தமிழ் மக்களின் தனி நாகரிகத்தையும், நல்வாழ்வு நெறியையும், பழம் பெருமையையும், தமிழ் மொழியின் தனிச் சிறப்பையும், ஆற்றலையும், ஏற்றத்தையும் உலகமெங்கும் பரப்பிய ஒப்புயர்வற்ற சிறப்பு தனிநாயகம் அடிகளுக்கே உரியது! ‘ தமிழியல் ‘ எனும் ஆராய்ச்சி துறையை உருவாக்கி வளர்த்து, அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளை நடத்தி, தமிழாராய்ச்சியினை உலகளாவியதாக்கியவர்!!

 thani nayagamயாழ்ப்பாணம் நெடுந்தீவைச் சார்ந்த ஹென்றி ஸ்தானிஸ்லாஸ் கணபதிப்பிள்ளை - செசில் இராசம்மா பஸ்தியாம்பிள்ளை இணையரின் மூத்த மகனாக 02-08-1913 ஆம் நாள் ஊர்காவற் துறையைச் சேர்ந்த கரம்பொன் என்னும் ஊரில் பிறந்தார். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சேவியர்.

 ஊர் காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியில் ஆரம்பக் கல்வி பயின்றார். பள்ளியிறுதி வகுப்பில் பயிலும்போது, லியோ டால்ஸ்டாய் எழுதிய‘ புத்துயிர்ப்பு’ (Resurrection) என்னும் நூலை அவர் படித்தார். “ அந்நூலைப் படித்ததால் தான் என் வாழ்க்கையானது சமயச் சேவையாலும் கல்விச் சேவையாலும் உருவாகியது “ எனக் குறிப்பிட்டுள்ளார்.

 “நான் இவ்வுலகில் ஒருமுறைதான் வாழ முடியும் . எனவே, நான் இறக்கும் முன் என்னால் இயன்ற அளவு அனைத்து நற்செயல்களையும் செய்தல் வேண்டும். ஏனெனில் மீண்டும் ஒரு முறை நான் வாழப் போவதில்லை" என்று ட்ரம்மன்ட் (Drummond) என்னும் அறிஞரின் எழுத்துக்கள் அவரது வாழ்க்கையை மாற்றியமைத்தது.

 யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் 1923 முதல் 1930 வரை பயின்றார். பின்னர், கொழும்பு நகரிலுள்ள புனித பெர்நாட் குருத்துவக் கல்லூரியில் (St. Bernard Seminary) ‘ மெய்யியல்’ பிரிவை பாடமாக எடுத்துப் படித்து முதலாவதாகத் தேறினார்.

 ரோம் சென்று உர்பன் குருமடத்தில் மாணவராகி, உர்பன் பல்கலைக் கழகத்தில் ‘ சமயவியல்’ படித்தார். ஆங்கிலத்திலும், இலத்தீனிலும் புலமை பெற்றிருந்த சேவியர், ரோமில் இத்தாலிய மொழியினைத் திறம்படப் பயின்றதோடு, ஸ்பானிஷ், போர்த்துக்கேயம் , பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம், எபிரேயம் ஆகிய மொழிகளையும் பயின்றார்.

 ரோமில் பயிலும் போது , “என் தமிழ்ப் பற்று மிகுந்ததே அன்றி குறைந்துவிடவில்லை. ‘வீரமா முனிவர் கழகம் ‘ என்னும் அமைப்பை ரோம் நகரில் நிறுவி தமிழை பயின்று வந்தோம். வத்திக்கான் வானொலி நிலையத்திலிருந்து தமிழில் ஒலி பரப்பும் வாய்ப்பும் பெற்றோம். அங்ஙனம் ஒலி பரப்பும் தோறும் ‘தேமதுரத் தமிழோசை உலகம் எல்லாம் பரவும் வகையில் செய்தோம்’ எனக் கருதி களிப்புற்றோம்” என , தமது தமிழார்வம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

 ரோமில் கத்தோலிக்கச் சமயக் குருவாக 1938 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் பணியில் சேர்ந்தார்.

