மேலப்பாளையத்தைப் பற்றி டிவிட்டரில் எழுதி எப்படியோ எங்க ஊரின் பெருமையை உலகத்துக்கே தெரிய வைத்துள்ளார் எச். ராஜா. இதுதான் சமயம் மேலப்பாளையத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வதற்கு.

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணிக் கரையோரம், வயல்கள் சூழ்ந்த நகர் மேலப்பாளையம். இது பாளையங்கோட்டைக்கு மேல் பகுதியில் இருப்பதால், மேலப்பாளையம் என்று பெயர் பெற்றிருக்கிறது.

indian muslimsபாண்டிய மன்னனின் துறைமுகத் தலைநகரமான கொற்கை கடலுக்குள் மூழ்குவதால், அங்குள்ள கரையோர மக்கள் பரவலாக தாமிரபரணி நதிக்கரைக்கு வர ஆரம்பித்துள்ளார்கள். அங்கு பெரும் வணிகம் நடைபெறும் பகுதி பேட்டை என்னும் பகுதியாகும். வணிகம் நடைபெறும் பகுதியை பேட்டை என்று அழைப்பது பண்டைய மரபு.

இந்த பேட்டையின் ஒரு பகுதியினைப் பாண்டியபுரம் என்றும், மற்றொரு பகுதியை திருமங்கை நகர் (மேலப்பாளையம்) என்றும் அழைத்தார்கள்.

திருமங்கை நகரின் கிழக்கெல்லையில் அமைந்துள்ளது வீரராகவபுரம். வீரராகவ முதலியார் என்பாரின் நினைவுக் குறியாக விளங்கி வருகிறது. நாயக்கர் ஆட்சியில் நெல்லைப்பகுதியை அதிகாரம் பெற்று ஆண்டு வந்த தளவாய் அரியநாயக முதலியாரின் வழித்தோன்றலாகிய வீரராகவ முதலியாரின் பெயரால் அப்பகுதி அமைந்துள்ளது. வெள்ளையர்கள் ஆட்சியின்போது மேலப்பாளையம், கீழ வீரராகவ புரம் என்றும் அழைக்கப்பட்டது.

நெடுமாறனாகிய பாண்டிய மன்னன், நெல்வேலியைக் காணுதற்கு வந்த நாளில் அவனை நெல்லை மக்கள் எதிர்கொண்டு வரவேற்ற இடம் பாண்டியபுரமாயிற்று (பேட்டை).

அவன் மனைவியாகிய மங்கையர்க்கரசியை பெண்கள் எல்லாம் திரளாக வந்து உபசரித்த மற்றொரு இடத்தை திருமங்கை நகர் (மேலப்பாளையம்) என்னும் பெயர் பெற்றது.

பண்டைய ஏடுகளில் இது திருமங்கை நகர், மங்கா நல்லூர், மங்கையர் நாடு என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டிருக்கின்றது.

இந்த பாண்டிய மன்னன்தான் அரபு நாட்டு வணிகர்களுக்கு ஆதரவு வழங்கினான் மற்றும் மதுரை மற்றும் திருநெல்வேலியில் அவர்களது குடியிருப்பு அமைவதற்கு உதவினான்.

இதே போன்று சோழ நாட்டின் தலைநகரான உறையூரிலும் முஸ்லிம் வணிகர்கள் தங்குவதற்கு சோழ மன்னன் உதவினான். அவர்களது வழிபாட்டுத் தலம் ஒன்று உறையூரில் அமைவதற்கும் ஆதரவு நல்கினான். அந்தப் பள்ளிவாசல் (கி.பி.726) திருச்சி கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் இன்றும் இருக்கிறது.

