தேவையான பொருட்கள்:

மட்டன் - கால் கிலோ
சிவப்பு பூசணி (போப்ளா) - கால் கிலோ
பச்சைமிளகாய் - 2
தயிர் - அரை கப்
வெங்காயம் - 150 கிராம்
கரம் மசாலாத்தூள் - 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரைத் தேக்கரண்டி
பூண்டு - 6 பல்
இஞ்சி - ஒரு அங்குலத்துண்டு
பிரிஞ்சி இலை - 1
நெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு 

செய்முறை:

ஆட்டுக்கறியைச் சுத்தம் செய்து ஒரு அங்குலத் துண்டுகளாய் நறுக்கிக் கொள்ள வேண்டும். நறுக்கிய துண்டங்களை தயிரில் சுமார் ஒரு மணிநேரம் ஊறவிட வேண்டும். வெங்காயம், இஞ்சி, பூண்டு, மஞ்சள்தூள் மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் நெய் விட்டு சூடானதும் அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு நன்கு சிவக்க வதக்க வேண்டும். சிவந்ததும் அதனுடன் கரம் மசாலா பொடியைச் சேர்க்க வேண்டும். 

பிரிஞ்சி இலை, முழு பச்சைமிளகாய் மற்றும் தயிரில் ஊறிய மட்டன் ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். மட்டன் நன்கு சிவக்கும் வரை வேகவைத்து பிறகு தண்ணீர் சேர்த்து குறைந்த தீயில் வேகவிட வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் பூசணிக்காயைத் தோல் செதுக்கி வேகவைத்து எடுத்து நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். மசித்து வைத்துள்ள பூசணிக்காயை வெந்துகொண்டிருக்கும் கறியுடன் சேர்த்து குழம்பு கெட்டியாகும் வரை வேகவிட வேண்டும். குழம்பு கெட்டியாகி வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்க வேண்டும்.