புற்றுநோய் என்பது ஒரு நோயல்ல. சாதாரண செல்கள் தனது வளர்ச்சியின்போது செல் பிரிதல் நடைபெறுகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஒரு மரபணுவும் உண்டு. சில செல்களில் சில சமயம் பிரிதலில் வளர்ச்சி கட்டுப்பாட்டை இழந்து வெகு வேகமாக குண்டக்க மண்டக்க என்று இஷ்டம் போல் பிரிகின்றன. அவை தனக்கு வேண்டிய உணவையும் கூட பக்கத்திலிருக்கும் செல்களிடம் இருந்து அநியாயமாகப் பிடுங்கி, சாப்பிடுகின்றன. இதுவே புற்றுநோய் என்பது. உலகில் சுமார் 200 வகை புற்றுநோய்கள் உள்ளன. இதில் சுமார் 10௦-15 வகைகளே பரவலாக காணப்படுகின்றன. அதில் முக்கியமானவை பெண்களுக்கு மார்பகம், கருப்பையின் வாய் & வயிறு போன்ற இடங்களிலும், ஆண்களுக்கு ஆண் இனப்பெருக்க உறுப்புக்கு உற்பத்தி செய்து தரும் பிராஸ்டேட் சுரப்பி (Prostate gland) என்ற உறுப்பிலும், வயிறு, சிறுநீரகம் போன்ற இடங்களிலும் பொதுவாக வருகிறது.

புற்றுநோய் பற்றிய சில குறிப்புக்கள்:

• சாதாரண செல் பிரிதல் நிகழ்வு கட்டுப்பாடின்றி நடந்தால் அதுதான் புற்று நோயாகிறது. இதிலுள்ள செல்கள் அண்டை வீட்டையும், அதன் பக்கத்து இடங்களையும், யாருடைய அனுமதி இன்றியும் எட்டிப் பார்க்கும்.

• இது ரொம்ப சேட்டைக்கார செல். அந்த இடத்தில் உள்ள திசுக்களை சத்தமின்றி அழித்துவிடும்.

• இதில் உள்ள செல்கள் முதிர்நிலைக்குப் போய்விட்டால், அவை நாம் ஊர் சுற்றிப் பார்க்கப் புறப்படுவது போல், அவையும் உடலின் மற்ற இடங்களை சுற்றிப் பார்க்கப் புறப்பட்டு விடும்.!

• அவை ஏறிச் செல்ல ஓர் ஊர்தி வேண்டுமல்லவா? அதுதான் நிணநீர் நாளங்களும், இரத்தக் குழாய்களும். கட்டணம் ஏதுமின்றி இவற்றை ஏற்றிக்கொண்டு போய் உடலில் அவை விரும்பும் பகுதிகளில் இறக்கி விடும்.

•  எங்கு இவைகட்கு விருப்பமோ அங்கு போய் இறங்கி அங்கேயும் தன் குஞ்சு குளுவான்களை பெருக்கும்.. அபரிதமாய். இவைதான் புற்றுநோய் செல்களின் சிறப்பு செயல்பாடு.

•  துவக்க நிலையிலேயே கண்டுபிடிக்கப் பட்டால், இதனை முற்றிலும் குணப்படுத்த முடியும். .

• சுமார் 200 வகை புற்று நோய்கள் உள்ளன.

• புற்றுநோய் பாரபட்சமற்ற நோக்கம் கொண்டது என்றே கூறவேண்டும். குழந்தை, இளையோர், முதியோர், ஏழை, பணக்காரர், ஆண், பெண் பேதமின்றி அனைவரையும் தொட்டுத் தொட்டு துன்புறுத்தி இன்பம் காண்பது புற்று.

• வளர்முக நாடுகளில் ஏற்படும் இறப்பின் முக்கிய காரணிகளில் ஒன்று புற்றுநோய்.