மிஸ்ர் தேசம் என்று அழைக்கப்படும் எகிப்தில் 'ஹலரத் மவ்த்' என்ற ஊர் இருந்தது. அங்கு நெசவுத் தொழில் செய்து வந்த, சில அரபு வணிகர்களும் ஹிஜ்ரி 232ல் புறப்பட்டு, கப்பல் மூலம் இந்தியாவின் தெற்கு பகுதியில் உள்ள கேரளா மாநிலத்திலுள்ள கொச்சியை வந்தடைந்து நதிக்கரையோரம் உள்ள மேலப்பாளையத்தில் குடியேறி சகோதரத்துவமாய் வாழ்ந்து வந்தனர்.

வணிகத்திற்காக வந்த முஸ்லிம்களை ஆரம்ப காலத்தில் யவனர், சோனகர், துலுக்கர் என்று அழைக்க ஆரம்பித்தார்கள். தமிழர்களுடன் அவர்கள் கொண்டிருந்த வணிகத் தொடர்பில் உள்ள நேர்மை, சிந்தனைகள், செயல்பாடுகள், வணக்க வழிபாடுகள் ஆகியவை தமிழ் மக்களைக் கவர்ந்தன. இனிய பேச்சும் இயல்பான வணிகத் தொடர்பும், சாதாரண மக்களை மட்டுமல்லாமல், சோழ பாண்டிய மன்னர்களையும் கவர்ந்தன.

இறைவன் ஒருவனே என நம்புதல், நாளொன்றுக்கு ஐந்து முறை இறைவனுக்கு வணக்கம் செலுத்துதல், ஆண்டுக்கு ஒரு மாதம், நாள் முழுவதும் உண்ணா நோன்பிருத்தல், சாதி சமய பேதமின்றி அனைத்து மக்களையும் சகோதரர்களாகப் பாவித்து , அன்பு செலுத்துதல் ஆகிய புதிய கோட்பாடுகள் தமிழக மக்களிடையே ஒரு புதிய சிந்தனையை ஏற்படுத்தின.

நாளடைவில் இந்த அரபு இஸ்லாமியர்கள் வணிகத்தோடு தமிழர்களின் சமூக நிலையுடனும் ஒன்றி, வர்த்தக மொழியினைக் கற்று, கலந்து, தமிழ் முஸ்லிம்களாக மாறிப் போயினர்.

வாணிபத்திற்கான தமிழ், வாழ்க்கைக்கான தமிழாக மாறிப் போயின. இவர்களது அணிகலன்கள், உணவு முறைகள், ஆடைகள், கலாச்சாரங்கள் எல்லாம் தமிழ் மக்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய சமயங்கள் போன்று இஸ்லாமும் தவிர்க்க முடியாததாக மாறிப்போய் தமிழ் முஸ்லிம்களாகவே மாறிப்போயினர்.

ஆரம்ப கால கட்டத்தில் கைத்தறித் தொழில்தான் முதன்மைத் தொழில். பர்மா, இலங்கை என்று பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து சிறந்து விளங்கியது. பின்னர் விசைத்தறி வந்ததால், அந்த தொழில் கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்து, பின்னர் பிழைப்பு தேடி, ஏற்றுமதி செய்த நாட்டுக்கு, தாங்களே ஏற்றுமதியாகி செல்ல ஆரம்பித்தார்கள்.

மலேசியா, சிங்கப்பூர், பர்மா என்று ஆரம்ப காலக் கட்டத்தில் சென்று , பின்னர் பெட்ரோல் வளம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு சவுதி அரேபியா, குவைத் என்று வளைகுடா நாடுகளுக்கு பயணம் செய்ய ஆரம்பித்தனர்.

பொருளாதார வசதி அதிகம் இல்லாததாலும் ,கல்வி அறிவில் பின்தங்கியதாலும், இட ஒதுக்கீட்டுப் பிரச்சனைகளாலும் வேறு வழியில்லாமல் அந்த வளைகுடா பயணம் தொடர ஆரம்பித்து இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் பீடித் தொழிலில் மேலப்பாளைய பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகமாய் ஈடுபட ஆரம்பித்தார்கள். மேலப்பாளையத்தில் முன்னரெல்லாம் குடும்பத்தின் ஒட்டு மொத்த தேவையுமே பீடித்தொழிலால் மட்டுமே சாத்தியமாயிற்று.

