அமைச்சர் குழுவில் இடம்பெற்ற மத்திய அமைச்சர்கள் பட்டியல் விவரம் வருமாறு: 1. நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி 2. விவசாய அமைச்சர் சரத் பவார் 3. ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி 4. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் 5. ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி 6. சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி 7. புதுப்பிக்கத்தக்க எரி சக்தி துறை அமைச்சர் பரூக் அப்துல்லா 8. ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் 9. மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் 10. சமூக நீதித் துறை அமைச்சர் முகுல் வாசினிக் 11. சிறுபான்மையினர் விவகார இணை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகிய 11 அமைச்சர்கள் கொண்ட குழுவை தில்லி அரசு நியமித்தது. இந்தக் குழு தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் தவிர்த்து மற்ற சாதிகள் வாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த என்னென்ன நடைமுறைகளைக் கையாளுவது என்பது பற்றி ஆராய்ந்து பிரதமரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதன் அடிப்படையிலேயே சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தச் சாதிவாரிக் கணக்கெடுப்பை மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்த்து நடத்தாமல் தனியே நடத்துவதற்கு அரசு முன்வைக்கும் வாதம், பொதுக் கணக்கெடுப்பின் போது மக்கள் தெரிவிக்கும் சாதிக்குச் சான்றாதாரம் ஏதும் கிடையாது. எனவே மக்கள் சொல்வதைக் கேட்டு அப்படியே குறித்துக் கொள்ள வேண்டியதுதான். மேலும் அது ரகசியமானது. வெளியிடக்கூடாது. எனவே தான், அதற்குத் தனியே கணக்கெடுப்பு என்கிறது.

எதுவானாலும் நாம் விழிப்புடன் இருந்து அரசு அறிவித்தபடி அடுத்த ஆண்டு ஜூன் தொடங்கி செப்டம்பருக்குள் சாதிவாரிக் கணக்கெடுப்பை எடுத்து முடிக்கவும், விகிதாச்சார அடிப்படையில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கவும், தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். அடித்தட்டு மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.

பிரித்தானிய ஆட்சியில் 1871 இல் தொடங்கப் பட்டு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை என எடுக்கப் பட்டு வரும் இந்திய மக்கள் தொகைக் கணக் கெடுப்பு. இந்த 1911 ஆம் ஆண்டு மிகுந்த சர்ச்சைக் குள்ளாகியிருக்கிறது. இக்கணக்கெடுப்பை சாதி வாரியாக எடுக்கவேண்டும் என ஒரு சாராரும், அப்படி சாதிவாரியாகவெல்லாம் எடுக்கக் கூடாது என மற்றொரு சாராரும் கோரி வருகின்றனர்.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் அந்நீதிமன்றம் கணக்கெடுப்பை சாதிவாரியாகவே எடுக்க வேண்டும் எனத் தீர்ப்பும் அளித்துள்ளது.

இந்நிலையில் தில்லி அரசு இக்கணக்கெடுப்பை சாதிவாரியாக நடத்துவதா வேண்டாமா என முடிவு செய்ய அமைச்சர் குழு ஒன்றை நியமித்து அதன் பரிந்துரைகளின் பேரில் இது பற்றி முடிவு செய்ய இருப்பதாகத் தெரிவித்து அக்குழுவிற்கான உறுப்பினர் பட்டியலையும் அறிவித்தது.

இக்குழுவினது முடிவின்படி எதிர்வரும் 1911 மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் திட்டமிட்ட படி அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் எடுத்து முடிப்பது எனவும் அதன்பின் 2011 ஜூன் தொடங்கி செப்டம் பருக்குள் சாதிவாரிக் கணக்கெடுப்பைத் தனியே எடுத்து முடிப்பது எனவும் கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் இச்சாதி வாரிக் கணக்கெடுப்பு குறித்து சிந்தித்து கருத்து கூறவேண்டியது சமத்துவ சிந்தனையாளர்கள், சமூக நீதி ஆர்வலர்களது முக்கிய கடமையாகிறது. இதில் முதலில் சாதி வாரியான கணக்கெடுப்பே வேண்டும் என்பவர்கள் முன் வைக்கும் வாதங்களைக் கேட்போம்.

