தமிழகத்தில் பகுத்தறிவு அரசியலில் இருந்த விநாயகர் மற்ற இந்திய பகுதிகளைப் போலவே ஊர்வல அரசியலுக்கு வந்தது 1980களில்தான்.

பேஷ்வா பார்ப்பனர்களின் குடும்ப விழாவாக இருந்த விநாயக சதுர்த்தி அரசியல் வடிவம் எடுத்தது எப்படி?

இந்தியாவின் வர்த்தகத் தலைநகரம் மும்பை. உலக கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் நவநாகரீக இந்தியப் பெருநகரம். அந்த நகரையே திக்குமுக்காட வைக்கும் நிகழ்வொன்று ஆண்டுக்கு ஒருமுறை வரும். அப்போது ஆர்ப்பரிக்கும் கூட்டம் மும்பை வீதிகளில் வழிந்து நிற்கும். தீபாவளிக்குப் பிறகு இந்தியா முழுக்க கொண்டாடப்படும் ஒரு விழா என்றால் அது விநாயாகர் சதுர்த்திதான். கடந்த அரை நூற்றாண்டுகளில் இந்து அமைப்புகளால்  இந்தியா முழுக்க கொண்டு சேர்க்கப்பட்டுள்ள விநாயகர் ஊர்வலத்துக்கு ஆன்மீக ரீதியில் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதையும் தாண்டிய காரணம் ஒன்று உள்ளது. அது இந்துத்துவா அரசியல்.

நாடு முழுக்க இந்துத்துவா அரசியலை இந்துக்களிடம் கொண்டு சேர்க்கவும், அதன்பேரில் அவர்களை ஒன்று திரட்டவும் அறிவிக்கப்படாத ரத யாத்திரையாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடந்து வருகின்றன. உண்மையில் இதன் வரலாறு பால கங்காதர திலகருடனும், கடைசி இந்து அரசன் சிவாஜியுடனும் தொடங்குகிறது. விநாயகர் என்றால் மேலான தலைவர் என்று அர்த்தப்படுத்தப் படுகிறது. விநாயகர் அவதரித்த தினத்தை விநாயகர் சதுர்த்தி எனக் கொண்டாடப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன.

ஒருமுறை சிவன் வெளியே சென்றிருந்த நேரம் பார்வதி நீராடச் சென்றார். அப்போது தனக்குக் காவல் காக்க ஒருவரும் இல்லை என்பதால் தனது நீராட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சந்தனக் குழம்பை எடுத்து ஒரு உருவம் உருவாக்கி அனுக்கிரகத்தால் அதற்கு உயிர் ஊட்டினார். அவரால் உயிரூட்டப்பட்டதால் அவ்வுருவம் அவரது பிள்ளையாகிவிட்டது. எவரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாது என பிள்ளையாருக்கு அறிவுறுத்திவிட்டு பார்வதி நீராடச் சென்றுவிட்டார். அச்சமயம் அங்கு வந்த சிவனை உள்ளே செல்ல பிள்ளையார் அனுமதிக்கவில்லை. இதனால் கோபம்கொண்ட சிவன் பிள்ளையாரின் தலையை வெட்டிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.

நீராடி முடிந்ததும் பார்வதி வெளியே வந்து பிள்ளையார் தலை இல்லாமல் கிடந்த கோலத்தைக் கண்டு ஆவேசமும், கோபமும் கொண்டார். தான் உருவாக்கிய பிள்ளையாரை சிவனே சிதைத்து விட்டதை அறிந்த அவர் காளியாக உருமாறி தன் கண்ணில்பட்ட சகலவற்றையும் அழிக்கத் தொடங்கினார். காளியின் ஆவேச நர்த்தனத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். காளியை சாந்தப்படுத்துவதற்கு முடிவு செய்த சிவன் தனது கணங்களை  (ஏவலாளிகளை) அழைத்து, வட திசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையை வெட்டி வருமாறு பணித்தார். கணங்கள் வட திசையை நோக்கிச் சென்ற போது அவர்களுக்கு ஒரு யானையே முதலில் தென்பட்டது. அவர்கள் அதன் தலையை வெட்டி எடுத்துச்சென்று சிவனிடம் கொடுத்தனர். சிவன் அத்தலையை வெட்டுண்டு கிடந்த பிள்ளையாரின் உடலில் பொருத்தி உயிரூட்டிவிட்டார்.

இதைக் கண்டு சாந்தமடைந்த பார்வதி அகமகிழ்ந்து பிள்ளையாரைக் கட்டியணைத்துக் கொண்டார். சிவன் அந்தப் பிள்ளையாருக்கு கணேசன் என்று பெயர் சூட்டி, தனது கணங் களுக்குத் தலைவராக நியமித்தார் என நாரத புராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி நடந்தது சுக்கிலபட்ச சதுர்த்தி அன்றாகும். அன்றிலிருந்து இத்தினம் விநாயகர் சதுர்த்தி என்றாகிவிட்டது. இது பிள்ளையாரின் அவதாரக் கதையாகும். விநாயகரின் தோற்றத் துக்கு இதுபோல பல கதைகள் இருக்கின்றன.

அதேபோல விநாயகர் சதுர்த்தி அன்று நடத்தப்படும் ஊர்வலங்களுக்கும் சில தோற்றக் கதைகள் உள்ளன. 16ஆம் நூற்றாண்டில் மராட்டிய மன்னர் சிவாஜி, விநாயகர் சதுர்த்தியை பிரபலமாக்கினார். தங்களுடைய குலதெய்வமான கணபதிக்கு மக்கள் விழா எடுப்பதை மராட்டிய ஆட்சி அதிகாரத்திலிருந்த பேசுவாக்கள் (பார்ப்பனர்கள்) ஊக்கம் கொடுத்தனர். மராட்டிய ஆட்சி வீழ்ச்சியை சந்திக்கும்வரை விநாயகர் சதுர்த்தி விழாக்கள் அங்கு விமரிசையாகக் கொண்டாடப்பட்டன. இந்த நிலையில் பிரிட்டிசு ஆட்சிக்கு எதிராக பம்பாய் மாநகரில் விநாயகர் சதுர்த்தியை மீண்டும் பிரபலப்படுத்தத் தொடங்கினார் பலகங்காதர திலகர்.

இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் இந்து தேசியவாதத்தை முன்னிறுத்தி அன்னி பெசண்டுடன் ஹோம்ரூல் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டவரான பலகங்காதர திலகர் 1893ஆம் ஆண்டு முதல் பேசுவாக்களின் (பார்ப்பனர்) குடும்ப விழாவாக இருந்த விநாயகர் சதுர்த்தி விழாவை இந்துக்களின் விழாவாக் கினார். பிளேக் நோயைக் கட்டுப்படுத்த ஆங்கிலேயர்கள் நடவடிக்கை எடுத்தபோது பாலங்காதர திலகர் சொன்னவை மிக முக்கியமானது. பிளேக் நோய்க்குக் காரணமான எலிகளை கொல்பவர்களுக்கு சன்மானம் அறிவித்தது ஆங்கிலேய அரசு. ஆனால் பால கங்காதர திலகரோ எலிகள் விநாயகனின் வாகனம். அவற்றை அழிக்க ஆங்கிலேய அரசு முயற்சிப்பதாக் கூறி இந்துக்களைத் திரட்டினார். இந்துக்களும் திரண்டனர். ஆங்கிலேயரால் அந்தத் திட்டமும் கைவிடப்பட்டது. விநாயகனைப் பயன்படுத்திய முதல் அரசியலும், அதற்குக் கிடைத்த முதல் வெற்றியும் அது. அதன்பிறகு விநாயகர் சதுர்த்தி விழாக்கள் மீண்டும் மும்பை முழுக்கத் நடைபெறத் தொடங்கியது. இந்து மதத்தின் அடிப்படையில் சிவாஜியும், பேசுவாக்களும் கொண்டாடிய சதுர்த்தியை இந்துத்துவத்தின் கூறுகளோடு திலகர் மறு அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த விழாவின் அடிப்படையில் ஊர்வலத்தின் மூலம் இந்துக்களை ஒன்றுபடுத்தி, பிரிட்டிசாரை வீழ்த்தி இந்து ராசுட்டிராவை படைக்க விரும்பியிருந்தார் திலகர். அப்போ திருந்தே விநாயாகர் ஊர்வலம் அரசியலில் வலுவாகக் காலூன்றிவிட்டது. ஆகவே ஒருவகையில் விநாயகருக்கு முன்பே அவரது வாகனமான எலி விநாயகருக்கான அரசியலுக் குள் நுழைந்துவிட்டது. சுதந்திரத்துக்குப் பிறகு பம்பாய் மாநகரத்தில் இந்து மத உணர்வோடு மராட்டிய இன உணர்வையும் ஊட்டி வளர்க்க விநாயாகர் ஊர்வலங்கள் பயன்படுத்தப்பட்டன. 1960களின் மத்திய காலகட்டத்தில் மராட்டா மராட்டியர்களுக்கே என்ற முழக்கத்தோடு அரசியலில் அடியெடுத்த ஒரு இளைஞன் விநாயகர் ஊர்வலத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றார். அந்த  இளைஞர் உருவாக்கிய அமைப்பு மராட்டாவின் மூலை முடுக்கெல்லாம் விநாயகன் ஊர்வலத்தை எடுத்துச் சென்றது. மராட்டாவை நிர்மாணித்த சிவாஜியின் ஆட்சியை மீண்டும் அமைக்க விரும்பிய அந்த இளைஞன் அதற்காக மிகத் தீவிரமாய் விநாயகர் ஊர்வலத்தை முன்னெடுத்தான்.

கணபதி பாபா மோரியா, கணபதி பாபா மோரியா என்று மும்பையில் அவர் முழக்க மிட்டார். அது மராட்டா எங்கும் எதிரொலித்தது. அந்த இளைஞர் பால் தாக்கரே. அந்த இயக்கம் சிவசேனா. விநாயகர் ஊர்வலங்களின் போதெல்லாம் கொலைகள், கலவரங்கள் அல்லது இறப்புகள் சாதாரண மாகிப் போனது. இசுலாமியர்கள் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் குறிவைத்து தாக்கப் பட்டனர். தமிழர்கள் வாழும் தாராவியும் தப்பியிருக்கவில்லை. எல்லாமும் நடந்துவந்தது. விநாயகர் சதுர்த்தி, சிவாஜி விழா, தசரா போன்ற சிவசேனாவின் முன்னெடுப்புகள் அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்தன. விநாயகர் ஊர்வலம் நடத்தியவர்கள் மராட்டா கோட்டையைப் பிடித்தனர்.

1995ஆம் ஆண்டில் மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில்  வென்று சிவசேனா ஆட்சி யமைத்தது. அதே காலகட்டத்தில் விநாயகர் ஊர்வலங்கள் நாடு முழுவதும் கொண்டாட ஆரம்பமாகியிருந்தன. அதற்கு முன்பும் அது ஒரு இந்து பண்டிகையாக கோவில் சார்ந்து இருந்தாலும், வீதிகள் தோறும் விநாயகன் கொண்டுவரப்பட்டது 1990களில்தான். நாடு முழுவதும் அதே காலகட்டத்தில்தான் பாஜகவும் வளர்ந்து வந்தது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் இந்து சமயத்தில் ஆரம்பம் முதலே விநாயகர் இருந்திருக்கவில்லை. சங்ககால இலக்கியங்கள் எதிலும் விநாயகர் குறித்த குறிப்புகள் எதுவும் இல்லை. ஆனால் பக்தி இலக்கியங்களில் பல பெயர்களில் பிள்ளையார் பற்றிய குறிப்புகள் வருகிறது. ஆனால் சங்க இலக்கிய காலங்களில் பவுத்த, சமண மதங்களே கோலோச்சியிருந்தது. அவற்றின் அழிவின் மேல்தான் வைதீக மதங்களான சைவ, வைணவ மதங்கள் பக்தி இலக்கிய காலத்தில் தமிழகத்தில் பரவத் தொடங்கியிருந்ததையும் நாம் கவனிக்க வேண்டும்.