கைத்தறி பீடியாக மாறியது. பீடி கேன்சராக மாறியது.

கல்விதான் நம்மை முன்னேற்றும் என்று உணர்ந்து கல்வியறிவினை வளர்த்து, பிள்ளைகள் படிக்க ஆரம்பித்த பிறகு, இப்பொழுதான் பீடித் தொழிலில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

முன்பெல்லாம் என்ஜினியர் வீடு எங்கேயிருக்கிறது என்றால் எல்லாரும் அழைத்துச் சென்று காட்டுவார்கள். இப்பொழுது அந்த எல்லாருமே என்ஜினியராகி விட்டார்கள் என்னுமளவிற்கு கல்வியில் 60 சதவிகிதத்தையும் தாண்டிச் சென்று கொண்டிருக்கின்றோம்.

இஸ்லாமியர்கள் 80 சதவிகிதமும், இந்து கிறித்தவ சகோதரர்கள் 20 சதவிகிதமும், இன்னமும் மாமன் மச்சான்களாக, தொழில் தொடர்பில் உடன் பிறக்காத உறவுகளாய் அமைதியாய் வாழ்ந்து கொண்டிருக்கும் ஊர் இது.

எச்சைகள் வந்து துப்ப நினைத்தால், இந்தியர்களாய் நின்று விரட்டி அடிக்கும் பாளையக்காரர்களை ஒத்த மேலப்பாளையக்காரர்கள் நாங்கள்.

மேலப்பாளையத்தில் பாகிஸ்தான் கொடி பறந்ததாக புளுகு மூட்டையை வழக்கம்போல அவிழ்த்து விட்டிருக்கும், போட்டோஷாப் கட்சி பாஜகவின் தேசியத் தலைவர் எச். ராஜா, சுதந்திரம் வாங்கி 3 வாரத்திற்குப் பிறகு பிறந்த மோடிஜியிடமிருந்து டிஜிட்டல் கேமிரா வாங்கி ஒரு செல்ஃபி எடுத்திருக்கலாமே? கண்டுபிடிக்கப்படாத இமெயிலையே அனுப்பியவர்களுக்கு இது சாத்தியப்படாதா என்ன?

இந்தியாவில் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 1948ல் பதிவு செய்யப்பட்ட முஸ்லீம் லீக் கட்சியின் கொடியைக் கூட, பாகிஸ்தான் கொடி என்று புரிந்து கொள்ளும் அளவுக்கு முட்டாள்களாக இருக்கிறார்கள் என்றால் இவர்களின் தலைமையில் எப்படி இந்தியாவின் வரலாறு திரிக்கப்படும் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

அப்போது மேலப்பாளையத்தில் பறந்து கொண்டிருந்தது இந்திய சுதந்திரத்திற்காக, காங்கிரசுடன் இணைந்து பாடுபட்டு, பெற்ற வெற்றியை கொண்டாடும் வகையில், முஸ்லிம் லீக் மற்றும் காங்கிரஸ் கொடிகள் தான் அவைகள்.

மேலப்பாளையத்துக் காரர்களின் வரலாற்றை எச் ராஜா போன்ற பொய்யர்கள் - தமிழகத்தில் எங்கே கலவரத்தை உண்டு பண்ணலாம் என்று விஷமத்துடன் கருத்துக்களை வெளியிடும் ராஜாக்கள் தெரிந்து கொள்வது அவசியமோ இல்லையோ நாம் மேலப்பாளையத்துக்காரர்களாவது நிச்சயம் தெரிந்து கொள்ளவேண்டும்.

இந்தியாவிற்காக அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான போராட்டத்தில், ஆங்கிலேயர்களின் ஆங்கிலத்தைக் கூட படிக்கக்கூடாது, "ஹராம்" என்று உலமாக்களால் பத்வா விடப்பட்டு, அதனையும் நம்பி தமது கல்வியறிவினைப் பாழாக்கி, வளைகுடாவை நம்பிக்கொண்டு இப்போது சுதந்திர இந்தியாவில் மூன்றாம் தர குடிமக்களாக, இட ஒதுக்கீட்டுக்குப் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் இஸ்லாமியர்களாவது இந்த வரலாற்றினை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது அவசியமாய்படுகிறது.