1.     இந்திய சமூக அமைப்பே சாதிவாரியாகத் தான் பிரிந்திருக்கிறது. இதனால்தான், சமூகத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களும் கல்வி, வேலை வாய்ப்புகளில் உரிய பங்குபெற வேண்டும் என்கிற நோக்கிலேயேதான் இடஒதுக்கீடு முறை கொண்டுவரப்பட்டது. ஆனால், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு சமூகத்தைத் தாழ்த்தப் பட்டோர், தாழ்த்தப்பட்டோர் அல்லாதோர் என்று இரு பிரிவினராக மட்டுமே பார்த்து அதை மட்டுமே பதிவு செய்கிறதே தவிர இதில் பிற்படுத்தப் பட்ட மக்கள் என்று எந்தத் தனித்த பிரிவும் இல்லை. இது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

2.     பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வியில் இட ஒதுக்கீடு பற்றிய வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதி மன்றம் மக்கள் தொகையில் பிற்படுத்தப்பட்டோர் விழுக்காடு எவ்வளவு என்பதை அறிய சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தாத நிலையில் அவர்களுக்கு எந்த அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவீர்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளது. எனவே அவ் விழுக்காடு எவ்வளவு என்பதை அறிய சாதிவாரிக் கணக்கெடுப்பு கட்டாயம் தேவை.

3.     சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது சுதந்திரத்திற்கு முந்தைய பிரித்தானிய ஆட்சியில் 1931 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது எடுக்கப்பட்டதுதானே தவிர, அதன் பிறகு சாதிவாரிக் கணக்கெடுப்பே எடுக்கப்படவில்லை. 1947இல் சுதந்திரம் பெற்ற இந்தியா 1948இல் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புச் சட்டத்தை இயற்றி அதன்படியான முதல் கணக்கெடுப்பை 1951இல் நடத்தியது. இச்சட்டத்தின்படி தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் அல்லாதார் என்பதாகத்தான் கணக்கெடுக்கப்படுகிறதே தவிர, மற்றபடி பிற்படுத்தப் பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் என்னும் மக்கள் பிரிவினர்க்கு எந்தப் பதிவும் கணக்கெடுப்பில் இல்லை. 1931க்குப் பிறகு 80 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் தற்போது சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் இருப்பும், அவற்றின் தகுநிலையும் அறிந்து அப்பிரிவு மக்களுக்கும் உரிய இடம் வழங்க வேண்டியது அரசின் கடமை. ஆகவே அதற்கு இந்த சாதி வாரிக் கணக்கெடுப்பு மிகவும் அவசியம் என்பதாகும்.

இதற்கு எதிராக சாதிவாரிக் கணக்கெடுப்பே வேண்டாம் என்பவர்கள் முன் வைக்கும் ஒரே வாதம் சாதிவாரிக் கணக்கெடுப்பு, சாதிய உணர்வு களைத் தூண்டிவிடும், அவற்றைக் கூர்மைப்படுத்தி விடும், என்பதோடு அது மக்களிடையே பிரிவினை எண்ணத்தை ஏற்படுத்தி இந்தியன் கருத்தாக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும், ஊறு விளைவிக்கும், இந்திய ஒற்றுமையைச் சீர்குலைக்கும் என்பதுதான்.

சரி. இந்த இரு தரப்பு வாதங்களையும் நாம் சற்றுச் சீர்தூக்கி ஆராய்வோம்.