இந்தக் காலகட்டத்தில் அரச மரத்தடியில் ஞானம் பெற்ற புத்தரின் நினைவாகப் பவுத்தர்கள் கடைபிடித்து வந்த வழிபாட்டை பிள்ளையார் ஆக்கிரமித்திருக்கக்கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது. பவுத்தமும், தமிழும் என்ற நூலில் மயிலை சீனி வெங்கடசாமி அரச மர வழிபாட்டை வைதீக மதங்கள் சுவீகரித்துக் கொண்டதாகக் குறிப்பிடுகிறார். அதேபோல் கி.பி.7ஆம் நூற்றாண்டில் பல்லவ அரசனான நரசிம்ம வர்மன் இன்றைய மகாராஷ்டிராவில் உள்ள வாதாபி என்ற ஊரை வீழ்த்தியிருக்கிறார். நரசிம்ம வர்மனின் படைத்தளபதியாக இருந்தவரே சிறுதொண்டர். இவர்தான் வாதாபி வெற்றியின் நினைவாக அங்கிருந்து கணபதியைக் கொண்டுவந்து கணபதிச்சுரம் என்ற கோயில் எழுப்பியதாக திருஞானசம்பந்தர் பாடியிருப்பதாகக் கூறுகிறார் தெ.பொ. மீனாட்சி சுந்தரம். சோழர் காலத்தில் வந்தது; பல்லவர் காலத்தில் வந்தது; நாயக்கர் காலத்தில் வந்தது என்று பல பண்பாட்டு ஆய்வுகளை விநாயகர் குறித்து முன்வைக்கப்படுகிறது. ஆனால் விநாயகர் நிகழ்காலத்தில் இருக்கிறது.

பெரியார் காலத்திலிருந்தே பெரியார் முன்னெடுத்த இந்துமத எதிர்ப்பு பிரச்சாரங்களில் மற்ற கடவுள்களைக் காட்டிலும் பிள்ளை யாரை அதிகம் தாக்கினார். இராமன் தொடங்கி அனுமன் வரை பலர் குறித்தும் கட்டவிழ்ப்புகள் நிகழ பிள்ளையார் மட்டும்தான் உடைபட்டார். பெரியார் பிள்ளையாரை உடைக்க ஆரம்பித்ததற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பே பிள்ளையார் குறித்து விமர்சிக்க ஆரம்பித் திருந்தார். எப்படி இந்துக்கள் எந்த விசயத்தைச் செய்யும் முன்பும் அல்லது மற்ற கடவுள்களை பூஜிக்கும் முன்பும் முதற்கடவுளாக விநாயகரைத் தொழுகிறார்களோ அதேபோலத்தான் பெரியாரும் தனது கடவுள் மறுப்பு பிரச்சாரத் திற்கும், சுயமரியாதை பிரச்சாரத்திற்கும் முதன்முதலில் கையிலெடுத்த கடவுள் விநாயகர்.

