கோடம்பாக்கம் சிவலிங்கம்

kodampakkam sivalingam'சின்னச்சாமிபோல பத்துத் தமிழனாவது செத்தால் தான், தமிழ் சாகாமல் இருக்கும்'. திருச்சியில் சின்னச்சாமி தீக்குளித்த செய்தி அறிந்தததிலிருந்து, உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இப்படிச் சொல்லிக் கொண்டிருப்பாராம் சிவலிங்கம்.

சென்னை கோடம்பாக்கம் விசுவநாதபுரத்தில் 1941  இல் பிறந்தார். அண்ணன் வீட்டில் தங்கியிருந்தார். சென்னை மாநகராட்சி ஊழியராக 75  உரூபா ஊதியத்தில் பணியாற்றி வந்தார்.

தமிழகம் முழுவதும் மாணவர் பேரணி 25.1.1965 ஆம் நாள் மாவட்டந்தோறும் நடந்தது. மதுரைப் பேரணியில் மாணவர்கள் அரிவாளால் வெட்டப்பட்ட செய்தி சிவலிங்கத்தைச் சினங் கொள்ள வைத்தது .

வானொலியில் செய்தி கேட்ட சிவலிங்கம் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்: "நாளைக்கு இந்தி ஆட்சி மொழி யாகப் போகிறது. அன்று நமக்குத் துக்க நாள். நான் கறுப்புச் சின்னம் அணியப் போகிறேன்."

வீட்டுத்திண்ணையில் தூங்கும் சிவலிங்கத்தை அண்ணன் காளிமுத்து விடியற்காலையில் பார்த்தபோது காணவில்லை. எதிரே உள்ள திடலில் எவரோ தீப்பிடித்து எரிவதுபோல் தெரிந்தது. ஓடினார், 'உயிர் தமிழுக்கு! உடல் தீயிற்கு' என எழுதப்பட்ட தாள்கள் சிதறிக்  கிடந்தன.

'இந்தி ஆட்சிமொழி ஆவதைக் கண்டித்துத் தீக்குளித்துச் சாகிறேன்"

சிவலிங்கத்தின் எழுத்தைத் தெரிந்துகொண்ட அண்ணன், கருகிக் கிடந்த உடலைக் கட்டிப்பிடித்துக் கதறினார். இருபத்து நான்கு வயது சிவலிங்கம் 26.11.1965 இல் தமிழுக்காகச் சாம்பலானார். இந்தச் செய்தியறிந்து, இந்தியத் தலைமையமைச்சர் இலால்பகதூர் சாத்திரி அறிக்கை வெளியிட்டார்.

"சென்னை மாகாணத்தில் இருவர் தீக்குளித்த செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன். இந்தி குறித்து எழுந்துள்ள சிக்கல்களை நாம் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்”.

"வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்!
    விசைஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்!

சூழ்ச்சிதனை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத்
     தொகையாக எதிர்நிறுத்தித் தூள்தூ ளாக்கும்
காழ்ச்சிந்தை, மறச்செயல்கள் மிகவும் வேண்டும்!

    கடல்போலச் செந்தமிழைப் பெருக்க வேண்டும்!

- பாவேந்தர் பாரதிதாசன் (பாவேந்தம் - 17 , பக்கம் – 28)

- புலவர் செந்தலை ந.கவுதமன், சூலூர் - பாவேந்தர் பேரவை, கோவை