(டிசம்பர் 22-ந்தேதி கணிதமேதை இராமானுஜன் அவர்களின் 125ஆம் ஆண்டு பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. அவருடைய நினைவைப் போற்றும் வகையில் அவருடைய வரலாறு வெளியிடப்படுகிறது.)

இந்தியாவின் மிகப்பெரிய கணித மேதைகளுள் ஒருவராகக் கருதப்படுபவர் சீனிவாச ஐயங்கார் இராமானுஜன் அவர்கள். எண்களுக்கான பகுப்புமுறைகோட்பாடு, (Analytical theory of numbers) நீள் வட்ட சார்புகள் (elliptic functions), தொடர் பின்னங்கள் (continued fractions), முடிவிலாத் தொடர்கள்(infinite series) முதலியவற்றில் செறிவான, கருத்துள்ள பங்களிப்புகளை (substantial contributions) வழங்கினார்.

தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து தென் மேற்கில் 400 கிமீ தொலைவில் உள்ள ஈரோடு என்ற ஊரில் 1887ஆம் ஆண்டு டிசம்பர்த்திங்கள் 22ஆம் நாள் அவருடைய பாட்டி வீட்டில் இராமானுஜன் பிறந்தார். பிறந்து ஒரு வருடம் ஆன பிறகு இவருடைய தந்தை பணியாற்றிக்கொண்டிருந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் ஊருக்குத் தாயாருடன் சென்றார். இவருடைய தந்தை சீனிவாச ஐயங்கார் கும்பகோணத்தில் சாரங்கபாணி தெருவில் வாழ்ந்து வந்தார். அவர் அவ்வூரில் துணிக்கடை ஒன்றில் பணியாற்றி வந்தார். இவருடைய தாயார் பெயர் கோமளம்.  இவருடைய மூன்றாவது வயது தொடக்கத்தில், 1889 ஆம் ஆண்டு பெரியம்மை நோயி னால் பாதிக்கப்பட்டார். அப்போது பெரியம்மை நோய் கண்டு பல பேர் இறந்து போனார்கள். இவர் தப்பிப் பிழைத்தார். இவருக்குச் சடகோபன் என்ற சகோதரர் பிறந்து மூன்று மாதத்தில் இறந்து போனார். அம்மை நோயால் பாதிக்கப்பட்டதால், தாயா ருடன் அவருடைய பெற்றோர் வாழ்ந்து வந்த காஞ்சிபுரம் சென்றார். இங்கு ஒரு தெலுங்கு வழிப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். இங்கும் இவருடைய தாயாருக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்து இருவரும் சில நாள்களில் இறந்தனர். அந்த நேரம் இவருடைய தாத்தா வேலையை இழந்தார். அவர்கள் சென்னைக்குச் சென்றதால் இவரும், இவர் தாயாரும் மீண்டும் கும்பகோணம் திரும்பினர். இங்கு ஓர் ஆரம்பப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். இவருக்கு ஐந்து வயதான போது, அந்த ஊரில் உள்ள காங்கேயன் ஆரம்பப் பள்ளியில் சேர்க்கப்பட்டுக் கல்வி பயின்று வந்தார்.

இவருடைய தாத்தா இறந்து போனதால் தாயாருடன் சென்னை சென்ற இவர் அங்கேயே தங்கியதால், சென்னையிலுள்ள ஒரு ஆரம்பப்பள்ளி யில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு படிப்பதில் இவர் ஆர்வம் செலுத்தவில்லை. பள்ளி செல்வதைத் தவிர்த்தார். இவர் பள்ளி செல்கிறாரா என்பதைக் கண் காணிக்க ஓர் ஆளையே உடன் அனுப்பி வைத்தனர். ஆறே மாதங்களில் அங்கு இருக்கப் பிடிக்காமல் மீண்டும் கும்பகோணம் திரும்பினார்.

