பாக்டீரியாக்கள் பேசிக்கொள்ள ஒரு மொழி உண்டு என்று சொன்னால், எத்தனை பேர் நம்புவார்கள்? ஆனால், உண்மையில் அவைகளுக்கென்று ஒரு தனி மொழி இருக்கிறது. இம்மொழியைக் கொண்டு பேசி கலந்தாலோசித்துவிட்டுத்தான் பல முக்கிய முடிவுகளை (உ.தா. நோய் உண்டாக்குவது) எடுக்கின்றன என்று ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. பாக்டீரியாக்களின் அந்த சங்கேத மொழியை பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து அதில் சில வார்த்தைகளை மனிதர்களாகிய நாம் கற்றுக்கொண்டுள்ளோம். நம்பமுடியவில்லையா? ஆம், பாக்டீரியாக்கள் தங்களுக்குள் தொடர்புகொள்ள, சில வேதிப்பொருட்களை தயாரித்து அதன் சுற்றுப்புறத்துக்கு அனுப்புகிறது. அப்படி அனுப்பப்பட்ட வேதிப்பொருட்களை உணர்வதன் மூலம் யார் தம் சுற்றத்தார் என்பதை தெரிந்துகொள்கிறது. நுண்ணுயிரிகளின் இந்த திறனை ஆராய்ச்சியாளர்கள், 'குவாரம் சென்சிங்' (Quorum sensing) என்று சொல்கிறார்கள்.

 ஒரு ஒரு-செல்உயிரிக்கு இந்த திறன் எதற்கு என்ற கேள்வி எழுகிறது, இல்லையா? ஆனால், இக்குணங்கள் பரினாம வளர்ச்சியில் தத்தம் இனத்தின் வளர்ச்சிக்காகவும், அனுகூலமற்ற புறச்சூழல்களிலிருந்து காப்பதற்காகவும், தீங்குவிளைவிக்கக்கூடிய மற்ற உயிரிகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காகவும் அவற்றை எதிர்ப்பதற்காகவும் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டவையாகக் கருதப்படுகிறது. 

'விப்ரியோ பிசுசரி' (vibrio fischeri) என்ற ஒரு கடல் வாழ் பாக்டீரியாவில் இந்த குவாரம் சென்சிங்கை முதன்முதலில் கண்டுபிடித்தவர் 'போணி பேசுலர்' (Bonnie Bassler). இந்த பாக்டீரியாக்கள், பகலில் மணலுக்கு அடியிலும், இரவில் கடல் மேல்பரப்பிலும் வந்து இரைதேடும் ஒரு வகை மெல்லுடலிகள் வகையைச் சார்ந்த 'ஸ்குவிட்' (Squid) என்ற உயிரினத்தின் உடலுக்குள் இருந்து கொண்டு, இரவில் ஒளிரக்கூடிய திறன் கொண்டது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்த பாக்டீரியாக்கள், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையை அடைந்தவுடந்தான் ஒளிர்வதற்கான புரதத்தை சுரக்கின்றன. அதற்குமுன் இதை செய்வதில்லை. தங்களின் எண்ணிக்கையை குவாரம் சென்சிங்கின் மூலமாகத்தான் அறிந்துகொள்கின்றன என்று பேசுலர் கண்டறிந்தார்.

