ஜாதி தீண்டாமை பார்ப்பனிய எதிர்ப்புடன் தமிழ்நாட்டில் பெரியாருக்கு முன்பே 1833இல் இயக்கம் தொடங்கியவர் வைகுண்டசாமி. அவரது இயக்கத்தின் வழி வந்தவர்களுக்கு தலைமை தாங்கும் பால பிரஜாதிபதி அடிகளார் ‘அய்யா’ வைகுண்டசாமி வழி வந்தவர்களை தனி மதமாக அறிவிக்க வேண்டும்; அவர்கள் ‘இந்துக்கள்’ அல்லர் என்று வலியுறுத்தி வருகிறார் கருநாடகத்தில் ‘லிங்காயத்து’க்களை தனி மதமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் முன் வைத்த கோரிக்கைக்காக ஆர்.எஸ்.எஸ்.சின் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார். வைகுண்ட சாமிகளின் வரலாற்றை சுருக்கமாக அறிமுகப் படுத்துகிறது இக்கட்டுரை.

கன்னியாகுமரிக்கு அருகேயுள்ள பூவண்டன் தோப்பு (சாஸ்தான் கோவில்விளை என்றும் சாமிதோப்பு என்றும் கூறுவர்) எனும் கிராமத்தில் ஓர் ஏழை நாடார் குடும்பத்தில் 1809ஆம் ஆண்டில் பிறந்தவர் வைகுண்ட சுவாமிகள். இவருக்கு பெற்றோர்கள் வைத்த பெயர் முடிசூடும் பெருமாள் என்பது. அந்தக் காலத்தில் மன்னர்கள் அல்லது உயர்சாதியினர் வைத்துக் கொள்ளும் பெயர்களை தாழ்ந்த சாதியினர் வைத்துக் கொள்ளக் கூடாது என்றிருந்தது. எனவே இப்படிப் பெயர் வைத்ததற்காக உயர்சாதியினர் அரசு அதிகாரிகளிடம் போய்ப் புகார் செய்தனர். அவர்களும் பெயரை மாற்றுமாறு உத்தரவு போட்டனர். வேறு வழியின்றி முத்துக்குட்டி என்று பெயர் வைத்தனர் பெற்றோர்.

எவர் மத்தியிலிருந்து பிறந்தாரோ அந்த அடித்தட்டு மக்கள் உய்ய வழிகாட்டுவது என்று முடிவெடுத்த முத்துக்குட்டி, 1833 முதல் பொது வாழ்வில் இறங்கினார். விஷ்ணு பக்தராய் இருந்த இவர் திருச்செந்தூர் கடலில் குளிக்கப் போய் அலையில் சிக்கி மூன்று நாட்கள் கழித்து மீண்டு வந்ததாககவும், அப்பொழுது நாராயணன் லட்சுமி தரிசனம் பெற்றதாகவும், அவர்கள் தம்மை மகவாக - வைகுண்டராக - திருப்பி யனுப்பியதாகவும் மக்கள் மத்தியில் கூறத் துவங்கினார்.

1833இல் துவங்கி நான்கு ஆண்டுகள் தவமிருந்தார். தங்கள் மத்தியிலிருந்து ஒரு சாமியார் கிளம்பியதும் அப்பகுதி மக்கள் நோய் தீர்க்கச் சொல்லி அவரிடம் வரத் துவங்கினர். அச்சமயம் சில போதனைகளையும் செய்யத் துவங்கினார்.

