உரைவீச்சுகளின் வழியே நடத்தப்படும் பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை விட மிக வலிமையான பரப்புரை ஊடகம் தான் திரையுலகம். இத்திரையுலகின் வழியே, தமது வரலாற்றைத் தாமே அறியாத தமிழ் இனத்திற்கு, தம் கடந்தகால வாழ்வியல் பெருமிதங்களையும், வரலாற்றையும் எடுத்துரைக்க வந்திருக்கிறது ‘பாலை’ திரைப்படம்.

படத்தின் இயக்குநர் தோழர் ம.செந்தமிழன் தமிழ் உலகிற்கு நன்கு அறிமுகமானவர். துடிப்பான ஓர் செய்தியாளராகவும், சின்னத்திரை நாடகங்களில் எழுத்தாளராகவும் வெற்றிகரமாக சென்னை நகரில் வலம் வந்த தோழர் ம.செந்தமிழன், இலட்சங்களை உதறிவிட்டு தனது சொந்த ஊரான ஆச்சாம்பட்டியில் உழவுப் பணியை மேற்கொண்ட போது எல்லோரும் அவரை ஆச்சர்யமாகப் பார்த்தனர். இயற்கை வேளாண்மை முறையில் தமது வேளாண் பண்ணையை வெற்றிகரமாக இயக்கி, ‘பசுமை விகடன்’ நாளிதழின் அட்டைப்படத்திலும் ஓர்முறை அவர் இடம் பிடித்தார். தமது கல்லூரிப் படிப்பின் காலகட்டங்களிலிருந்தே தமிழ்நாட்டு உரிமைப் போராட்டம், ஈழ விடுதலைப் போராட்டம் என பல போராட்டங்களிலும் பங்கெடுத்து சிறைகளுக்கும் சென்றவர்.

கடந்த 2009ஆம் ஆண்டு, ஈழப்போர் நடந்து கொண்டிருந்த போது, ‘முத்துக்குமார் யார்?’ என திமிருடனும், பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியாரை அவமதித்தும் பேசிய, தமிழினப் பகைவன் – காங்கிரஸ் ஓட்டுப் பொறுக்கி ஈ.வி.கேஸ்.இளங்கோவன் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை இளந்தமிழர் இயக்கம் நடத்திய போது, அதில் முன்னணியாக கைதாகி சிறை சென்றவர் செந்தமிழன். அவருடன், நான் உட்பட பல்வேறு அமைப்புத் தோழர்களும் சிறையில் இருந்ததை இந்நாளில் நினைவு கூர்கிறேன். அப்போது சிறைக்கு எங்களுடன் வந்த புதிய தோழர்கள் பலரும், தற்போது ‘பாலை’ படத்தில் முக்கியப் பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்க செய்தி.

paalai_622

மக்கள் தம் துன்பங்களை மறந்துவிட்டு, ஆடிப்பாடி மகிழ்வதற்கு மட்டுமே பயன்படுவதாக ‘இலக்கிய’த்தை யாரேனும் கைகாட்டினால், அதனை தயக்கின்றி நான் ‘போதை வஸ்து’ என்பேன். ‘இலக்கியம்’ என்ற சொல்லை, மக்களை ஓர் இலக்கு நோக்கி திரட்டப் பயன்படும் ஓர் போராட்ட வடிவமாகத் தான் நான் காண்கிறேன். அவ்வகையில், ‘பாலை’ ஓர் போராட்ட இலக்கியமே! தமிழ்நாட்டு உரிமைப் போர், ஈழ விடுதலைப் போர் என பல போராட்டங்களிலும் முன்நின்ற தோழர் ம.செந்தமிழன் உள்ளிட்ட அவரது படக் குழுவினரிடம் இப்படிப்பட்ட போராட்ட இலக்கியம் வரவில்லை என்றால் தான் நாம் அதிர்ச்சி அடைந்திருக்க முடியும்!