இந்திய சமூகம் என்பதே சாதிகளாகத்தான் பிரிவுபட்டிருக்கிறது. இதுவும் படிநிலை ஏற்றத் தாழ்வுகளுடனேயே அதாவது படிநிலை ஆதிக்கமும் படிநிலை அடிமைத்தனமும் கொண்டதாகவே இருக்கிறது. இப்பிரிவுகளில் சாதிகளின் எண்ணிக்கை எத்தனையானாலும் சமூக இருப்பு மற்றும் தகுநிலை நோக்கில் அவற்றைத் தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப் பட்டோர் அல்லாதார் எனவும், தாழ்த்தப்பட்டோர் அல்லாதோரில் பிற்படுத்தப்பட்டோர், உயர்சாதி யினர், எனவும் பிற்படுத்தப்பட்டோரிலும் சில சாதியினர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் எனவும் தனியாக வகைப் பிரிவு செய்யப்பட்டு அதன் அடிப் படையிலேயே கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

இத்தொகுப்பிலும் உள் பிரிவுகளில் உள்ள மக்களுக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை என்று தான் இதில் உள் ஒதுக்கீடு கோரிக்கையும் எழுப்பப் படுகிறது. இந்நிலையில் இப்படிப்பட்ட சிக்கல்கள் எதுவும் எழாமல் அவற்றைத் தவிர்க்கும் நோக்கோடு தான் அந்தந்த சாதிக்கும் அது அதற்கு உரிய இடங் களை வழங்கும் வகையில் சமூகத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பை நிகழ்த்தி ஒவ்வொரு சாதிப் பிரிவினரும் எவ்வளவு உள்ளனர் என்பதை அறிந்து அவரவர்க்கும் உரிய பங்கை அளிக்க வேண்டும் என்ற நோக்கில்தான் விகிதாச்சார இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையும் முன் வைக்கப்படுகிறது.

அதாவது சமூகத்தைத் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், உயர் சாதியினர் என்கிற தொகுப்பாக மட்டும் பார்க்காமல் ஒவ்வொரு தொகுப்பிலும் உள்ள சாதிப்பிரிவு மக்கள் தொகையையும் கணக்கிட்டு அம்மக்கள் பிரிவை அவரவர் சமூக இருப்பு, தகு நிலை, அடிப்படையில் வகைப் பிரிவு செய்து, அவரவர் எண்ணிக்கை விகிதத்தின் அடிப்படையில் அவ்வப்பிரிவு மக்களுக்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கிவிட வேண்டும். இப்படி வழங்கிவிட்டால் எந்தச் சிக்கலுக்கும் இட மில்லை. ஒரு பிரிவு மக்களது இடங்கள் மற்றொரு பிரிவினால் பறிக்கப்படுகிறது. ஒரு பிரிவு மற்றொரு பிரிவின் மேல் ஆதிக்கம் செலுத்துகிறது என்கிற பேச்சுக்கே இடமில்லை. எனவே அரசு இந்தக் கோரிக்கையை ஏற்று இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் சமூக நீதி ஆர்வலர்களின் நீண்ட நாளைய கோரிக்கை. இந்தக் கோரிக்கையை நோக்கிப் பயணிப்பதற்காகத்தான் இவர்கள் சாதி வாரிக் கணக்கெடுப்பைக் கோருகிறார்கள். வலியுறுத்து கிறார்கள். எனவே சமூக நீதி நோக்கில் இது சரியானது தான். நியாயமானது தான் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஆனால் இப்படியெல்லாம் செய்தால், சமூகம் மேலும் மேலும் பிளவுபடாதா, சாதிய உணர்வுகள் மேலும் வலுப்படாதா, இது இந்திய ஒற்றுமைக்கு எதிராகப் போகாதா என்பதுதான் சாதிவாரிக் கணக்கெடுப்பு கூடாது என்பவர்களின் ஒரே வாதம்.

முதலாவதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் மூலமாகத்தான் மக்கள் சாதியுணர்வு பெற வேண்டும். அவ்வுணர்வுகள் கூர்மையடைய வேண்டும் என்பது ஏற்கத்தக்க வாதமல்ல. காரணம் சமூகத்தில் மக்கள் ஏற்கெனவே சாதிவாரியாகத்தான் பிளவு பட்டுக் கிடக்கிறார்கள். இடஒதுக்கீடு நடைமுறைக்காக அரசு அவர்களைத் தொகுப்பாக வைத்தாலும், ஒவ்வொரு தொகுப்பிலும் உள்ள உள் பிரிவினரும் தங்களுக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை என்று தான் உள் ஒதுக்கீடும் கேட்டு வருகின்றனர். எனவே இந்த சாதி உணர்வு மக்கள் தொகைக் கணக் கெடுப்புக்கு முன்பாகவே இருந்து வருகிறது என்பதே உண்மை. இந்த உண்மையைப் புரிந்து அதற்குத் தீர்வு வழங்கிவிட்டால் அது சாந்தமடைந்துவிடும். மாறாக மறுதலித்தால் அப்போதுதான் இந்த உணர்வு மேலும் கூர்மையடையவும், வலுப்படும், தீவிரத்தோடு பொங்கி எழும்.

அடுத்து, சாதிய உணர்வு தங்கியிருப்பதும் வலுப் படுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பிலோ, அல்லது பள்ளிச் சான்றிதழ்களிலோ அல்ல. மாறாக அது அக மணமுறை எனப்படும் சொந்த சாதித் திருமணத்திலேயே தங்கியிருக்கிறது. அதன் வழியாகவே சாதி புதுப்பிக்கப்படுகிறது. தலைமுறை தலைமுறைக்கும் கை மாற்றித் தரப்படுகிறது.

மனித சமூகத்தில் பல கட்சிகள் இருந்தாலும், பல அமைப்புகள் இருந்தாலும், தொழில் பிரிவுகள் இருந்தாலும், இன்றும் நூற்றுக்கு 95 விழுக்காட்டுத் திருமணங்கள் சொந்த சாதிக்குள்ளேயே நடத்தப் படும் அகமண முறைகளாகவே நீடிக்கின்றன. இந்த அகமணமுறை ஒழியாத வரை, ஒழிக்கப்படாத வரை சாதி அழியாது. சாதிய உணர்வுகள் அழியாது.

பள்ளி கல்லூரிச் சான்றிதழ்களில் சாதி போட்டுக் கொள்ளவில்லையா, சாதி அடையாளத்தைக் காட்ட வில்லையா என்றால் அது தங்கள் இடஒதுக்கீட்டு உரிமையைப் பாதுகாப்பதற்காகப் போட்டுக் கொள்ளப் படுகிறதே தவிர, சாதிய அடையாளத்தைப் பாது காத்துக் கொள்ளவோ, அதன் மூலம் இல்வாழ்க்கைத் துணையைத் தேடவோ அல்ல. அதை வைத்து யாரும் எவருக்கும் பெண்ணோ, பிள்ளையோ கொடுத்து விடப்போவதில்லை கொடுப்பதுமில்லை. அது தனியே பண்பாட்டுத் தளத்தில் நிகழ்வது. இப்படிச் சான்றிதழில் குறிப்பிடப்படும் சாதி இடஒதுக்கீட்டுப் பலனைப் பாதுகாப்பதனால்தான் பண்பாட்டுத் தளத்தில் புரட்சிகரமாக இயங்குபவர்கள் கூட சான்றிதழில் சாதி போட்டுக் கொள்கிறார்கள், போட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் நேர்கிறது.

இதை வைத்து வேறு சிலர் என்ன கேட் கிறார்கள். சாதி ஒழிப்பு சமூக சமத்துவம் எல்லாம் பேசுகிறீர்கள், இப்படிப் பேசி விட்டுச் சான்றிதழ் களில் மட்டும் சாதி போட்டுக் கொள்கிறீர்களே இது என்ன நியாயம் என்கிறார்கள்.