அவர் வாழ்ந்த குமரிப் பகுதி அன்றைக்கு திருவிதாங்கூர் இராஜ்யத்திலிருந்தது. அதனை அப்பொழுது ஆண்டு வந்தவர் சுவாதித் திருநாள் மகாராஜா, சங்கீத விற்பன்னர்கள் இன்றளவும் போற்றிப் புகழுகிற இந்த மன்னரின் ஆட்சியில் நாடார் சமூகத்தவர் உள்ளிட்ட அடித்தட்டு மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாயினர். சமூகரீதியிலும், பொருளாதார ரீதியிலும் கொடூரமான அடக்குமுறை நிலவியது. சாதிய அமைப்பைக் கட்டிக்காத்து வந்த மன்னர் அநியாய வரி விதித்தும், மக்களைக் கசக்கிப் பிழிந்தும் வந்தார். தமது மக்கள் நலன் நாடி அந்த மன்னரையே துணிச்சலோடு எதிர்த்தார் சுவாமிகள். இதன் விளைவாக கைது செய்யப் பட்டவர் அடித்து, இழுத்துச் செல்லப்பட்டு 110 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அப்பொழுதும் உறுதி தளராதிருந்த அவர் 1838 மார்ச் திங்களில் விடுதலை செய்யப்பட்டார். அதன் பின்னும் தனது வாழ்நாள் முழுக்க மக்கள் சேவையில், சமூக சீர்திருத்தத்தில் விடாது ஈடுபட்டார். 1851இல் அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தார்.

இவரைப் பற்றிய தகவல்கள் கிடைக்கக் கூடிய மூல நூல்கள் இரண்டு. ஒன்று ‘அகிலத் திரட்டு அம்மானை’ என்பது. இது சுவாமிகளின் சீடர்களில் ஒருவரான சகாதேவன் என்பவரால் எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் சுவாமிகள் வாழ்க்கை வரலாறும், அவரது பணிகளும் விளக்கப்பட்டுள்ளன. திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் அடித்தட்டு மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் விவரிக்கப்பட்டு, அவை ஒழிக்கப்பட்டாக வேண்டும் என்கிறது. இரண்டாவது, ‘அருள் நூல்’ என்பது. இது அம்மானையில் கூறப்படும் சில செய்திகளை உறுதிப்படுத்துவதுடன், சுவாமிகள் வாழ்வில் நடைபெற்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து தருகிறது. அதோடு சுவாமிகளைப் பின்பற்று வோர் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகளையும், சுவாமிகளின் அறிவுரைகளையும் கொண்டுள்ளது.

அன்றைக்குப் பெரிதும் பனையேறி கள் இறக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த நாடார் சமூகத்தினர் சாணார் என்று அழைக்கப் பட்டனர். இவர்களையும் தீண்டத்தகாதவர் களாகத்தான் உயர்சாதியினர் பாவித்து வந்தனர். தீண்டாமையின் காரணமாய் சந்திப்பு தூரங்கள் கூட வரையறுக்கப்பட்டிருந்தன. ஒரு நாடார், நம்பூதிரி பார்ப்பனரிடமிருந்து 36 அடி தூரத்திலும், நாயரிடமிருந்து 12 அடி தூரத்திலும் நின்றுதான் சந்திக்க வேண்டும். பொதுச் சாலைகளிலே செல்ல முடியாது. பொதுக் கிணறுகளிலே நீர் எடுக்க முடியாது. உயர் சாதியினர் வாழும் தெருக்களில்கூடப் போக முடியாது. பிறகு அவர்களது கோவில் களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. கொடுமை என்னவென்றால் இந்தக் கோவில் களுக்கு அருகேயே பள்ளிகளும், அரசு அலுவலகங்களும் இருந்ததால் அங்கேயும் போக முடியாது. அதிகாரிகள் வெளியே வரும்போது பார்த்தால்தான் உண்டு. அது மட்டுமல்ல குடை பிடிக்கவோ, செருப்பு போடவோ முடியாது. ஓடு வேய்ந்த வீடு கட்டக் கூடாது. பொன் நகை அணியக் கூடாது. பெண்கள் இடுப்பில் தண்ணீர் குடம் எடுத்துச் செல்ல முடியாது. தோள் சேலை (மாராப்பு) அணிய முடியாது.

