நான்மணிக்கடிகை என்பது ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட சிறந்த நூல். இதிலுள்ள ஆறாம் பாடல் நல்ல கருத்தைச் சொல்கிறது. கள்ளிச் செடியின் வயிற்றில் உயர்ந்த பொருளான அகில் தோன்றும். மான் வயிற்றில் மணம் வீசக்கூடிய அரி தாரம் பிறக்கும். கடலிலுள்ள சிப்பியில் ஒளி முத்து உருவாகும். இப்படி, சாதாரண உயிரினங் களில் புகழ் மிகுந்த - உயர்வுடைய - பொருள் கள் பிறக்கும். ஆகவே, மிகச் சிறந்த மனிதர் எங்கே தோன்றுவார் என்பதை யார் அறிவார்? என்று அந்தப் பாடல் அழகாக அறிவிக்கின்றது. இங்கே கூறப்பட்ட அரிதாரம், இன்று கஸ்தூரி என்று சொல்லப்படுகிறது. இது மானின் வயிற்றில் இருந்து கிடைக்கிறது என்பதை, இரண்டா யிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தமிழர்கள் அறிந்திருந்தார்கள்.

இந்தக் கஸ்தூரி தரும் மானைப் பற்றி வடபுல இராமாயணம் குறிப்பிடுகிறது. காட்டில் இராமனுடன் இருந்த சீதையைக் கவர்வதற்கு இராவணன் விரும்பினான். அவன் மாரிசனை அழைத்தான். மான் வடிவம் கொண்டு சீதையின் முன்னால் செல்லும்படி சொன்னான். மாரீசன் அப்படியே செய்தான். அவன் மேற்கொண்ட உருவம் கஸ்தூரி மான் என்று அந்த நூல் அறி விக்கின்றது.

இயற்கையின் படைப்புகளில் மானும், மயிலும் அழகின் சிகரங்கள். புள்ளி மான்,  கலைமான், கடமை மான் முதலிய பலவகை மான்கள் காடுகளில் உலவுகின்றன. கஸ்தூரி மானும் குடும்பத்திற்கு உரியது. இது உருவில் சிறியது.  இதன் உயரம் 50 செமீ அளவு இருக்கும். இதன் எடை ஏழேகால் கிலோ. இதன் தலை சிறியதாய் இருக்கும். இதன் உடல் பகுதி பெரியதாய்த் தோன்றும். இதன் உடல் அமைப்பு ஏறத்தாழ முயலைப்போன்றிருக்கும். இதன் தலை வலிமை குறைந்தது. இதன் வாய் வினோதமானது. இதன் உடலில் உள்ள நீண்ட மயிருக்குள் அது அடங்கி இருக்கும். இதன் காது நீள் வட்ட வடிவில் இருக் கும். இதன் உடலில் மயிர் அடர்ந்திருக் கும். அது பழுப்பு நிறமாக அமைந் திருக்கும். இந்த மான் நீண்ட ஓய்வுக்குப் பின்பு தன் உடலைக் குலுக்கும். அப்போது அதன் உடலிலிருந்து மயிர் உதிரும். பொதுவாக மானின் உடலில் கொம்புகள் உண்டு. ஆனால், கஸ்தூரி மானின் தலை யில் கொம்பு வளர்வதில்லை. காட்டு மானின் தலைப்பகுதியில் முகச் சுரப்பு உண்டு. அப்படிப்பட்ட முகச்சுரப்பு கஸ்தூரி மானிடம் இல்லை. ஆனால் மற்ற வகை மான்களிடம் இல்லாத பித்தப் பையை இது பெற்றுள்ளது. தற்காப்புக்காக மான், கொம்பைப் பயன் படுத்தும். கொம்பு இல்லாத கஸ்தூரி மான், அதற்குப் பதிலாகக் கூர்மையான கோரைப் பற்களைப் பெற்றுள்ளது. இந்தப் பற்களே இதற்கு ஆயுதமாகப் பயன்படுகின்றது. எல்லா மானின் வயிற்றிலும் நான்கு உள் பிரிவுகள் உள்ளன. கஸ்தூரி மானின் வயிற்றிலும், இத்த கைய நான்கு உள்பிரிவுகளும் உள்ளன. இந்த வயிற்றமைப்புக் காரணமாகவும் முகத்தோற்றம் காரணமாகவும் இது மான் குடும்பத்தில் சேர்க்கப் பட்டுள்ளது. மற்ற வகை மான்களைப் போலவே, இது, வயிற்றிலுள்ள புல் உணவை, வாய்க்குக் கொண்டு வருகிறது. அசை போடுகிறது. இது மலைப் பாங்கான பகுதியில் வாழ்கிறது. அதற்கு ஏற்றபடி இது கால்களைப் பெற்றுள்ளது. இதன் காலிலுள்ள குளம்புகள் வலிமையானவை. கூர்மையானவை. வழுக்குப் பாறைகள் - பனி படர்ந்த பெருங்கற்கள் - ஆகியவற்றின்  மேல் ஏறுவதற்கு ஏற்றபடி இதன் கால்களில் குளம்பு கள் அமைந்துள்ளன.