“கடவுள்களின் சங்கதி தெரியவேண்டு மானால் முதலில் முதற்கடவுளைப் பற்றி தெரிந்து கொள்வதுதான் நன்மையானதாகும். முதற்கடவுளின் சங்கதி இன்னமாதிரி என்று தெரிந்தால், மற்ற கடவுள்களின் சங்கதி தானாகவே விளங்க ஏதுவாக இருக்கலாம். ஒரு காரியத்தை ஆரம்பித்தால் முதலில் பிள்ளையார் காரியத்தைக் கவனிக்க வேண்டியது முறை என்று சொல்லப்படுவதால், நாமும் கடவுள்களின் கதையைப் பற்றி விளக்கப்போவதில் முதற் கடவுளைப் பற்றி ஆரம்பிக்க வேண்டியது முறையாகுமன்றோ! இல்லாவிட்டால்  அக்கடவுளின் கோபத்திற்கு ஆளாக நேரிட்டு, எடுத்த இக்காரியத்துக்கு விக்கினம் ஏற்பட்டாலும் ஏற்படும். அன்றியும், சமீபத்தில் பிள்ளையார் சதுர்த்தி ஒன்றும் வரப்போவதால் இந்த சமயம் பொருத்தமானதாகவும் இருக்கலாம். ஆதலால் தொடங்குதும்” என்றுதான் பிள்ளையாரை தமிழகத்து அரசியலுக்கு அழைத்து வந்தார் பெரியார்.

மேலும் விநாயகரின் உருவாக்கத்தை, அதுதொடர்பான புராணக்கதைகளைப் பேசி பகுத்தறிவு இயக்கத்தை வளர்த்தார் பெரியார். இதுதவிர தனது குடிஅரசு பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் விநாயகர் உருவாக்கம் தொடர்பாக, விநாயகர் செயல்பாடு தொடர்பாக இருக்கும் புராணக் கதைகள் தொடர்பாக சிலவற்றை மேற்கோள்காட்டியிருப்பார். அப்படியான புராணக் கதைகளை பேசி, எழுதி பிரச்சாரம் செய்த பெரியார் ஒரு கட்டத்தில் பிள்ளையார் சிலைகளை உடைத்தும் விட்டார்.

இதற்கு இந்துத்துவா இயக்கங்களிட மிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. ஆனால் பெரியார், “பிள்ளையார் உருவத்தை உடைப்பதில் ஒன்றும் அதிசயப்பட வேண்டிய தில்லை, தயக்கப்பட வேண்டியதில்லை. பிள்ளையார் சதுர்த்தி பண்டிகையின்போது நாடு முழுவதும் எத்தனை எத்தனை ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மண் பிள்ளையாரை மக்கள் மண்பாண்ட தயாரிப் பாளர்களிடம் வாங்கி பிள்ளையார் சதுர்த்தி முடிந்தவுடன் கடலில், ஆற்றில், ஓடையில், ஏரியில், குளத்தில், கிணற்றில், புனலில், வயலில் எறிந்துவிடுகிறார்கள். அதனுடன் கரைந்து பிள்ளையார் நீரோடு நீராக, மண்ணோடு மண்ணாக கறைந்துவிடுவது இல்லையா? இது தெரிந்தே மக்கள் நீரில் போடுவது இல்லையா? அதுபோன்ற செய்கைதான் இந்த உடைத்துத் தூளாக்கி மண்ணோடு மண்ணாக்குவதும். நாம் காசு போட்டு வாங்குகிறோமே ஒழிய, வேறு எந்த மனிதனுக்கும் உரிமை இருக்கிற வஸ்துவிடமும் நாம் செல்லவில்லை. தொடவில்லை. நாமாக வாங்கி உடைப்பதும் நமக்கு பிள்ளையார் கடவுள் அல்ல; வேத சாஸ்திர ஆதாரம் என்பதன்படியும் அது கடவுள் அல்ல; கடவுளுக்கு எந்த உருவமும் இல்லை” என்று 1953ஆம் ஆண்டு மே மாதத்தில் விடுதலை இதழில் எழுதினார் பெரியார்.  

இப்படி தமிழகத்தில் பகுத்தறிவு அரசியலில் இருந்த விநாயகர் மற்ற இந்திய பகுதிகளைப் போலவே ஊர்வல அரசியலுக்கு வந்தது 1980களில்தான். தமிழகத்து மண்ணில் மதக் கலவரம் என்று  ஒன்றைப் பேச வேண்டுமானால் மண்டைக்காடு கலவரத்தைத் தொடாமல் செல்ல முடியாது. கன்னியாகுமரி யில் இருந்த கணிசமான கிறித்துவ மதத்தைச் சார்ந்தவர்களுக்கும், அவர்களின் ஜாதியை ஒட்டிய இந்து மக்களுக்கும் இடையிலான தீவிர மதப்பற்று மதக் கலவரமாய் முடிந்திருந்தது.