தந்தையார் அவருடைய பணியிலேயே அதிக நேரம் செலவழிக்க வேண்டி வந்ததால், இவரை முழுமையாகக் கவனித்து வழி நடத்தியது இவருடைய தாயார் கோமளம்மாள் அவர்கள்தான். புராணக் கதைகளைச் சொல்லியும், நமது நாட்டுக் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளைப் போதிப்பதையும் அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். மதப் பாடல்களைப் பாடுவது, கோவிலில் நடைபெறும் பூஜைகளுக்குத் தவறாமல் செல்வது, சரியான நேரத்தில் உணவை உண்ணுவது என்று பல பழக்கங்களைத் தாயாரிட மிருந்து கற்றுக்கொண்டார்.

1898 ஜனவரியில் கும்பகோணம் நகர உயர்நிலைப்பள்ளியில்(Town High School) சேர்ந்தார். 11 வயதான போது இவருடைய வீட்டில் தங்கிப் பயின்று வந்த இரு கல்லூரி மாணவர்களிடம் முதன் முறையாகத் தன்னுடைய கணித அறிவை வெளிப்படுத்தினார். எஸ்.எல். லோனி(S.L. Loney) என்பவரால் எழுதப்பட்ட ‘முன்னேறிய முக்கோண வியல்’(Advanced Trignometry) என்ற நூலை அவர்களிடமிருந்து வாங்கி, இரண்டு வருடங்களில் அந்த நூலில் உள்ள பயிற்சிகளை முடித்ததோடு, தானாகவே சில தேற்றங்களை உருவாக்கினார். பள்ளியில் படித்த பொழுது அங்கு பயின்ற 1200 மாணவர்கள், பயிற்றுவித்த 35 ஆசிரியர்கள் அனைவருக்கும் கணிதவியலில் அதிக அளவு உதவி புரிந்து தன்னுடைய கணித ஆற்றலை வெளிப் படுத்தினார்.  பல நற்சான்றிதழ்கள், விருதுகளைப் பெற்றார்.

1903இல், இவருடைய 16ஆவது வயதில், நூலகத்திலிருந்து ஒரு நூலைப் பெற்றார். அது ஜி.எஸ். கார் (G.S.Car)என்பவர் எழுதிய ‘தூய, பயனுறு கணிதவியலின் அடிப்படை முடிவுகளின் சுருக்கம்’ (A synapsis of Elementary Results in Pure and Applied Mathematics)என்ற நூல். இதில் 5000 தேற்றங்கள்(theorems) இருந்தன. இந்த நூலை இவர் கையாண்ட விதம் இவருடைய கணித மேதைத் தனத்தை முழுமையாக வெளிப்படுத்தியது. அடுத்த ஆண்டில், இவர் தன்னுடைய முயற்சியில் பெர்னௌலி எண்களை(Bernoulli Numbers) உருவாக்கினார். 15 பதின்பகுப்பு(decimal) இடங்கள் உள்ள ‘ஆய்லர் மாறிலி’(Euler’s constant)யைக் கணக்கிட்டார்.

1904இல் பள்ளிப் படிப்பு முடியும் போது, அப்பள்ளித் தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி ஐயர் அவர்களால் முதன்மை மாணவனாகப் பாராட்டப் பெற்று கே. ரங்கநாதராவ் அவர்களின் பெயரிலான சிறப்புப் பரிசையும் வழங்கினார். கும்பகோணத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பயில்வதற்கான உதவித்தொகையும் வழங்கப்பட்டது.

கல்லூரியில் படிக்கும்போது, கணிதத்திலேயே தீவிரமாக ஈடுபட்டுப் படித்ததன் காரணம், மற்ற பாடங்களில் சரியான கவனம் செலுத்தாததால் அந்தப் பாடங்கள் பலவற்றில் தோல்வியடைந்தார். அதனால் உதவித்தொகை நிறுத்தப்பட்டது.

1905-ல் வீட்டைவிட்டு வெளியேறி விசாகப் பட்டினம் சென்றார். பின்னர் அங்கிருந்து அழைத்து வரப்பட்டு மீண்டும் சென்னையில் உள்ள பச்சை யப்பன் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். இங்கும் தன்னுடைய கணிதப் புலமையை வெளிப்படுத்தினார். ஆனால் உடல்நூல்(Physiology) போன்ற பாடங் களில் தோல்வியடைந்தார். எந்தவிதப் பட்டமும் பெறாமல் கல்லூரியை விட்டு வெளியேறினார்.

