இந்தியாவின் மாபெரும் சமூகச் சீர்திருத்தவாதி ஜோதிராவ் புலே அடித்தட்டுக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது குடும்பத்தினர் பூச்செடிகள், பழமரங்கள், காய்கறிகள் ஆகியவற்றைப் பயிரிட்டு வந்தனர்; பூ வியாபாரத்திலும் ஈடுபட்டனர். ஜோதிராவ் புலே 1827 ஆம் ஆண்டு கோவிந்த்ராவ், சிம்னாபாய் தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். ‘சுடர் ஒளி’ என்ற பொருளில் ஜோதி என இவருக்குப் பெயர் சூட்டப்பட்டது.

                booleஜோதிராவ் புலேக்கு ஒரு வயது இருக்கும்போது தாயார் சிம்னாபாய் இறந்துவிட்டார். தந்தை இரண்டாம் திருமணம் செய்துகொள்ளாமல் தனது குழந்தைகளை வளர்ப்பதற்கு ஒரு வளர்ப்புத் தாயை அமர்த்திக் கொண்டார். கோவிந்த்ராவ் தன் மகன் ஜோதிராவ் புலேயை பள்ளியில் சேர்த்தார். புத்திக் கூர்மையும், ஆர்வமும் மிகுந்த ஜோதிராவ் புலே படிப்பில் பெரும் முன்னேற்றங்களைக் கண்டார்.

                கோவிந்த்ராவ் கடையில் எழுத்தராக பணியாற்றி வந்தார். ஒரு பார்ப்பனர் “உன் மகன் கல்வி கற்பதால் மதவிரோதியாகிவிடுவான், விவசாய வேலைக்கு லாயக்கற்றவனாகிவிடுவான், கலகக்காரனாகிவிடுவான்” –என்று கோவிந்த்ராவிடம் கூறினார். அதைக் கேட்டு தன் மகனை பள்ளியிலிருந்து நிறுத்திவிட்டார். பள்ளியிலிருந்து நிறுத்தப்பட்டாலும் புத்தகங்கள் மீதான ஆர்வம் அவருக்குக் குறையவில்லை. பகல் முழுவதும் வயலிலும், தோட்டத்திலும் உழைப்பார்; இரவு விளக்கு வெளிச்சத்தில் பல புத்தகங்களைப் படிப்பார்.

                இந்நிலையில் பதிமூன்று வயதில் ஜோதிராவ் புலேவுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. எட்டு வயது மனைவியின் பெயர் சாவித்திரி. உருது மொழி ஆசிரியர் ஹிப்விஹர் பெய்க் முன்சி என்பவர் முயற்சியால் 1844 ஆம் ஆண்டு மீண்டும் ஜோதிராவ் புலே, ஒரு மிஷனரி பள்ளிக்கு அனுப்பப்பட்டார். அப்போது அவருக்கு வயது பதினான்கு.

                பாடங்களை கற்றுக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். தேர்வுகளில் அதிகம் மதிப்பெண்கள் பெற்றார்; தன் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நன்மதிப்பையும், பாராட்டையும் பெற்றார். ஸ்காட்டிஸ் பிரிட்டிஷ் மிஷன் நடத்தி வந்த பள்ளியிலும், புத்வர் அரசு பள்ளியிலும் பள்ளிப் படிப்பை முடித்தார்.

                ஜோதிராவ் புலே இளமையில் சிவாஜி, ஜார்ஜ் வாஷிங்டன் போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தார். அவர்களின் துணிச்சல், நாட்டுப் பற்று, உயர்ந்த குறிக்கோள் இவரது மனதில் பதிந்தது. தாய் நாட்டின் விடுதலைக்கு அவர்களைப் போலவே ஈடுபடத் தூண்டியது. மேலும், தாமஸ் பெயினின் படைப்பான ‘மனித உரிமைகள்’- என்ற புத்தகம் ஜோதிராவ் புலேயின் சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அறியாமையில் உழன்றுகிடந்த சக குடிமக்களை முன்னேற்றத் துடித்தார். காலம் கடந்துபோன மூட நம்பிக்கைகளுக்கு, அடிமைகளாக இருந்து வந்த அவர்களை எழுச்சிக் கொள்ள தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