ஆண்சிங்கம் பிடரி மயிரைப் பெற் றுள்ளது. ஆண் யானை வலிமையும், நீளமும் உடைய தந்தங்களைக் கொண்டுள்ளது. ஆண் மயில் நீளமான அழகிய தோகையுடன் விளங்கு கிறது. இவற்றைப் போலவே, ஆண் கஸ்தூரி மானும் தனிச் சிறப்பு ஒன்றைப் பெற்றுள்ளது. அதனுடைய வயிற்றின் அடிப் பாகத்தில் ஒரு பை உறுப்பு உள்ளது. அதில் சுரப்பி ஒன்று இருக்கிறது. இந்தச் சுரப்பி வாசனை நீர்ப் பொருளைச் சுரக்கிறது. அதுவே கஸ்தூரி யாகும். இந்தக் கஸ்தூரியைச் சுரப்பதால், இது கஸ்தூரி மான் என்ற  பெயரைப் பெற்றது.

கஸ்தூரி என்பது என்ன? இது நறு மணம் வீசும் பொருள். இது சிவப்பும், பழுப்பும் கலந்த நிறம் கொண்டது. மனிதர்கள்  கஸ்தூரி மானைக் கொல்வார்கள். கஸ்துரி சுரப்பியைத் தனியாகப் பிரித்தெடுப்பார் கள்.  அதை உலர வைப்பார்கள். இதிலிருந்த நீர்ப்பொருள், சிறு சிறு மணல் போன்ற வடிவம் பெறும். இவற்றைக் கொண்டு வாசனைத் திரவியம் தயாரிப் பார்கள். இது மேலும் பலவிதங்களில் பயன்படுகிறது. தமிழகத்தில், இது சன்னி பாதாதிகேச ரோகங் களுக்குத் தயாரிக்கப்படும் மருந்தில் பயன் படுத்தப்படுவதாக அபிதான சிந்தாமணி என்ற தமிழ்க் கலைக்களஞ்சியம் கூறுகிறது. பாம்புக் கடி நஞ்சைப் போக்கும் மருந்து தயாரிப்பதிலும்  இதன் பங்கு உள்ளது. கஸ்தூரி மாத்திரை என்ற சித்த மருத்துவ மருந்துகளில் இதன் பெயர் இடம் பெற்றுள்ளது. கஸ்தூரிப் பொருளில் ஐந்து வகை உள்ளன என்றும், அவை, கரிகை, திலகை, குளுந்தை, பிண்டகை, நாயகை என்றும் தமிழ் லெக்சிகன் அகராதி அறிவிக் கின்றது.

கஸ்தூரி மான்கள் இமயமலைப் பகுதி யிலும், கிழக்கு ஆசிய நாடுகளிலும் வாழ்கின்றன. மான்கள் சமுதாய உணர்வு டையவை. வானில் தவழும் மேகக்கூட்டத்தைப் போல் சேர்ந்து வாழும் இயல்புடையவை. ஆனால், கஸ்தூரி மான்கள் தனியாக இருக்கும் நிலா போன்றவை.  இவை கூட்டமாகச் சேர்ந்து வாழ்வதில்லை. சில சமயம், ஆண் கஸ்தூரி மான், தன் துணை குட்டியுடன் ஒன்றாக இருப்பதும் உண்டு.