 தனிநாயகம் அடிகள் ‘தொன்மையியல்’ துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டார். அதனால், மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒர் ஆப்பிரிக்க ஆயரான புனித சைபிரியன் (St. Cyprian) என்பவரின் காலத்தைப் பற்றி ஆய்வு செய்து ‘கார்த்தஜினியன் குருமார்’ (Carthaginian clergy) என்ற தலைப்பில் ஆய்வேட்டைச் சமர்ப்பித்து வரலாற்றுத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

 ரோமில் முனைவர் பட்டம் பெற்ற தனிநாயகம் அடிகள் 1939 ஆம் ஆண்டு திருவனந்தபுரம் வந்தடைந்தார். பின்னர் தூத்துக்குடி மறை மாவட்டத்தில் 1940 ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்தார். நெல்லை மாவட்டத்திலிலுள்ள வடக்கன்குளம் என்னும் ஊரில் அமைந்துள்ள புனித தெரசாள் உயர்நிலைப் பள்ளியில் துணைத் தலைமை ஆசிரியராக ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தார். வடக்கன்குளத்தில் , பண்டிதர் குருசாமி சுப்பிரமணியம் ஐயரிடம் நான்கு ஆண்டுகள் தமிழ் பயின்றார். தமது பெயரைத் தமிழ்ப் பெயராகச் சூட்டிக் கொள்ள வேண்டும் என்னும் மிகுந்த ஆர்வத்தினால் , ‘ சேவியர் ஸ்தனிஸ்லாஸ் தனிநாயகம் ‘ என்று மாற்றிக் கொண்டார்.

 தமிழ் மொழியின் இலக்கியச் சிறப்பும் கருத்து வளமும் அடிகளாரை ஈர்த்துக் கொண்டன. தொடர்ந்து தமிழ் பயின்று முதுகலைப் பட்டம் பெற , 1945 ஆம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் முதுகலை மாணவராகச் சேர்ந்தார். அங்கு , பேராசிரியர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் , பேராசிரியர் அ. சிதம்பரநாதனார் முதலியவர்களிடம் தமிழ் இலக்கியம் பயின்றார்.

 தேவாரம், திருவாசகம் முதலிய சைவசமய இலக்கியங்களையும், சங்க இலக்கியங்களையும் ஆர்வமுடன் கற்றறிந்தார். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றபின் , அடிகள் தொடர்ந்து கற்று தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் (எம்.லிட்) பெற்றார். மேலும், பேராசிரியர் அ. சிதம்பரநாதனாரை வழிகாட்டியாகக் கொண்டு ‘ பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை’ என்னும் பொருள் பற்றி ஆய்வு மேற்கொண்டார். அவரது ஆய்வேடு , ‘நேச்சர் இன் ஏன்சியன்ட் தமிழ் பொயட்ரி’ (Nature in Ancient  Tamil Poetry) என்னும் நூலாக 1952 ஆம் ஆண்டு தமிழ் இலக்கியக் கழகத்தால் வெளியிடப்பட்டது. இந்நூலைத் திறனாய்வு செய்த பேராசிரியர் கமில் சுவலபில் , “பழந்தமிழ் இலக்கியங்ளைப் பற்றி இதுவரை எழுதப்பட்டவை அனைத்தையும் இந்நூல் பலவகையிலும் விஞ்சி நிற்கின்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.

 தூத்துக்குடியில் 1948 ஆம் ஆண்டு ‘தமிழ் இலக்கியக் கழகம்’ என்னும் அமைப்பினை அடிகள் நிறுவினார். அந்த அமைப்பின் மூலம் பல நூல்களை வெளியிட்டார்.

 அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஜப்பான் முதலிய நாடுகளுக்கு 1950 ஆம் ஆண்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டு சொற்பொழிவுகளாற்றினார். பின்னர் 1952 ஆம் ஆண்டு இலங்கை திரும்பிய அடிகள், இலங்கைப் பல்கலைக் கழகத்தின் கல்வியியல் துறையில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார்.