தனிப்பட்ட முறையில் கணித ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். அதற்கெதிராக வருமானமின்றி வறுமை இவரை விரட்டியது.

இந்த நிலையிலும், 1909ஆம் ஆண்டு, இவருக்கு 23 வயதான போது, ஜூலை 14 ஆம் நாள் 9 வயதான ஜானகி என்ற சிறுமியை இவருக்குத் திருமணம் செய்து வைத்தனர்.

சில மாதங்களுக்குப் பிறகு இவர் நீர்விரை நோயால்(hydrocele testis) பாதிக்கப்பட்டார். அதற்கான அறுவை சிகிச்சையை மேற்கொள்ள இவரிடம் போதிய பண வசதி இல்லை. 1910 ஜனவரியில் ஒரு மருத்துவர் இலவசமாக இவருக்கு அந்த அறுவை சிகிச்சையைச்  செய்தார்.

அதற்குப் பிறகு சில நண்பர்கள் வீடுகளில் தங்கி வேலை தேடும் முயற்சியில் ஈடுபட்டார். சென்னை முழுவதும் பல இடங்களில் வேலை தேடி அலைந்தார். எழுத்தர் பணியாவது கிடைக் காதா என்று ஏங்கினார். மாநிலக் கல்லூரி மாணவர்கள் சிலருக் குத் தனி வகுப்பு நடத்தி அதில் கிடைக்கும் வருவாயில் குடும் பத்தை நடத்தினார்.

மீண்டும் உடல்நலம் குன்றியது. அதிலிருந்து குண மாகியதும் அப்போது பிரெஞ்சு அரசின் கட்டுப்பாட்டில் இருந்த விழுப்புரம் நகருக்குத் தொடர் வண்டியில் சென்றார். அங்கு வி.இராமசாமி ஐயர் என்ற துணை ஆட்சியரைச் சந்தித்தார். அவர் இந்தியக் கணிதக் கழகம் ஒன்றைத் தொடங்கி நடத்தி வந்தார். அவரிடம் வருவாய்த் துறையில் வேலை கேட்டு விண்ணப்பித்தார். அவரிடம் தான் எழுதி வைத்திருந்த கணிதக் குறிப்புகளைக் கொண்ட ஏடுகளைக் காட்டினார்.  அந்த ஏடுகளைப் புரட்டிப் பார்த்து வியந்து போன அவர் சென்னையிலுள்ள தன்னுடைய நண்பர்கள் சிலரைப் பார்க்குமாறு கூறிப் பரிந்துரைக் கடிதங்களை அளித்தார். அதில் சிலர் இவரு டைய திறமையை உணர்ந்து இந்தியக் கணிதக் கழகச் செயலர், நெல்லூர் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த ஆர். இராமச்சந்திரராவ் அவர்களிடம் அனுப்பினார். இவருடைய கணிதத் திறமையைக் கண்டு அவர் வியந்துபோனார். ஆனாலும், அவை இவருடைய சொந்தத் திறமைதானா என்ற ஐயம் அவருக்கு ஏற்பட்டது. இவருடைய நண்பர் சி.வி. இராஜ கோபாலாச்சாரி, அவருடைய ஐயங்களைப் போக்க முயற்சித்தார்.

நீள்வட்டத் தொகையீடு(Elliptic integrals), குவிபிறை வடிவியல் தொடர்(Hypergeometric), அவருடைய விரி தொடர்(Divergent series) பற்றிய விளக்கங்களை அளிக்குமாறு பணித்தார். அதற்குரிய பணி ஆணையையும், நிதி உதவியையும் அளிக்குமாறு இராமானுஜம் கேட்டார். சென்னைக்கு இவரை மீண்டும் திருப்பி அனுப்பிய அவர், இவருடைய தினசரித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உதவிகளை அளித்தார். அதன் பின் ஆய்வுகளை மேற்கொண்ட இவர் அதன் விளக்கங்களை இராமசாமி ஐயரின் உதவியால் இந்தியக் கணிதக் கழகத்தின் பருவ இதழில் வெளியிட்டார். 17 பக்கக் கட்டுரை ஒன்றில் ‘பெர்னௌலி எண்களின் சில பண்புகள்(Some properties of Bernoulli’s Numbers)’ என்பதில் மூன்று விதமான நிறுவல்களைத் (Proofs) தந்திருந்தார். இது போல வேறு சில ஆய்வுக் கட்டுரைகளும் இவரால் அளிக்கப்பட்டன. சில கட்டுரைகள் சாதாரண கணித வல்லுநர்களால் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் அமையவில்லை.