                ‘மற்றவர்களுக்கு நன்மை செய்வதே நல்லொழுக்கம். மற்றவர்களுக்கு தீங்கிழைப்பது பாவம்’- என்ற கொள்கையை ஜோதிராவ் புலேயும் அவரது நண்பர்களும் கொண்டிருந்தனர். 1847 ஆம் ஆண்டு ஜோதிராவ் புலே தனது ஆங்கிலப் பள்ளி படிப்பை முடித்துக் கொண்டார். அமெரிக்க விடுதலைப் போராட்டத்திலிருந்து இவர் பெற்ற ஊக்கம் மிக ஆழமும், அகலமும் கொண்டதாக இருந்தது. குருதி நாளங்களில் அது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. மனித உரிமைகள், மனித சமத்துவம், மனித விடுதலை ஆகிய கருத்துக்கள் ஜோதிராவ் புலேயின் மனதை ஈர்த்தன.

                ஒரு தச்சனின் மகன் தச்சனாக இருக்க வேண்டும் என அக்காலத்தில் எதிர்பார்த்தது போலவே, தோட்டக்காரனின் மகனான ஜோதிராவ் புலே பள்ளிப் படிப்பை முடித்தவுடன் தோட்டக்காரனாகவே வருவான் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜோதிராவ் புலே மற்றவர்களின் வழியைப் பின்பற்றுபவரல்ல; அவரே ஒரு வழிகாட்டியாவார். மக்களின் நல்வாழ்வும், அவர்களுக்கு ஊழியம் புரியவேண்டுமென்ற உணர்வும் அவரது சிந்தனையில் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

                ஒரு பார்ப்பன நண்பரின் திருமண ஊர்வலத்தில் ஜோதிராவ் புலே கலந்துக் கொண்டதற்காக, பார்ப்பன‌ர்களால் மிகவும் அவமானபடுத்தப்பட்டு விரட்டப்பட்டார். அந்த அவமானத்தால் மிகவும் மனம் பாதிப்படைந்தார். பார்ப்பனர்கள் ஆட்சி செய்து வந்த மகாராஷ்டிரத்தில் அதிகம் துன்பத்திற்குள்ளானது ஏழை தாழ்த்தப்பட்ட ஜாதி மக்களே. பூனாவில் வீதியில் நடக்கும் தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் இடுப்பில் இலைகளைக் கட்டிக்கொள்ள வேண்டும். கழுத்தில் மண் சட்டியை தொங்கவிட்டுக் கொள்ள வேண்டும். அச்சட்டிக்குள்தான் அவர்கள் தங்கள் எச்சிலைத் துப்பிக்கொள்ள வேண்டும். கீழே துப்பக் கூடாது. இந்த சுதந்திரம்கூட காலையிலும், மாலையிலும் கிடையாது. காரணம் அவர்களது நிழல் தங்களை அசுத்தப்படுத்திவிடும் (தீட்டு) என பார்ப்பனர்கள் கருதினார்கள்.

                phule_280பார்ப்பனர்களின் மேலாதிக்கம் வாழ்வின் அனைத்து துறைகளிலும் நிலவி வந்தது. அடிமைத்தனம், வறுமை, துன்பம் இவைகள்தான் சூத்திரர்களின் நிலைமை. “சமூக இழிவுக்கு எதிராக கலகம் செய்ய வேண்டும்; அடிமைச் சங்கிலியை உடைத்தெரிய வேண்டும்; மதத்தின் பெயரால் நடத்தப்படும் கொடுமைகளையும், பாதிப்புகளையும் எதிர்க்க வேண்டும்; மூடப் பழக்க வழக்கங்கள், சடங்குகள் ஆகியவற்றின் வெங்கொடுமைகளை பற்றிய உணர்வுப் பூர்வமான புரிதல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏற்பட வேண்டும்! அப்போதுதான், விடிவு பிறக்கும்”- என்று ஜோதிராவ் புலே மக்களுக்கு எடுத்துரைத்தார்.