இந்தியா நமது மண். நமது உரிமை. காட்டிக் கொடுத்தவர்களுக்கே இவ்வளவு உரிமை இருக்கும்பொழுது போராடியவர்களுக்கு எவ்வளவு இருக்க வேண்டும்? எப்பொழுதும் விட்டுக் கொடுக்கக்கூடாது.

பாளையக்காரர்களுக்கு சமமாக மேலப்பாளையத்துக்காரர்களும் போராடினார்கள் என்கிற வரலாறு தெரியுமா எச் ராஜாவுக்கு?

பாளையக்காரர்களோடு மேலப்பாளையத்துக்காரர்கள் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் போரிட்டதன் சாட்சியாக உள்ள வீர வாள், வேல் கம்பு, ஈட்டி, குதிரைப் படை வீரர்கள் பயன்படுத்திய வாள் சூரி ஆயுதக் கம்பிகள் என்று இன்னமும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

1920ம் ஆண்டு தாமிரபரணி நதிக்கரையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் காயிதே மில்லத் அவர்களின் தலைமையில் , மேலப்பாளையத்தின் முஸ்லிம் இளைஞர்கள் பெரும்பாலோனோர் கலந்து கொண்டு இந்த அடிமைத் தனத்திலிருந்து இந்தியாவை மீட்டு வெள்ளையனை வெளியேற்றுவதற்கான திட்டத்தின் ஆலோசனையில் பங்கு பெற்றார்கள்.

இந்தியாவின் சுதந்திரத்திற்காக ஒரு தலைமுறையே ஆங்கிலம் கற்காமல் இன்னமும் அதற்கான பலனை அனுபவித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம்களின் தேசபக்தியை, வெள்ளையனுக்கு அடிபணிந்தவர்கள் வந்து நியாயம் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

எச் ராஜா வகையறாக்களைப் போல இந்தியாவைக் காட்டிக் கொடுத்து முன்னேறியவர்கள் அல்ல. அட்மினை வைத்து வேலை வாங்கும் எச் ராஜா போன்றோர்களெல்லாம் மதச் சார்பின்மை பற்றி பேசுவதுதான் வியப்பாக இருக்கிறது

பீடி சுற்றியோ
பிரியாணி கி்ண்டியோ
பிழைத்துக் கொள்கிறோம்
ஆனால்
இந்தியா
மதசார்பற்ற நாடென்று மட்டும்
பிதற்றாதீர்கள்

என்ற ப செல்வகுமாரின் கவிதைதான் ஞாபகம் வருகின்றது.

இந்தியாவின் சுதந்திரத்திற்கான தமிழக போராட்ட வீரர்களின் வரலாற்றை, மேலப்பாளைய இளைஞர்களின் பங்குகள் இல்லாமல் நீங்கள் எழுதிவிட முடியாது ராஜா.

அந்த வரலாறு எல்லாம் பிரிட்டிஷ்காரர்களுக்கு சாமரம் வீசிக்கொண்டிருக்கும் உங்களது ஆர்எஸ்எஸ் ஏடுகளில் இருப்பதில்லை. இது தியாகிகளுக்கான வரலாறு, துரோகிகளுக்கானதல்ல.

VST Tahamsu thaseenஅன்றைய வெள்ளையனின் கடல் ஆக்ரமிப்பை எதிர்த்து, வெள்ளையனை எதிர்த்து, கப்பல் விடுவதற்கு ஒரு ட்ரஸ்ட் ஆரம்பிக்கப்பட்டு, இந்திய நாளிதழில் பாராதியாரால் விளம்பரம் போடப்பட்டது. ஆனால் சில அனாக்களும், நூறு ரூபாய்களும்தான் அவருக்கு கிடைத்தது.