புலி முத்திரை தாங்கிய முல்லைக் குடியினருக்கும், சிங்க முத்திரை தாங்கிய ஆயக்குடி வந்தேறிகளுக்கும் இடையேயான போர் தான் பாலை படத்தின் கரு. ஈழப்போரை நினைவுபடுத்தும் இக்கதைக்கருவை, சங்க இலக்கியங்களிலிருந்து ஆய்வு செய்து எடுத்தக் குறிப்புகளைக் கொண்டு, அம்மக்களின் அப்போதைய வாழ்வியல் பண்புகளோடு படமாக்கியிருக்கின்றனர்.

“வரலாற்றை அறிந்து கொள்ளாதவர்கள் வரலாற்றைப் படைக்க முடியாது” என்று சொன்னவர் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன். தமிழீழ மக்களின் வரலாற்றையும், அம்மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றையும் தம் ஆட்சிப்பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்களிடம் கொண்டு சேர்த்தது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு. இதனால் தான், எத்தகைய இழப்புகளையும், பின்னடைவுகளையும் சந்தித்த போதும், தமிழீழ மக்கள் தமது இலட்சியமான ஈழவிடுதலையை சமரசமின்றி விட்டுக்கொடுக்காமல் போராடுகின்றனர்.

ஆனால், இன்றைய தமிழ்நாட்டு மக்களின் நிலையோ அப்படியல்ல. இந்திய அரசின் அரைகுறை சனநாயக கங்காணி ஆட்சியும், அதன் ஊதுகுழல் ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளும் தமிழ்நாட்டு மக்களை மயக்கத்திலேயே ஆழ்த்தி வைத்துள்ளன. உரிமைகள் பறிக்கப்பட்ட போது குமுறி எழும் தமிழ்நாட்டுத் தமிழர்களை ஒரு சில நாடாளுமன்ற சீட்டுகளாலும், பதவிகளாலும் வீழ்த்திவிட முடியும் என்ற துணிவு ஆரிய இந்திய ஆளும் வர்க்கத்திற்கு எப்போதும் உண்டு. ஆனால், இதெல்லாம் கடந்த காலம் தான்.

இந்திய அரசின் திமிர்த்தனத்தை உடைத்தெறியக் கிளம்பியுள்ள புதிய தலைமுறை இளந்தமிழர்களின் காலமிது. மூவர் தூக்கை நீக்கவும், கூடங்குள அணுமின் நிலைய எதிர்ப்பிலும் மக்கள் காட்டுகின்ற வீரியம், இந்திய அரசிற்கு எதிரான போராட்டமாக வளர்ந்து வருகின்ற காலமிது. இன்றைய போராட்டத் தமிழகத்தின் மக்கள், தம் வரலாற்றைத் தேடும் பயணத்தை வேகப்படுத்தியிருக்கிற கால கட்டமும் இதுதான்.

இந்நேரத்தில், தம் வரலாற்று மரபையும் பெருமிதங்களையும் தமிழ் மக்களுக்கு உணர்த்தும் இலக்கிய வடிவங்கள் காலத்தின் தேவைகள். இத்தேவையை உணர்ந்ததால் தானோ என்னவோ, ஊரைக் கொள்ளையடித்து ‘உழைத்து’ சம்பாதித்த பணத்தில், பொழுதுபோக்காக படமெடுத்து, வரலாற்றைத் திரித்துக் கூறி போலித் தமிழ்ப் பெருமிதத்தை உருவாக்கும் படங்களும் வருகின்றன. நல்லவேளை ‘பாலை’ அப்படிப்பட்ட படமாக வரவில்லை!

ஆண்களுக்கு நிகராக போருக்கு தயாராகும் வீரத்தமிழ்ப் பெண்களையும், தம் இனக்குழுவிற்கு ஆபத்து நேரும் போது வில்லெடுத்து களத்திற்கு வந்து நிற்கும் சங்ககால சிறுவர் கூட்டத்தையும் ‘பாலை’ அடையாளம் காட்டியிருக்கிறது. பெண்களை வீட்டுக்குள் அடைத்து வைத்திருக்கும் மரபை தமிழினம் கொண்டிருக்கவில்லை என்ற உண்மையும் இதில் நிலைநாட்டப்பட்டுள்ளது. திரைத்துறையில் இதுவரையில் எவ்வகையிலும் இடம்பெறாத, பார்ப்பனியத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட பழந்தமிழ்க்குடியான இருளர் சமூகப் பெண்கள் பலரும் இப்படத்தில் முக்கியப் பாத்திரங்களை ஏற்று நடித்திருப்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

