வேவல் ஆவணங்கள், அரசியல் வரிசை, 1944 ஏப்ரல் – 1945 ,ஜூலை பகுதி I, பக்கம் 207-9. (அதிகார மாற்றம், தொகுதி V, எண்.483, பக். 1094-97)

புதுடில்லி, ஜூன் 7, 1945

அன்புள்ள வேவல் பிரபு அவர்களே,

நிர்வாக சபையை இந்தியமயமாக்குவதற்கான உங்களுடைய பிரேரணையின் தொடர்பாக, நீங்கள் ஏற்பாடு செய்வதற்கு உத்தேசித்துள்ள மாநாட்டில் கலந்து கொள்ளும்படி தாழ்த்தப்பட்ட சாதியினரின் தலைவர் என்ற வகையில் என்னை நீங்கள் கேட்டுக் கொண்டுள்ளதற்கு உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

ambedkar 265இங்கு நான் மீண்டும் எடுத்துக்கூற வேண்டிய அவசியமில்லாத காரணங்களுக்காக, உங்களுடைய அழைப்பை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை என்று உங்களிடம் கூறினேன். அதற்குப் பின்னர், எனக்கு பதிலாக ஒருவருடைய பெயரைக் கூறும்படி நீங்கள் விரும்பிக் கேட்டுக் கொண்டீர்கள்.

உங்களுடைய பிரேரணைகளுக்கு என்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்துள்ள போதிலும், உங்களுடைய மாநாட்டில் தாழ்த்தப்பட்ட சாதியினரின் ஒரு பிரதிநிதி இருப்பதன் மூலமாக உங்களுக்குக் கிடைக்ககூடிய உதவியை மறுப்பதற்கு நான் விரும்பவில்லை. எனவே எனக்குப் பதில் வேறு ஒருவரின் பெயரைக் குறிப்பிடுவதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

எனக்குத் தோன்றுகிற பல்வேறு பெயர்களின் பொருத்தத்தைப் பற்றி மதிப்பீடு செய்கிறபோது, ராவ்பகதூர் என்.சிவராஜ், பி.ஏ.,பி.எல்.லைத் தவிர வேறு எந்தப் பெயரைப் பற்றியும் என்னால் சிந்திக்க முடியாது. அவர், அகில இந்திய ஷெட்யூல்டு வகுப்பினர் சம்மேளனத்தின் தலைவராக இருக்கிறார்.

மேலும், அவர் மத்திய சட்டப்பேரவை உறுப்பினராகவும், தேசியப் பாதுகாப்பு சபை உறுப்பினராகவும் இருக்கிறார். நீங்கள் விரும்பினால் தாழ்த்தப்பட்ட சாதியினரின் ஒரு பிரதிநிதி என்ற வகையில் அந்த மாநாட்டிற்கு நீங்கள் அவரை அழைக்கலாம்.

2. இப்பொழுதே மற்றொரு விஷயத்தை உங்களுடைய கவனத்திற்குக் கொண்டுவர வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன். நிர்வாக சபையைத் திருத்தி அமைப்பதற்கான மன்னர் பிரான் அரசாங்கத்தின் பிரேரணைகளில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு வழங்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவம் மிகவும் பற்றாக்குறையாக இருப்பது சம்பந்தப்பட்டதாகும்.

9கோடி முஸ்லீம்களுக்கு 5 இடங்கள், 5 கோடி தீண்டப்படாதாருக்கு ஓர் இடம், 60 இலட்சம் சீக்கியர்களுக்கு ஓர் இடம் என்பது விநோதமானதும், வஞ்சக வகைப் பட்ட அரசியல் கணக்கீடுமாகும்.

நீதி மற்றும் பகுத்தறிவு சம்பந்தப்பட்ட என்னுடைய கருத்துக்களுக்கு இது சிறிதும் உடன்பாடானதல்ல. இதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது. தீண்டப்படாதவர்களின் தேவைகளைக் கணிக்கும்போது, அவர்களுக்கு முஸ்லீம்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளதைப் போன்ற பிரதிநிதித்துவம் – அதற்கு அதிகம் இல்லாதபோதிலும் – தரப்பட வேண்டும்.

