு செய்யப்படவிருக்கும் உத்தேச துரோகத்தைத் தடுப்பதற்கு உங்களாலான எல்லாவற்றையும் நீங்கள் செய்வீர்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் தான் அவர்களின் கோரிக்கையை உங்கள் முன்வைப்பதற்கு எண்ணினேன். தூதுக்குழுவில் உங்களைக் காட்டிலும் மேலான நண்பர் தங்களுக்கு இல்லை என்று தீண்டப்படாதவர்கள் கருதுகிறார்கள் என்று உங்களிடம் கூறுவதற்கு என்னை அனுமதியுங்கள்.”

தங்கள் உண்மையுள்ள,

பி.ஆர்.அம்பேத்கர்

பெறுநர்;

ரைட் ஹானரபிள் திரு.ஏ.வி.அலெக்சாண்டர்,

சி.எச்.எம்.பி., உறுப்பினர், அமைச்சரவைத் தூதுக்குழு,

வைஸ்ராய் மாளிகை,

புதுடில்லி.