1982ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உலக செப வாரம் ஒருவாரம் அனைத்துக் கிறித்துவர் களாலும் ஒற்றுமையாகக் கொண்டாடப் பட்டது. அதன் இறுதி நாளன்று கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலுக்கு திங்கள்நகர் வழியாக ஒரு ஊர்வலம் நடத்தினார்கள். அந்த ஊர்வலத்தை வரவேற்கும் விதமாகக் கிறித்துவ வணிகர் ஒருவர் ஒளிரும் சிலுவை ஒன்றை திங்கள் நகரின் மையப்பகுதியில் உள்ள போக்குவரத்துக் காவலர் நிழற்குடை அமைந்திருக்கும் திடலில் அமைத்திருந்தார். அந்த ஊர்வலம் முடிந்த பிறகு சிலுவை அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இந்து ஒருவர் அவ்விடத்தில் விநாயகர் சதுர்த்திக்காக விநாயகர் சிலையை வைத்தார். வழிபாடு நடத்தவும் ஆரம்பித்தார். ஐந்து நாட்கள் கழித்து சிவராத்திரி அன்று காவல் துறையினர் சட்டம் ஒழுங்கைக் காரணம்காட்டி விநாயகர் சிலையை அகற்றினர். இந்துக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்துக்கள் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர்.

அப்போது ஏற்பட்ட கலவரத்தில் காவலர்கள் 46 முறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 6 பேர் இறந்தனர். இந்தக் கலவரம் கல்லுக்கூட்டம், ஈத்தாமொழி, ராசாக்கமங்கலம், பிள்ளைத்தோப்பு, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களுக்கும் தீவிரமாகப் பரவியது. இரண்டு வாரங்கள் கழித்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் 2 பேர் கொல்லப்பட்டனர். கோவளத் தில் நடந்த கலவரத்தில் ஒருவர் கொல்லப் பட்டார். இந்தக் கலவரத்தில் தேவாலயங்கள், கோவில்கள், மருத்துவமனைகள் மற்றும் பொது சொத்துகள் அதிகமாக சேதமடைந்தன.

இக்கலவரத்தால் கடற்கரையோரம் இருந்த மீனவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். மீன்பிடி வலைகள் அழிக்கப்பட்டன. அவர்கள் பயன்படுத்திய குடிநீர் கிணறுகளில் டீசல் முதலான நஞ்சு கலக்கப்பட்டது. அவர்களுக்கான உணவுப் பொருட்கள் செல்லும் வழிகள் அடைக்கப்பட்டன. மீனவக் கிராமங்கள் சூறையாடப்பட்டன. கன்னியாகுமரி மாவட்டத்தில் தவிர்க்க முடியாத அரசியல் நிகழ்வாக இந்தக் கலவரம் அமைந்திருந்தது.

1990களுக்குப் பிறகு விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. பாட்சா படத்திற்குப் பிறகு ரஜினி ரசிகர்களின் கொண்டாட்ட நிகழ்வாகிப்போனது விநாயகர் சதுர்த்தி. குறிப்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட சமூகத்தில் அமைப்பாய் திரண்ட எளிய மனிதர்களின் கூட்டு வழிபாடானது விநாயகர் சதுர்த்தி. இதன்பிறகு வீரா படத்தில் தொடங்கி, காலா படம் வரை ரஜினியின் படங்களில் விநாயகர் அவ்வப்போது தலை காட்டி வந்தார். இதுதவிர அஜித்தின் படங்களிலும் அதிகம் முக்கியத்துவம் பெறும் பண்டிகையாக விநாயகர் சதுர்த்தி முன்னிறுத்தப்பட்டது. இது இளைஞர்கள் மனதுக்கு இவ்விழாவை நெருக்கமாக்கியது. இதுமட்டுமில்லாமல் விநாயகரின் இருப்பு தமிழ் சினிமா எங்கும் பரவிக் கிடக்கிறது.