தேவைகள் ஒருபுறமிருக்க, எண்ணிக்கையை மட்டும் எடுத்துக் கொண்டாலே, தீண்டப்படாதவர்களுக்குக் குறைந்தபட்சம் மூன்று இடங்கள் கிடைக்க வேண்டும். அதற்கு மாறாக, பதினைந்துப் பேர் கொண்ட நிர்வாக சபையில் அவர்களுக்கு ஒரே ஒரு இடம்தான் கொடுக்கப்படுகிறது. இது சகித்துக் கொள்ள முடியாத ஒரு நிலையாகும்.

ஜூன் 5ம் தேதியன்று நடைபெற்ற நிர்வாக சபைக் கூட்டத்தில், நிர்வாக சபை சம்பந்தமான அரசாங்கத்தின் பிரேரணைகளை நீங்கள் விளக்கியபோது, இந்த விஷயத்தை நான் உங்களுடைய கவனத்திற்கு கொண்டு வந்தேன். 6ம் தேதி காலையில் நடைபெற்ற கூட்டத்தில், பிரேரணைகளின் தகுதி பற்றி முந்திய நாள் மாலையில் உறுப்பினர் செய்த விமர்சனங்களுக்கு நீங்கள் பதிலளித்தீர்கள்.

நான் எழுப்பிய பிரச்சினை பற்றியும் நீங்கள் பதிலளிப்பீர்கள் என்று இயல்பாகவே நான் எதிர்ப்பார்த்தேன். ஆனால் நீங்கள் அதை முழுவதுமாகப் புறக்கணித்து, அதுபற்றி எதுவும் கூறாதது கண்டு மிகவும் வியப்படைந்தேன். நான் போதிய அளவு அழுத்தமாகக் கூறவில்லை என்று கூற முடியாது. ஏனெனில் நான் போதுமான அளவுக்கு அதிகமாகவே வலியுறுத்திக் கூறினேன்.

அதுபற்றிக் கூறுவதற்கு நீங்கள் விட்டுவிட்டதிலிருந்து, ஒன்று, நீங்கள் கவனிக்க வேண்டிய அளவிற்கு அது போதிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக நீங்கள் கருதாமலிருக்கலாம், அல்லது எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு அப்பால் எனக்கு வேறுநோக்கமில்லை என்று நீங்கள் நினைத்திருக்கக்கூடும் என்ற முடிவுக்கே வந்தேன்.

இந்த எண்ணத்தைப் போக்கவும் நிவர்த்திப்பதற்கும் மன்னர்பிரான் அரசாங்கம் தவறினால் திட்டவட்டமான நடவடிக்கையை நான் மேற்கொள்வேன் என்று மிகவும் தெளிவாக உங்களுக்கு எடுத்துக் கூறுவதற்குமே இந்தக் கடிதம் எழுதுவது அவசியம் என்று கருதுகிறேன். இத்தகைய ஒரு பிரேரணை காங்கிரசிடமிருந்தோ அல்லது இந்து மகாசபையிடமிருந்தோ வந்திருந்தால், நான் இந்த அளவுக்கு வருத்தமடைந்திருக்கமாட்டேன். ஆனால் இது மன்னர்பிரான் அரசாங்கத்தின் முடிவு.

பொதுவான இந்து அபிப்பிராயமும் கூட சட்டமன்றத்திலும், நிர்வாக சபையிலும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்குக் கூடுதல் பிரதிநிதித்துவம் வழங்குவதற்கு ஆதரவாகவே உள்ளது. சப்ரூ கமிட்டியின் பிரேரணைகளைப் பொதுவான இந்து அபிப்பிராயத்தின் ஒரு குறியீடாக எடுத்துக் கொள்வதெனில், மன்னர்பிரான் அரசாங்கத்தின் பிரேரணை பிற்போக்கானது என்று நிச்சயமாக ஒத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் சப்ரூ கமிட்டி இவ்வாறுதான் கூறியுள்ளது:

“இந்திய அரசு சட்டத்தில் சீக்கியர்களுக்கும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும் கொடுக்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவம் போதுமானதல்ல மற்றும் அநீதியானது என்பது தெளிவு. இது கணிசமாக அதிகரிக்கப்பட வேண்டும். அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கூடுதல் பிரதிநிதித்துவத்தின் அளவு அரசியல் சட்டத்தைத் தயாரிக்கும் அமைப்புக்கு விட்டு விடப்பட வேண்டும்.

