தேவையானவை:

வாழைத்தண்டு................1/2 அடி நீளம்
ரொம்ப புளிக்காத தயிர்..2 கப்
சின்ன வெங்காயம்...........4
பச்சை மிளகாய்/சிவப்பு மிளகாய் ...1
இஞ்சி தேவையானால்.....1 /4 இன்ச் நீளம்
பெருங்காயம்.......................ஒரு சிட்டிகை
சீனி.........................................1 /4 தேக்கரண்டி
எண்ணெய்...........................1 தேக்கரண்டி
சீரகம் ..................................1 /4 தேக்கரண்டி
கறிவேப்பிலை, மல்லி.....1 தேக்கரண்டி
உப்பு.....................................தேவையான அளவு

செய்முறை:

வாயகன்ற  பாத்திரத்தில் பாதியளவு நீர் எடுத்துக்கொண்டு, அதில் 1/4தேக்கரண்டி உப்பும், கால் தேக்கரண்டி தயிர்/மோர் போடவும். இந்த நீரில்தான் வாழைத்தண்டை நறுக்கிப் போடவேண்டும். இல்லை என்றால் வாழைத்தண்டு நறுக்கும்போதே கருத்துவிடும். இந்த தயிர் கலந்த நீரில்,வாழைத்தண்டைமெலிதாக நறுக்கி போட  வேண்டும். நறுக்கும்போது அதிலிருந்து நார் வரும். அதனை அப்படியே ஆள்காட்டி விரலில் நூலாக சுற்றிக்கொள்ள வேண்டும். பின் அதனை  பொடியாக நறுக்கி போடவேண்டும்.அல்லது வட்ட வட்டமாக மெலிதாக நறுக்கலாம்.

பின்னர் ஒரு படியை எடுத்து வாழைத்தண்டு பாத்திரத்தில் கவிழ்த்து வாழைத்தண்டின் மேல் குத்தி குத்தி எடுக்கலாம். தண்டு  சிறு சிறு துண்டுகளாகிவிடும். 

அரை அடி நீளமான ஒரு குச்சி  இரண்டாக ஒடித்துக் கொள்ளவும். அதன் நுனி சமமற்று அங்கங்கே நீட்டிக்கொண்டு பிசிர் பிசிறாக இருக்கும். அதனை அப்படியே வாழைத்தண்டு பாத்திரத்தில் நுழைத்து சுற்றவும். வாழைத்தண்டிலிருக்கும் நார் இந்த குச்சியில் சுற்றிக்கொள்ளும். தண்டில் நார் குறைந்துவிடும்.

தயிர் கட்டியில்லாமல் அடித்துக்கொள்ளவும். வெங்காயம் + ப.மிளகாயைப் பொடியாக நறுக்கவும். இஞ்சியை தட்டிப் போடலாம்/நறுக்கியும் போடலாம்.

அடுப்பில் வாணலியை வைத்து  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் சீரகம் போட்டு சிவந்ததும், உடனேயே வெங்காயம், ப.மிளகாய் +இஞ்சி போட்டு நன்கு வதக்கவும். பின்னர் கறிவேப்பிலை மல்லியை நறுக்கிப் போட்டு இறக்கவும்.

வதக்கிய வெங்காயம், மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை + மல்லியை தயிரில் கொட்டவும். வேண்டிய உப்பு, சீனி + காயம் போட்டு சுவை பார்க்கவும். இந்த தயிரில் நறுக்கிய வாழைத்தண்டை வேக வைக்காமல் பச்சையாகப் போடவும். இதுதான் வாழைத்தண்டு தயிர் பச்சடி/ வாழைத்தண்டு ரைத்தா.

தேவையானால், இதன் மேல் கொஞ்சம் காராபூந்தி தூவி பரிமாறலாம்.. !  இது 5 ஸ்டார் மெனு ஆகி விடும்..! இது சாப்பிட படு சுவையாக இருக்கும்..! சாம்பார் சாதத்துக்கு நல்ல துணை.
 
வாழைத்தண்டின் பயன்கள்:

இதில் நார்ச் சத்து இருப்பதால் வயிற்றுப் பிரச்சினைகளுக்கு மிகவும் நல்லது..!
இதனை பச்சையாகவும் வேகவைத்தும் சாப்பிடலாம்.
உடல் பருமன்/எடை குறைக்கவும், சிறுநீரக கற்களை அகற்றவும் வாழைத்தண்டு சாப்பிடலாம்.
இதனை உண்பதன் மூலம் நீர் நன்கு பிரியும்,
இது ஒரு மலமிளக்கி.
இதில் அதிகமான பொட்டாசியமும், வைட்டமின் B6 ம் உள்ளது.
இதிலுள்ள வைட்டமின் B6 , ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் உற்பத்திக்குப் பெரிதும் உதவுகிறது..
மேலும் இது உடலின் தற்காப்பு சக்தியை அதிகரிக்கிறது.
இதன் பொட்டாசியம்,இதய தசைகளை வலுவடையச் செய்கிறது.
இதுவே, மிகை இரத்த அழுத்தத்தைக் கட்டுப் படுத்துகிறது.
அதன் மூலம் உணர்வு நரம்பு களை  செயல்படுத்தி, உடலின் திரவ சமன நிலைக்கு உதவுகிறது.
வாழைதண்டில் கால்சியம், இரும்பு, மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவையும் அதிகமாக உள்ளன.  
இதில் அதிகமான வைட்டமின்   C மற்றும் A உள்ளன. 
வாழைப் பட்டை தீக்காயத்திற்குச்  சிறந்த மருந்து..!

- பேரா.சோ.மோகனா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It