1990களுக்கு முன்பாகவே விநாயகர் பெருமைகள் குறித்த தனி பக்திப் படங்கள் வந்தபோதும் ஜனரஞ்சக படங்களில் அவ்வப்போது விநாயகர் வருவது தமிழர்களின் ஆழ்மனதில் அவருக்கான இடத்தை உறுதி செய்தது. இராமாயணம், மகாபாரதம் எப்படி எழுத, படிக்கத் தெரியாத மக்களிடம் கூட நாடகங்கள் வழியாகக் கொண்டுபோய் சேர்க்கப்பட்டதோ  அதேபோல விநாயகரும் நாடகங்கள் வழியாகக் கொண்டுபோய் சேர்க்கப்பட்டது. 1990களுக்குப் பிறகு வெளிவரத் தொடங்கிய விநாயகர் நாடகங்கள் இன்று வரையில் வார இறுதி நாட்களில் முக்கிய நேர ((Prime Time) நாடகங்களாக இருக்கின்றன. இந்த நாடகங்கள் விநாயகர் மீதான புனித பிம்பத்தைக் கட்டமைத்தது.

வட நாட்டில் சித்தி, புத்தி என இரண்டு மனைவிகளுடன் வலம்வந்த விநாயகர் சிலைகள் தமிழகத்தில் மட்டும் பிரம்மச்சாரியாக வலம் வந்தது. பிறகு சித்தி விநாயகர் கோவில்களும், புத்தி விநாயகர் கோவில்களும் தனித்தனியாக தமிழ்நாட்டுக்குள் நிறுவப்பட்டன. ஆனால் அது தமிழகக் கலாச்சாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மாறாகத் தமிழகத்தில் நிறுவப்பட்ட விநாயகரின் பிரம்மச்சாரிய பிம்பம் வட நாட்டுக்குப் பயணித்து வருவதைக் காணமுடிகிறது. தமிழகத்தில் ராமரைக் கொண்டுபோய் சேர்ப்பதே இன்னும் கடினமாக இருக்கும்போது விநாயகர் எளிதாக சென்று சேர்ந்ததற்கு மிக முக்கியக் காரணம் விநாயகர் குறும்புக் கடவுளாகவும், குழந்தைக் கடவுளாகவும் முன்வைக்கப்பட்டதே.

குழந்தைகளுக்கான கேலிச்சித்திரங்களாக (Cartoon) விநாயகர் மாறிய பிறகு இந்துக் குடும்பங்களில் அசைக்க முடியாத உறுப் பினராகிவிட்டது. விநாயகரைச் சுற்றி வியாபார வளையம் பெருகியது மூலை முடுக்கெல்லாம் விநாயகர் கொண்டுபோய் சேர்க்கப்பட்டதற்கு மற்றொரு காரணம். மற்ற கடவுள்களைப் போல ஒரு கட்டுக்குள் அடங்குவதாக இல்லாத பிள்ளையார், அனுமனைப்போல கலைஞர் களின் கற்பனைக்கேற்ப பல்வேறு வகைகளில் வடிவமைக்கப்படுகிறது. மட்டைப்பந்து விளை யாடும் பிள்ளையார் முதல் கணினி பிள்ளையார் வரை இன்றைய சூழலுக்குப் பொருந்தும் வகையில் தயாரிக்கப்படுவதால் அனைவரும் கொண்டாடத் தொடங்கி யுள்ளனர்.

