சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் மகாபாரதக் கதை பிரபலமாக துவங்கியிருந்த நேரம். இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் மதம் பற்றிய கட்டுக்கதைகள் துளிர்விட ஆரம்பித்தன. அதன் உச்சமாக ஜெருசலேம் நகரில் ஒரே நேரத்தில் பல மதங்கள் வேர்விட ஆரம்பித்தன.

ஜெருசலேம் ரோமானிய சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்தது. மன்னர்தான் கடவுள் என்ற கருத்தை மக்கள் மீது அரசு திணித்திருந்த காலம் அது. அந்தக் காலத்தில் தான் இயேசு அவதரிக்கிறார். மக்கள் அவரை தேவதூதன் எனக் கொண்டாடுகின்றனர். இவரை வளர விடுவது ஆபத்து என அஞ்சிய ரோமானிய அரசு அவரை சிலுவையில் அறைகிறது.

பதினோராம் நூற்றாண்டின் இறுதிக்கட்டம். கிறிஸ்தவர்களின் புனித நகரமான ஜெருசலேமை இஸ்லாமியர்கள் தங்கள் கீழ் கொண்டு வந்தனர். அவர்களிடமிருந்து ஜெருசலேமை மீட்க போப்பாண்டவர் இரண்டாம் அர்பன் வழிகாட்டுதலின்படி, கிறிஸ்தவர்கள் சிலுவைக் குறியை ஆடையில் தரித்துக் கொண்டு ஜெருசலேம் நோக்கி படையெடுத்துச் சென்றார்கள். ஜெருசலேம் ரத்தத்தால் சிவப்பாக மாறியது.

அடுத்த நூற்று பத்து ஆண்டுகளில் ஜெருசலேம் ஐந்து முறை புனிதப் போர்களை சந்தித்தது. ஜெருசலேம் கிறிஸ்தவ தலைமையின் கீழும் இஸ்லாமியத் தலைமையின் கீழும் மாறி மாறி வந்தது. இந்தப் போர்களில் பல ஆயிரம் பேர் உயிர் விட்டார்கள். இதையே வரலாறு சிலுவைப் போராக தனது பக்கங்களில் பொறித்துக் கொண்டது.

Pin It