சென்னை பூவிருந்தவல்லியை அடுத்த காரம்பாக்கம் என்னும் சிற்றூரில் 1912-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி கா.கிருஷ்ணையர் வேங்கசுப்பம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார் வேங்கடராமையா. இவரது தாய்மொழி தெலுங்கு ஆகும்.

சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் படித்தார். செங்கல்பட்டிலுள்ள தூய கொலம்பா உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர், தமிழ் மீது ஆர்வம் கொண்டு பி.ஓ.எல் படித்து தேர்ச்சி பெற்றார். ஆங்கிலத்தில் முதுகலைத் தேர்விலும் வென்றார்.

திருப்பனந்தாள் காசிமடச் செந்தமிழ்க் கல்லூரியில் முதல்வராக 1947 முதல் 1972வரை இருபத்தைந்து ஆண்டுகள் பணியாற்றினார்.

மேனாள் தமிழக ஆளுநர் கே.கே.ஷா தொடங்கிய தமிழ், சமஸ்கிருதம் மற்றும் இந்திய மொழிகள் ஆய்வு நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் ஆராய்ச்சியாளராக இருந்தார். அங்கிருந்த காலத்தில், பன்மொழி இலக்கண ஒப்பீட்டு ஆய்வுளைச் செய்து வந்தார். அதன் பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் திருக்குறள் இருக்கையில் மூன்று ஆண்டுகள் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார்.

தஞ்சை தமிழ்ப் பல்லைக்கழகம் 1981-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்பல்கலைக்கழகம் தொடங்கியபோது அரிய கையெழுத்துச் சுவடித்துறையின் முதல் தலைவராகப் பொறுப்பேற்று, ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். நிறைவாகத் திருவனந்தபுரத்தில் உள்ள பன்னாட்டுத் திராவிட மொழியியல் கழகத்தில் பணிபுரிந்தார்.

வேங்கடராமையா தமிழுக்கும், சமயத்திற்கும் ஆற்றிய பணிகள் ஏராளம், ‘ஆய்வுப்பேழை’, ‘கல்வெட்டில் தேவார மூவர்’, ‘இலக்கியக் கேணி’, ‘கல்லெழுத்துக்களில் சோழர் கால அரசியல் தலைவர்கள்’, ‘திருக்குறள் உரைக்கொத்து’, ‘திருமுருகாற்றுப்படை உரைக்கொத்து’ ‘திருக்குறள் குறிப்புரை’, ‘பன்னிரு திருமுறைப்பதிப்பு’, ‘கந்தபுராணம் பதிப்பு’, ‘திருவிளையாடற்புராணப் பதிப்பு’, ‘தஞ்சை மராட்டியர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்’, ‘தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு’, சிவனருள் திரட்டு’ ‘தஞ்சை மராட்டிய மன்னர் கால மோடி ஆவணமும், தமிழாக்கமும்’, ‘திருக்குறள் பரிப்பெருமாள் உரையும், ஆய்வுரையும்’, ‘திருக்குறளும் - நாலாயிர திவ்வியப் பிரபந்தமும்’, ‘மும்மொழி வெண்பாக்களில் நாயன்மார் வரலாறு’, ‘பெரிய புராணமும் - திருக்குறளும்’, ‘திருக்குறள் சமணர் உரை’ முதலிய பல நூல்களை எழுதியும், பதிப்பித்தும் தமிழுலகுக்கு அளித்துள்ளார்.

‘திருமுறைகளுக்கு உரை எழுதினால் இறந்துவிடுவார்கள் என்று மக்கள் நம்பிக்கை கொண்டிருந்த காலத்தில், 1949-ஆம் ஆண்டு காரைக்கால் அம்மையார் எழுதிய ‘அற்புதத் திருவந்தாதிக்குக் குறிப்புரை எழுதிப் பதிப்பித்தார். இந்நூல் தான் அவர் பதிப்பித்த முதல் நூல். காசித் திருமடத்தின் வெளியீடாக வந்தது. இவர் பதிப்பித்த நூல்களில் நூலாசிரியரின் வரலாறு, நூல் பற்றிய செய்திகள், கல்வெட்டில் ஏதேனும் குறிப்புகள் முதலியவற்றை குறிப்பிட்டிருப்பது சிறப்பு.

தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தின் மூலமாகத் திருக்குறளுக்குச் சமணர் எழுதிய உரையைப் பதிப்பித்தார். இவர் எழுதிய நூல்களிலும், கட்டுரைகளிலும் முன்பு எவரும் எழுதாத செய்திகளையே அளித்துள்ளார் .

‘தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும், சமுதாய வாழ்க்கையும்’ என்ற நூலில் தஞ்சை மராட்டியர் தம் ஆட்சிக்குட்பட்ட சமுதாயத்துக்குச் செய்த நன்மைகள், கலைச் சிறப்புகள், அக்காலத்திய பழக்க வழக்கங்கள், அரசியல் நிலைமைகள் போன்ற பலவற்றை மோடி ஆவணங்கள், கல்வெட்டுச் சான்றுகள், இலக்கியச் சான்றுகள் முதலியவற்றின் துணை கொண்டு ஆய்வு செய்து எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலக்கணம், இலக்கியம், கல்வெட்டு, வரலாற்றுப் புலமை, ஆங்கிலம், வடமொழி, தெலுங்கு மொழிப் புலமை அறிவும் கொண்டவர் வேங்கடராமையா. இவர் கல்வெட்டு ஆராய்ச்சிப் புலவர், செந்தமிழ்க் கலாநிதி, தமிழ்மாமணி முதலான பல்வேறு பட்டங்களைப் பெற்றுள்ளார்.

காலத்தை உயிரெனக் கருதினார். ‘காலம் பொன் போன்றது’ எனக் கூறக்கூடாது, ‘காலம் உயிர் போன்றது’ என்பார்.

வேங்கடராமையா 1995-ஆம் ஆண்டு சனவரி 31-ஆம் தேதி காலமானார். அவர் மறைந்தாலும், அவர் ஆற்றிய பணிகள், பதிப்பித்த நூல்கள், எழுதிய நூல்கள் முதலியவை தமிழ் இலக்கிய உலகில் என்றும் நிலைத்திருக்கும்.