 கொழும்பில் ‘தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்’ என்னும் அமைப்பை நிறுவினார். இலங்கையில் ‘தமிழ்ப் பண்பாடு; அன்றும், இன்றும் , இனியும்’ என்ற பொருளில் ஆங்கிலத்தில் சொற்பொழிவு நிகழ்த்தினார். இந்தச் சொற்பொழிவு நூல் வடிவம் பெற்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

 இலங்கையில், தமிழ் அரியாசனத்திலிருந்து தூக்கி வீசப்படுவது நடந்தேறிக் கொண்டிருந்தது. உலக வாழ்வைத் துறந்த தனிநாயகம் அடிகள், தமிழைத் துறக்க முடியாதவராகக் கலக்கமடைந்தார். தமது பரந்த அறிவைப் பயன்படுத்தி, சிங்களமும் தமிழும் அரசாங்க மொழிகளாக இருப்பதால் சிங்கள மொழிக்கு எந்த ஆபத்தும் வராது. சிங்களம் அரசாங்க மொழியாக இருந்தாலும் தமிழையும் சிங்களத்தின் நிலையைப் பாதிக்காமல் பயன்படுத்தலாம் என்னும் கருத்துப்பட, பல நாட்டு அரசியல் சாசனங்களை மேற்கோள் காட்டி இதழ்களில் கட்டுரைகள் எழுதினார். அவற்றை ஒன்றாகத் திரட்டி ‘தமிழ் மொழி உரிமைகள்’ என்ற தலைப்பில் ஆங்கில நூல் ஒன்றையும் வெளியிட்டார். மேலும், 1956 ஆம் ஆண்டு, இலங்கைப் பிரதமராக இருந்த எஸ்.டபிள்யூ,ஆர். டி. பண்டாரநாயக்காவை , தூதுக் குழுவினருடன் சென்று சந்தித்துத் தமிழ் மொழியின் உரிமைக்காக வாதாடினார்.

 இலங்கைப் பாராளுமன்றத்தில் 05-06-1956 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ‘ தனிச் சிங்கள சட்ட மசோதா’ வை எதிர்த்து, தமிழர் தலைவர் தந்தை செல்வா தலைமையில், கோப்பாய் கோமான் வன்னிய சிங்கம் , இரும்பு மனிதன் நாகநாதன் முதலியோர் உட்படத் தமிழ் மக்கள் கொழும்பில் உள்ள பாராளுமன்றத்துக்கு முன்னால் சத்தியாக்கிரகம் மேற்கொண்டனர். சிங்களக் காடையர்களின் வெறியாட்டம் தாண்டவமாடியது. தமிழின மக்கள் சிங்களக் காடையர்களால் படுகொலை செய்யப்பட்டனர். சிங்களக் காடையர்கள் மத்தியில் வீரத்துறவியான தனிநாயகம் அடிகள் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு இலங்கை அரசுக்கு தமது எதிர்ப்பைக் காட்டினார்.!

 தனிநாயகம் அடிகள் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பணியில் சேர்ந்தார். அங்கிருந்து இலண்டனுக்குச் சென்று கலாநிதிப் பட்டம் (Ph.D) பட்டம் பெற்றார்.

 இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் சிங்கள மொழி ஆதிக்கத்தைத் தீவிரப்படுத்த 1961 ஆம் ஆண்டு, இலங்கை அரசு தீவிரம் காட்டியது. அதை எதிர்த்து, தமிழர் தலைவர் தந்தை செல்வா தலைமையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சத்தியாக்கிரகம் தீவிரமாக நடைபெற்றது. தனிநாயகம் அடிகள், சத்தியாக்கிரகத்துக்கு ஆதரவு தேடும் வகையில் , தமிழ் மொழிக்குள்ள உரிமைகளையும், சிங்கள மக்கள் நல்வாழ்வுக்குத் தமிழர்கள் ஆற்றிய பணிகளையும் விளக்கி ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் துண்டுபிரசுரங்களை வெளியிட்டார். சத்தியாக்கிரகத்துக்காக நிதி வசூல் செய்து உதவினார்.