                வகுப்புவாதத்தைவிட சாதியம் அபாயகரமானது. காரணம், வகுப்புவாதத்தின் புயல் மையங்களை எளிதாக கண்காணித்து அதன் தீமைகளை இரக்கமின்றி வேரறுத்துவிடலாம். ஆனால், சாதியமோ தலைவர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள், வணிகர்கள் ஆகியோர் மத்தியில் கண்ணுக்கு தெரியாத வகையில் ஊடுருவி நிற்கிறது. சாதி மறைந்து வருகிறது. ஆனால் சாதி உணர்வோ தகுதி என்ற போர்வையின் கீழ் வாழ்ந்து வருகிறது. பொறியியல், மருத்துவம், தொழில் நுட்பம் ஆகியவற்றில் மாணவர்கள் சேர்க்கையில் பிரச்சனை எழும். அப்போதெல்லாம், காலங்காலமாக கல்வியறிவு பெற்று வந்த தலைமுறையில் பிறந்த பார்ப்பன மாணவனை, தலைமுறை தலைமுறையாகக் கல்வியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்த தாழ்த்தப்பட்ட சாதி மாணவனோடு ஒப்பிட வேண்டுமென, இத் ‘தகுதி’ மிக நுட்பமாக வாதம் செய்யும்; இப்படி தகுதி, திறமை பற்றி அன்றே ஜோதிராவ் புலே எடுத்துக் கூறினார். அவர் கூறி நூற்றைம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இன்றும் மேல் சாதியினர், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்கின்றனர். தகுதி, திறமை என்ற சொத்தை வாதத்தை முன் வைப்பதையும், நீதி மன்றங்கள் அதையே பிரதிபலிப்பதையும் நாம் இன்று இந்தியாவில் கண்கூடாக காண முடிகிறது.

                பார்ப்பனியம் சமூக ஏற்றத் தாழ்வுகளை வளர்த்து வருகிறது. அதன் விளைவாக அதிகாரமும், சலுகைகளும் மேல் சாதியினருக்கு கிடைத்து வருகிறது. சாஸ்திரங்களும், புராணங்களும் மேல் சாதியினர்களுக்கு சாதகமான கருத்துகளை பரப்புகிறது. சூத்திரர்கள், ஆதி சூத்திரர்கள், பெண்கள் ஆகியோரின் முன்னேற்றத்திற்கு தடையாக விளங்குகிறது. எனவே, பார்ப்பினியத்தை தீவிரமான தாக்குதல்கள் மூலம் முறியடிக்க வேண்டும் என மக்களை அணி திரட்டினார்.

                வேதம் படிக்கவும், வேதம் ஓதவும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரிமை இருந்தது. வேதங்களைப் படித்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தண்டனை அளிக்கப்பட்டது. பார்ப்பனர் அல்லாத பிற சாதி சிறுவர்களின் கல்வியை நயவஞ்சகமாக பல வழிகளில் பார்ப்பனர்கள் தடுத்தனர். தாழ்த்தப்பட்ட சாதியினர் கல்வி கற்றால் வேலை வாய்ப்புகளில் தங்களுக்கு பங்காளிகளாக வந்துவிடுவார்கள்; அதனால் பெரும்பகுதி வேலைகள் அவர்களுக்கே சென்றுவிடும்; இவ்வாறு பார்ப்பனர்கள் கருதினர். அதனால் தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி பெறுவதற்கு பல தடைகள் அக்காலத்தில் ஏற்படுத்தப்பட்டன.