நியாயம்தான், காரணம் இன்றைய இந்திய, தமிழ்ச் சமூகத்தில் ஒருவர் தான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர் ஏதோ ஒரு சாதியில் தான் பிறக்கிறார். பிறக்க வைக்கப்படுகிறார். அது கீழ்ச்சாதியிலும் இருக்கலாம், மேல் சாதியிலும் இருக்கலாம். இதில் மேல் சாதியில் பிறக்கிறவரைப் பற்றிக் கவலையில்லை. அவர் வறுமையில் வாடினாலும் அவரது சமூகத் தகுநிலை உயர்வாகவே இருக்கிறது. ஆனால் கீழ்ச் சாதியில் பிறந்த ஒருவர் அவர் எல்லா நிலையிலும் கீழானவராகவே இருக்கிறார். ஒரு சிலர் பொருளியல் ரீதியில் வளமாக இருந்தாலும் அவர்களுக்குரிய சமூகத் தகுநிலை கீழானதாகவே இருக்கிறது. எனவே இந்தக் கீழ் நிலையிலிருந்து அவர் உயர்நிலைக்கு அதாவது மற்றவர்களோடு சம நிலை அடைவதற்கு, தான் கீழ் நிலையில் இருப்பதை அறிவிக்க வேண்டியது அவசியமாகிறது. அப்படி அறிவிக்காவிட்டால் அவர் மேல் நிலைப்பட்டவர் களோடு சேர்ந்து சமநிலைக்கு வந்துவிட்டதாகவே கொள்ளப்படுவார்.

அதாவது உண்மையாகவே இருப்பு கீழ்நிலைப் பட்டதாக இருந்தாலும் இவ்வுண்மைக்குப் புறம் பாக அவரது இருப்பு மேல் நிலைப்பட்டவர் களோடு சேர்ந்து சமநிலையில் இருப்பதாகவே கொள்ளப்படும். இது அவரது உரிமைக்கு இழப்பு. அவருக்குச் செய்யப்படும் துரோகம், வஞ்சகம், சூழ்ச்சி, இதைத்தான் சாதி ஆதிக்க சக்திகள் செய்ய முனைந்து வருகின்றன.

இதனால்தான் பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்களைப் போன்ற சமநிலைக்கு, தங்களுக்கு இணையாக மேல்நிலைக்கு வருவதை விரும்பாத மேல் சாதி ஆதிக்க சக்திகள் பிற சாதி மக்களைப் பார்த்து ‘சாதி வேண்டாம் என்பவர்கள் ஏன் சாதி போட்டுக் கொள்கிறீர்கள்’ என்று கேட்கிறார்கள். உண்மையில் இவர்கள் சொல்வது போல் எவரும் சாதி போட்டுக் கொள்ளாமல் பள்ளிகளில், கல்வி நிறுவனங்களில் சேரலாம். அப்படிச் சேர சட்ட பூர்வமாக எந்தத் தடையும் இல்லை. ஆனால் அப்படிச் சேர்ந்தால் அவர் தனது விருப்பமில்லாமலேயே உயர் சாதியாகிவிடுவார். இதனால் எதிர் காலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக வழங்கப் படும் எந்த உரிமைகளையும் சலுகைகளையும் பலன் களையும் அவர் கோர முடியாது. அதாவது சமூக இருப்பில் அவர் பிற்படுத்தப்பட்டவராக இருந்தும் சான்றிதழில் அதற்கான பதிவு இல்லாததால் அவர் உயர் சாதியினராகவே கருதப்படுவார். இதனால் உயர் சாதியினர் எவரும் அவருக்குப் பெண்ணோ பிள்ளையோ தந்து தங்கள் சாதியில் மணம் செய்து வைத்துவிடப் போவதில்லை. அவரைத் தங்கள் சாதியில் தங்களோடு சேர்த்துக் கொள்ளப் போவது மில்லை. அவருக்குரிய சமூகத் தகுநிலை எப்போதும் போலப் பிற்படுத்தப்பட்டதுதான். ஆனால் அதை வெளிப்படுத்தியிருந்தாலாவது அதற்கு உரிய உரிமைகள் சலுகைகளாவது கிடைத்திருக்கும். தற்போது அதுவும் போயிற்று. அதாவது இரண்டு வகையிலும் இழப்பு.