• புற்றுநோய் ஒரு கொடுமைக்கார வியாதி என்றாலும் கூட, கொஞ்சம் கவனத்துடன் இருந்தால், கவனத்துடன் கையாண்டால், இதனால் உண்டாகும் இறப்பின் பெரும்பகுதியைத் தவிர்க்கலாம். 30% புற்று நோய் இறப்பு தவிர்க்கக்கூடியதே..!

• மற்றவற்றை துவக்க காலத்திலேயே, கண்டறிந்து, சிகிச்சை அளித்தால் முழுமையாக குணப்படுத்த முடியும்.

புற்றுநோயின் காரணிகள்

• புற்று நோய் உண்டாவதற்கான துல்லியமான காரணி இதுவரை க்ண்டறியப்படவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு காரணி உள்ளது.

• புகையிலை பயன்படுத்துவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வரும் வாய்ப்புக்கள் அதிகம். ஆனால் காற்று மாசு மற்றும் கதிர்வீச்சு காரணமாகவும் நுரையீரல் புற்று வரும் வாய்ப்பு உண்டு.

• புற்றுநோய் என்பது முக்கியமாக 90-95% சூழல் தொடர்பான ஒரு நோய்தான். 5-10% மட்டுமே பாரம்பரிய மரபணுக்கள் மூலம் வருகிறது.

• இதற்கான காரணிகள் என புற்று நோய் ஆராய்ச்சி மையங்கள் அறியப்பட்டவை:

1.புகையிலை: 25-30%
2.உடல் பருமன்:30-35%
3.கதிர்வீச்சு:10% வரை
4.மனழுத்தம், உடல் பயிற்சி இன்மை & சூழல் மாசு..15-20%

2011 பிப்ரவரி கணக்குப்படி, இந்தியாவில் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 1.2 கோடிப்பேர். இதில் புகையிலையால் ஏற்பட்ட பாதிப்பே அதிகம்.

இந்த எண்ணிக்கையில் 55% புற்றுநோய் தடுக்கக் கூடியது. 65% புற்று நோயாளிகள் இதன் 3& 4 ம் நிலையில் கண்டறியப்பட்டுள்ள‌ன‌ர். இந்த நிலையில் அறியப்படும்போது, அவற்றின் சிகிச்சை என்பது சிரமமானதே.

குழந்தைப் பருவத்தில் தாக்கும் புற்றுநோய்கள்

பொதுவாக குழந்தைப்பருவ புற்று என்பது அரிதுதான். 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 1/600 பேருக்கு புற்றுநோய் வருகிறது. ஆனால் அதற்கான காரணிகள் இன்னும் சரிவரத் தெரியவில்லை. உலக அள்வில் இது 1% மட்டுமே.

பெரியவர்களுக்கு வரும் நுரையீரல், மார்பகம், வயிறு மற்றும் மலக்குடல் புற்று இவர்களுக்கு வராது. கடந்த 10 ஆண்டுகளாக இதற்கான சிகிச்சையும் அதிகரித்து அவர்களின் வாழ்நாள் காப்பாற்றப்பட்டிருக்கிறது.

புற்றுநோய் வரக்கூடிய இடங்கள்

1.மார்பகம்
2.நுரையீரல்
3.ஆண் இனப்பெருக்க உறுப்பு
4.மலக்குடல்
5.பெண் இனப்பெருக்க உறுப்பு
6.சிறுநீர்ப் பாதை
7.சிறுநீரகம்
8.உணவுப்பாதை
9.தலை
10.கழுத்து
11.தோல்
12.இரததம்
13.மூளை
14.எலும்பு
15.நாளமில்லா சுரப்பிகள்

எளிதில் குணப்படுத்தக் கூடிய மார்பகப் புற்று

மார்பகப் புற்று என்பது சிகிச்சைக்கு கட்டுப்படும் ஒன்றாகிவிட்டது. இதன் முக்கிய காரணம் தற்போது அதிகரித்துள்ள விழிப்புணர்வும்,அதனை சோதிக்க mammograms and CT ஸ்கேன் இருப்பதுதான்.