நாடார்களில் ஒரு சிறு பகுதியினர் நிலவுடைமையாளர்களாக இருந்தனர். பெரும் பகுதியினராயிருந்த கள் இறக்கும் தொழி லாளர்களை இவர்கள் மதிப்பதும் கிடையாது; பாதுகாப்பதும் கிடையாது. உயர்சாதியினரோ இவர்கள் அனைவரையுமே தீண்டத்தகாதவர் களாகப் பாவித்தனர். திருவிதாங்கூர் அரசும் இதைத்தான் அமுல்படுத்தி வந்தது.

இந்த நிலையில் களத்தில் இறங்கிய சுவாமிகள் இந்த மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்திட சமத்துவ சங்கம் என்ற அமைப்பினைத் துவக்கினார் இதில் ஆயிரக் கணக்கான மக்கள் உறுப்பினராயினர். ஆடவர் மட்டுமல்லாது மாதரும் பங்கேற்றனர். தன்னைக் கண்ணபிரானாகப் பாவித்துக் கொண்ட சுவாமிகள் பஞ்ச பாண்டவர்கள் என்று ஐந்து பேரைத் தனது பிரதமர் சீடர்களாக ஆக்கினார். ஊர் ஊராகச் சென்று தனது சமத்துவக் கொள் கையைப் பரப்புமாறு கேட்டுக் கொண்டார். தானும் அவ்வாறே பயணம் மேற் கொண்டார்.

ஒற்றுமை உணர்வினை வளர்த்திடவும், தன்னுடைய போதனைகளைப் பரப்பிடவும் ‘நிழல் தாங்கல்’ என்பதைப் பல ஊர்களில் அமைத்தார். இது வழிபாட்டுத் தலமாகவும், கல்வி நிலையமாகவும், சுவாமிகளின் போதனைகளைப் பரப்பும் பிரச்சார மையமாகவும் விளங்கியது. சமத்துவச் சங்கத்தின் கிளைகள் போலச் செயல்பட்ட இவற்றில் வழிபாடு நடந்தாலும் விக்ரக ஆராதனை கிடையாது. விக்ரகம் என்றால் பூசாரி வந்து விடுவார். பூசாரி என்றால் சாதியப் பாகுபாடு புகுந்துவிடும் என்று அதனைத் தவிர்த்திருக் கிறார். அதே நேரத்தில் அதற்கு சித்தாந்த விளக்கமும் தந்தார்.

“மறையினிலடங்கா இறையினிலடங்கா

                                வணங்கிலுமடங்கா

 பலவகையிலுமடங்கா துறையினிலடங்கா

                                தொல்புவியிலடங்கா

சுருதியிலடங்கா சகயினிலடங்கா உறவினிலடங்கா

மொழியிலுமடங்கா யுகத்திலுமடங்கா ஒரு

                                விதத்திலுமடங்கா”

- என்று ‘இறைவனை’ வருணித்த அவர், அவனை எந்த விக்ரகத்திற்குள்ளும் அடைக்க முடியாது என்றார். சுவாமிகளின் இந்த நிலைப்பாடு அவரைப் பின்பற்றுவோரை சித்தாந்த ரீதியிலும் உயர்த்துவதாக அமைந்தது. உருவம் மூலம் தரிசிப்பதைவிட உள்ளொளி மூலம் தரிசிப்பது உயர்நிலை என்றே இந்துமதம் கூறிக் கொள் கிறது. இப்படிச் சொல்லிக் கொண்டாலும் சனாதனிகள் இதனைக் கடைப்பிடிப்பதில்லை. கடைப்பிடித்தால் புரோகிதத் தொழில் பறி போய்விடும். உருவமற்ற வழிபாட்டு முறையை நடைமுறைப்படுத்தினார் சுவாமிகள்.

விக்ரக ஆராதனையை நிராகரித்தது ஆடு, கோழி பலியிடுதல் என்பதை நிறுத்த அவருக்கு உதவியது.

“ஆடுகிடாய் கோழி பன்றி ஆயனுக்கு

                                வேண்டாங் காண்

 மேளதாளம் குரவை தொனி

                                வேண்டாங் காண் ஈசனுக்கு”

- என்று கூறியதன் மூலம் ஆரவாரமான வழி பாட்டை அவர் விரும்பியதில்லை என்பது தெளிவாகிறது.