இப்படிப்பட்ட சூழ்ச்சியில் வெற்றி கொள்ளத் தான் மேல் தட்டுப் பிரிவைச் சேர்ந்த சாதி ஆதிக்க சக்தியினர் கீழ்நிலையில் உள்ள மக்களைப் பார்த்து எதற்குச் சாதி அடையாளம் என்கிறார்கள். அதனால் தான் அதைத் தவிர்த்து சாதியற்றவர் என்று போட்டுக் கொள்ளுங்கள் என்கிறார்கள். அதாவது ஆதிக்கத்தில் எங்களுக்குப் போட்டியாகத் தனியாக இடங்கள் கோரி எங்களுக்குச் சமமான நிலைக்கு வரமுயலாமல் காலா காலத்துக்கும் எங்களுக்கு அடிமைப்பட்டவர் களாகவே இருங்கள் என்கிறார்கள்.

இந்தச் சாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டாம் என்கிற கருத்தை முன் வைப்பவர்களும், அதை ஆதரிப்பவர்களும் யார் என்று பார்த்தாலே இந்த உண்மை தெரிந்துவிடும். சாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டாம் என்பவர்கள் இந்துத்துவ அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.ஸும், இந்திய தேசிய ஆதிக்க சக்தி களும் மற்றும் அக்கருத்துக்கு இரையாகிப் போனவர் களும்தான். இவர்கள்தான் ஏதோ சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதால் தான் சாதிய உணர்வுகள் தலை தூக்கிவிடும் என்பது போலப் பசப்புகிறார்கள்.

அதேபோலவேதான் இந்திய ஒற்றுமைபற்றிப் பேசுபவர்களும், ஏதோ, இந்திய ஆட்சிப் பரப்பில் வாழ்பவர்கள் எல்லாம் ஏற்கெனவே மிகுந்த ஒற்றுமையோடு வாழ்வது போலவும், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தினால்தான் அதுதான் இந்த ஒற்றுமைக்கு வந்து வேட்டு வைத்து விடும் என்பது போலவும் கதையளக்கிறார்கள். தமிழ்நாட்டுக் காவிரி நீரை கர்நாடகத்தான் மறுக்கிறான். முல்லைப் பெரியாறு ஆற்று நீர் உரிமையை கேரளத்தான் மறுக்கிறான். பீகார்க் காரன் அகில இந்தியத் தேர்வு எழுத மும்பை போனால் மாராட்டியன் உதைக்கிறான். மராட்டியன் தேர்வு எழுத பங்களூர் போனால் கர்நாடகன் அடிக்கிறான். பீகார்க் காரன் அஸ்ஸாம் போனால் அசாமியன் விரட்டு கிறான். இப்படி நாடெங்கும் துண்டு துண்டாய் மொழிவாரி இனவாரி மோதல்கள் நடந்து சந்தி சிரிக்கிறது. இந்திய தேசியம். கந்தலாகி நார் நாராய்க் கிழிகிறது இந்திய ஒற்றுமை. இந்த லட்சணத்தில் ஏதோ சாதிவாரிக் கணக்கெடுப்பு வந்துதான் எல்லாவற்றையும் கெடுத்துவிடும் என்பது போல மாய்மாலம் செய்கின்றனர் ஆதிக்க சக்தியினர். இந்தச் சூழ்ச்சியை நல்லுணர்வாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்திய சமூகத்தில் சாதிகளின் இருப்பிற்கான வேர்கள் என்ன, அதன் ஒழிப்பிற்கான வழிமுறைகள் என்ன என்று ஆராய்ந்து அதை நிறைவேற்று வதற்கான நடவடிக்கைகள், செயல் திட்டங்கள் என்பது வேறு. அதே போல இந்தியா பிளவுபட்டு விடுமோ என்று அஞ்சி அது ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்று எவரும் விரும்புவார்களேயானால் இச்சிக்கலுக்கான மூலவேர்களும், அதற்கான காரணங்களும், என்ன என்று ஆராய்ந்து அதைக் களைவதற்கான செயல் திட்டங்கள் என்பதும் வேறு. எனவே இந்த வேறுபாடுகளைப் புரிந்தே இவற்றைக் கவனத்தில் கொண்டே இந்தச் சாதி வாரிக் கணக்கெடுப்புச் சிக்கலை எவரும் அணுக வேண்டுமேயல்லாது அதைவிட்டு இந்தச் சாதி வாரிக் கணக்கெடுப்பேதான் அனைத்துச் சிக்கல் களுக்கும் காரணம் என்பதே போல ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கக் கூடாது.