இதனை எளிதில் பிரச்சினை இன்றி அறுவை சிகிச்சையால் அகற்றிவிடலாம். இதனை துவக்க காலத்தில் அறிந்தால், அறுவை சிகிச்சை செயத பின்னர் வேதிசிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை மூலம் குணப்படுத்தி விட முடியும்.

கள்ளனைக் கண்டுபிடிப்பது எப்படி..?

புற்று நோய் இருப்பதாக சந்தேகம் வந்தால், மருத்துவ சோதனை மூலம் அதனை அறிவது மிக எளிது. அந்தப் பகுதியிலிருந்து எடுத்த செல்களை ஆராய்ந்தால் அவற்றின் தன்மை தெரியும். புற்று நோயை, அது வளர்ந்திருக்கும் நிலை அறிந்து, அதனை வேதி சிக்ச்சை, கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம்.

அதனை சரியாக்குவது என்பது நீங்கள் எவ்வளவு தைரியமாய் உள்ளீர்கள் என்பதும், அது எந்த இடத்தில் இருக்கிறது மற்றும் அதன் வளர்நிலை என்ன என்பதைப் பொறுத்துமே அமைகின்றன.

புற்று நோயின் அறிகுறிகள்

பொதுவாக புற்று நோயின் அறிகுறிகள் அந்தந்த புற்று நோய்க்குத் தகுந்தபடி வேறுபடுகின்றன. இருப்பினும், சில பொதுவான அறிகுறிகளும் உண்டு.

பொதுவாக அனைத்து புற்றுநோய்களுக்கும், எடை குறைவு, ஏதாவது ஒரு இடத்தில் கட்டி/மதமதப்பு இருக்கும். சில சமயம் காய்ச்சல், இரத்த சோகை மற்றும் இரவில் வியர்த்தல் போன்றவையும் தென்படும்.

உலகத்திலேயே டென்மார்க்கில்தான் அதிக அளவு புற்று நோய் காணப்படுகிறது. இந்தியாவில் வருடந்தோறும் சுமார் 1,00,000 பெண்கள் கருப்பை புற்று நோயால் இறக்கின்றனர்

மார்பக புற்றுநோய்

cancer_360இந்தியாவின் நகர் & கிராமப் புறங்களில் பெரும்பான்மையாக மார்பகப் புற்றுநோயே அதிகமாகக் காணப்படுகிறது. சென்னை, பெங்களூரு, அகமதாபாது, டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் காண்ப்படும் புற்று நோய்களில் மார்பகப் புற்றே.. 28%-35% உள்ளது.

இதில் முக்கியமாக வயது இடம் மாறுதல்/குறைப்பு ஏற்பட்டுள்ளது. முன்பு 50-60 வயதுக்காரர்களுக்கு வந்தது போய் இன்று 30-40 வயதுக்காரர்களுக்கு வருவது மிகவும் கவலையளிக்கும் மற்றும் கவனத்தில் கொள்ள் வேண்டிய தகவல்.

நிறைய புற்றுநோய் மையம் இல்லாத மருத்துவமனைகள மார்பகப் புற்றுநோய்க்கு சிகிச்சை தருவதால், இதில் பல பிரச்சினைகளும், தரக் குறைவான அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டு, நோயாளியின் வாழ்நாள் குறைய வாய்ப்புள்ளது.

புற்றுநோய் பற்றிய கற்பனையும் தவறான கருத்துக்களும்

புற்று நோய் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு ஒட்டும் வியாதியல்ல. புற்று நோய என்பது முழுக்க முழுக்க உடலியல் சார்ந்தது. உள்ள நிலைபாடு மூலம் புற்று உருவாகாது. தவறான் உணவு உட்கொள்ளும் முறைதான் புற்றுக்கு காரணம் என்பது தவறான கருத்து. ஒழுங்கான உணவுப் பழக்கம் உள்ளவர்களுக்கும் கூட புற்று நோய் வரலாம்.

புற்று நோய் வராமல் தடுக்க செய்ய வேண்டியவை..!

1. முதலில் வாழ்க்கையைப் பற்றிய மட்டற்ற, நெகிழ்வற்ற, உறுதியான நம்பிக்கையுடன், நல்ல உணர்வுடன் இருங்கள்.