                “தொட்டிலை ஆட்டும் கைகள் உலகத்தை ஆளும்” என்ற பொன் மொழியின் உண்மையை உணர்ந்தவர் ஜோதிராவ் புலே. அறியாமை இருளை அகற்றவும், கல்வியறிவை வழங்கவும், பெண்களுக்கென பள்ளி ஒன்றை திறந்தார். பெண்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு வழி காட்டுபவர்கள், கல்வியின் மூலவேர் பெண்கள். அவர், தனது பள்ளியில் சூத்திரப் பெண்களுக்கும், ஆதி சூத்திரப் பெண்களுக்கும் கல்வி அளித்தார். இது வைதீகப் பார்ப்பனர்களின் எதிர்ப்பை சம்பாதித்தது. ‘அறிவும், கல்வியும் சூத்திரர் வீடுகளில் புகலிடம் தேடிக்கெண்டது’- எனப் புலம்பினார்கள். அக்காலத்தில் சாஸ்திர விதிகளின்படி கல்வி கற்கும் உரிமை சூத்திரனுக்கில்லை, ஆகவே, இது கடவுள் விருப்பத்திற்கும், மதத்திற்கும், சமூகத்திற்கும் எதிரானது. பெண்களுக்கு கல்வி கற்றுத் தருவது என்பது மிக மோசமான பாவச் செயலாகும். மேலும், “பெண் கல்வி கற்றால் தன் தந்தையை மதிக்க மாட்டாள், மற்றப் பெண்களோடு பழக்கம் ஏற்படுத்திக் கொள்வாள், ஆணவக்காரியாக மாறிவிடுவாள், இழிவான நூல்களை படிப்பாள்” – என்ற மிகவும் பிற்போக்கான கருத்து நிலவி வந்தது. அணு அளவு சுதந்திரம்கூட பெண்களுக்கு வழங்கப்படாத நிலை இருந்தது. அந்தக் காலத்தில் பெண்களுக்கு கல்வியளிக்க வேண்டும் என்பதற்காக பள்ளியைத் திறந்த ‘முதல் சமூக சீர்த்திருத்தவாதி’ ஜோதிராவ் புலே.

                தனது பள்ளியில் ஆசிரியர் பணிக்கு வேறு பெண்கள் வராத காரணத்தினால் தனது மனைவி சாவித்திரியை ஆசிரியராக நியமனம் செய்தார். ஜோதிராவ் புலே, பள்ளி நடத்துவதைக் கண்டு ஆத்திரமடைந்த உயர் சாதியினர், அவரது தந்தையைச் சந்தித்து மிரட்டல் விடுத்தனர். மிரட்டலுக்குப் பயந்து அவரது தந்தை, ஜோதிரவ் புலேயையும் அவரது மனைவியையும் வீட்டை விட்டு வெளியேற்றினார். “நான் உயிரிழப்பதாக இருந்தாலும் சரி, என் லட்சியத்தை கைவிட மாட்டேன்” –என்று தனது தந்தையிடம் கூறிவிட்டு வெளியேறினார். வேறொரு இடத்தில் மீண்டும் பள்ளியை தொடங்கி பெண்களுக்கு கல்விப் பணியாற்றினார். பள்ளியில் உள்ள குடிநீர்த் தொட்டிகளிலும், கிணறுகளிலும் நீர் அருந்த தாழ்த்தப்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. அந்நிலை கண்டு கொதிப்படைந்த ஜோதிராவ் புலே, தனது சொந்த செலவிலேயே குடிநீர் வசதி செய்து கொடுத்தார்.

                ஜோதிராவ் புலே கல்விப் பணிக்காக தம் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு உன்னத மனிதர். பெண் கல்வியின் பாதுகாவலர். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக நூல்நிலையம் ஆரம்பித்தார். ‘முதல் சுதேசி நூல் நிலைய’த்தை தொடங்கிய பெருமைக்குரியவர் ஜோதிராவ் புலே.

                தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்விக்காக தனது வாழ்நாள் முழுவதும் போராடினார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விடுதலை கிடைக்கவும், உரிமைகள் கிடைக்கவும் கல்வி மிக முக்கியம் என்பதை பிரச்சாரம் செய்தார். சிலைகளை வழிபடுவதைக் காட்டிலும், அறிவே சிறந்தது எனக் கூறினார். சமூக மாற்றத்திற்கு அறிவாயுதத்தை ஏந்துங்கள் என்று இளைஞர்களைத் தட்டி எழுப்பினார்.

                பெண் குழந்தைகளைக் கொல்லுதல், விதவைகளைக் கொளுத்துதல், பால்ய மணம்புரிதல், குழந்தை விதவை மறுமணத்தைத் தடுத்தல் – ஆகியவற்றை எதிர்த்துப் போராடினார். சமத்துவம், விடுதலை, பகுத்தறிவு இவற்றின் அடிப்படையில் புதிய சமூகத்தைச் சமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ‘அறியாமை என்பது ஒரு அபாயகரமான நோய்’-அறியாமையை எதிர்த்து அறிவாளிகள் போராடவேண்டும்! என்று எடுத்துரைத்தார். விதவைகளை மொட்டையடிக்கும் கொடுமைக்கு எதிராக குரல் கொடுத்தார். நாவிதர்களைத் திரட்டி மொட்டையடிப்புக்கு எதிராக போராட வைத்தார்.

                1888 ஆம் ஆண்டு, மே மாதம், 11 ஆம் தேதி, மண்ட்வி பகுதியிலுள்ள கோவிவாடா அரங்கில் சாதாரண மக்கள், தங்கள் விடுதலைப் போராளிக்கு நன்றி செலுத்த ஒரு சிறப்பான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். நாற்பதாண்டுகளுக்கு மேலாக ஏழை மக்களுக்கு இவர் ஆற்றி வந்த நீண்டகால, தன்னலமற்ற உன்னதப் பணிகளைப் பாராட்டி தலைவர்கள் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்கள். அறியாமை, வைதீகம், தனிச் சலுகை ஆகியவற்றிற்கு எதிராகத் தனி ஒருவராகப் போராடியதற்காகவும், அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நன்மைக்காக அயர்வின்றி பாடுபட்டதற்காகவும் ஜோதிராவ் புலேவுக்கு “மகாத்மா” என்ற பட்டம் அளிக்கப்பட்டது.

                தீண்டத்தகாதவர்களுக்காகவும், பெண்களுக்காவும் இவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்காகவும் போராடிய ஜோதிராவ் புலே 1890 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் தேதி காலமானார்.

                பொய்க்கு எதிரான உண்மையின் போராட்டம்; அநீதிக்கு எதிரான நீதியின் போராட்டம்; அடிமைதனத்திற்கெதிரான விடுதலையின் போராட்டம்; இப்படி சமூகப் போராட்டங்களுக்கு வித்திட்டவர் ஜோதிராவ் புலே! அதனால்தான் மகாத்மா காந்தி 1933 ஆம் ஆண்டு மே மாதம் எரவாடா சிறையிலிருந்த நேரத்தில், ஜோதிராவ் புலேயை ‘ஒரு உண்மையான மகாத்மா’ எனப் பாராட்டினார்.

                “கல்விக் குறைவால், அறிவு சீரழிந்தது.

                 அறிவுக் குறைவால், நல்லொழுக்கம் அழுகியது.

                 நல்லொழுக்கக் குறைவால், முன்னேற்றம் நின்று போனது.

                 முன்னேற்றம் நின்றுபோனதால், செல்வம் மறைந்தது.

                 செல்வக்குறைவினால், சூத்திரர்கள் அழிந்தனர்.

                 கல்லாமையிலிருந்தே அனைத்துத் துயரங்களும் ஊற்றெடுக்கின்றன”

                                                                                                                                -ஜோதிராவ் புலே