தேவையான பொருட்கள்:

வௌவால் மீன் - 2
இஞ்சி - 2 மேசைக்கரண்டி
பூண்டு - 3 மேசைக்கரண்டி
மஞ்சள் - அரைத் தேக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
எண்ணெய் - 150 மி.லி.
கடுகு - ஒரு தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - அரை கப்
பச்சை மிளகாய் - 4
மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்புத்தூள் - ஒரு தேக்கரண்டி
கிராம்பு - 2
ஏலப்பொடி - அரைத்தேக்கரண்டி
தேங்காய் - ஒன்று
வினிகர் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது 

செய்முறை:

மீனை நன்கு கழுவி துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். நடுத்தரமான சைஸில் சுமார் 12 துண்டுகள் வருமாறு வெட்டிக் கொள்ள வேண்டும். புளியை அரை கப் தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து கரைத்துக் கொள்ள வேண்டும். அதில் உப்பு மற்றும் மீன் துண்டங்களைப் போட்டு சுமார் 15 நிமிடங்களுக்கு ஊறவிட வேண்டும்.

தேங்காயைத் துருவி, தேங்காய் நீரைச் சேர்த்து முதல் பால் அரை கப் அளவிற்கும், இரண்டாம் பால் அரை கப் அளவிற்கும் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை தோலுரித்து நறுக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சி, மற்றும் பூண்டினைத் தோலுரித்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாயினைக் கழுவி சுத்தம் செய்து, காம்புகளை நீக்கி, இரண்டாகக் கீறி விதைகளை நீக்கிவிட்டு, சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு தவாவில் எண்ணெய் விட்டு, கடுகு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். நறுக்கின இஞ்சி, பூண்டினைச் சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு வதக்க வேண்டும். பிறகு மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து அரை நிமிடம் கலக்க வேண்டும். அதன்பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

மல்லித்தூள், சோம்புத்தூள், ஏலப்பொடி மற்றும் பொடித்த கிராம்பு ஆகியவற்றைப் போட்டு ஒரு நிமிடம் வதக்க வேண்டும். இப்போது, இரண்டாவதாக எடுத்த தேங்காய்பாலினை ஊற்றி, குறைந்த தீயில் 5 நிமிடங்கள் வேகவிட வேண்டும்.

அதன் பிறகு, மீன் துண்டங்களைப் போட்டு, கொதிக்க விட வேண்டும். கொதிக்க ஆரம்பித்ததும் வினிகர் விட்டு, கூடவே முதலில் எடுத்த தேங்காய் பாலினையும் ஊற்றி மூடி வைத்து வேகவிட வேண்டும். தீயைச் சற்று குறைத்து வைத்து மீன் நன்கு வேகும் வரை வைத்து இருக்க வேண்டும். வெந்ததும் இறக்கிப் பரிமாற வேண்டும்.