அறிவியல் கலைக் களஞ்சியத்தில் எந்த விஞ்ஞானியையும்விட சர் ஐசக் நியூட்டன் அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு அதிக பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

                Isaac Newtonசர் ஐசக் நியூட்டன் அவர்கள் 1642ல் இங்கிலாந்து நாட்டில் பிறந்தவர்.  இவர் பிறப்பதற்கு முன்பே இவரது தந்தையார் இறந்துவிட்டார்.  இவருக்கு மூன்று வயது ஆகும்போது இவரது தாய் மறுமணம் செய்து கொண்டார். இளம் வயதில் வளர்ப்புத் தந்தை இவரை வெறுத்து ஒதுக்கினார்.  இவரது குழந்தைப் பருவம் மகிழ்ச்சியற்றதாகவும், நிம்மதியற்றதாகவும் இருந்தது.  தனது பாட்டியிடம் சென்று தங்கினார்.

                தனது 12 வது வயதில் பள்ளியில் சேர்ந்தார்.  இவர் பள்ளி படிப்பில் மிகவும் பின்தங்கி சாதாரண மாணவராக இருந்தார்.  பள்ளியில் பாடம் படிப்பதற்கு பதிலாக படம் வரைதல், பட்டம் செய்தல் போன்ற செயல்களில் ஆர்வமாக இருந்தார்.  சில ஆண்டுகளில் தன் படிப்பின்  நிலையை அறிந்து தனது தீவிர முயற்சியால் படிப்பில் முதல் மாணவராகத்  திகழ்ந்தார்.

                இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களில் தனித் திறமை பெற்று சிறந்த மாணவனாக விளங்கினார்.  பல்கலைக் கழகத்தில் படிக்கும்போது கணித சூத்திரங்களையும், ஈருறுப்பு தொடர் தேற்றங்களையும் கண்டுபிடித்தார்.  இயற்கையை அறிந்து கொள்ள ஆற்றல் வாய்ந்த கணித முறையான வகையீட்டு எண் கணிதம், தொகையீட்டு எண் கணிதம் ஆகியவற்றைக் கண்டுபிடித்தார்.  இந்தக் கண்டுபிடிப்பு இயற்பியலில் கணித முறையை பயன்படுத்த உதவியது.

                தனது படிப்பின்போதே ஒளியின் இயல்பு பற்றி ஆய்வு செய்தார்.  வானவில் எப்படி தோன்றுகிறது என்பதை முதன் முறையாகக் கண்டுபிடித்து உலகிற்குத் தெரிவித்தார்.  வெண்மை நிற சூரிய ஒளிக்கதிரை முப்பட்டக கண்ணாடி வழியாக செலுத்தினார்.  அதில் ஒளிக்கதிர்கள் பல வண்ணங்களாகப் பிரிந்தது.  ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய ஏழு நிறங்கள் கொண்ட நிறப் பிரிகை உண்டானது.  அதற்கு VIBGYOR என்று பெயரிட்டார்.

                1668ல் பிரதிபலிப்பு தொலைநோக்கியைக் கண்டுபிடித்தார்.  இது விஞ்ஞான ஆராய்ச்சிக்குப் பயன்படுகிறது.  தமது 27வது வயதில் தான் படித்த கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்.

                சர்.ஐசக் நியூட்டனின் புவியீர்ப்பு விசை குறித்த கண்டுபிடிப்பு மிக முக்கியமானதாகும்.  பொருட்களில் ஏற்படும் ஈர்ப்பு விசையானது அதன் அளவிற்கும், தூரத்திற்கும் ஏற்ப மாறுபடுகிறது என்பதை நிரூபித்தார்.

                இயங்கிக் கொண்டிருக்கும் பொருட்களைப் பற்றிய விதிகளை வகுத்தார்.  முடுக்கம், பொருளின் எடை, அப்பொருளின் மீது செயல்படும் விசை ஆகியவற்றை தொடர்புபடுத்தி ஒரு விதியை உருவாக்கினார்.  அது மீட்டல்விதி  என்று அழைக்கப்படுகிறது.  இயற்கை தத்துவத்தின் கணித விதிகள், வானவியல்துறை, பொருளியல் துறை, ஒளியியல் ஆகியவைகளைக் குறித்து ஆய்வுகள் எழுதி வெளியிட்டார்.  இவர் எழுதிய புத்தகங்கள் இன்றைக்கும் விஞ்ஞான வளர்ச்சிக்குப் பயன்படக் கூடியதாக உள்ளது.  அது மட்டுமல்லாமல் பல சிக்கல்களை தீர்த்து வைக்கவும் உதவுகிறது.

                இயற்பியல் அறிஞர், வானவியல் ஆராய்ச்சியாளர், கணித மேதை, இயக்கவியலை உருவாக்கியவர்.  மேலும், மனிதகுல வரலாற்றில் இதுவரை தோன்றிய அறிவியல் அறிஞர்களில் சிறந்தவர் என புகழப்படுகிறார்.

                1672ல் ராயல் கழக உறுப்பினரானார் (FRS). 1703ல் ராயல் கழகத்தின் தலைவரானார்.  இவர் 1727ல் தனது 84வது வயதில் காலமானார்.  இங்கிலாந்து நாட்டில் முக்கிய பிரமுகர்கள் அடக்கம் செய்யப்படும் வெஸ்ட் மினிஸ்ட் (West-minist) கல்லறையில் இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

- பி.தயாளன்