2.நிறைய தாவர உணவுகள், பயறு வகைகள் சாப்பிடுங்கள்.

3.நிறைய நீர் அருந்துங்கள்.

4.இயற்கைப் பொருள்களையே வீட்டிலும் வெளியிலும் பயன்படுத்துங்கள்.

5.உடல் எடையை கட்டுக்குள் வைத்திருங்கள்.

6.குறைவான மது அருந்துங்கள்.

7.அதிகமாக உடற்பயிற்சி செய்யுங்கள்.

மார்பகப் புற்று..

தற்போது பிறக்கும் பெண் குழந்தைகளில் 14 குழந்தைக்கு ஒன்று, எதிர்காலத்தில் புற்று நோய் வரும் வாய்ப்பு உண்டு எனற தகவல் கசப்பான உண்மையே..! ஆணுக்கும் கூட மார்பக புற்று வருவதுண்டு. அதன் அறிகுறி, மற்றும் அனைத்து சிகிச்சையும் பெண்ணைப்போன்றதே.

மார்பகப் புற்று என்பது மார்பகத் தசைகளிலிருந்து உருவாகிறது. பொதுவாக மார்பகப் புற்று பால் சுரப்பிகளிருந்தும்/சுரப்பி மடல்/மடிப்புகளிளிருந்தும் உருவாகிறது. மார்பகப் புற்று மனிதன்/பாலூட்டிகளிடம் வரும் நோயாகும். ஆண்,பெண் இருவருக்குமே வரும் நோய் என்றாலும், உலகம் முழுவதும் மார்பகப் புற்றுநோயால் 22.9% பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். 2008ம் ஆண்டு மட்டும் 458,503 பெண்கள் புற்று நோய்க்கு உயிர்ப் பலி ஆகி இருக்கின்றனர். இது உலகில் புற்று நோயால் சாவினைத் தழுவும் பெண்களில் 13.7% ஆகும்.

ஆண்களில் 1 % பேருக்கு மார்பக புற்று வருகிறதாம். ஒவ்வொரு ஆண்டும் ஐரோப்பாவில் 300௦௦ பேரும், அமெரிக்காவில் 1,910 பேரும் புதிய மார்பக புற்று நோயாளிகள் எண்ணிக்கையில் அதிகரிக்கின்றனர். இந்தியாவில் காணப்படும் ஆண் புற்று நோயாளிகளில் 0௦.7% பேருக்கு மார்பக புற்று காணப்படுகிறதாம். பெண்களின் மார்பக புற்றுநோய் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 12% அதிகரித்துள்ளது. அதுபோலவே, ஆண்களிலும் மார்பக புற்றுநோயின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. 2011 பிப்ரவரியில் இந்நோய் ஆண்களிடம், குறிப்பாக நகர்ப்புற ஆண்களிடம், 1.5- 2% அதிகரித்துள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

  ஆண்களுக்கான மார்பகபுற்று நோய் என்பது எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் பொதுவாக, 60 -70 வயதில் வருகிறதாம். 2011, பிப்ரவரியில், ஈரோடு நண்பர் ஒருவர் 40 வயதில் இந்த நோய் வந்து, உயிரைப் பறி கொடுத்தார். அதிகமான கதிர்வீச்சும், அதிகம் ஈஸ்ட்ரோஜென்(பெண்களுக்கான ஹார்மோன்) என்ற ஹார்மோன் சுரப்பும், குடும்பத்தில் இரத்த உறவில் யாருக்காவது மார்பக புற்று வந்திருத்தல் என்ற கொஞ்சம் பாரம்பரிய காரணிகளும் உண்டு. அதிக ஈஸ்டிரோஜென் ஹார்மோன், மருந்துகள், உடல் பருமன், ஈரல் வியாதிகளால் உருவாகிறது. மேலும் ஆண் மார்பக புற்று என்பது, மோசமான, நாள்பட்ட மதுப் பழக்கத்தாலும் உருவாகிறதாம். பெரும்பாலான ஆண் மார்பக புற்று, கிளின்பெல்டர் சிண்ட்ரோம் (Klinefelter syndrome,a genetic disorder, having XXY chromosomes)என்ற நோயாலும், BRCA வின் எதிர்பாரா மரபணு மாற்றத்தாலும் ஏற்படுகிறது. ஆனால் அனைத்து புற்றுநோய்களுக்கும் பெரும்பாலும் எதிர்பாரா மரபணு மாற்றத்தால் உருவாவதாகவே, ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  

