தேனி மாவட்டம் அணைகளும், அருவிகளும், ஆறுகளும், மூன்று புறமும் மலைகளாலும், ஏரியல் வியூவில் நோக்கினால் லாடக வடிவில் காணப்படும் கானகங்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம். தேனி மாவட்டத்தின் மிகச்சிறந்த சுற்றுலாத் தளமாக விளங்குவது வைகை அணை. வருசநாட்டில் உள்ள மூல வைகையாற்றில் உருவாகும் வைகை ஆற்றை மறித்து குறுக்கே அணை கட்டி வைகை அணை என பெயர் வைத்தனர். வைகை அணையில் தேக்கப்படும் வைகை ஆறு, முல்லைப் பெரியாறு ஆற்றின் தண்ணீர் திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், பாசன வசதிக்கும் பயன்படுகிறது.

vaigai_dam_600

 1959 ஆம் ஆண்டு இந்த அணை திறக்கப்பட்டது. அணையின் உயரம் 111 அடியாகும். அணையின் நீர்தேக்கப்பகுதியில் 71 அடி நீரைத் தேக்கி வைக்கமுடியும். இந்த அணை பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முதலக்கம்பட்டி ஊராட்சிப் பகுதியில் அமைந்துள்ளது.

 வைகை அணையை இடதுகரைப்பூங்கா, வலது கரைப் பூங்கா என இரண்டு பிரிவாக பிரித்துள்ளார்கள். ஒருகரைப் பூங்காவில் யானைச்சறுக்கு, குதிரைச்சறுக்கு என பல விளையாட்டு சாதனங்களும், படிப்படியாக மேலிருந்து தண்ணீர் வந்து அரக்கன் வாய்வழியாக தண்ணீர் வெளியேறும் விதமாகவும், ஒரு சிலையில் பெண் குடத்திலிருந்து தண்ணீர் ஊற்றுவது போல சிலைகளும், பாஞ்சாலங்குறிச்சியை நினைவுபடுத்தும் விதமாக கோட்டைகளும், அகழிகளும் கட்டப்பட்டுள்ளன.

 வலது கரைப் பூங்காவில் டயனோசரசும், சிறிய ரயில் வண்டியும், தமிழகத்தின் நீர்நிலைகளை காட்டும் விதமாக தரைமார்க்கமாக நிழல் தோட்டங்களும், சின்ன வைகை அணை மாதிரியும், சிறுவர்கள் விளையாட விளையாட்டுச் சாதனங்கள், கடல் பகுதி இல்லாத தேனி மாவட்டத்தில் கலங்கரை விளக்கமும் அமைக்கப்பட்டுள்ளன.

 வைகை அணையில் ஏழு பெரிய கண்களும், 7 சிறிய கண்களும் உள்ளது. 7 சிறிய கண்களில் இருந்து வெளியேறும் நீரில் நீர்மின்திட்டம் ஒன்று  செயல்பட்டு வருகிறது.

 சுற்றுலாப் பயணிகள் பெரியகுளத்தில் இருந்தும், ஆண்டிபட்டி, தேனியில் இருந்தும் வருவதற்கு பேருந்து வசதிகள் தங்கு தடையின்றி உள்ளன. சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு விடுதிகளும், அசைவப் பிரியர்களுக்காக இங்கு எப்போதும் மீனுடன் கலந்த சாப்பாடும் கிடைக்கும். எளிய செலவில் அருமையான சுற்றுலா மையம் ஆகும். ஞாயிற்றுக் கிழமை, பண்டிகைக் காலங்களில் சென்றால் நடன நீருற்றையும், மின்னொளியிலும் வைகை அணையை கண்டு ரசிக்கலாம்.

- வைகை அனிஷ்