“(ஆ) பிரிவின் விதிகளுக்கு உட்பட்டு, யூனியனின் நிர்வாகக் குழு ஓர் கலப்பு அமைச்சரவையாக இருக்க வேண்டும். அதாவது, பின்வரும் சமூகங்கள் அதில் பிரதிநிதித்துவம் பெற்றிருக்க வேண்டும்:

“(ஆ) நிர்வாகக் குழுவில் இந்த சமூகங்களின் பிரதிநிதித்துவம் சாத்தியமான வரையில், சட்டமன்றத்தில் அவர்களின் பலத்தைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்.”

நிர்வாக சபையில் உள்ள என்னுடைய இரண்டு இந்து சகாக்கள் இன்று காலையில் உங்களிடம் சமர்ப்பித்துள்ள விண்ணப்பத்தில் (எண்.482ஐ பார்க்கவும்) மேன்மை தங்கிய அரசாங்கத்தின் பிரேரணைகளில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்குக் கொடுக்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவம் போதுமானதல்லவென்றும் நியாயமற்றதென்றும் தெரிவித்துள்ளனர்.

தாழ்த்தப்பட்ட சாதியினருக்குத் தாங்கள் பாதுகாவலர்களாக இருப்பதாக மன்னர் பிரான் அரசாங்கம் பறைசாற்றிய போதிலும், மேலும், மீண்டும் மீண்டும் அவர்கள் வெளியிட்ட பிரகடனங்களுக்கு மாறாகவும், தங்களது பராமரிப்பில் உள்ளவர்களின்பால் இவ்வளவு கருமித்தனமாகவும், அநீதியாகவும், நியாயமற்ற முறையிலும், இந்துக்களின் அபிப்பிராயத்தைக் காட்டிலும் மிகவும் மோசமாகவும் நடந்து கொண்டது எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. எனவே, இந்தப் பிரேரணையை உறுதியாக எதிர்ப்பது என்னுடைய தலையாய மற்றும் புனிதமான கடமை என்று கருதுகிறேன்.

இந்தப் பிரேரணை தீண்டப்படாதோருக்குச் சாவுமணியடித்துவிடும். தங்களுடைய விமோசனத்திற்கு கடந்த 50 ஆண்டுகளாக செய்யப்பட்ட அவர்களது முயற்சிகளை இது ஒழித்துக் கட்டிவிடும். மன்னர்பிரான் அரசாங்கம், அதனுடைய பல அறிவிப்புகளுக்கு மாறாக தீண்டப்படாதவர்களின் கதியை இந்து-முஸ்லீம் கூட்டணியின் வசம் அவர்களின் தயவுக்கு ஒப்படைக்க விரும்பினால் மன்னர் பிரான் அரசாங்கம் அதன்படி செய்து கொள்ளலாம். ஆனால் என்னுடைய மக்களை ஒடுக்குவதற்கு நான் உடந்தையாக இருக்க முடியாது.

இழைக்கப்பட்ட அநீதியை நிவர்த்தி செய்து, புதிய நிர்வாக சபையில் தீண்டப்படாதவர்களுக்குக் குறைந்தபட்சம் 3 இடங்களாவது கொடுக்குமாறு மன்னர்பிரான் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்வதென்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். மன்னர்பிரான் அரசாங்கம் இதை வழங்குவதற்குத் தயாராயில்லாவிட்டால், புதிய நிர்வாக சபையில் அதில் எனக்கு ஓர் இடம் வழங்கப்பட்டாலும் – நான் ஓர் உறுப்பினராக இருக்க முடியாது என்பதை மன்னர் பிரான் அரசாங்கம் உணர வேண்டும்.