‘போர் என்றால் எதிரியைத் தாக்குவதல்ல எதிரியை வீழ்த்துவது’ என முல்லைக்குடி முதுவன் கூறும் போதும், ‘தலைவர் எங்கே தலைவர் எங்கே என தேடாதீர்... எதிரியை எங்கே எதிரி எங்கே என அவனைத் தேடுங்கள்’ என்று பொருள் படும்படி முல்லைக்குடித் தலைவர் விருத்திரன் தனது வீரர்களுக்கு போர்க்களத்தில் கூறும் போதும், இவ்வார்த்தைகள் இன்றைய உலகத் தமிழ் மக்களுக்கும் தேவைப்படுகின்ற வரிகளாக முன்னிற்கின்றன.

அவ்வப்போது பாலை முதுவன் உதிர்க்கும் வசனங்கள் அனைத்தும் மனதில் நிற்பவையாக உள்ளன. அவர் தனது மகன் இறந்த கதையை யதார்த்தமாகக் கூறும் போது நெஞ்சில் ‘பாலை’யின் கொடூரத்தை உணர வைக்கிறார். கதைப்படி அவர் கூறுகின்ற ‘பாலை’ என்ற வாழ்விடப்பரப்பு, தற்போது சோமாலியாவில் நிகழ்ந்து வரும் வரலாறு காணாத பெரும் பஞ்சத்தைப் போன்றது என உணர முடிகின்றது. உடன்போக்கு, ஆநிரைக் கவர்தல், திருமண முறை, யானைகளை விரட்ட கவன்கல் எரிதல், புகை மூலம் பேசும் முறை என சங்ககால வாழ்வியல் பதிவுகள் படமெங்கும் சிதறிக் கிடக்கின்றன.

நான்கடி தூரத்தில் யார் வருகிறார்கள் எனத் தெரிந்து கொள்வதற்கே நாம் படாதுபாடு படுகின்ற இதே இனத்தில் தான், நாற்பதடி தூரத்தில் எத்தனை வண்டிகள் வருகின்றன, எத்தனை பேர் வருகின்றனர் என்று கணக்கிட்டுச் சொல்லும் அளவிற்கு மக்கள் தமது அறிவை வளர்த்து வைத்திருந்தனர் என நினைக்கும் போது பெருமையும், ஏக்கப் பெரு மூச்சும் இயல்பாக எழுகின்றன.

கதை, வசனம், பாடல் வரிகள் உள்ளிட்ட எழுத்துப் பணிகளும், இசை, ஒளிப்பதிவு உள்ளிட்ட தொழில்நுட்பப் பணிகளும் செம்மையுற செய்யப்பட்டிருக்கின்றன. திரைத்துறையை முற்றிலும் சாராத புதிய இளைஞர்களை நடிக்க வைத்து, பாலை படம் தனிமுத்திரையும் பதித்திருக்கிறது.

paalai_623

படத்தின் இறுதியில், ‘நாம் வாழும் இந்த மண் நம் முன்னோர்களால் எதிரிகளிடமிருந்து மீட்கப்பட்ட மண்’ என்று கதைநாயகி காயாம்பூ கூறும் போது, இப்படம் இன்றைய இளைஞர்களுக்கு நம் போராட்ட வரலாற்றை உணர்த்துவதற்காக கிடைத்த ஓர் நல்வாய்ப்பு என்றே தோன்றுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு நடந்த விதம், அங்கு பலமுறை நான் நேரில் சென்றதால் எனக்கு நன்றாகவேத் தெரியும். சென்னை திருவல்லிக்கேணி மேன்சன் அறைகளில் பேச்சலர் இளைஞர்கள் குழுவாக குழுமியிருப்பதைப் போல, தஞ்சாவூர் ஆச்சாம்பட்டியில் அமைந்திருந்த வேளாண் பண்ணைக்கு நடுவில் அமைந்திருந்த ஒரே அறை கொண்ட ஓர் குடிசை வீட்டில், படக்குழுவினர் இரத்திரி பகலாக அங்கேயே உண்டு, உறங்கி, ஒன்றாகக் கலந்து பேசி ‘படப்பிடிப்பு’ என்பதை ஓர் தொழிலாகவோ, வேலையாகவோ கருதாமல், அதை ஓர் ‘வாழ்முறை’யாக மாற்றியிருந்தனர். இனஉணர்வுடனும், அர்ப்பணிப்புடனும் கூடிய உழைப்பு தான் இப்படவெற்றியின் ஆணிவேர்!