அதேபோலவே, அதாவது, அனைத்துப் பிரச்சினைக்கும் காரணமே சாதிவாரிக் கணக்கெடுப்புகள் என்பதே போல அனைத்துப் பிரச்சினைக்கும் தீர்வும் அதாவது சமூக ஏற்றத்தாழ்வு நீக்கம், சமூக சமத்துவம் ஆகிய அனைத்திற்கும் இதுவேதான் தீர்வு என்றும் கருதி இந்த இரண்டு முனைக் கோடிப் போக்கிற்கும் பலியாகாமல் நாம் நடுநிலையோடு நின்று இப்பிரச்சினையை ஆராய வேண்டும்.

இந்த நோக்கில் சமூகத்தில் தற்போது நிலவும் சாதியப்படிநிலை ஏற்றத்தாழ்வுகளைக் களையவும் சமூகத் தகுநிலைப் பாகுபாடுகளை நீக்கவும் சாதி வாரிக் கணக்கெடுப்பு என்பதும் அதனடிப்படை யிலான இடஒதுக்கீடு மற்றும் நலத்திட்டங்கள் என்பதும் மிகவும் முக்கியம். இது இச்சிக்கலுக்கான தீர்வை நோக்கிய ஒரு பயணம், அதன் முன்னேற்றத்தில் ஒரு படிக்கல். எனவே இந்த மட்டத்தில் இதைப் புரிந்து நாம் இந்தச் சாதிவாரிக் கணக்கெடுப்பை ஆதரிக்க வேண்டும்.

தற்போது வட மாநிலங்களில் ராஷ்டிரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம், சமாஜ் வாடிக் கட்சி ஆகிய கட்சிகள் சாதிவாரிக் கணக்கெடுப்பை ஆதரிக்கின்றன. வலியுறுத்துகின்றன. காங்கிரஸ் கட்சியிலும் கணிசமான பகுதி இதை ஆதரிக்கிறது. சாதிவாரிக் கணக்கெடுப்பே வேண்டாம் என்கிற ஆர்.எஸ்.எஸ். நிலைக்கு முரண்பட்டாலும் பரவா யில்லை எனப் பிற கட்சிகளைத் தேர்தல் களத்தல் சந்திக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் தொடக்கத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பை ஆதரிப்பதாகக் கூறிய பா.ஜ.க. தற்போது தன் நிலையிலிருந்து நழுவி அமைச்சர் குழு முடிவை ஏற்பதாக அறிவித்து உள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை பெரும்பாலான எல்லாக் கட்சிகளுமே இடஒதுக்கீட்டை, சமூக நீதியை ஆதரிக்கிற கட்சிகள் என்பதனால் இங்குச் சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பதற்கு எதுவும் பிரச்சினை இல்லை. ஆக இந்திய அளவிலும் தமிழக அளவிலும் பெரும்பான்மையான கட்சிகள் இதற்கு ஆதரவாக இருக்கின்றன என்பது தெளிவு. எனவே சாதிவாரிக் கணக்கெடுப்பே வேண்டும் என்கிற மக்கள் குரலை தில்லி அரசு மதிக்க வேண்டும். இதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சர் குழுவும் இதைக் கவனத்தில் கொண்டே அதற்கான பரிந் துரையைச் செய்துள்ளது.

