மகப்பேறு காலத்தில் உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் சிந்தனை ஆகியவை சரியாக பின்பற்றப்பட வேண்டும். இவை மூன்றும் தாயும், சேயும் நலமாக இருக்க நேரடி தொடர்பு கொண்டவை. தாய் உட்கொள்ளும் உணவுகள் கருவின் வளர்ச்சியிலும், குழந்தை பிறந்த பிறகு தாயின் உடல் நலனிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. கர்ப்பக்காலத்தில் முதல் மூன்று மாதங்களிலும் மற்றும் 7-ம் மாத முடிவிலும் உடல்நலனில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.

                இந்த காலக்கட்டத்தில் கர்ப்பிணிகள் திரவ உணவுகள், காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகமாக சேர்த்து கொள்ளவேண்டும். இது கரு வளர்வதற்கு பெரிதும் பயன்படுகிறது. ஆகவே, திரவ உணவுகளான பால், இளநீர், பழம் மற்றும் பழச்சாறுகள் ஆகியன அதிகமாக எடுத்துக் கொள்ளவேண்டும். முதல் மாதத்தில் பால் மற்றும் மென்மையான உணவு வகைகளையும், இரண்டாம் மற்றும் மூன்றாம் மாதங்களில் பாலுடன் சில மூலிகைகளான விதாரி, சதாவரி, ஆஸ்திமது மற்றும் பிரமி ஆகியவற்றை சேர்த்து தேன் மற்றும் நெய் இவற்றுடன் கலந்து குடிக்கவேண்டும். இவை பிரசவ காலத்தில் மிக முக்கிய பங்காற்றுகிறது. இந்த கால கட்டத்தில் சிசுவின் உடலில் கை, கால்கள், தோல் மற்றும் முடி வளர்ச்சி நடைபெறும். இந்த மாதங்களில் மருத்துவ குணம் கொண்ட நெய்யை ஆயுர்வேதத்தில் பரிந்துரைக்கப்படுகிறது. மூன்றாம் மாத முடிவிலிருந்தே சிசு உணவை தாயின் இரத்தத்தின் மூலம் ஏற்றுக்கொள்கிறது. ஆகவே இருவர் உணவும் ஒரே உணவாக அமைகிறது. இந்த காலங்களில் இவர்கள் சில உணவுப்பொருட்களை ஆசைப்பட்டு கேட்க நேரிடும். நாம் அதை பூர்த்தி செய்யவேண்டும். அதே நேரத்தில் தேவையற்ற உடல் பருமனை தவிர்க்க உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியமாகும்.

                இக்காலக் கட்டத்தில் சிசுவுக்கு தொப்புள் கொடியின் வழியாக ஆகாரம் கிடைக்கிறது. இதனால் அரிசி சாதம், பால், நெய், வெண்ணெய், பழ வகைகள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகமாக சேர்த்து கொள்ளவேண்டும். இந்த வகையான உணவுகள் சிசுவின் வளர்ச்சிக்கும், தாயின் உடல் நலத்திற்கும் மிகவும் சிறந்ததாகும். முக்கியமாக கர்ப்பகாலத்தில் சத்து நிறைந்த உணவுக்கான பருப்பு வகைகள் மற்றும் நெல்லிக்காய் இவற்றை உணவில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளவேண்டும். கொழுப்பு, காரம், உப்பு மற்றும் நீரைச் சற்று குறைத்து, அரிசி கஞ்சியை நெய்யுடன் சேர்த்து உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் சிறிதளவு துளசியை உட்கொண்டு வந்தால் பிரசவ வலி குறையும்.

                ஒரு குழந்தை முழுமையாக வளர்ச்சியடையவும், எதிர்காலத்தில் மனதாலும், உடலாலும் ஊனமில்லாமல் பிறந்து வளரவும், கருவுற்ற பெண்கள் சில நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகிறது.

தொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. மனதைப் பாதிக்கும் காட்சிகளைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

(மாற்று மருத்துவம் ஜனவரி 2012 இதழில் வெளியானது)