அதிகம் படித்திராத - அனுபவ ஞானத்திலேயே - தமது மக்களுக்கு எது நல்லது என்பiதை உணர்ந்திருந்த சுவாமிகள், பேய், பிசாசு, மாந்திரீகம் என்று ஏமாந்து போவதைத் தடுக்கவும் முயன்றார். உயர்சாதியினரின் ஆலயங்களுக்குள் நுழைய முடியாத நிலையில் பேய் பிசாசுகள் மீதான நம்பிக்கை கொழுந்து விட்டு எரிந்தது.

“ பொய்யில்லை பிசாசுயில்லை

                                பில்லியின் வினைகளில்லை

 நொய்யில்லை நோவுமில்லை

                                நொன்பலத் துன்பமுமில்லை

 தொய்யில்லை இறைகளில்லை

                                கறுபடுமா ஞாலமுமில்லை

 மையில்லை உலகத்தோரே

                                வாழுமோர் நினைவால்”

- என்றார் சுவாமிகள். ஆனாலும் மக்கள் நம்ப வேண்டுமே? விஷ்ணுவின் மகனாகிய தான் மாந்திரீகர்களிடமிருந்து மந்திரங்களைப் பறித்துவிட்டதாகவும் இனிமேல் அவர்களிடம் போக வேண்டாமென்றும் மக்களை தைரியப் படுத்தினார்.

ஆலயங்களுக்குள் நாடார்கள் உள்ளிட்ட அடித்தட்டு மக்கள் நுழைய முடியாத நிலையிலும் அவர்களது காணிக்கைகள் மட்டும் புரோகிதர்களுக்கு தேவைப்பட்டது. எனவே, தொலைவில் நின்று காணிக்கைகளை இவர்கள் எறிய, புரோகிதர்கள் பதிலுக்குத் தூக்கியெறியும் இலைக்கட்டுப் பிரசாதத்iதைப் பெற்று மகிழ்வர். ஏற்கெனவே வறுமையில் வாடிய இந்த மக்ககள் பக்தி மேலீட்டால் சுயமரியாதையையும் இழந்து கைப்பொருளையும் இழந்தனர். இதனால் சுவாமிகள் -

“காணிக்கையிடாதுங்கோ காவடி

                                                தூக்காதுங்கோ

 வீணுக்குத் தேடுமுதல் விருதாவில்

                                                போடாதுங்கோ”

- என்றார். உயர்சாதியினர் கோவிலுக்கு காணிக்கையிடுகிற வேலையை ‘விருதா’ வேலை என்று பாமரத் தமிழில் போதித்திருக்கிறார் சுவாமிகள். அதே நேரத்தில் ஏழைகளுக்கு தர்மம் செய்வதை வலியுறுத்தினார். “பயந்து தர்மமிட்டு அந்தப் பரம்பொருளைத் தேடிடுங்கோ” என்றார்.

சாதிய ஒடுக்குமுறை எதிர்ப்பு என்பது இப்படிச் சமய சீர்திருத்தத்தோடே ஒட்டிப் பிறந்தது. அதே நேரத்தில், சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க அவர்களுக்கு சுயமரியாதை உணர்வை ஊட்ட வேண்டியிருந்தது. சமூக அவமரியாதைகளில் சிலவற்றையாகிலும் ஒழிக்க வேண்டியிருந்தது. அச்சத்தைப் போக்கி எதிர்த்து நிற்கும் தைரியத்தைக் கொடுக்க வேண்டி யிருந்தது.