நம் தமிழ்ச் சமூகத்தின் பெருமிதங்களைளும், மரபுகளையும் கூறி, தமிழ் மக்களை அடிமை மனநிலையிலிருந்து விடுவித்து, போர்க்குணமிக்கப் படையாக மக்களை மாற்றுவதற்குக் கிடைத்த ஓர் ஆயுதம் தான் ‘பாலை’ திரைப்படம். ‘பாலை’ படத்தை ஓர் பொழுது போக்குத் திரைப்படமாக பார்க்காமல், நம் இன்றைய தலைமுறையினருக்கு தமிழ் இனத்தின் கடந்த கால வரலாற்றைக் கூறும் பாடமாக நாம் பார்க்க வேண்டும். இப்படம் வணிக ரீதியாகத் தோல்வியைத் தழுவினால், தமிழ் இனம் குறித்தும் வரலாறு குறித்தும் பிற்காலத்தில் எந்தவொரு படங்களும் திரையில் வராமல் தடுக்கும்

டேம்-999 போன்ற தமிழ் இனத்திற்கு எதிரான படங்களுக்குக் கிடைத்த திரையரங்குகளில் 25 விழுக்காடு கூட, சங்ககால தமிழ் இனத்தின் பெருமைகளைப் பேசும் இப்படத்திற்கு கிடைக்கவில்லை என இயக்குநர் ம.செந்தமிழன் ஊடகங்களுக்குக் கடிதம் எழுதிய போது இன்றைய தமிழ் இனத்தின் அவலநிலையை இன்னுமொருமுறை நம்மால் உணரமுடிந்தது.

இப்படத்தை திரையிடுவதற்குக் கிடைத்துள்ள சொற்பத் திரையரங்குகளுக்குக் கூட இது போன்ற பணமுதலைகள் நெருக்கடிகளும், மிரட்டல்களும் விடுத்து இப்படத்தை ஓட விடாமல் செய்வதற்கான முயற்சிகளில் இறங்கினர். தன் காலில் விழாத சிறு தயாரிப்பாளர்கள் எவருமே இத்துறையில் பிழைக்கவோ, காலூன்றவோ முடியாது என்ற ஆதிக்க நிலையை மட்டுமே விரும்புகின்ற பணமுதலைகளை மீது நாம் தாக்குதல் தொடுப்பதற்கு, “பாலை” போன்ற நல்லத் திரைப்படங்கள் தான் சரியான ஆயுதங்கள்!

பணமுதலைகளும், பன்னாட்டு நிறுவனங்களும் ஆக்கிமித்துள்ள தமிழ்த் திரையுலகில் தனியொருக் குழுவாக ‘பாலை’ படக்குழுவினர் முத்திரைப் பதிக்க நிற்பது கூட ஓர் வகையிலான அரசியல் போராட்டம் தான்! ‘பாலை’ படக்குழுவினரின் இப்போராட்டத்தில் நாமும் பங்கெடுப்போம். தமிழ் இனத்தின் போராட்ட மரபை உணர்த்தும் ‘பாலை’ போன்ற படங்களின் வெற்றி தான், நாம் அடுத்த தலைமுறைக்கு நம் போராட்டத்தை கையளிப்பதில் நமக்குக் கிடைக்கும் வெற்றி! நம் குடும்பங்களையும், சொந்தங்களையும் இப்படத்திற்கு கூட்டம் கூட்டமாக அழைத்துச் செல்வோம். நம் குடும்பங்களை அரசியல்படுத்துவோம்! ‘பாலை’ திரைப்படத்தை பணமுதலைகளுக்கு எதிரான ஆயுதமாக்குவோம்!

- க.அருணபாரதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)