 புதுடெல்லியில் 26 ஆவது கீழைத்தேயவியல் மாநாடு 1964 ஆம் ஆண்டு நடைபெற்றது. மலேசியப் பல்கலைக்கழகத்தின் சார்பில் தனிநாயகம் அடிகள் கலந்து கொண்டார். இம்மாநாட்டில் கலந்து கொண்ட பேராசிரியர் வி.அய். சுப்பிரமணியனும் இணைந்து , மாநாட்டில் கலந்து கொண்ட தமிழியல் அறிஞர்களுக்கான ஒரு சிறப்புக் கூட்டத்தை புது டெல்லியில் 07-01-1964 அன்று கூட்டினார். இக்கூட்டத்திற்கு 15 நாடுகளைச் சேர்ந்த 60 தமிழியல் அறிஞர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தான் ‘அனைத்துலக தமிழராய்ச்சி மன்றம்’ என்னும் அமைப்பு தொடங்கப்பட்டது. அதன் இணைச் செயலாளர்களாகப் பேராசிரியர் கமில் சுவலபில், தனிநாயகம் அடிகள் முதலியோர் தேர்வு செய்யப்பட்டனர். பேராசிரியரின் ஜூன் பிலியோசப் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 தனிநாயகம் அடிகள் மலேசியாவில் 1966 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் முதல் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தினார். இம்மாநாட்டில் 22 நாடுகளைச் சேர்ந்த 132 பிரதிநிதிகளும், 40 பார்வையாளர்களும் கலந்து கொண்டு 150 ஆராய்ச்சி கட்டுரைகள் அளித்தனர்.

 இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு 1968 ஆம் ஆண்டு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. நிரந்தரமான தமிழாராய்ச்சி நிலையம் ஒன்று அமைத்து உலக தமிழாராய்ச்சி மையமாக அமைக்கப்பட வேண்டும் என்ற அடிகளின் கனவு அம்மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 மூன்றாவது உலகத் தமிழ் மாநாடு 1970 ஆம் ஆண்டு பிரெஞ்சு நாட்டின் தலைநகரமான பாரிசில் நடைபெற்றது. நான்காவது உலகத் தமிழ் மாநாடு யாழ்ப்பாணத்தில் 1974 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் சிறப்பாக நடைபெற்றது. ஆனால், சிங்கள இன வெறியர்கள் மாநாட்டில் மிகவும் மோசமான வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டனர்.

 “தமிழாராய்ச்சி குறுகிய எல்லைக்கு உட்பட்டது அல்ல. பரந்து விரிந்து பல துறைகளில் வளர்ச்சியடைந்திருக்கின்றது. தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் பற்றி உள்ள ஆராய்ச்சி மட்டும் தமிழாராய்ச்சி என்ற நிலை மாறி , தமிழ் மக்கள் வரலாறு, தமிழ் மக்கள் மனிதவியல், தமிழ் மக்கள் சமயங்கள் , தத்துவங்கள், தமிழ்த் தொல் பொருளியல், தமிழர் பண்பாடு, தமிழ்க் கலைகள், தமிழ் மொழியியல் எனப் பல துறைகளிலும் தமிழாராய்ச்சி வளர்ச்சியடைந்திருக்கின்றது. மேலும், இன்று பிற நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களில் தமிழை ஒரு பாடமாக வைத்துள்ளனர். “ இவையனைத்தும் தனிநாயகம் அடிகளின் சாதனைகளாகும் எனப் பேராசிரியர் சு. வித்தியானந்தன் குறிப்பிட்டுள்ளார்.

 “இலக்கியம் வளர்ச்சியடைவதற்கு நிலைக்களனாக உதவும் பொருட்கள் மக்களும் இயற்கையும் ஆகும். இவ்விரு பகுதிகளையும் பிரித்து, இயற்கையை விடுத்து மக்களையும், அல்லது மக்களை விடுத்து இயற்கையையும் பற்றியும் புலவர் பாடுவரேல், அவ்விலக்கியம் குறையுள்ள இலக்கியமாகவே விளங்கும். தமிழ்ப் புலவரோ, தம் புலமைத் திறனைக் காட்டுவதற்கு முதற் பொருளாக மக்களையும், துணைப் பொருளாக இயற்கையையும் எடுத்துக் கொண்டனர்“ என சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு குறித்து தனிநாயகம் அடிகள் குறிப்பிட்டுள்ளார்.