அந்த நேரத்தில் கைத்தறி தொழிலில் வந்த காசில், தங்களால் முடிந்தவரை பங்குகளையும், நன்கொடைகளையும் வழங்கியவர்கள் மேலப்பாளையத்துக்காரர்கள்.

ரங்கூனில் வசித்த உத்தமபாளையத்தைச் சேர்ந்த ஹாஜி பக்கீர் முகமது ராவுத்தர் அவர்கள் கப்பலை வாங்குவதற்கு சுமார் 800 பங்குகளை (கப்பல் வாங்குவதற்கான கால்வாசிப் பணம்) அன்றைய மதிப்பில் ரூ. 10 லட்சம் வழங்கினார்.

மேலப்பாளையத்தில் இருக்கும் பழமையான மிகப்பெரிய குடும்பம் வி.எஸ்.டி குடும்பம். அந்தக் குடும்பத்தின் மூத்தவரான வி. எஸ்.டி முகமது இப்ராகீம், 1942 ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக அம்பை ரோட்டில் உள்ள தனது பங்களாவில் வைத்து இரகசியமாக கே.பி.மருஷவாலா வெளியிட்ட கிராம சுதந்திரப் பிரகடனத்தை தனது கைகளால் எழுதி பிரதிகள் எடுத்து விநியோகம் செய்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டு போலிசாரால் தடியடி செய்யப்பட்டு மயக்கமடைந்த எம்.ஆர் உலகநாதனுக்கு துணிந்து சிகிச்சை அளித்தவர். சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரசுடன் இணைந்து , இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு துணை நின்றவர்.

அது மட்டுமல்ல இவரது தந்தையார் சம்சுதாசீன் தரகனார், கிலாபத் போரில் தீவிரங்காட்டி இந்திய சுதந்திரத்தில் மேலப்பாளையத்திலிருந்து படைகளைத் திரட்டியவர்.

இப்படி மேலப்பாளையத்துக் காரர்கள் வெள்ளையனே வெளியேறு போராட்டத்திற்கான பிரகடனத்தை பரப்பிக் கொண்டிருந்தபொழுதுதான், உங்களது பாரத ரத்னா வாஜ்பாய், வெள்ளையனுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். "அய்யா என்னய மன்னிச்சு விட்டுருங்கய்யா..நான் சும்மாக்காட்டியும் தெருவுல வந்து நின்னு வேடிக்கைப் பார்த்தவனை, ரவுடின்னு நினைச்சு தப்பா பிடிச்சிட்டீங்க" ன்னு வெள்ளக்காரன் கால்ல விழந்த வரலாறு இங்கே இருக்கு பாருங்க…(பிரண்ட் லைன் ஆங்கில பத்திரிகை (பிப்ரவரி 7-20, 1998) 

vajpaayee apologyமேலப்பாளையம் மட்டுமல்ல அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்களும் சுதந்திர வேட்கையில் உந்தப்பட்டு எங்களுடன் இணைந்து சுதந்திரத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றனர். ஒரு ஆள் ஆர் எஸ் எஸ்ஸிலிருந்து ஒரு ஆளையாவது எச். ராஜாக்களால் சுட்டிக் காட்ட முடியுமா?

மேலப்பாளைத்திலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ள பணகுடி இராதாபுரத்திலிருந்த அம்ஜியான் சாஹிப், கள்ளிகுளம் முகைதீன் ஆகியோர்கள் 1926-ல் சுதந்திரப் போரில் தீவிரப் பங்கெடுத்துக் கொண்டு அரசின் அடக்குமுறையை எதிர்த்து தேசியப் பிரச்சாரம் வெற்றிகரமாக நடைபெற இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு முழு ஒத்துழைப்பையும் கொடுத்தவர்கள்.

திருநெல்வேலியில் பிறந்த செய்யது ஜலால், 1932ல் கள்ளுக்கடை மறியலிலும், அந்நியத் துணி எதிர்ப்பு தனி நபர் சத்தியாக்கிரகம் ஆகியவற்றிலும் பங்கேற்று, பாளையங்கோட்டை ஜெயிலில் வாடியவர்.