ஆதிநாளில் ஒரு நாடார் சமூக இளைஞனுக்கு அவனது 16ஆவது வயதில் தலையில் தலைப்பாகைக் கட்டி கையில் பிச்சுவா கத்தி கொடுப்பார்கள் - அவர் பெரிய மனிதன் ஆகிவிட்டதன் அடையாளமாக, பல இடைத் தட்டு சாதிகளில் இந்த வழக்கம் இன்றைக்கும் உண்டு. குடும்பத் தலைவர் இறந்ததும் அவரது மகன்களுக்கு இப்படி தலைப்பாகை கட்டுவார்கள். இதற்கு “உறுமால் கட்டு” என்று பெயர். இந்தப் பழக்கம் இடைக்காலத்தில் நாடார் சமூகத்தைப் பொறுத்தவரை உயர்சாதி யினரால் தடுக்கப்பட்டிருக்கிறது. சுமை தூக்கக் கூட தலைப்பாகை அணிய அனுமதிக்கவில்லை. ‘சுருமாடு’ என்று பெயரில் வைக்கோலை மட்டும் தலையில் வைக்க அனுமதிக்கப் பட்டனர். இந்த அநியாயக் கட்டுப்பாட்டை மீறச் சொன்னார் சுவாமிகள். தன்னைக் காண வந்த மக்களிடம் தலைப்பாகை அணிந்து வருமாறு வற்புறுத்தினார். வழிபாட்டின்போது அவரது அன்பர்கள் இப்பொழுதும் தலைப் பாகை அணிவதைக் காணலாம்.

இதே பாணியில் வீடு கட்டுவதிலும் மாறுதலை புகுத்தினார் சுவாமிகள். மாடி வீடு, ஓடு போட்ட வீடு ஆகியவற்றை அன்றைக்கு தாழ்ந்த சாதி மக்கள் கட்டிவிட முடியாது. அவர்களது வீடுகள் ஒழுங்கற்று ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. இதற்குப் பதிலாக பல அறைகளுடைய ஒரே திசையில் முன் கதவு வைத்த வீடுகளை அடுத்தடுத்து கட்டுமாறு கூறினார் சுவாமிகள். இது மக்களிடையே நெருக்கத்தையும், ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்தும் என்று அவர் எதிர்பார்த்தார். மாதிரியாக முட்டப் பகுதியில் சுவாமிகள் ஒரு ‘சமதர்மக் காலனி’ அமைத்தார்.

இத்தோடு தனது சொந்த ஊரில் கிணறு ஒன்றை ஏற்படுத்தி அனைத்து மக்களும் அதனைப் பயன்படுத்தலாம் என்றார். அதனை ‘முத்திரிக் கிணறு’ (புனிதக் கிணறு) என்று சுவாமிகள் அழைத்தார். சுவாமிகளைக் காண வந்த மக்ககள் அக்கிணற்று நீரைக் கொண்டு குளித்து, உண்டி சமைத்து உண்டு மகிழ்ந்தனர். அனைத்து சாதியினரும் இப்படி ஒரே கிணற்றில் நீரெடுத்து சமைத்து சமபந்தி போஜனம் செய்ய வைத்தார் சுவாமிகள்.

தனது சீடர்களைப் பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி அங்குள்ள தாழ்த்தப்பட்ட சாதியினரின் வீடுகளில் உணவருந்துமாறு கட்டளையிட்டார். சுவாமிகள் ஒரு முறை இப்படியாகத் தனது சீடர்கள் இருவரை பிச்சம்மாள் என்கிற சலவைத் தொழிலாளி வீட்டில் சாப்பிட்டு வருமாறு சொல்ல, அவர்கள் அங்கு சென்றும் சாப்பிட மனமில்லாமல் திரும்பி வந்துவிட்டனர். இதை அறிந்த சுவாமிகள் இருவரையும் கடுமையாகக் கண்டித்து மீண்டும் அந்த இல்லம் சென்று உணவருந்தி வருமாறு செய்தார். இப்படியொரு வாய்மொழிச் செய்தி உள்ளது. இதுவெல்லாம் அந்தக் காலத்தில் சாதாரணமான விஷயமல்ல.

தாழ்த்தப்பட்ட மக்கள் சுத்தமின்றி இருக்கின்றனர், புலால் உணவு உண்கின்றனர், அதனால் தான் தீண்டாமை கடைப்பிடிக்கப்படு கிறது என்று உயர்சாதியினர் சொல்லிக் கொண்டனர். இதுவொரு சாக்குதான் எனினும், இந்த வாதத்தையும் உடைக்க முயன்றார் சுவாமிகள்.