கஸ்தூரி மான்கள் மலைப் பாறைகள் மேல் தாவிச் செல்லக்கூடியவை. சாய்வான மரத்தின் மீதும் ஏறி நடக்கக்கூடியவை. இவை புல் தின்னும். தழையையும் மெல்லும். குருத்தைக் கடித்துண்ணும். வேர்களையும் உணவாகக் கொள்ளும். அவசரமாகத் தின்ற தீனியை அசை போடும். சிறுத்தை, தன் வாழிடப் பரப்பை வரையறுத்துக்கொள்ளும். அதைப் போலவே, ஆண் கஸ்தூரி மானும் தான் வாழும் இட அளவை வகுத்துக் கொள்ளும். தன் உடலின் சுரப்பி ஒன்று வெளிப்படுத்தும் நீர்ப்பொருளை வாழிட எல்லையிலுள்ள பாறை, செடியின் கிளை முதலியவற்றில் தடவி வைக்கும். இதன் மூலம் மற்ற மான்களுக்குத் தனக்குரிய இடத்தை அறிவிக்கும்.

மலை ஆடுகள், மலைப்பாங்கான இடத்தில் வாழும். சில சமயம் மனத்தை உலுக்கும் சத்தம் அங்கு எதிரொலிக்கும். வலிமை கொண்ட இரண்டு ஆண் ஆடுகள் தங்கள் தலைகளை மோதிச் சண்டை போடுவதன் விளைவாக அந்தப் பேரொலி அந்தப் பகுதியில் எதிரொலிக்கும். பெண் ஆட்டுடன் இணைவதற்காக அப்போராட்டம் நடக்கும். இப்படிப்பட்ட மோதல் சண்டை ஆண் கஸ்தூரி மான்களிடமும் உண்டு. இவற்றுக்குக் கொம்பு இல்லை. ஆனாலும் கடுமையான போட்டி உண்டு. இவை தம் கோரைப்பற்களை  ஆயுதமாகப் பயன் படுத்தும். ஆண் கஸ்தூரி மான்கள் கழுத்தை வளைக்கும். எதிரியின் கழுத்தில் தம் கூர்மை யான - நீளமான - கோரைப் பற்களை ஊன்றிப் புண் ஏற்படுத்தப் பெரு முயற்சி செய்யும். ஆழ மிகுதி காரணமாக இரத்தம் வரும். வலி தாங்க முடியாத ஆண் மான் தோல்வியை ஒப்புக் கொள்ளும். ஒதுங்கிச் செல்லும். இப்படிப்பட்ட போராட் டம் காரணமாகப் பல ஆண் கஸ்துரிமான் களின் கழுத்தில் வடுக்கள் காணப்படும். சில சயமம் கழுத்தில் ஏற்பட்ட பெரிய புண்ணின் விளைவாக ஆண் மான் இறந்து விடுவதும் உண்டு.

பெண் கஸ்தூரி மானின் வயிற்றில் கரு ஐந்து மாதங்கள் வரை வளரும். பின்பு அது ஒரு குட்டி போடும். சில சமயம் அது இரண்டு குட்டிகளை ஈனுவதும் உண்டு. தாய் மான், குட்டியைப் பாறைச் சந்தில் மறைத்து வைக்கும். அது உணவு தேடப் போகும். குறிப்பிட்ட நேரத்தில் அது குட்டி இருக்குமிடத்திற்கு வரும். அதற்குப் பால் ஊட்டும். நான்கு வாரங்கள் சென்ற பிறகு குட்டி மான் நடக்கும் ஆற்றலைப் பெறும். பின்பு அது தாயைப் பின்தொடரும். ஓராண்டு வரை அது தாயின் பாதுகாப்பில் இருக்கும். அது முழு வளர்ச்சி பெறும். அதற்குப் பிறகு தாயிடமிருந்து பிரியும். தன் வாழ்க் கையை அமைத்துக்கொள்ளும்.