மேலப்பாளையத்தை ஒட்டியுள்ள பேட்டை முஹம்மது நயினார் பள்ளிவாசல் தெருவில் 1909-ல் பிறந்த வி.கே. அப்துல்ஹமீது, 1929 போராட்டத்திலும், மதுரையில் கள்ளுக்கடை மறியலில் 1931லும் கலந்து கொண்டு சிறை சென்றவர்

செங்கோட்டை மேலுரைச் சேர்ந்த சாகுல் ஹமீதுவின் மகனாக 1907-ல் பிறந்த அப்துல்மஜித், 1927 போராட்டங்களிலும் சட்ட மறுப்பு இயக்கப் போராட்டங்களிலும் கலந்து கொண்டவர்.

கம்மது இஸ்மாயில் புதல்வராக 3-7-1904-ல் 175 நடுப்பேட்டைத் தெரு தென்காசியில் பிறந்த அப்துல்சலாம், 1922-ல் அந்நியத்துணி எதிர்ப்பு போரிலும் நாக்பூர் கொடிப்போரிலும் கலந்து கொண்டு ஒரு வருடத்திற்கு மேல் நாக்பூர் சிறையில் வாடியவர்.

திருநெல்வேலி பேட்டை ரகுமானியா பள்ளிவாசல் சன்னதி தெருவில் வாழ்ந்த அப்துல் ஹமீதுவின் புதல்வராக 1900-ல் பிறந்த முகம்மது இப்ராகிம், 1922 போராட்டத்தில் கலந்து கொண்டு கடலூர் சிறையில் வாடியவர்.

திருநெல்வேலி பேட்டை ரகுமானியா பள்ளிவாசல் மேலத்தெருவைச் சேர்ந்த முகம்மது இஸ்மாயில் 1897ல் பிறந்தவர் 1921 போராட்டத்திலும், நாக்பூர் கொடிப்போரிலும் கலந்து கொண்டு நாக்பூர் சிறையில் வாடியவர்.

தென்காசி எஸ்.எல்.எஸ் முஹம்மது முகையதீன் 1941-ல் போர் எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு சிறைத் தண்டனை பெற்றவர்.

திருநெல்வேலி எம். முகையதீன் இப்ராகிம் மரைக்காயர் 1894-ல் பிறந்தவர். 1921-ல் ஒத்துழையாமைப் போரிலும், 1922-23-ல் கள்ளுக்கடை மறியலிலும் கலந்துக் கொண்டு திருச்சி சிறையில் வாடியவர்.

25-11-1923ல் பிறந்த தூத்துக்குடி 47 ஜெயலானி தெருவைச் சேர்ந்த முகையதீன் ஷரீப் , 1942 ஆகஸ்ட் புரட்சியில் பங்கேற்றவர்.

தென்காசி தாலுகா விசுவநாதபுரத்தைச் சேர்ந்த முகம்மது உசைன் புதல்வராக 1915ல் பிறந்த நாகூரப்பா இராவுத்தர் , 1936ல் கள்ளுக்கடை மறியலிலும், அந்நியத்துணி எதிர்ப்பு போரிலும் கலந்து கொண்டவர்.

வெள்ளை இராவுத்தரின் மகனாக 1906-ல் தென்காசியில் பிறந்த சாஹித், 1942 ஆகஸ்ட் புரட்சியில் பங்கேற்று வேலூரிலும், தஞ்சாவூர் சிறப்பு ஜெயிலிலும் வாடியவர்.

செய்யது மீராசாகிப் புதல்வராக 1918ல் பிறந்த பணகுடி செய்யது அகமது கபீர் 1942 ஆகஸ்ட் போரில் கலந்து கொண்டு அலிப்புரம் ஜெயிலில் வாடியவர்.

எனக்குத் தெரிந்து நான் திரட்டிய தகவல்கள்தான் இந்த வரலாறு. இன்னமும் தியாகிகள் பென்ஷன் வாங்கிக் கொண்டு தள்ளாடியபடி கலெக்டர் ஆபிஸ் சென்று வரும் எங்கள் வாப்பாக்களின் வாப்பாகளை எல்லாம் விசாரித்தால் இன்னும் இந்தப் பட்டியல் நீளும்.

நாங்கள் பாகிஸ்தான் கொடியை ஏற்றினோம் என்று பொய் சொல்லி எந்த கலவரத்தையும் எச்.ராஜாக்களால் செய்துவிட முடியாது.

இந்த சரித்திரங்கள் வரலாறுகளை நீங்கள் அழித்திட முயன்றாலும், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் தியாகத்தில், நாங்கள் எப்போதும் இருப்போம், இந்த வரலாற்றை நாங்கள் கடைசி வரை ஞாபகப்படுத்திக் கொண்டே இருப்போம் எங்கள் கடைசி உயிர்வரை.

பள்ளிக்கூடத்தில் பள்ளித் தோழர்களாக, கல்லூரித் தோழர்களாக மற்றும் வியாபாரத் தொடர்பில் சகோதரத்துவத்தில் இந்து முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வாழ்ந்து வந்து கொண்டிருக்கிறோம்.

பொங்கலுக்கும் தீபாவளிக்கும் வந்த குவியும் பலகாரங்கள், ரம்ஜானுக்கு மறக்காமல் கொடுத்தனுப்பும் பிரியாணிகள், பண்ட மாற்று முறைகளை இன்னமும் பின்தொடர்கின்றோம். எச் ராஜாக்களைப் போல காவிகளும், அரசியல் வியாபாரிகளும், கலவரங்களை உண்டு செய்ய நினைத்தால் கூட, அவற்றை தவிடு பொடியாக்கி எங்கள் ஒற்றுமையைக் காட்டுவோம்.

திருநெல்வேலியில் சுலோச்சனா முதலியார் பாலத்தில் இருந்து வலதுபக்கம் கலெக்டர் அலுவலகத்திலிருந்து மேலப்பாளையம் செல்லும் தூரம் 4 கிமீ வழியெல்லாம் வயல்களும் வயல் சார்ந்த இடங்களும்.

பைக்கில் அந்தப் பாதையில், டாஸ்மார்க் பக்கம் திரும்பாமல் பயணப்பட்டு பாருங்கள்... அந்த சுத்தமான வயல்வெளிக் காற்று, நீங்கள் எந்த கெட்ட எண்ணம் மனதில் இருந்தாலும் அதனையெல்லாம் அந்த காற்று எடுத்துக் கொண்டு, சுத்தமாக உங்களை ஊருக்குள் அனுப்பும்.

எவ்வளவு இந்துத்வா சக்திகள் பிரிக்க நினைத்தாலும், எவ்வளவு டிவிட்டுகள் போட்டாலும், பெரிய தெரு மாரி கடையில்தான் கறி வாங்குவோம். அம்பை ரோடு ஜான் கடையில்தான் டீ குடிப்போம். பஜார் நாடார் கடையில்தான் பலசரக்கு வாங்குவோம். ஏனென்றால் நாங்கள் இந்தியர்கள்
இந்தியா எங்கள் தாய்நாடு
இஸ்லாம் எங்கள் வழிபாடு
தமிழே எங்கள் மொழியாகும்
தன்மானம் எங்கள் உயிராகும்.

யாரடா சொன்னது
எங்களை அந்நியன் என்று யாரடா சொன்னது?

பட மற்றும் தகவல்கள் உதவிக்கு நன்றி Lks Meeran Mohideen.
Reference: (http://www.tamilislamicaudio.com, http://lks-meeran.blogspot.com/,http://melapalaiyam.blogspot.com/ & விடுதலைப் போரில் தமிழக முஸ்லீம்கள்' (ஆசிரியர் - செ.திவான்)

- ரசிகவ் ஞானியார்