“மூன்று நேரந் துவைத்து உச்சியொரு

                                நேரமதாய்

 வேணும் பச்சரிசி வெற்றிச் சிறுமணியும்

 வேகவைத்து நன்றாய் விரைவாய் மணலிலிட்டு

 தாகமில்லாமல் தவசிருக்க வேணுமென்று”

- மக்களுக்கு போதித்தார். மீன் உணவை விரும்பிச் சாப்பிடும் குமரி பகுதி மக்களுக்கு இப்படி சைவ உணவைப் பரிந்துரைத்தார். இன்றைக்கும் இவரைப் பின்பற்றுவோர் புலால் உணவை தவிர்த்தவர்களாக உள்ளனர். அல்லது குறைந்தபட்ச ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் அதனை உண்ணாதவர்களாக உள்ளனர். உயர்சாதியினருடன் ஒவ்வொரு விஷயத்திலும் தங்களால் போட்டி போட முடியுமென்று காட்டுகிற வேகத்திலேதான் இப்படி ‘தவசி’ (தவம்) இருக்கச் சொல்லி யிருக்கிறார்.

வெறும் போதனை மட்டும் பயன் தராது என்று நினைத்து ஒரு முகாம் நடத்தி அதற்கு மக்களை அழைத்து பயிற்சி கொடுத்தார் சுவாமிகள். இதற்கு ‘துவையல் பந்தி’ என்று பெயர். இங்கே மூன்று வேளை நன்றாகக் குளித்து, துவைத்து, நண்பகல் ஒரு வேளை பச்சரிசி, பாசிப் பயிறு வேகவைத்து கஞ்சியாக்கி உண்டு ஒரு வகையான தவ வாழ்க்கை மேற் கொள்ளச் செய்தார். கிட்டத்தட்ட 700 குடும்பங்கள் இதில் கலந்து கொண்டதாக ஒரு கணக்கு உள்ளது. இந்த முகாமில் சுவாமிகள் கற்பித்த போதனைகளை அதில் பங்கேற்றோர் ஊர்தோறும் சென்று மக்களிடையே பரப்பி வந்தனர்.

சங்கம் வைத்தவர், முகாம் நடத்தியவர், தனது இயக்கத்திற்காகக் கொடி ஒன்றையும் கண்டார். அரசியல் கட்சி என்றால் என்னவென்றே தெரியாத அந்தக் காலத்தில் அதன் கூறுகளையெல்லாம் கொண்டிருந்தது சுவாமிகளின் இயக்கம். காவி நிறத்தில் வெள்ளை தீபச் சுடரைத் தாங்கிய அந்தக் கொடியை ‘அன்புக் கொடி’ என்றழைத்தார் சுவாமிகள். தன்னை பின்பற்றுவோரை ‘அன்புக் கொடி மக்கள்’ என அழைத்தார். இன்றும் சுவாமி களைப் பின்பற்றுவோர் நிழல்தாங்கல்களில் இக்கொடியை ஏற்றி வணக்கம் செலுத்தி வருகின்றனர். இவரின் பிறந்த தினத்தன்று நடக்கும் ஊர்வலத்தின்போது இக்கொடியை ஏந்தி வருகின்றனர் அவரின் அன்பர்கள்.