இறுதியாக ஒன்று. இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புச் சட்டம் 1948, ‘மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது தெரிவிக்கப்படும் தகவல்கள் தனிமனிதத் தகவல் சம்பந்தப்பட்டவை, ரகசிய மாகப் பாதுகாக்கத்தக்கவை. எனவே அது மற்றவர்களின் பார்வைக்கோ, ஆய்வுக்கோ, வேறு எதற்கும் சான்றாவணமாகவோ, முன்வைக்கப்படக் கூடாதவை’ எனக் கூறுகிறது.

எனவே கணக்கெடுப்பின்போது சாதியைச் சொன்னால் என்ன, சொல்லாவிட்டால்தான் என்ன, பள்ளியில் சேரும் போது சாதியைச் சொன்னால் போதாதா அதை வைத்து இடஒதுக்கீட்டு உரிமையைப் பிற சலுகைகளைப் பெற முடியாதா எனச் சிலர் கேட்கலாம். நியாயம் பெறலாம்; பெற வாய்ப்புண்டு. என்றாலும் இப்போது நாம் சாதியைச் சொல்லாமல் சாதிவாரிக் கணக்கெடுப்பை வலி யுறுத்தாமல் விடுவது, நிலவும் மக்கள் தொகையில் அந்தந்த சாதிகளின் எண்ணிக்கைத் தொகையும் எவ்வளவு உள்ளது, அதற்கு எவ்வளவு விகிதத்தில் இடஒதுக்கீடு வழங்குவது என்பதை அறிய வொட்டாமலும், அதை நிர்ணயக்கவிடாமலும் தடுத்து அதற்கு முட்டுக் கட்டை போடுவதாகவே ஆகிவிடும். இது விகிதாச்சார இடஒதுக்கீடு என்கிற கோரிக்கையை முன்னெடுத்துச் செல்ல விடாமல் முடக்கவே வழி வகுக்கும். மொத்தத்தில் இது நம் தலையில் நாமே மண்ணைவாரிப் போட்டுக் கொள்வதற்கு ஒப்பாகும். எனவே நாம் இதற்குப் பலியாகாமல் விழிப்புடன் இருக்கவேண்டும்.

அதோடு தற்போதும் இக்கணக்கெடுப்பில் தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் அல்லா தோர் என்கிற இவ்விரு அடையாளமும் பதிவு செய்யப்படும்போது, கணக்கெடுப்பால்தான் சாதி யுணர்வு கூர்மையடைகிறது என்றால் இப்போது மட்டும் தாழ்த்தப்பட்டோர் - அல்லாதோர் என்கிற பாகுபாடு கூர்மையடையாதா, பிற்படுத்தப்பட்ட மிகப் பிற்படுத்தப்பட்டோரைக் குறிப்பிட்டால் மட்டும்தான் சாதியுணர்வு கூர்மையடையுமா? அல்லது தாழ்த்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் அல்லாதார் என்கிற உணர்வு கூர்மையடைந்தால் பரவாயில்லை அல்லது கூர்மையடையட்டும் என்று அரசு கருதுகிறதா என்பதெல்லாம் கேள்விகளாகும். எனவே, இந்த அபத்த வாதத்தை உணர்ந்து சமூகத்தில் இத்தாழ்த்தப்பட்டோர் அல்லாதோரின் பிற்படுத்தப் பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் அடை யாளம் பதிவாகாமல் விடப்படுவதோ, அதே போலத் தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்டு சமூகத்தின் உட் பிரிவு சாதிகள் பதிவாகாமல் மறுக்கப்படுவதோ எந்த வகையிலும் நியாயமில்லை என்பதையும் சமூக நீதி ஆர்வலர்கள் சமத்துவ நோக்குடையோர் சிந்திக்க வேண்டும். இந்த அடிப்படையில் அனைவரும் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை ஆதரிக்க வேண்டும். அதை வலியுறுத்த வேண்டும்.

Pin It