பாக்டீரியாக்களின் இந்த வேதிச்சொற்களை 'ஆட்டோ இன்டியூசர்கள்' (Autoinducer) அல்லது சுருக்கமாக AI என்று சொல்கிறார்கள். ஆனால் பாக்டீரியாக்கள் என்ற தொகுதியை (Phylum) எடுத்துக்கொண்டால், பல நூறு பேரினங்களும் (Genus) அவை ஒவ்வொன்றிலும், பல்லாயிரம் இனங்களும் (species) இருக்கிறன. உதாரணமாக, விப்ரியோ என்ற பேரினத்தில் விப்ரியோ பிச்சரி (vibrio fischeri) என்ற இனம் இருப்பது போல, காலரா நோயை உண்டாக்கும் விபிர்யோ காலரே (vibrio cholerae) என்ற இனமும் உண்டு. இதுபோல் பற்பல ஆயிரம் வகைகள் உண்டு. இவற்றிலிருந்து தத்தம் இனத்தை அடையாளம் கண்டு/கேட்டு முடிவெடுப்பது என்பது, பல வகை பாக்டீரியாக்கள் சேர்ந்து வாழும் இயற்கை சூழலில் கொஞ்சம் சிரமமான காரியம்தான். ஆனால், அதற்கும் ஒரு வழி கண்டறிந்துள்ளன இந்த புத்திசாலி உயிரினங்கள். பாக்டீரியா எனும் 'தொகுதி'யை தனியாகவும், விப்ரியோ (vibrio) என்ற 'பேரின'த்தை தனியாகவும், பிச்சரி (fischeri) என்ற 'இன'த்தை தனியாகவும் பிரித்து தெரிந்துகொள்ள, மூன்று வகை வேதி-வார்த்தைகளை இவை உபயோகிக்கின்றன. அதாவது, தன்னுடைய ஒரே இனத்தை தெரிந்துகொள்ள AI-1(நான்)-ஐயும், தம் பேரினத்தை தெரிந்துகொள்ள CAI-1(நாம்)-ஐயும் மற்றும் மற்ற வகை பாக்டீரியாக்களை தெரிந்துகொள்ள AI-2(நீ)-ஐயும் சுரக்கின்றன. இதன் மூலம் தத்தம் இனத்தை மட்டுமல்லாமல் தன்னை சுற்றி வேறு யார் யார் இருக்கிறார்கள் என்றும் தெரிந்துகொள்கின்றன.

மனிதனுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்களும், இந்த தொழிற்நுட்பத்தைத்தான் பயன்படுத்துகின்றன. மனித உடலில் நுழைந்த உடன், சிறிய எண்ணிக்கைகளில் இருக்கும்போது, இவை எந்த தீங்கும் செய்யாமல், இனப்பெருக்கம் மட்டுமே செய்துகொண்டிருக்கும். மனித செல்லை தாக்குவதற்கு தேவையான அளவு நச்சு-புரதங்களைச் சுரக்க, போதிய அளவு தங்களின் சகாக்களின் எண்ணிக்கை பெருகிய பிறகு, எல்லோரும் சேர்ந்து ஒரே நேரத்தில் நோய் விளைவிப்பதற்கான புரதங்களைச் சுரந்து (மனிதனுக்கு) நோய் விளைவிக்கின்றன. இந்த ஒரு செல் உயிர்களிடம் இந்த அளவுக்கு ஒழுங்குகள் இருப்பது ஒரு புறம் அதிர்ச்சியாயும் இருக்கிறது. ஆனால், ஒரே ஒரு செல்லை மட்டும் கொண்ட இந்த உயிரிகளே இத்தனை அறிவுடன் செயல்படும்போது, பல கோடி செல்களைக்கொண்ட மனிதர்களை சொல்லவா வேண்டும்?

பாக்டீரியாக்கள் பேசும் அதே வார்த்தைகளைப்போல அமைப்பைக்கொண்ட வேறு வேதிப்பொருள்களை ஆராய்ச்சியாளர்கள் தயாரித்து, இந்த பாக்டீரியா இருக்கும் இடத்தில் சேர்த்து சோதித்துப் பார்த்தனர். இதனால், குழப்பமடைந்த பாக்டீரியாக்கள் தங்கள் சகாக்கள் எல்லாம் இல்லை என்று நினைத்து நோய் உண்டாக்காமலே இருந்ததை அவர்கள் கண்டறிந்துள்ளனர். வருங்காலத்தில் மருந்து எதிர்ப்புசக்திகொண்ட நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருப்பதால் (தொடர்புடைய பதிவு), இந்த தொழிற்நுட்பம் பாக்டீரியாக்களினால் ஏற்படும் நோயிகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள பயன்படும் என்று நம்பப்படுகிறது.

இந்த கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய, நிகழ்த்திக்கொண்டிருக்கிற அறிஞர்களுக்கும், இன்னும் அறிவியலின் உச்சங்களை தேடும் பணியில் ஈடுபட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள், அவர்களின் மாணவர்கள் என்று அனைவருக்கும் நம் பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்வோம்!

பி.கு.: அட இது பரவாயில்லை, பாக்டீரியாக்கள் எழுந்து நின்று நடந்து செல்வதைக்கூட நம்ப படமா எடுத்து வெச்சுருக்கோம் தெரியுமா (இணைப்பு)??

Pin It