  ஆண் மார்பக புற்றுநோயின் அறிகுறிகள், அறுவை சிகிச்சை, வேதி சிகிச்சை, கதிர் வீச்சு சிகிச்சை மற்றும் மாற்று மருந்துகள் எல்லாம் பெண்களின் மார்பக புற்று நோய்போலவேதான். ஆண்களுக்கு பால் சுரப்பிகள் இல்லை. வியர்வை சுரப்பிகள்தான், மார்பக திசுக்களில் பால் சுரப்பியாக செயல்படுகிறது. அது செயல்பட, ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் தூண்டுதல் வேண்டும். ஆண்களுக்கு அவர்களின் விந்தகத்திலிருந்து சுரக்கும் ஆண்டிரோஜென் என்ற ஹார்மோன், மார்பக திசுவை வளர விடாது. எனவேதான் ஆண்களுக்கு மிகக் குறைவாக மார்பக திசு உள்ளது. குறைவான மார்ப‌க திசுவால், அவர்களுக்கு ஏற்படும் மார்பக புற்று, அருகிலுள்ள உறுப்புகளில் விரைவாகப் பரவ வாய்ப்பு அதிகம் உள்ளது. 

 ஆண் மார்பக புற்று, பெண்களுக்கு போலவே, மார்பகத்தில் கட்டி, நீர் வடிதல், மார்பகம் உள்நோக்கி இழுக்கப்படுதல், அந்தப் பகுதியில் நாள்பட்ட வீக்கம் மற்றும் அக்குளில் கட்டி போன்ற அறிகுறிகளால் அறியலாம். இதன் சிகிச்சையும் பெண்களுக்கு கொடுப்பது போலவே. ஒருவரின் தாய், சகோதரி போன்றவர்களுக்கு மார்பகம் மற்றும் கருப்பை புற்றுநோய் வந்தால், அவருக்கும் மார்பக புற்று ஏற்பட வாய்ப்பு உண்டாம்.

2011, செப்டம்பர் இன் மருத்துவ ஆய்வுத் தகவல்படி, ஆண்களுக்கான புற்று நோய் எண்ணிக்கை என்பது முன்பை விட அதிகரித்துள்ளது. அது மட்டுமல்ல, பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோயை ஒப்பிடும்போது ஆண்களுக்கு வரும் மார்பக புற்று என்பது மிகவும் முற்றிய நிலையிலேயே கண்டு பிடிக்கப்படுகிறதாம். இந்த தகவலைச் சொன்னவர் ஹூஸ்டன் நகரின் ஆண்டர்சன் புற்று நோய் நிறுவனத்தில், ஆராய்ச்சி செய்யும் பெண் புற்றுநோய் நிபுணர் சார் ஜியார்டானோ (Dr .Sharon Giordano) தெரிவிக்கிறார். மேலும் கடந்த 25 வருடத்தில், ஆண்களுக்கான மார்பக புற்று 25% அதிகரித்துள்ளது என்றும் கூறுகிறார். ஆண்களுக்கு வரும் மார்பக புற்று அங்கு பாலூட்டுவதற்கான தசைகள் இல்லாததால் புற்று நோய் என்பது படபடவென பரவி, எல்லா இடங்களுக்கும் போய்விடுகிறதாம். எனவே பொதுவாக ஆண்கள் நோய் முற்றிய நிலையிலேயே மருத்துவரிடம் செல்கின்றனர் என்கிறார்.

- பேரா.சோ.மோகனா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)