சமூக சீர்திருத்தவாதியுமான இவர் ஒரே நேரத்தில் மன்னர், பார்ப்பனியம் மற்றும் அந்நிய ஆட்சியாளர்கள் - மதபோதகர்களின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டது வரலாற்றிலேயே ஒரு அபூர்வமான விஷயம். அதீத வரி போட்டு நாடார் வீட்டுக் குடும்பங்களை கொடுமைப் படுத்துவது கண்டு கொதித்தெழுந்த சுவாமிகள்,

“குஞ்சரமும் உன்னுடைய கொத்தளமும்

                                                தானிடத்து

 வஞ்சகமாய் உந்தனுக்கு வலியகர்மம் சுற்றுமடா

 கர்ம வியாதிகளாய் கண்ட மாலையுடனே

 வறுவை வந்து சிக்குமடா மானீசா நீ கேளு

 தெய்வச் சாணாத்தி தினமுனை

                                                நிந்தித்துண்டால்,

 பொய் வகையால் கர்ம போகத்தால் நீ

                                                மடிவாய்”

- என்று அரசரு க்கு சாபமிட்டார். இதற்கு உச்சமாய் “அவன் பட்டத்தைப் பறித்திடுவேன் கொட்டிக் குலைத்திடுவேன்” என்றுகூட சூளுரைத்தார்.

மறுபுறம் சமூகத் துறையில் ஆதிக்க சக்தியாக இருந்த பார்ப்பனியத்தையும் வெளிப்படையாக எதிர்க்கத் துணிந்தார் சுவாமிகள். “பிராமணர்களைப் பயம் காட்ட நாம் வருவோம்” என்று அடித்தட்டு சாதி மக்களுக்கு தைரியம் ஊட்டினார். அதுமட்டுமா, “பிராமண வேசம் போட பக்தன்மாரே நீங்கள் உண்டு” என்றும் கூறினார். புரோகிதம் என்பதை ‘வேசம்’ என்று அவர் கூறியது அந்தக் காலத்தில் வேறு எவரும் சொல்லத் துணியாதது என்றால் அந்த ‘வேச’த்தை தாழ்த்தப்பட்ட சாதியினரும் போடலாம் என்பது சமூக நீதியின் புதிய பரிமாணம், ‘பிராமணியம்’ எனும் ஏகபோகத் தன்மையைக் கருவறுக்கிற வேலை.

இப்படித் திருவிதாங்கூர் ராஜாவையும், பார்ப்பனியத்தையும் எதிர்த்து நின்றவர் தனது செயல்பாட்டின் காரணமாக ஒரு தனி சமயப் பிரிவினை உருவாக்கி அதன் மூலம் உயர்சாதிய அவமரியாதைகளிலிருந்து விடுதலைப் பெற முடியும் என்று காட்டிவிட்டதால் குமரிப் பகுதியில் நாடார் சமூகத்தவரிடையே விரைந்து பரவி வந்த கிறிஸ்தவ மதம் தடைப்பட்டு நின்றது. இதனால் கிறிஸ்தவ போதகர்கள் மற்றும் பிரிட்டிஷாரின் வெறுப்புக்கு ஆளானார் சுவாமிகள். சுவாதித் திருநாள் மன்னரால் அவர் கைது செய்யப்பட்டதற்கும்கூட சென்னையி லிருந்த கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்கள் மன்னரைத் தூண்டிவிட்டதுதான் காரணம் என்று கூட ஒரு செய்தி உள்ளது. சுவாமிகள் உயிரோடு இருந்த காலத்தில் மட்டுமல்ல அதற்குப் பிறகும்கூட அவர் கண்ட இயக்கம் தங்களது மத மாற்றத்திற்கு இடையூறாக இருந்ததாகக் கருதினர். 1874இல் அவர்கள் தயாரித்த ஆண்டு அறிக்கையில் ‘முத்துக்குட்டி யிசத்தை எதிர்த்து விடாது போராட வேண்டியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளனர். ஆக, ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைச் செய்திருக்கிறது சுவாமிகள் இயக்கம். ஒரு புறம் இது இந்து மதத்திற்குள்ளிருந்த உயர்சாதி வெறியை எதிர்த்துப் போராடியது; மறுபுறம் கிறிஸ்தவ மதமாற்றத்தைத் தடுத்து நிறுத்தியது. இந்த இரண்டாவது பணி அவர் திட்டமிட்டுச் செய்ததாகத் தெரியவில்லை. இந்து மதத்தின் உயர்சாதி வெறியை எதிர்த்துப் போராடிய போது அதன் உபவிளைவாக இது நிகழ்ந்திருக் கிறது. சமயப் பூசல்களை அடியோடு வெறுத்தார் சுவாமிகள். “நீ பெரிது நான் பெரிது நிச்சயங்கள் பார்ப்போமென்ற வான்பெருதறியாமல் மாள்வார் வீண் வேத முள்ளோர்” என்று கூறியுள்ளார் சுவாமிகள்.