 ‘நம் மொழியுரிமைகள்‘ என்னும் பிரசுரத்தில் தனிநாயகம் அடிகள் , “சைவம், வைணவம், இசுலாம், கத்தோலிக்கம் , புரட்டஸ்தாந்து என்று பிரிந்து தொண்டாற்றும் மனப்பான்மையும், கொழும்புத் தமிழர், மலைநாட்டுத் தமிழர், மட்டகளப்புத் தமிழர், யாழ்ப்பாணத் தமிழர் என்று வேற்றுமை பாராட்டுவதும் நம் இனத்திற்கு நன்மை பயக்காத முறைகள் ஆகும். நம் இனத்திற்கு ஒற்றுமையும், உறுதியும் ஏற்படுவதற்கு நம் எழுத்தறிஞர்களும், மேடைக் கலைஞர்களும் ஒத்துழைத்தல் வேண்டும். நமக்குப் புதிய பாடல்கள் வேண்டும். சின்னங்கள் வேண்டும். சிலைகள் வேண்டும். நமக்கென கலைக்கழகங்கள் வேண்டும். பல்கலைக்கழகங்கள் வேண்டும்” எனத் தமிழர், தமிழ் மொழி வளர்ச்சிக்கான வழியைச் சுட்டிக் காட்டுகிறார்.

 ‘தமிழ்த்தூது’ . ‘ஒன்றே உலகம்’ ‘திருவள்ளுவர்’ முதலிய தமிழ் நூல்களையும் , ‘பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை’, பழந்தமிழ் இலக்கியத்தில் கல்விச் சிந்தனைகள்’ (Ancient Tamil Education) முதலிய ஆங்கில நூல்களையும் , ‘தமிழியல் நூல்கள் ஆய்வடங்கல்’ (A reference  Guide to Tamil studies) ‘வெளிநாடுகளில் தமிழ்க் கல்வி ‘ (Tamil Studies  Abroad), ‘தமிழ்ப் பண்பாடும் நாகரிகமும்‘ (Tamil  culture and civilization) முதலிய மூன்று நூல்களைத் தொகுத்து அளித்து உள்ளார்.

 ‘கிறிஸ்துவ தமிழ் இலக்கிய மன்றத்தை நிறுவி ‘Tamil Culture’ என்னும் காலாண்டு இதழைத் தொடங்கி நடத்தினார்.

 தனிநாயகம் அடிகள், இலங்கை அரசின் சாகித்திய மண்டலத்தின் உறுப்பினர், சென்னை மாநில அரசின் தமிழ் வளர்ச்சிக் கழக உறுப்பினர், சென்னைப் பல்கலைக் கழக ஆங்கில-தமிழ் அகராதிக் குழுவின் உறுப்பினர், சென்னை மாநில அரசின் குழந்தைகள்-மூத்தோர் பாடநூல் குழுவின் தலைவர் முதலிய பல பதவிகள் வகித்து சிறப்பாக பணியாற்றியுள்ளார்.

 'தமிழியல்’ ஆய்வை உலக அளவில் அறிவுத் துறையாக உயர்த்திடவும், உலகத்தின் பல நாடுகளில் உள்ள தமிழர்களின் மத்தியில் ஒற்றுமையுயணர்வை ஏற்படுத்திடவும், அனைத்துலக தமிழாராய்ச்சி மன்றம் அமைக்கப்படவும், பிறநாட்டுத் தமிழர்களுக்கு தமிழ்க் கல்வி கிடைக்கப் பெறவும், பிறநாட்டு நூலகங்களில் தமிழ் நூல்கள் பேணப்படவும், அரிய தமிழ் நூல்களைத் தேடி எடுத்து மீண்டும் தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்திடவும் அயராது பாடுபட்ட தனிநாயகம் அடிகள் தமது 67-வயது வயதில் 01-09-1980 ஆம் நாள் காலமானார்.

- பி.தயாளன்

Pin It