கஸ்தூரி மானுக்கு இயற்கையான பகை விலங்குகள் உண்டு. நரி முதலியவை அதை வேட்டை ஆடும். ஆனால், மனிதன் தான் அதன் கொடிய பகைவன். கஸ்தூரிக்காக அவன், அந்த அழகிய மானை அழிக்கிறான். அநியாயமாகக் கொல்கிறான்.

கஸ்தூரி வாசனைப் பொருளைத் தரும் மற்றொரு விலங்கு கஸ்தூரி மாடு. கிரீன்லாந்து, கனடாவின் வட பகுதி முதலிய பனிபடர்ந்த இடங்களில் இது வாழ்கிறது. இது நான்கடி உயரம் இருக்கும். இதன் உடலில் மிகவும் அடர்த்தியான மயிர் உள்ளது. அம்மயிருக்கு அடிப்புறத்தில் மென்மையான மயிர் உள்ளது. கோடைக் காலத்தில், குளிர் தாங்கும் போர்வை போன்ற இந்த மென்மையான மயிர், கஸ்தூரி மானுக்குத் தேவைப்படாது. ஆகவே, அது அந்த மென்மையான  மயிர்களை உதிர்த்து விடும். அப்பகுதியில் வாழும் மக்கள் அதைத் திரட்டு வார்கள். ஆடையாக நெய்து விடுவார்கள். கஸ்தூரி மாட்டின் முகம் அச்சமூட்டுவதாக இருக்கும். அமெரிக்க நாட்டின் பைசன் என்ற காட் டெருமையின் முகத்தை நினைவூட்டுவ தாக  இருக்கும். இதன் கண்களில் முரட்டுத் தனம் பொங்கும். இதற்குச் சிறிய கொம்புகள் உண்டு. அது சற்று முன்னோக்கி வளைந் திருக்கும். மனிதர் சிலரின் முகத்தில் முடுக்கி விடப்பட்ட மீசை வீரத்தை வெளிக்காட்டும் சின்னம் போல் காணப்படுவதுண்டு. கஸ்துரி மாட்டின் வளைந்த கூர்மையான கொம்புகள், அந்த மீசைகளைப் போன்று தோன்றும்.  இந்த மாட்டின் சிறிய கொம்புகள் பகை உயிரிக்கு அச்சமூட்டும்.

இந்தக் கஸ்தூரி மாடு கடுங்குளிரையும் தாங்கக்கூடியது. ஒரு டிகிரி பாரன் ஹீட்டுக் கும் கீழாக கழித்தல் நாற்பது டிகிரி (-400 ) குளிரிலும்   இது உயிர் வாழும். பனிப்புயலை யும் எதிர் கொள்ளும். அப்போது இது, பனிக் கட்டித் தரையில் படுத் துக்கொள்ளும். கஸ்தூரி மானைப் போல் இது தனித்து வாழாது. காட்டு மானைப் போல் கூட்டமாக வாழும். துரத்தும் சிறுத்தையைக் கண்டு, காட்டு மான்கள் உயிர் தப்புவதற்காகப் பாயும். தாவி ஓடும்.ஆனால், கஸ்தூரி மாடு அப்படிப்பட்டது அல்ல. பகை உயிரி வருவ தைக் கண்ட தும்  ஒன்று கூடும். அரை வட்டக் கோட்டின் அமைப்பில், பகை உயிரின் முன்னால் நெருக்க மாக இருக்கும்.  தாக்கப் போகும் நிலையில் தலை தாழ்த்தி நிற்கும். பகை உயிரியை முறைக்கும். இதைக் கண்ட பகை உயிரி பின் வாங்கும். அஞ்சி ஓடும்;  சில சமயம், அரை வட்ட அமைப்பிலுள்ள ஒரு கஸ்தூரி மாடு, பகை உயிரியை நோக்கி முன்னேறும். உருமு வது போன்று முழங்கும். இந்நிலையில் கண்ணிற்குக் கீழிருக்கும் சுரப்பி ஒன்றை பின்னங்காலால் உரசும். அதிலிருந்து நீர்ப் பொருள் வெளிவரும். அது கீழே தரையில் விழும். அது ஒருவித வாசனை கொண்ட நீர்ப் பொருள். பூமியில் விழுந்த அது ஒரு குறிப் பைப் பகை உயிருக்கு உணர்த்தும். ‘இது எங்கள் இடம். இங்கே நீ வராதே’ என்று மறை முகமாகக் கஸ்தூரி மாட்டின் கருத்தை அறிவிக் கும். அந்த எச்சரிக்கைக் குறிப்பைப் புரிந்து கொண்ட பகை விலங்கு பின் வாங்கிச் சென்று விடும்.

