Oleanderஒலியாண்டர் Nerium oleander என்னும் தாவரம் உலகத்திலேயே மிகக் கொடுமையான நச்சுத் தாவரமாக கருதப்படுகிறது. தாவரத்தின் எல்லா பாகங்களும் நஞ்சுதான். பலவகையான நஞ்சுகளும் இந்த தாவரத்தில் காணப்படுகின்றன. இதில் காணப்படும் oleandrin மற்றும் neriine நச்சுக்கள் இதயத்தை பாதிக்கக் கூடியவை. தேனீக்களால் ஒலியாண்டர் பூக்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தேனை நக்கிய மாத்திரத்திலேயே மரணம் சம்பவிக்கும். ஒலியாண்டர் தாவரத்தின் பூக்கள் அழகானவை. ஆனால் அழகைப் பார்த்து ஏமாந்து போய்விடாதீர்கள். அத்தனையும் நஞ்சு.

கொடுமையான நச்சுத்தன்மை இருந்தாலும்கூட அழகிற்காக இந்தத் தாவரம் வளர்க்கப்படுகிறது. தூரக்கிழக்கு நாடுகளில் இருந்தும் மத்தியதரைக்கடல் நாடுகளில் இருந்தும் அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்ட இந்த தாவரம் உலர்ந்த வெப்ப நிலைகளிலும், வளம் குறைந்த மண்ணிலும் வளரக் கூடியது. அடர்த்தியான புதர்வடிவில் ஆறுமுதல் பதினெட்டு அடி உயரத்திற்கு ஒலியாண்டர் தாவரம் வளரும். இலைகள் அடர் பச்சை நிறத்திலும், தடிமனாகவும் இருக்கும். கொத்தாகப் பூக்கும் பூக்கள் மஞ்சள், சிகப்பு, இளஞ்சிவப்பு, வெள்ளை ஆகிய நிறங்களில் காணப்படும்.

வறண்ட நிலத்தில் கூட ஒலியாண்டர் அழகாக பூத்து அருமையான வாசனையைத்தரும். விலங்குகள் இயற்கையாகவே இந்த தாவரத்தின் அருகில் கூட போவதில்லை என்பது இயற்கையின் வினோதம்தான். வேகமாக வளரும் இந்தத் தாவரத்தை சாலைகளில் தடுப்பரண்களாக வளர்க்கிறார்கள். தூசு, இரைச்சல் இவற்றையெல்லாம் தடுக்கும் திறன் இந்த தாவரத்திற்கு உள்ளது. மண்ணரிப்பை தடுப்பதால் புதிய குடியிருப்புகள் தோன்றும் பகுதிகளிலும் ஒலியாண்டர் தாவரம் வளர்க்கப்படுகிறது.

ஒலியாண்டர் தாவரத்தின் ஓர் இலை ஒரு குழந்தையின் உயிரைப்பறிக்க போதுமானது. வயிற்றுப்போக்கு, வாந்தி, கடுமையான வயிற்றுவலி, நினைவிழப்பு, மயக்கம், ஒழுங்கற்ற இதயத்துடிப்பு வரிசையில் கடைசியாக மரணம் ஏற்படும். ஒலியாண்டர் நஞ்சை உட்கொண்ட ஒருவனுக்கு 24 மணிநேரத்திற்குள் மரணம் சம்பவிக்கவில்லையென்றால் அதற்கப்புறம் அவன் பிழைத்துக் கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் என்பது ஒரு ஆச்சரியமான செய்தி.

ஒலியாண்டர் நஞ்சுக்கு மருத்துவம் செய்யும்போது நோயாளியை வாந்தியெடுக்கச் செய்வதும், வயிற்றை காலிசெய்வதும், செறிவூட்டப்பட்ட கார்பனை உட்கொள்ளச்செய்து நஞ்சை உறிஞ்சும்படி செய்வதும் முக்கியமாகும்.

அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி