தந்திச் செய்திகள் போல் தற்காலத்தில் எழுந்துள்ள கவிதை இலக்கியமானது சொற்சுருக்கமாக வாழ்க்கையின் பெரும் பகுதிகளை விமர்சித்துச் செல்கிறது. செய்யுளாக, பாக்கலாக, கவிதைகளாக  உருமாறி, மரபு தாண்டிய புதுவடிவக் கவிதைகளையே நாம் இன்று படிக்கிறோம்.

தினம் தினம் பல கவிதைத் தொகுப்புக்கள் வெளிவந்த வண்ணமிருப்பது அதன் வளர்ச்சிப் போக்கைக் காட்டி நிற்கிறது. இந்த வரிசையில் இளம் கவிக்குயில் வெலிகம ரிம்ஸா முஹம்மதின் தென்றலின் வேகம் என்ற பெயரில் கவிதைத் தொகுப்பொன்று வெளிவந்திருக்கிறது.
 
thenralin_veakam_400இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை இத்தொகுதியை வெளியிட்டிருக்கிறது. இந்தத் தொகுதியில் 64 கவிதைகள் பல தலைப்புக்களில் இடம்பெற்றிருப்பதோடு நூலின் பின் இணைப்பு போல கவித்துளி என்ற தலைப்பிட்டு வரிக்கவிதைகள் 29 காணப்படுகின்றன.
 
கவிஞர் ஏ. இக்பால் தனது முன்னுரையில் இந்நூலில் அடங்கியுள்ள கவிதைகளைப் பற்றிச் சொல்லும்போது 'அனுபவமும் அனுமானமும் நிறைந்தததாக இக்கவிதைகள் தென்படுகின்றன. மனிதத்துவ இயல்புகளை படம்பிடித்துக்காட்டும் கவிதைகள் இத்தொகுதியில் நிறைந்துள்ளன. சாமான்யமாக வாசிப்போரை இழுக்கும் தன்மையுள்ள கவிதைகள் உண்மையில் அறிவூட்டி நிற்கின்றன' என்று குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவையினர் தமது பதிப்புரையில் 'ரிம்ஸா தான் பிறந்த மண்ணிலேயே நின்றுகொண்டு தனது அவதானிப்புக்களையும், அனுபவங்களையும் உணர்ச்சிபூர்வமாக கவிதாலங்காரத்துடன் கவிதைகளாகப் புனைந்துள்ளார். இம்முயற்சிக்கு தற்துணிவு வேண்டும். இது இவரிடம் உள்ளது. இவரது கவிதைகளில் பெரும்பாலானவை தன்னுணர்ச்சிக் கவிதைகளாக உள்ளன. ரிம்ஸா தனது பார்வையை மக்கள் பக்கம் விசாலித்தால் மக்கள் படைப்பாளியாகக் கொள்ளப்படுவார்' என்ற உண்மையையும் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
 
இளம் கவிக்குயிலான ரிம்ஸா முஹம்மத் என்னுரை என்று உரைக்காவிட்டாலுங் கூட எண்ணங்கள் வண்ணமாகும் நேரத்தில்... என்று குறிப்பிட்டுள்ள கருத்துக்களை நோக்குகையில் அவரது கவியாற்றலையும், இலக்கியத் தாகத்தையும் உணரக் கூடியதாகவும் சறுக்குமர ஏற்றத்திலே விடாமுயற்சி கொண்டு உச்சியைத் தொடுவதற்கு எத்தனித்து நிற்கும் ஒரு சிறந்த கவிஞராக விளங்குகிறார் என்பதை அறிய முடிகிறது.
 
தாய்மை, அன்பு, காதல், மானிட தர்மம், மானிடநேயம், துணிவு, துன்பம், ஏமாற்றம் என்றெல்லாம் அவரது கவிதைகளின் பாடுபொருள்களாக கவிதா விலாசமிடுகின்றன. தாயை இழந்த துயரத்தில் ஆராதனை என்ற கவிதையில்
 
'துடுப்பிழந்த படகாய்
துயரக்கடலில்
தத்தளிக்கும் என்னை
கரைசேர்ப்பார் யாருண்டு?
தாயன்புக்கீடாக
தரணியிலே ஏதுண்டு?'
 
 என்று தாயன்பின் பெருமைகளைப் பற்றிச்சொன்னவர்,
 
'உன் பிரிவுத்துயர் தாளாமல்
ஓயாது புலம்பும் எனக்கு...
ஒத்தடம் தர உனையன்றி
யார் வருவார் துணைக்கு?'
 