கடந்த சில காலமாக, தீண்டப்படாதவர்கள், தமது அரசியல் உரிமைகள் முழுமையாக அங்கீகரிக்கப்படுவதை எதிர்பார்த்து வந்துள்ளனர். மன்னர்பிரான் அரசாங்கத்தின் முடிவினால் அவர்கள் அதிர்ச்சி யடைவார்கள் என்பது குறித்து எனக்கு ஐயமில்லை. கண்டனம் தெரிவிக்கும் முகத்தான், புதிய அரசுடன் எவ்வித உறவும் கொள்வதில்லை என்று தாழ்த்தப்பட்ட சாதியினர் முழுவதும் முடிவு செய்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிற ஏமாற்றத்தின் விளைவாக நாம் பிரிந்து செல்ல வேண்டியேற்படும் என்று திடமாக நம்புகிறேன்.

மன்னர்பிரான் அரசாங்கத்தின் பிரேரணைகள் திருத்தி அமைக்கப்படாவிட்டால், அதன் விளைவாக இவ்வாறுதான் ஏற்படும் என்று எதிர்ப்பார்க்கிறேன். என்னைப் பொறுத்தமட்டிலும் நான் முடிவு செய்துவிட்டேன். இறுதி நிலவரம் இதுவல்ல என்று எனக்குக் கூறப்படலாம். இது ஓர் இடைக்கால ஏற்பாடுதான் என்று கூறலாம்.

நான் நீண்ட காலமாக அரசியலில் இருந்து வருகிறேன். சலுகைகளும், இணக்க ஏற்பாடுகளும் ஒரு தடவை வழங்கப்பட்டு விட்டால் அவை நிரந்தர உரிமைகளாக வளர்ந்துவிடும் என்பதையும் ஒரு தடவை ஒத்துக்கொள்ளப்படும் தவறான உடன்பாடுகள் வருங்கால உடன்பாட்டுக்கு முன்னுதாரணங்களாகி விடுகின்றன என்பதையும் நானறிவேன்.

எனவே என்னுடைய காலடியில் புல் முளைப்பதற்கு என்னால் அனுமதிக்க முடியாது. சரியாக மதிப்பிடுவதற்கு எனக்கு ஆற்றல் இருக்குமானால், இடங்கள் பரிவர்த்தனை, ஒரு தற்காலிக ஏற்பாடாகத் தொடங்கிய போதிலும், நிரந்தரமானதாகப் போய் முடியும். இறுதியில் வருந்துவதற்கு பதிலாக, தொடக்கத்திலேயே என்னுடைய எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டியது அவசியம் என்று உணர்கிறேன்.

வருங்கால இந்திய சர்க்காரில் நான் இல்லாமற் போவதையோ, தாழ்த்தப்பட்ட சாதியினர் இடம் பெறாமற் போவதையோ கூட மன்னர் பிரான் அரசாங்கம் பொருட்படுத்தாமலிருக்கலாம். இதன் விளைவாக இந்த நாட்டிலுள்ள பிரிட்டிஷ் அரசுக்கும் ஷெட்யூல்டு சாதியினருக்கும் இடையில் பிளவு ஏற்படுவதைப் பற்றி வருத்தப்படாமலுமிருக்கலாம்.

ஆனால் இந்த விஷயம் பற்றி நான் சொல்ல வேண்டியிருப்பதை மன்னர் பிரான் அரசாங்கம் தெரிந்து கொள்ள வேண்டியது நியாயமானதேயாகும். எனவே நிர்வாக சபையில் தாழ்த்தப்பட்ட சாதியினரின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டுமென்ற என்னுடைய பிரேரணையையும், அவர்களால் என்னுடைய பிரேரணை நிராகரிக்கப்பட்டால், நான் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கை பற்றியும் மன்னர்பிரான் அரசாங்கத்திற்குத் தெரிவிக்குமாறு உங்களை கேட்டுக் கொள்கிறேன்.

உண்மையுள்ள,

பி.ஆர்.அம்பேத்கர் 

(டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் - தொகுதி 19)