அடித்தட்டு வகுப்பு பெண்களின் உரிமை களுக்காகவும் குரல் கொடுத்தார் சுவாமிகள். தாழ்த்தப்பட்ட வகுப்புப் பெண்களைத் தைரியமாக தோள்சேலை அணியுமாறு அவர் கேட்டுக் கொண்டார். சுவாமிகளின் காலத்தில் கிறிஸ்தவ போதகர்களின் வழிகாட்டுதலில் கிறிஸ்தவ நாடார்களினால் துவக்கப்பட்ட இந்தத் தோள்சேலை அணியும் போராட்டம் சுவாமிகளின் மறைவுக்குப் பிறகு, கிறிஸ்தவ நாடார்கள் - இந்து நாடார்கள் இருவரும் இணைந்து நின்று போராடியதால் வெற்றி கிட்டியது. 1859இல் நாடார் பெண்களுக்கு தோள் சேலை அணிகிற உரிமையை திருவிதாங்கூர் அரசு வழங்கியது. தொடர்ந்து போராட்டங்கள் நடந்த காரணத்தால் 1865இல் இதர அடித்தட்டு சாதிப் பெண்களுக்கும் அந்த உரிமை தரப்பட்டது.

தனது மக்கள் சேவையின் காரணமாய் ‘அய்யா’ என்று அன்போடு அழைக்கப்பட்ட சுவாமிகளின் சமாதி சாமித் தோப்பில் உள்ளது. அங்கே ஏற்றி வைக்கப்பட்டுள்ள குத்துவிளக்கு ஒளியை மக்கள் கும்பிடுகிறார்கள். இவர் வழி வந்தவர்கள் இறந்தோரை எரிப்பதில்லை; புதைக்கவே செய்கிறார்கள். அதோடு கருமாதி, திதி போன்ற சடங்குகளில் விருப்பமில்லாதவர் களாகவே உள்ளனர்.

தொகுத்துப் பார்க்கும்போது - நவீன தமிழகத்தில் தோன்றிய முதல் சமூக சீர்திருத்தவாதியான வைகுண்ட சுவாமிகள் ஒரு புதிய சமய நெறியை உருவாக்கி அதன் மூலம் சமூக சீர்திருத்தம் செய்தவர். அந்தப் புதிய நெறியில் கிறிஸ்தவத்தின் தாக்கம் தெரிகிறது. (ஆரம்பத்தில் சிறிது காலம் நாகர்கோவில் மிஷனில் கிறிஸ்தவ போதனையின் கீழ் இருந்தவர் என்றுகூட ஒரு செய்தி உள்ளது) தென் தமிழகத்தில் நாடார் சமூகத்தினரிடையே இந்த இயக்கத்திற்கு நல்ல வரவேற்பு இருந்திருக் கிறது. உயர்சாதி வெறியை எதிர்த்ததோடு உள்ளூர் மன்னரையும் எதிர்த்து நின்றவர். அடித்தட்டு குடும்பப் பெண்களின் உரிமைக்காக வும் குரல் கொடுத்தார். ஆனால், இன்றைக்கு அவரது இயக்கம் சமூக சீர்திருத்தம் என்கிற அதன் சாரத்தை இழந்து இந்து சமயத்தின் ஓர் உபபிரிவு என்கிற தோற்றத்தை மட்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. சுவாமிகளின் சீடர்கள் அவரை கடவுள் அவதாரமாகப் பார்க்கிறார்களே தவிர சமூக சீர்திருத்தவாதியாக நோக்குவதில்லை.

(‘தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் இருநூற்றாண்டு வரலாறு’ நூலிலிருந்து)