என துணையின்றி, ஆறுதலுக்கு யாருமற்ற கைவிடப்பட்ட ஒரு வெறுமை நிலையில் புலம்புகின்ற விதம் கரையாத கல்மனதையும் கரைத்துவிடும் தன்மை பெற்றுள்ளதை உணர முடிகின்றது.
 
வெற்றியின் இலக்கு என்ற கவிதை உழைப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிச் சொல்லுகிறது.
 
'உழைப்பே வெற்றியைத்
தேடித்தரும்..
வாழ்வில் முன்னேற்றம் உன்னை
நாடி வரும்'
 
என்று உழைப்பால் உயரலாம் என்பதை எடுத்துக் காட்டியிருக்கிறார்.
 
'விடியலைத்தேடும் வினாக்குறிகள்' என்ற கவிதை மூலமாக கடந்த காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட போர்ச்சூழலால் மக்கள் பட்ட அவலங்களையும், கஷ்டங்களையும், அவர்கள் அகதிகளாக்கப்பட்டு முகாம்களில் முடங்கிக் கிடப்பதை இவ்வாறு குறிப்பிடுகின்றார்.
 
'கோர இடிமுழக்கோடு அன்று
குண்டுமாரி பொழிந்த தீவில்
குருதிப்புனல் பெருக்கெடுத்ததால்
குடிபெயர்ந்து
குஞ்சி பூராண்களோடும்
கிழடுபட்டைகளோடும்
கணக்கற்றோர்
கண்ணீரும் கம்பலையுமாக
காப்பகங்களில் நெளிகிறார்கள்'
 
நிலவுரங்கும் நள்ளிரவு, நித்திரையில் சித்திரவதை, நிம்மதி தொலைத்(ந்)த நினைவுகள், ஜீவநதி, ஏற்றுக்கொள் இன்றேல் ஏற்றிக்கொல் போன்ற பல கவிதைகளில் சந்தமும், ஓசை நயமும் அழகாக காணப்படுகின்றது. அந்தக் கவிதைகள் இனிய வசனங்களால் புனையப்பட்டிருப்பதானது கன்னியரினதும் காளையரினதும் இதயத்தில் ஈர்ப்பை ஏற்படுத்துகின்றது.
 
குபேர வாழ்க்கை வாழும் கோடீஸ்வரர்கள், குடிசைவாழ் மக்களை சற்றும் எட்டிப் பார்ப்பதில்லை என்பதனை
 
'குபேரபுரியில் கொலுவிருக்கும்
கோபுரவாசிகளே..
கொஞ்சம் குனிந்து கீழாக
குக்கிராமவாசிகளையும் பாருங்கள்'
 
என்று கவனயீர்ப்புப் பிரேரணை ஒன்றையும் முன்வைத்திருக்கிறார் கவிஞர்.
 
பாவங்களின் பாதணி, வெற்றிக்கு வழி, வானும் உனக்கு வசமாகும், அழகான அடையாளம், வாழ்வு மிளிரட்டும் போன்ற கவிதைகள் நல்ல கருத்துக்களை சொல்லிப்போகின்றன.
 
பொதுவாக சிறந்ததொரு கவிதைத் தொகுப்பை ரிம்ஸா முஹம்மத் தந்திருக்கிறார். எம்மை விட்டுப் பிரிந்த பல்கலை வேந்தன் ஸ்ரீதர் பிச்சையப்பா கருத்தாழமிக்க கவர்ச்சியான ஓவியங்களை, ஒவ்வொரு கவிதைக்கும் ஏற்றவகையில் வரைந்து கவிதைகளுக்கு மெருகூட்டியிருக்கிறார்.
 
வளர்ந்துவரும் கவிதாயினிக்கு நிச்சயம் எதிர்காலம் பட்டுக்கம்பளம் விரிக்கும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை. அவரது இலக்கிய ஆர்வத்தையும், அவரது கவிதைகளின் தன்மைகளையும் பார்க்கும்போது புகழ்பெற்ற கவிஞர்கள் வரிசையில் புகழ்பூத்த பெண்கவிஞராக இவர் திகழ்வார் என்பது சர்வநிச்சயம்.
 
நூலின் பெயர் - தென்றலின் வேகம் (கவிதைத் தொகுதி)
நூலாசிரியர் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்
வெளியீடு - இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை
முகவரி - 21E, Sri Dharmapala Road, Mount Lavinia, Sri Lanka.
தொலைபேசி - 077 5009 222, 071 9200 580
விலை - 150/=

Pin It