சாவிக் கொத்துகளில், சிறிய எண்முறைப் படங்களில் (Emoji) சிறு பொம்மைகளாக வலம் வரத்தொடங்கியிருக்கிறது. குறிப்பாக விநாயகர் சதுர்த்தி சமயங்களில் சிலை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய பொருளாதார மூலமாகவும் இருக்கிறது. இந்த இடத்தில் நாம் மற்றொன்றையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். 1990களுக்குப் பிறகு நாடு முழுவதும் சங் பரிவாரங்கள் விநாயகர் சதுர்த்தியை மக்களிடம் கொண்டு சேர்த்தன. அதில் தமிழகத்தில் பெரும்பங்கு வகித்தவர்கள் இந்து முன்னணியினர். மாநிலம் முழுக்க அநேக இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவி, விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னின்று நடத்தினர்.

குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளுக்கும் விநாயகர் சிலைகளைக் கொண்டு சேர்த்தனர். பெரும்பாலும் பட்டியலின இளைஞர்கள்தான் விநாயகர் சிலை ஊர்வலங்களை, சிலை கரைப்பை செய்கின்ற சூழல் உருவாகியிருக்கிறது. அதேநேரம் ஜாதி கடந்து மத மோதல் அல்லது பிரச்சினையாகவும் வளர்ந்து நிற்கிறது விநாயகர் சிலை ஊர்வலங்கள். இசுலாமிய பகுதிகளை விநாயகர் சிலை ஊர்வலங்கள் கடக்கும்போது காவல் துறையின் நிலைமை கவலைக்குரியதாக மாறுகிறது. புகைந்து கொண்டிருக்கும் புதர் போல எப்போது வேண்டுமானாலும் பற்றி எரியும் பிரச்சினையாகவே இது இருக்கிறது.

இவை எல்லாவற்றையும் தாண்டி சுற்றுச் சூழல் பிரச்சினையும் இதில் முக்கியமானதாக எழுந்துள்ளது. மும்பை மாநகரில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமான சிலைகள் வைக்கப்பட்டு கடலில் கரைக்கப்படுகின்றன. கடல் வளம் பாதிக்கப்படுதலும், கரைந்தும் கரையாமலும் இருக்கும் சிலைகளை அப்புறுப்படுத்துவதும் மும்பை மாநகராட்சிக்குப் பெரும் தலைவலியாகவே இருந்து வருகிறது. அதை சரிசெய்ய மராட்டிய அரசும், அம்மாநில உயர் நீதிமன்றமும் கட்டுப்பாடுகளை விதிக்க முனைந்தபோது சிவசேனா கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. கடந்த மாதம்கூட சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இந்த விவகாரம் குறித்து நீதிமன்றமும், அரசும் தலையிட வேண்டாம் என்று எச்சரித்திருந்தார்.

பாஜக அரசுதான் என்றோ நீதிமன்றம் என்றோ சிவசேனா கட்டுப்படவிரும்பவில்லை. ஏறத்தாழ அனைத்து இந்துத்துவ அமைப்பு களின் நிலைப்பாடும் இந்த விவகாரத்தில் இதுதான். விநாயகர் சிலை வைக்கப்படுவதும், அதன் ஊர்வலமும் இந்துத்துவ அரசியலைப் பரப்புவதற்கும்,  இந்து மயமாக்குவதற்கும், இது இந்துக்களின் நாடு என்று முழங்குவதற்கும் பயன்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இன்னொருபுறம் விநாயகர் சதுர்த்தி நடுத்தர வர்க்கத்தின் கலாச்சார விழாக்களில் ஒன்றாகி விட்டது. சுண்டலும், கொழுக்கட்டையும் விநாயகர் சதுர்த்தியின் பிரதானமான அடையாளமாகவும் இருக்கிறது. ஆனால் சுண்டலும், கொழுக்கட்டையும் மட்டுமே அதன் அடையாளமாக இருக்கப் போவதில்லை.

நன்றி: நியூசு 7 தொலைக்காட்சி ஒளிபரப்பிய ‘கதைகளின் கதை’யிலிருந்து

இணையம் வழியாக தொகுப்பு : ர. பிரகாசு