பெண் கஸ்தூரி மாடு ஒரு கன்று ஈனும். இது தன் கன்றின் மேல் முழுக் கவனம் செலுத்து வதில்லை. வீட்டுப் பசு, தன் கன்றை அக்கறை யோடு காப்பாற்றும். ஆனால், கஸ்தூரி மாடு ஓடும்போது, தன் கன்று தன்னைப் பின்பற்றி வருகிறதா என்று கூட கவனிப்பதில்லை. இதன் விளைவாகக் கன்று தாயை விட்டுப் பிரிந்து விடும். அது பால்குடிக்கும் வாய்ப்பைப் பெறாமல் இறக்கும். அல்லது பனிப்படல நரி அதைக் கொன்று தின்றுவிடும். இந்தக் கஸ்தூரி மாடு முன்பு வட அமெரிக்காவில் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தது. பேராசை கொண்ட மனிதன் , இந்த மாடுகளை அழித்துவிட்டான். இன்று அங்கு ஒரு கஸ்தூரி மாடு கூட இல்லை. சில நல்லவர்கள் உலகின் வட பகுதியில் ஒரு சில கஸ்தூரி மாடுகளைக் கண்டார்கள். அவற்றைக் கொண்டு வந்தார்கள். ஸ்கேண்டினேவியா, இரஷ்யாவின் வடக்குப் பகுதி ஆகிய இடங்களில் அவற்றை விட்டார்கள். அந்தப் புகலிடங் களில் அவை பாதுகாப்புடன் வாழ்கின்றன.

கஸ்தூரி போன்ற வாசனைப் பொருள் கொண்ட வேறு சில உயிரினங்களும் உள்ளன. கஸ்தூரி வாத்து என்பது அவற்றில் ஒன்று. இது அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் வாழ்கிறது. எனவே, அந்தக் கண்டங்களின் பெயரால் அழைக்கப்படுகிறது. கஸ்தூரிப் பூனை என்பது மற்றொரு விலங்கு. இதுவும் அமெரிக்காவில் உள்ளது. ஒரு வேளை இது தமிழ்நாட்டின் புனுகுப்பூனை போன்ற விலங்காக இருக்கலாம். கஸ்தூரி எலி என்று கூட ஓர் உயிரி உள்ளது. இது வும் அமெரிக்காவில் உள்ளது. இதன் உடம்பிலிருந்து ரோஜாப் பூவின் வாசனை வெளிப்படுகிறது.

தமிழ்நாட்டில், மரம், செடி இனத்தில் கஸ்தூரி என்ற அடைமொழி சேர்க்கப்பட்டு வழங்கப்படுகிறது. கஸ்தூரி எலுமிச்சை என்று ஒரு மரம் சொல்லப்படுகிறது. இது சீனக் கொளுஞ்சி என்று அகராதி அறிவிக்கிறது. கஸ்தூரி மல்லிகை என்பது ‘நறுமணம்’ வீசும் பூவாகும். கஸ்தூரி மஞ்சள் என் றும் இங்கே சொல்லப்படு கிறது. கஸ்தூரி மரம் என்று ஐரோப்பாவில் ஒரு வகை மரம் உள்ளது.

(அறிவியல் ஒளி - 2012 ஜனவரி இதழில் வெளியான படைப்பு)