இதற்குப் பிறகு, சென்னையிலுள்ள பொதுக் கணக்கர் அலுவலகத்தில்(Accountant General’s Office) பணியில் சேர்க்கப்பட்டார். அப்போது இவருடைய மாதச் சம்பளம் ரூ 20/-. சில வாரங்கள் மட்டுமே அப்பணியில் நீடித்தார். சென்னைத் துறைமுகப் பொறுப்புக் கழக முதன்மைக் கணக்கர் அலுவலகத்தில்(Chief Accountant of the Madras Port Trust) பணிக்கு விண்ணப்பித்தார். ஈ.டபிள்யூ மிடில்மஸ்ட்(E.W. Middlemast) என்ற மாநிலக் கல்லூரிக் கணிதப் பேராசிரியர் பரிந்துரை செய்தி ருந்தார். மூன்று வாரங்களுக்குப் பிறகு அங்கு எழுத்தர் வேலை கிடைத்தது. மாதச் சம்பளம் ஐ 30/-. அலுவலகத்தில் இவரிடம் அளிக்கப்பட்ட பணிகளை விரைந்து முடித்தார். ஓய்வு நேரங்களில் கணித ஆய்வு களை மேற்கொண்டார். இவரு டைய முதன் மைக் கணக்கர் சர் பிரான்சிஸ் ஸ்பிரிங்(Sir Francis Spring), இவருடன் பணியாற்றி வந்த எஸ். நாராயண ஐயர் ஆகியோர் இவருடைய ஆய்வு களுக்கு ஊக்கமளித்தனர். நாராயண ஐயர் இந்தியக் கணிதக் கழகத்தில் பொருளாளராகப் பணியாற்றி வந்தார்.

1913இல் இவருடைய கணித ஆய்வுகளை, நாராயண ஐயரும், இராமச்சந்திர ராவ் மற்றும் மிடில்மஸ்ட் ஆகியோரும் ஆங்கில நாட்டுக் கணித மேதைகளிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் கணித ஆசிரியர் எம்.ஜே.எம்.ஹில் என்பவர் இவருடைய ஆய்வு முடிவுகள் சற்றுக் குழப்பமாக இருப்பதாகத் தெரிவித்தார். அதற்குக் காரணம், இவரு டைய கல்விப் பின்புலம், கணித அடிப்படை அறிவு குறைவாக இருப்பதுதான் என் பதை உணர்த்தினார். அதனால், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகக் கணித அறிஞர்களுக்கு இராமானுஜன் கடிதங்கள் எழுதி அனுப்பினார். சில பேர் எந்த விதப் பதிலு மின்றித் திருப்பி அனுப்பினர். சிலர் இவருடைய ஆய்வு முடிவுகளை நம்ப முடியவில்லை என்றனர். ஆனால், ‘முடிவில்லாத் தொடர் (Infinite Series)’ என்ற இவருடைய ஆய்வு ஜி.எச்.ஹார்டி என்பவரைக் கவர்ந்தது.

ஜே.ஈ.லிட்டில்வுட்(J.E. Littlewood) என்ற உடன் பணிபுரியும் அறிஞரிடம் ராமானுஜன் ஆய்வுக்கட்டுரைகளை அளித்துப் பார்வையிடும்படிக் கூறினார். அவர் அவற்றைப் பார்த்துப் படித்தபின் இராமா னுஜன் அவர்களின் கணித மேதைத்தனத்தைக் கண்டு வியந்து போனார்.

ஹார்டி, லிட்டில்உட், மற்றும் ஈ.எச். நெவில்லே (E.H. Neville)முதலிய அறிஞர்கள் இராமானுஜனின் கணிதத் திறமையை உணர்ந்து வியந்து பாராட்டினர். அவர்க ளுடைய உதவியினால் லண்ட னுக்குச் செல்ல வாய்ப்பு ஏற்பட் டது. ஆனால், இராமானுஜன் அவர்களுடைய குல வழக்கப்படி, ‘நாடு விட்டு நாடு போவது கூடாது’ என்பதால் வெளிநாடு செல்ல மறுத்து விட்டார். இதனால், ஜி.டி.வாக்கர் (G.T.Walker) என்பவர்  சென்னைக்கு வந்து இராமானுஜத்துடன் கலந்துரையாடினார்.

பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு இராமானுஜன் 1914 மார்ச் 17-ல் இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றார். அங்கு ஹார்டி, லிட்டில்உட் ஆகியோருடன் கணித ஆய்வுகளை மேற்கொண்டார். இங்கு ஏ.எஸ். இராமலிங்கம் என்ற பொறியாளர் இராமானுஜன் அவர்கள் இலண்டனில் தங்குவதற்கு உதவினார். அவர்கள் இராமானுஜன் எழுதி வைத்திருந்த ஏடுகளைப் புரட்டிப் பார்த்தனர். சில முடிவுகள் தவறாகவும்,  சில ஏற்கனவே கண்டறிந்ததாகவும் இருந்தன. ஆனால், வேறு பல முடிவுகள் அவர்களை வியப்பில் ஆழ்த்தின. ஆய்லர் (Euler)மற்றும் ஜகோபி(Jacobi) போன்ற கணித மேதைகளுடன் ஒப்பிடக் கூடிய ஆற்றல் படைத்தவர் இராமானுஜன் என்று புகழ்ந்தனர். அங்கு ஐந்து வருடங்கள் தங்கி அவர்களுடன் ஆய்வுகளை மேற்கொண்டு லண்டன் கணிதக் கழகப் பருவ இதழில் ‘உயர் இணைவு எண்கள்(Highly composite numbers)’ என்ற தலைப்பில் வெளியிட்டார். இந்த ஆய்வு முடிவுகளை ஏற்றுக்கொண்டு இவருக்கு பி.ஏ. பட்டம் (முனைவர் பட்டத்திற்கு இணையானது) வழங்கப்பட்டது.

1917 டிசம்பர் 6-ல் லண்டன் கணிதக் கழகத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1918இல் இலண்டன் இராயல் கழகத்தின் ஆய்வாளராகச் சிறப்பிக்கப்பட்டார். இந்தச் சிறப்பு இரண்டாவது இந்தியராக, அதுவும் வயதில் சிறிய இவருக்கு அளிக்கப்பட்டது. ‘நீள் வட்டச் சார்பு மற்றும் எண்களின் கோட்பாடு(Elliptic functions and Theory of Numbers)’ என்ற ஆய்வறிக்கை வெளியிட்டபின் 1918-ல் முதலாவது இந்தியனாக கேம்பிரிட்ஜ் டிரினிடி கல்லூரியின்(Cambride Trinity College) ஆய்வாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

இந்த நிலையில் இவர் மீண்டும் நோயில் வீழ்ந்தார். முதல் உலகப் போரின் போது இவருடைய உணவு முறையினால் ஏற்பட்ட பற்றாக்குறையும் இதற்கு ஒரு காரணமாக அமைந்தது. அதன் விளைவாக என்புருக்கி நோயால்(tuberculosis) பாதிக்கப்பட்டார்.

1919-ல் இந்தியா திரும்பி, கும்பகோணம் சென்றார். 1920ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 6ஆம் நாள் தன்னுடைய 32ஆவது வயதில் காலமானார். இவருடைய விதவை மனைவி சென்னையில் வாழ்ந்து  1994இல் காலமானார்.

இவருடைய 75ஆவது பிறந்த நாளில் இந்திய அரசு முதல் நாள் உறையும், அஞ்சல் தலையும் வெளியிட்டு இவரைப் பெருமைப் படுத்தியது.

1993இல் திரு பி.கே. சீனிவாசன் என்ற கணித ஆசிரியரால் இராயபுரத்தில் ஒளவைக் கழகத்தில் ‘இராமானுஜன்  அருங்காட்சியகம்’ ஒன்று தொடங்கப் பெற்றது.

(அறிவியல் ஒளி - 2012 ஜனவரி இதழில் வெளியான படைப்பு)

Pin It